Previous Lesson -- Next Lesson
3. இயேசு தோமாவுடன் இருந்த சீஷர்களுக்கு காட்சியளிக்கிறார் (யோவான் 20:24-29)
யோவான்20:24-25
24 இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை.25 மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.
விமர்சிப்பவர் அனைவரும் பரிசுத்த ஆவியானவருக்கு எதிரானவர் என்று எண்ண வேண்டாம். உங்கள் சாட்சியை புறக்கணிக்கும் அனைவரும் வழிவிலகியோ அல்லது அழிந்தோ போவதில்லை. யோவான் இயேசு பரமேறுவதற்கு முன்பாக நாற்பது நாட்களில் நடந்த நிகழ்ச்சிகளில் சிலவற்றை காண்பிக்கிறார். அவகைளில் ஒன்று மிகவும் விசேஷமானது. மனிதனில் கிருபையானது எவ்விதம் விசுவாசத்தை உருவாக்குகிறது என்பதை இது காண்பிக்கிறது. கிரியைகள், அறிவு ஞானம் இவைகளினால் அல்ல கிருபை மற்றும் இரக்கத்தினால் மட்டுமே விசுவாசம் வருகிறது. தோமா எதையும் கண்டு நம்புபவர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவர் முழுமையாக காணவில்லை. அவர் மெய்யான உண்மையை கண்டு கொள்ளும்படி காரியங்களின் ஆழங்களுக்குள் செல்ல முற்பட்டார். (யோவான் 11:10; 14:5) அவர் சிந்தனையுள்ளவராக காணப்பட்டார். பிரச்சினைகளை அறிவுப் பூர்வமாக தீர்க்க முற்பட்டார். கிறிஸ்துவின் மரணத்தில் வாழ்வின் அர்த்தம் தொலைந்து போனதை அவர் கண்டார். சீஷர்களின் வட்டத்திற்குள் முதலாவது அவர் இல்லை. அந்த முதல் ஞாயிறு அன்று அவர் இயேசுவை பார்க்கவில்லை. இயேசு மற்ற அனைவருக்கும் அன்று காட்சி தந்திருந்தார்.
அது ஒரு சாத்தானின் சூழ்ச்சி என்று தோமா ஒருவேளை வாதிட்டிருக்கக் கூடும். அவர்களை வழிவிலகப்பண்ணும்படி ஒரு தீய ஆவி கிறிஸ்துவின் உருவத்தில் வந்தது என்று சொல்லியிருக்கக் கூடும். என்ன நிகழ்ந்தது என்பதற்கான ஆதாரத்தை அவர் கேட்டதில் வியப்பொன்றும் இல்லை. இயேசு காணக்கூடிய ஒரு நபராக வந்தார் என்பதை அவன் நம்பமுடியவில்லை. அவருடைய காயங்களால் உண்டான தழும்புகளைப் பார்த்தால் தான் நம்புவேன் என்றார். இவ்வித்தில் அவர் இறைவனை நம்புவதற்கு அவருடன் பேரம் பேசினார். நம்பும் முன்பே காணும்படி விரும்பினார்.
சீடர்கள் இயேசுவைக் கண்ட மகிழ்ச்சியில் இருந்தார்கள். தோமாவும் இப்போது அவர்களுடன் இருக்கிறார். எப்படியிருப்பினும் வருத்தத்துடன் இருக்கும் எவருக்கும் இயேசு தான் உயிர்த்தெழுந்ததை உறுதிப்படுத்திக் காண்பிக்க விரும்பினார்.
யோவான் 20:26-28
26 மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.27 பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.28 தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.
ஒரு வாரம் கழித்து இயேசு மறுபடியும் தம்முடைய சீஷர்களுக்கு காட்சி அளித்தார். இன்னமும் அவர்கள் பயந்திருந்தார்கள், கதவுகளைப் பூட்டியிருந்தார்கள். உயிர்த்தெழுந்த இயேசுவின் சரீரம் சத்தமின்றி அக்கதவுகளின் வழியே உட்பிரவேசித்தது. அவர் தமது சமாதானத்தினால் அவர்களை ஆசீர்வதித்தார். பலவீனமுள்ள சீடருக்கு அவர் மன்னிப்பைத் தருகிறார்.
