Previous Lesson -- Next Lesson
இ) சட்டவாதிகள் ஒரு விபச்சாரியை விசாரிக்கும்படி இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள் (யோவான் 8:1-11)
யோவான் 8:1-6
1 இயேசு ஒலிவமலைக்குப் போனார். 2 மறுநாள் காலையிலே அவர் திரும்பித் தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். 3 அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி: 4 போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். 5 இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். 6 அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
இயேசு ஆலோசனைச் சங்கத்தாருடைய கையில் அகப்படாத காரணத்தினால் அச்சங்கத்தார் கோபத்தோடு தங்கள் வீடுகளுக்குச் சென்று விட்டார்கள். தலைவர்கள் இயேசுவை சுதந்திரமாக தேவாலயத்தில் பிரசங்கிக்கும்படி அனுமதித்து விட்டார்கள் என்று மக்கள் கருதிக்கொண்டார்கள். ஆனால் இந்த ஆலோசனைச் சங்கத்து உறுப்பினர்கள் அவரைச் சிக்க வைப்பதற்காக தொடர்ந்து உளவுபார்த்தார்கள். அன்று மாலை இயேசு கெதரோன் பள்ளத்தாக்கைக் கடந்து நகர மதிலுக்கு வெளியே சென்றா.
அடுத்த நாள் இயேசு மக்கள் கூட்டம் நிறைந்திருந்த தேவாலயத்திற்குள் வந்து நகரத்தின் மையத்திற்கு வந்தார். கூடாரப் பண்டிகை முடிவடைந்தவுடன் இயேசு தலைநகரத்தைவிட்டு ஓடிப்போகாமல் அவருடைய எதிரிகள் முன்னிலையில் சுற்றிக்கொண்டிருந்தார். கூடாரப் பண்டிகையின்போது மகிழ்ச்சியும் திராட்சைரசமும் அதிகமாகக் காணப்படுவதால் ஒழுக்க காரியங்களைக் கவனிக்கும் காவல்படையைப் போல பரிசேயர்கள் செயல்பட்டார்கள். அவர்கள் ஒரு விபச்சாரம் செய்த பெண்ணைப் பிடித்துவிட்டார்கள். இந்த வழக்கை வைத்து அவர்கள் இயேசுவை சோதிக்க நினைத்தார்கள். அவர் அந்தப் பெண்ணுக்குச் சலுகை காட்டினால் அது இறைவனாலும் மக்களாலும் பாரம்பரியத்தை மீறும் செயலாகப் பார்க்கப்படும். அவர் கண்டிப்புடன் அந்தப் பெண்ணைத் தண்டித்தால் அவருக்கு மக்கள் நடுவில் இருக்கும் செல்வாக்கு குறைந்துவிடும். அவர் அந்தப் பெண்ணுக்குத் தரும் தண்டனை ஒழுக்கம் தொடர்பான குற்றத்தினால் அவமானப்பட்டுப் போன அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும். அதனால் அவர்கள் தீர்ப்புக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தார்கள்.
யோவான் 8:7-9
7 அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி, 8 அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். 9 அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்.
பரிசேயர்கள் அந்தப் பெண்ணைக் குற்றம் சாட்டியபோது இயேசு குனிந்து தன்னுடைய கைவிரல்களால் தரையில் எழுதத் தொடங்கினார். அவர் என்ன எழுதினார் என்று நமக்குத் தெரியவில்லை. ஒருவேளை அன்பு என்றும் புதிய கட்டளையை எழுதியிருக்கலாம்.
அவருடைய தயக்கத்திற்கான காரணத்தை அந்த மூப்பர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. உலகத்தின் நியாயாதிபதி பொறுமையாக இருந்து அவர்களுடைய மனசாட்சியைத் துழைக்கப் போகிறார் என்பதை அவர்கள் உணரவில்லை. அவரைத் தாங்கள் வசமாகச் சிக்கவைத்து விட்டதாக அவர்கள் நினைத்தார்.
