Previous Lesson -- Next Lesson
ஊ) கொலைகாரனும் பொய்யனுமாகிய பிசாசு (யோவான் 8:37-47)
யோவான் 8:37-39
37 நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாரென்று அறிவேன்; ஆனாலும் உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம்பெறாதபடியால், என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள். 38 நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் செய்கிறீர்கள் என்றார். 39 அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே.
யூதர்கள் தங்களை ஆபிரகாமுடைய வித்தாகக் கருதினார்கள். அதனால் விசுவாசத்தின் தந்தையோடு தங்களுக்கிருக்கும் தொடர்பின் காரணமாக, கடவுள் தன்னுடைய கீழ்ப்படிவுள்ள தாசனாகிய ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களைத் தாங்களும் உரிமையாக்கிக்கொள்ள முடியும் என்று கருதினார்கள்.
அவர்கள் ஆபிரகாமுடைய சந்ததி என்பதையோ, அதனால் அவர்களுக்கிருந்த உரிமைகளையோ இயேசு மறுக்கவில்லை. ஆனால் ஆபிரகாமுடைய சந்ததியாராகிய அவர்களிடம் ஆபிரகாமுடைய ஆவியில்லையே என்றுதான் இயேசு வருந்தினார். இயேசுவோ கடவுளுடைய சத்தத்தைக் கேட்கவும் அவருடைய வார்த்தையைக் கைக்கொள்ளவும் கூடியவராக இருந்தார். இயேசு இறைவனைத் தன்னுடைய பிதா என்று சொன்னதால், அவர்கள் இயேசுவின் வார்த்தைகளுக்குத் தங்கள் செவிகளை அடைத்துக்கொண்டார்கள். இயேசுவின் வார்த்தைகள் அவர்களுடைய இதயத்திற்குள் நுழையவோ அவர்களுக்கு ஒளிகொடுக்கவோ அவர்கள் அனுமதிக்கவில்லை. அவர்கள் தங்கள் அறியாமையிலும் அவிசுவாசத்திலும் நிலைத்திருந்தார்கள்.
கிறிஸ்துவின் பேச்சுக்கு இந்தக் கூட்டத்தாரிடமிருந்து மறுப்பும் வெறுப்பும் தவிர வேறு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அத்தருணத்தில் அங்கிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அப்போது இயேசுவைக் கொல்ல வேண்டுமென்று சிந்திக்கவில்லை. ஆயினும் இயேசு அவர்களுடைய இருதயங்களின் நோக்கத்தையும் கொலைக்குக் காரணமாயிருப்பது வெறுப்பே என்பதையும் நன்கறிந்திருந்தார். அதிவிரைவில் அவர்கள் “அவனைச் சிலுவையில் அறையும், அவனைச் சிலுவையில் அறையும்” என்று சத்தமிடப் போகிறார்கள் (மத்தேயு 27:21-23; யோவான் 19:15).
ஆபிரகாம் இறைவனுடைய வார்த்தையைக் கேட்டு உடனடியாகக் கீழ்ப்படிந்தார். அதைவிட ஆச்சரியமானது என்னவென்றால் இயேசு பிதாவினுடைய சத்தத்தை எப்போதும் கேட்டு அதற்குச் செவிகொடுத்ததோடு மட்டுமின்றி, அவர் இறைவனுடைய செயலையும் மகத்துவத்தையும் கண்ணாரக் கண்டார். அவருக்குக் கிடைத்த வெளிப்பாடு இறைவனுடன் அவருக்கிருந்த உறுதியான உறவிலிருந்து வருவதால் முழுமையானதாக இருந்தது. இயேசு இறைவனுடைய ஆவியிலிருந்து வரும் ஆவியாகவும், அவருடைய அன்பிலிருந்து வரும் அன்பாகவும் இருக்கிறார்.