இயேசுவின் சத்தத்தைக் கேட்ட பின்பு தோமா தமது கண்களினால் ஆச்சரியத்துடன் தனது ஆண்டவரைப் பார்த்தார். இயேசு அவர்கள் அனைவரையும் பார்த்தார். தோமாவின் சந்தேகங்களை துளைத்து எடுக்கும்படியாக ஒரு தெய்வீக பார்வையோடு அவரது கண்கள் அவனை நோக்கியது. தன்னைத் தொடும்படியாக கூனிக் குறுகிப்போன தோமாவை அழைத்தார். மகதலேனா மரியாளிடம் சொன்னது போல் இப்போது சொல்லவில்லை. என்னைத் தொட்டு, உணர்ந்து பார், நான் ஒரு நபராக உங்கள் மத்தியில் இருக்கிறேன். ஆணிகளினால் உண்டான காயங்களை இயேசு அவனுக்கு காண்பித்தார். அவனை அருகில் அழைத்து உன் விரல்களை எனது காயங்களில் போட்டுபார், என்னை விசுவாசி என்றார்.
தயக்கத்துடனிருந்த சீஷர்களிடம் எல்லா சந்தேகங்களையும் மேற்கொள்ளும்படி அவர் வலியுறுத்தினார். நம்மிடம் இருந்து முழுமையான உறுதியை அவர் எதிர்பார்க்கிறார். ஏனெனில் அவர் தமது சிலுவை, உயிர்த்தெழுதல், இறைவனுடன் ஐக்கியம் மற்றும் அவரது இரண்டாம் வருகையை அறிவித்துள்ளார். இந்த சத்தியங்களை மறுதலிப்பவன் அவரைப் பொய்யராக மாற்றுகிறான்.
ஆண்டவரின் அன்புள்ள அணுகுமுறை தோமாவை நொறுக்கியது. அவன் தழுதழுத்த குரலில் (அவனது விண்ணப்பங்கள் மற்றும் தியானங்களின் தொகுப்பாக) மிகப் பெரிய விசுவாச அறிக்கையை கூறினான். “என் ஆண்டவரே, என் இறைவனே “அவன் சத்தியத்தை அறிந்து கொண்டான். இயேசு பிதாவினால் அனுப்பப்பட்ட இறைவனின் குமாரன் மாத்திரம் அல்ல, அவரே கர்த்தராக இருக்கிறார். தெய்வீகத்தின் முழுமையையும் தனது சரீரத்தில் உடையவராக அவர் இருக்கிறார் என்பதையும் அறிந்து கொண்டான். இறைவன் ஒருவரே, அவர் இருவர் அல்ல, தோமா இயேசுவை என் இறைவனே என்று அழைத்தார். இந்த பரிசுத்தமுள்ள கடவுள் தனது அவிசுவாசத்திற்காக தன்னை தண்டிக்கமாட்டார் என்பதை அவன் அறிந்திருந்தான். இயேசு அவன் மீது தனது கிருபையை பொழிந்தருளினார். தோமா அவரை என் ஆண்டவரே என்றும் அழைத்தார். தனது கடந்தகாலம், எதிர்காலம் முழுமையும் தனது இரட்சகரின் கரங்களில் ஒப்புக்கொடுத்தான். இயேசு தனது பிரியாவிடை உரையில் கூறியதை முழு நிச்சயமாக நம்பினான். சகோதரனே, நீ என்ன சொல்கிறாய்? தோமாவைப் போல நீயும் அறிக்கை செய்வாயா? உயிர்த்தெழுந்த ஆண்டவர் உங்களை நோக்கி வந்துள்ளாரா? அவரது மகத்துவம் உங்களது சந்தேகங்கள் மற்றும் தடைகளை தகர்த்துள்ளதா? அவரது இரக்கத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள், அவருக்கு முன்பாக அறிக்கையிடுங்கள். “என் ஆண்டவரே, என் தேவனே”.
விண்ணப்பம்: நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே நீர் சந்தேகித்த தோமாவை புறக்கணிக்கவில்லை. உம்மை நீரே அவனுக்கு வெளிப்படுத்தினீர். எங்கள் வாழ்க்கையை உமக்கு சொந்தமாக்குகிறோம். ஏற்றுக்கொள்ளும். கபடு நிறைந்த எங்கள் நாவுகளைப் புனிதப்படுத்தும்.
கேள்வி:
- தோமாவின் அறிக்கை எதைக் குறிப்பிட்டுக் காண்பிக்கிறது?