Previous Lesson -- Next Lesson
உ) யூதர்கள் பெற்றிருந்த சிலாக்கியங்கள் கோபாக்கினையிலிருந்து அவர்களை விடுவிக்காது (ரோமர் 3:1-8)
ரோமர் 3:1-5
1 இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? 2 அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே. 3 சிலர் விசுவாசியாமற்போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ? 4 அப்படியாக்கமாட்டாது: நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக. 5 நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா?
பவுல் ரோம் சபைக்கு நிரூபம் எழுதும் முன்பாக, அதன் அங்கத்தினர்கள், மத்தியில் கடுமையான கேள்விகள் இருந்தன. யூதர்கள் பெரிதும் சிலாக்கியம் பெற்றவர்கள், கனத்திற்குரியவர்கள் என்பதை புறவினத்து விசுவாசிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே நியாயப்பிரமாணம் மற்றும் விருத்தசேதனம் பழைய உடன்படிக்கை மக்களை நியாயம் தீர்க்கும் என்று பவுல் தனது நிரூபத்தில் உறுதிப்படுத்தியபோது அவர்கள் திருப்தியடைந்தார்கள்.
இன்னொருபுறம், யூத மார்க்கத்து கிறிஸ்தவர்கள், நியாயப்பிரமாணத்தை உயர்த்தி எண்ணியவர்கள், விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல் என்பதை கேள்விக்குள்ளாக்கினார்கள். பவுல் விளக்கப்படுத்தியதில் அவர்கள் திருப்தியடையவில்லை. அவர்களுடைய நியாயப்பிரமாணம் மற்றும் உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை உடைப்பதாக எண்ணினார்கள்.
பவுல் தனது அருட்பணி பயணங்களில் இந்த வேறுப்பட்ட மனப்பான்மைகளை அறிந்திருந்தான். எனவே ரோமருக்கு எழுதின நிரூபத்தில், அவர்களுடைய கேள்விகளுக்கு முதலாவது அவன் பதிலளித்தான். யாரோ ஒருவன் அவனிடம் இப்படிக் கூறியதாக அவன் எண்ணிக்கொண்டான். “நீ சொல்வது சரி, பவுல். எங்களை விட யூதர்கள் சிறந்தவர்கள் அல்ல”. பவுல் அவர்களுக்கு புன்னகையுடன் பதிலளித்தான். “எனது அருமை சகோதரனே, நீ சொல்வது தவறு. யூதர்கள் இப்போதும் சிறந்த சிலாக்கியங்களைப் பெற்றிருக்கிறார்கள். அது, அவர்களுடைய இனம், ஞானம் மற்றும் தேசம் என்பவைகள் அல்ல. அவைகள் அனைத்தும் தூசியும், சாம்பலுமாக இருக்கிறது. அவர்களுடைய ஒரே சிலாக்கியம் என்பது, அவர்களுடைய கரங்களில் இறைவனின் வார்த்தை கொடுக்கப்பட்டதாகும். “அவர்களுடைய பெருமைக்கு இந்த வெளிப்பாடு தான் காரணம்.” என்றென்றுமுள்ள அவர்களது பொறுப்பையும் இது வெளிப்படுத்துகிறது.
இன்னொருவர் இவ்விதம் கூறுவதாக பவுல் எண்ணிக்கொண்டான். “அவர்கள் நியாயப்பிரமாண உடன்படிக்கைக்கு உண்மையுள்ளவர்கள் அல்ல, கைக்கொள்ளுகிறவர்களும் அல்ல. “இந்த தீவிர குற்றச்சாட்டுக்கு பவுல் இவ்வாறு பதிலளித்தான். “மனிதனுடைய தவறு ஆண்டவருடைய உண்மையையும் வாக்குத்தத்தங்களையும் வெறுமையாய் போகச் செய்யும் என்று நீ எண்ணுகிறாயா?” இறைவன் தயங்குகின்றவரும் அல்ல, பொய் பேசுகிறவரும் அல்ல. அவருடைய வார்த்தை நித்திய உண்மை, பிரபஞ்சத்திற்கு அஸ்திபாரம். மனிதனுடைய உண்மையற்ற தன்மையின் மத்தியில் ஆண்டவருடைய கிருபை உண்மையுள்ளது, என்றென்றும் நிலைத்திருப்பது. பழைய உடன்படிக்கை மக்களின் பாவங்களினால், இறைவன் அதை செல்லாததாக்கினால் நம்முடைய புதிய உடன்படிக்கையின் தொடர்ச்சி இருந்திருக்காது. உண்மையில் பழைய உடன்படிக்கையின் மக்களை விட, புதிய உடன்படிக்கையின் மக்களாகிய நாம் அதிக பாவம் செய்கிறோம். நமக்கும் அநேக ஆசீர்வாதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே நம்முடைய தோல்வி அல்லது வெற்றியின் மீது நமது நம்பிக்கை கட்டப்படாமல், இறைவனின் கிருபையில் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. நாம் பொய்யர்கள் என்றும், மற்ற மனிதர்களைப் போல தவறுள்ளவர்கள் என்றும் ஒத்துக்கொள்கிறோம். இறைவன் மட்டுமே சத்தியமுள்ளவர், உண்மையுள்ளவர். அவருடைய உண்மை, அவருடைய வாக்குத்தத்தங்கள் ஒரு போதும் தோற்பதில்லை.
ரோமர் 3:6-8
6 அப்படிச் சொல்லக்கூடாது; சொல்லக்கூடுமானால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி? 7 அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்? 8 நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள்மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.