இயேசு எழுந்து அவர்களைத் துக்கத்துடன் பார்த்தார். அது ஒரு தெய்வீகப் பார்வையாக இருந்தது. அவருடைய வார்த்தை சத்தியமானது அதை நாம் புறக்கணிக்கக்கூடாது. நியாயத்தீர்ப்பில் அவர் “உங்களில் யார் குற்றமில்லாதவனோ அவன் முதலில் கல்லெறியக்கடவன்” என்று கூறினார். இயேசு நியாயப்பிரமாணத்தின் ஒரு வாக்கியத்தைக் கூட மாற்றாமல் அதை முழுமையாக எடுத்துரைத்தார். அந்த விபச்சாரி மரணத்துக்குப் பாத்திரமானவள் என்பதை அவர் ஏற்றுக்கொண்டார்.
இயேசு தன்னுடைய செயலின் மூலமாக விபச்சாரியையும் அதேவேளையில் பக்தியுள்ளவர்களையும் நியாயம் தீர்த்தார். முதலில் கல்லெறிவதன் மூலம் அவர்கள் தங்கள் குற்றமின்மையை நிரூபிக்க வேண்டும் என்று சவால் விட்டார். இதன்மூலம் அவர்களுடைய பக்திமான்கள் என்ற முகத்திரையை அவர் கிழித்தெறிந்தார். எந்த மனிதனும் பாவமில்லாதவன் அல்ல. நாம் அனைவருமே பெலவீனமானவர்கள், சோதனைக்கும் தோல்விக்கும் உட்பட்டவர்கள். இறைவனுக்கு முன்பாக ஒரு பாவிக்கும் பக்திமான்போல காணப்படும் நடிப்புக்காரனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. நாம் அனைவருமே அவரைவிட்டு விலகி கெட்டுப் போனோம். யாரெல்லாம் நியாயப்பிரமாணத்தின் ஒரு கட்டளையை மீறினார்களோ அவர்கள் அனைத்துக் கட்டளைகளையும் மீறியவர்களும் நித்திய அழிவுக்குப் பாத்திரவான்களாகவும் இருக்கிறார்கள்.
மூப்பர்களும் சட்டவாதிகளும் தங்களுடைய பாவங்களுக்காக மிருக பலிகளை தேவாலயத்தில் செலுத்தும்போது அதன்மூலம் தாங்களும் பாவிகள் என்பதை அறிக்கையிடுகிறார்கள். கிறிஸ்துவின் வார்த்தை அவர்களுடைய மனசாட்சியைத் தொட்டது. அவர்கள் நசரேயனாகிய இயேசுவை கைதுசெய்ய விரும்பினார்கள். ஆனால் அவர்தான் அவர்களுடைய தீமையை வெளிப்படுத்தி அவர்களை நியாயம் தீர்த்தார். அதேவேளையில் அவர் நியாயப்பிரமாணத்தையும் கடைப்படித்தார். குற்றஞ் சாட்டியவர்கள் அவருடைய பரிசுத்தத்தினால் ஆச்சரியமடைந்து தாங்கள் இறைவனுடைய மகனுடைய சமூகத்தில் நிற்பதாக உணர்ந்தார்கள்.
மூப்பர்களும் அவர்களோடு வந்தவர்களும் அவ்விடத்தைவிட்டுப் போய்விட்டார்கள். இயேசு மட்டும் தனித்திருந்தார்.
யோவான் 8:9-11
9 அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள். 10 இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். 11 அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
அங்கு அந்தப் பெண் நடுக்கத்துடன் நின்றுகொண்டிருந்தார். நியாயமும் இரக்கமும் நிறைந்தவராக அவளைப் பார்த்து, “உன்னைக் குற்றப்படுத்தியவர்கள் எங்கே? ஒருவரும் உன்னை நியாயம் தீர்க்கவில்லையா?” என்று கேட்டார். அவளைத் தண்டிக்கக்கூடிய ஒரே நபர் அவராக இருந்தபோதிலும் அவர் அவளைத் தண்டிக்கப் போவதில்லை என்பதை அவள் உணர்ந்துகொண்டாள்.