ஆனால் யூதர்கள் பிதாவின் ஒரே மகனைப் பகைத்தார்கள். அவர்கள் உண்மையான இறைவனிடமிருந்து வரவில்லை என்பதற்கு இதுவே ஆதாரமாக இருக்கிறது. அவர்களுடைய சிந்தனை பரலோகத்திலிருந்து தோன்றாமல் வேறு இடத்திலிருந்து வருகிறது. இந்த நிலையில் இயேசு அவர்களுடைய “பிதாக்களின்” அடையாளத்தைக் குறித்துப் பேசுகிறார். இவ்வாறு பார்க்கும்போது ஆபிரகாம் அவர்களுடைய பிதா அல்ல.
யோவான் 8:40-41
40 தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே. 41 நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்குண்டு, அவர் தேவன் என்றார்கள்.
யூதர்கள் ஆபிரகாமுடைய ஆவியுடையவர்கள் அல்ல என்று இயேசு சொன்னபடியால் அவர்கள் இயேசுவின் வார்த்தைகளை வெறுத்தார்கள். தாங்கள் ஆபிரகாமுடைய சந்ததி என்று அவர்களுக்கிருந்த நம்பிக்கையே அவர்களுடைய விசுவாசத்திற்கு ஆதாரமாகவும் அவர்களுடைய பெருமைக்கு அடிப்படையாகவும் காணப்பட்டது. ஆகவே இயேசு எப்படி அவர்களுக்கு ஆபிரகாமுடன் இருந்த தொடர்பைக் குறைகூறி அதை மறுதலிக்கமுடியும்.
ஆபிரகாம் இறைவனுடைய வார்த்தையைக் கேட்டு நாடோடியாகப் புறப்பட்டுச் சென்றபோது, விசுவாசத்தோடு இறைவனுக்குக் கீழப்படிந்தார் என்பதையும் இயேசு அவர்களுக்குக் காண்பித்தார். ஆபிரகாம் தன்னுடைய மகனாகிய ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தபோதும், தன்னுடைய அண்ணன் மகனாகிய லோத்துவிடம் தன் தாழ்மையைக் காண்பித்தபோதும், இறைவன் உண்மையுள்ளவர் என்பதில் அவருக்கிருந்த நம்பிக்கை விளங்குகிறது. ஆனால் யூதர்கள் பிடிவாதத்தையும், கலகத்தையும், அவிசுவாசத்தையுமே வெளிப்படுத்தினார்கள். அவர்களுடைய ஆவி கிறிஸ்துவின் ஆவிக்கு எதிராக இருந்தது. இவ்வாறு அவர்கள் மனுவுருவான சத்தியமாக அவர்கள் நடுவில் நின்றுகொண்டிருந்த இயேசுவோடு அவர்கள் சண்டையிட்டதுடன், அவர் மூலமாக வந்த இறைவனுடைய வார்த்தைக்கும் செவிகொடுக்க மறுத்தார்கள். இயேசு தேவதூதர்கள் சூழ இறைமகனாக தன் மகிமையில் வராமல், ஒரு எளிய மனிதனாக தன் வார்த்தையின் வல்லமையோடு மட்டும் வந்தார். அவருடைய நற்செய்தியை அவர்கள் வெறுத்துப் புறக்கணித்ததால், அவரைக் கொல்ல வேண்டும் என்ற சிந்தனை அவர்களுடைய மனதில் தோன்றியது. இது ஆபிரகாமுடைய தன்மைக்கும் செயல்களுக்கும் எதிரிடையானதாக இருந்தது. ஆபிரகாம் இறைவனுடைய வார்த்தையைக் கேட்டார், கீழ்ப்படிந்தார், அவர் பெற்றுக்கொண்ட வெளிப்பாட்டின்படி வாழ்ந்தார்.
யோவான் 8:42-43
42 இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். 43 என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?
ஆபிரகாம் அவர்களுடைய பிதா அல்ல என்பதை இயேசு அவர்களுக்க நிரூபித்துக் காட்டிய பிறகு, அவர்கள் பின்பற்றும் அவர்களுடைய உண்மையான பிதா யார் என்பதை அவர்களே நிதானித்துப் பார்க்கும் வண்ணமாக அவர்களிடம் பேசுகிறார். அவர்களுடைய பிதாவைப் போலவே அவர்களும் செயல்படுகிறார்கள்.