பவுல் வலியுறுத்திக் கூறுவது போல நம்முடைய நம்பிக்கை, இறைவனுடைய உண்மையில் மட்டுமே கட்டப்பட்டிருக்கின்றது. தீய சத்தங்கள் இதற்கு எதிராக குரல் எழுப்புவதை, அவன் தனது ஆவியில் உணர்ந்தான். “நம்முடைய பாவங்கள் மூலம் அவருடைய உண்மையும், கிருபையும், வெளிப்பட்டால், இறைவன் எப்படி நீதியுள்ளவராக இருக்க முடியும்?” மனுக்குலத்தின் தவறு மற்றும் உலகளாவிய குற்றம் அவருடைய உண்மையை வெளிப்படுத்த ஓர் சந்தர்ப்பம் கொடுக்கும்போது, நம்முடைய பாவம் மற்றும் அவிசுவாசத்திற்காக இறைவன் தண்டிப்பது அநீதியான ஒன்றல்லவா?” ஆகவே இவ்விதம் சொல்லலாம். “அவர் மகிமைப்படும்பொருட்டு, வாருங்கள், நாம் பாவம் செய்வோம்”.
இந்த தீவிர குற்றச்சாட்டிற்கு பவுல் பதிலளிக்காமல் அமைதியாய் இருக்கவில்லை. மற்ற கேள்விகளை எழுப்பி, இதற்கு தெளிவாகவும், ஆழமாகவும் அவன் பதிலளித்தான். ஒரு அப்போஸ்தலனாக அல்ல, ஒரு சாதாரண மனிதனைப் போல பேசினான். அவன் சொன்னான்: நிச்சயமாக, நமது அநீதியின் மூலம் இறைவனின் உண்மை வெளிப்பட்டால், உலகத்தின் நியாயாதிபதியான இறைவனுக்கு அது அநீதியாக இருக்கும்; நம்முடைய பொய் அவருடைய உண்மையை வெளிப்படுத்தினால், இந்த உலகை நியாயந்தீர்க்க அவருக்கு அதிகாரம் இல்லை. ஆகவே நன்மையானது வெளிப்படும் ஓர் சந்தர்ப்பமாக நாம் பாவம் செய்வது நலமாயிருக்கும்.
பவுல் இவ்வித எதிர்மறை விளக்கங்களை கொடுக்கவில்லை. கேள்வி கேட்டவர்களில் இருந்து தீய ஆவியின் அனைத்து கேள்விகளையும், அவனுடைய எதிராளிகள் முன்பு தொகுத்துவைத்து, தனது பதிலை இரண்டு வார்த்தைகளில் கூறினான். “முதலாவது, “அப்படியல்லவே”. கிரேக்க பதத்தில் அது இவ்வாறு உள்ளது. “இப்படி ஒரு சிந்தனை எனக்குள் தோன்றவில்லை”. இதை நான் ஒருபோதும் ஒத்துக்கொள்ள முடியாது. இப்படியொரு தூஷணம் என் இருதயத்தில் இல்லை என்பதற்கு இறைவனே எனக்குச் சாட்சி. இரண்டாவதாக அவன் கூறினான். இப்படி தூஷிப்பவர்கள் மீது இறைவனின் நியாயத்தீர்ப்பு வரும். அவருடைய கோபத்திலிருந்து அவர்கள் தப்பிக்க இயலாது. அவர் உடனடியாக அவர்களை அழிப்பார். இந்த அப்போஸ்தலனின் பதில் நடையின் மூலம் நாம் ஒன்றை கற்றுக்கொள்கிறோம். நாம் தூஷணத்திற்குள்ளாகாதபடி, சிலசமயம் கிறிஸ்துவிற்கு எதிரானவர்கள் கொண்டு வருகிற எல்லா கேள்விகள் மற்றும் வாதங்களுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அந்த உரையாடலை முடிவுக்கு கொண்டு வருகிற தைரியம் நமக்கு வேண்டும். இறைவன் மற்றும் அவருடைய மகிமையுள்ள நீதிக்கு முன்பாக நாம் மக்களை முழுமையாக நிறுத்த வேண்டும்.
விண்ணப்பம்: பரிசுத்தமான இறைவனே. எங்களுடைய எல்லா கீழ்ப்படியாமையின் கேள்விகளுக்காக எங்களை மன்னியும். உமது பொறுமைக்காக நன்றி கூறுகிறோம். எங்கள் மீறுதல்கள் மற்றும் அறியாமையின் நிமித்தம் நீர் எங்களை அழித்துவிடவில்லை. உமது வார்த்தையைக் கேட்கும்படியாகவும், பரிசுத்த ஆவியானவருக்கு நாங்கள் பிரதியுத்தரம் தரும்படியாகவும் நீர் எங்களை அழைத்திருக்கிறீர். உம்முடைய அன்பின் திட்டத்திற்கு எதிரான எல்லா எதிர்கேள்விகளையும் எங்களை விட்டு அகற்றும். உமது சித்தத்திற்கு நாங்கள் இணைந்து போக உதவும். ஆண்டவரே, நாங்கள் கீழ்ப்படியாமையின் பிள்ளைகளாக இருக்க விரும்பவில்லை. உமது குமாரனின் தாழ்மையை எங்களுக்கு கற்றுத்தாரும். உமது அப்போஸ்தலர்களின் ஞானத்தினால் எங்களை நிரப்பும். மனித தர்க்கவாதத்தில் நாங்கள் பேசாதபடி செய்யும். எல்லா நேரங்களிலும் உமது வழிநடத்துதலை காண உதவும்.
கேள்வி:
- ரோமருக்கு எழுதின நிரூபத்தில் உள்ள உண்மையான முரண்பாட்டுக் கேள்விகள் என்ன? அவைகளுக்கான பதில்கள் என்ன?