இயேசு பாவிகளை நேசிக்கிறார்; அலைந்து திரிகிறவர்களை தேடவே அவர் வந்தார். அவர் அந்தப் பாவமுள்ள பெண்ணை தண்டிக்காமல் தன்னுடைய கிருபையை அவளுக்குக் கொடுத்தார். ஏனெனில் அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து உலகத்திற்காக மரித்தார். அவர் அந்தப் பெண்ணுடைய தண்டனையைச் சுமந்தார்.
அவர் உங்களுக்காக மரித்த காரணத்தினால் உங்களுக்கு முழுமையான மன்னிப்பைத் தருகிறார். அவர் உங்களுடைய தண்டனையிலிருந்து உங்களை விடுவிக்கும்படி அவரை விசுவாசியுங்கள். அவருடைய மன்னிப்பின் ஆவியையும் பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் நீங்களும் மற்றவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்கள். நீங்களும் பாவிகள் என்பதையும் மற்றவர்களைவிடச் சிறந்தவர் அல்ல என்பதையும் ஒருபோதும் மறந்து விடாதீர்கள். வேறு ஒருவர் விபச்சாரம் செய்திருந்தால் நீங்களும் அசுத்தமானவர் என்பதை மறந்துவிட்டு அவரை நியாயம் தீர்க்காதீர்கள். வேறு ஒருவர் திருடிவிட்டால் நீங்கள் நேர்மையானவர் என்று மார்தட்டிக் கொள்ளாதீர்கள். எந்த அளவினால் நீங்கள் அளக்கிறீர்களோ அதே அளவினால்தான் உங்களுக்கும் அளக்கப்படும். மற்றவர்களுடைய கண்ணிலிருக்கும் துரும்பைப் பார்த்துக்கொண்டு உங்கள் கண்களிலிருக்கும் உத்திரத்தைப் பார்க்கத் தவறிவிடாதீர்கள்.
அந்தப் பெண் மறுபடியும் அதே பாவத்தைச் செய்யக்கூடாது என்று கூறி இயேசு அவளை அனுப்பிவிட்டார். சுத்தமாயிருக்க வேண்டும் என்ற இறைவனுடைய கட்டளை என்றும் மாறாதது. அது ஒருபோதும் தளர்த்தப்படாது. அன்பிற்காக ஏங்கிக்கொண்டிருந்த அந்தப் பெண் இறைவனிடம் வந்து தன்னுடைய பாவங்களை அறிக்கையிடும்படி இயேசு அந்தப் பெண்ணை நடத்தினார். இவ்வாறு அந்தப் பெண் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டாள். அவளால் செய்யமுடியாத காரியத்தை அவர் அவளிடம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் உடைந்த உள்ளத்திற்கு உரிய சக்தியை அவர் கொடுத்தார். பரிசுத்தமாக வாழும் பெலனை அவளுக்குக் கொடுத்தார். அவ்வாறே நீங்களும் இனிமேல் பாவம் செய்யக்கூடாது என்று கூறுகிறார். அவர் உங்கள் இருதயத்தின் அறிக்கையைக் கேட்க ஆயத்தமாயிருக்கிறார்.
விண்ணப்பம்: ஓ கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய சமூகத்தில் நான் வெட்கித் தலைகுனிகிறேன். ஏனெனில் நான் அந்த விபச்சாரியைவிட எந்த வகையிலும் சிறந்தவனல்ல. மற்றவர்களை நான் நியாயம் தீர்த்தமைக்காக அல்லது காயப்படுத்தியமைக்காக என்னை மன்னியும். என்னுடைய குற்றத்தை நீக்கி என்னைச் சுத்திகரியும். என்னை நீர் மன்னிப்பதற்காக உமக்கு நன்றி. உம்முடைய பொறுமைக்காகவும் இரக்கத்திற்காகவும் உமக்கு நன்றி. இப்போதிருந்து நான் பாவம் செய்யாதபடி வாழ எனக்கு உதவி செய்யும். என்னுடைய தீர்மானத்தை உறுதிப்படுத்தி, என் தூய்மையை நிலைப்படுத்தும். பரிசுத்த வாழ்க்கைக்குள் என்னை நடத்தும்.
கேள்வி:
- விபச்சாரியைக் குற்றப்படுத்தியவர்கள் ஏன் இயேசுவின் சமூகத்தைவிட்டுப் போய்விட்டார்கள்?