இயேசு தனக்கும் தங்களுக்குமிடையிலான வித்தியாசத்தை தெளிவுபடுத்திவிட்டார் என்பதை யூதர்கள் உணர்ந்தார்கள். அவர்கள் தகாத உறவினால் பிறந்த மோவாபியரைப் போலவோ அல்லது அம்மோனியர்களைப் போலவோ (ஆதியாகமம் 19:36-38) தாங்கள் பிறக்கவில்லை என்று பதிலுரைத்தார்கள். மேலும் யூதர்கள் யாத்திராகமம் 4:22, உபாகமம் 32:6 மற்றும் ஏசாயா 63:16 ஆகிய வேதப் பகுதிகளின் அடிப்படையில் இறைவன் தங்களுடைய பிதா என்று உரிமைகோரும் கலப்பினமாகிய சமாரியர்களைப் போன்றவர்களுமல்ல. இறைவன் தன்னுடைய பிதா என்று இயேசு சொன்னபோது, அவர்களும் வேத வசனங்களின் ஆதாரத்தில் இறைவன் தங்களுக்கும் பிதா என்று கூறினார்கள். இது அவர்களுடைய விசுவாசக் கொள்கை. அதற்காகத்தான் அவர்கள் போராடினார்கள், பாடுபட்டார்கள். ஆனால் அவர்களுடைய சாட்சி பொய்யானதாயிருந்தது.
அவர்கள் தங்களையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இயேசு அவர்களுக்கு விளக்கிக் காண்பித்தார். “இறைவன் உங்களுடைய பிதாவாயிருந்தால், நீங்கள் என்னை சிநேகித்திருப்பீர்கள். ஏனென்றால் இறைவன் அன்பாயிருக்கிறார். அவர் வெறுப்பாயிருப்பதில்லை. அவர் தன்னித்திலிருந்து வரும் தன்னுடைய மகனை நேசிக்கிறார். மகன் பிதாவின் தன்மையை தன்னில் கொண்டிருக்கிறார்” என்று இயேசு அவர்களிடம் கூறினார். இயேசு ஒரு கனம்கூட பிதாவை விட்டுத் தனித்திராமல், ஒரு கீழ்ப்படிதலுள்ள அப்போஸ்தலராக அவருக்குக்குக் கீழ்ப்படிகிறார்.
“என்னுடைய போதனையை நீங்கள் ஏன் புரிந்துகொள்ளவில்லை? நான் வேறு மொழியில் உங்களுடன் பேசவில்லையே. சிறுவர்களும் புரிந்துகொள்ளக்கூடிய எளிய வார்த்தைகளில்தானே நான் உங்களிடம் பேசுகிறேன்” என்று மக்கள் கூட்டத்தைப் பார்த்து இயேசு கேட்டார். “உங்களால் எனக்குச் செவிகொடுக்க முடியாது. நீங்கள் சுயாதீனராயிராமல் அடிமைகளாயிருக்கிறீர்கள். உங்கள் ஆவிக்குரிய வாழ்வை நீங்கள் இழந்து விட்டீர்கள். அதனால் நீங்கள் எந்த சத்தத்தையும் கேட்க முடியாத குருடரைப் போல இருக்கிறீர்கள்” இயேசு தன்னுடைய கேள்விக்குத் தானே பதிலுரைத்தார்.
அன்புள்ள சகோதரனே, நீங்கள் எவ்வாறு இறைவனுக்குச் செவிகொடுக்கிறீர்கள்? இறைவனுடைய வார்த்தை உங்கள் இருதயத்தில் கேட்கிறதா? உங்கள் உள்ளான மனிதனை சரிசெய்யவும் சுத்தப்படுத்தவும் ஆவலோடு பேசும் அவருடைய சத்தம் உங்களுக்குக் கேட்கிறதா? அல்லது ஒரு அந்நிய ஆவி உங்களைப் பிடித்திருப்பதால், பெருமையும் செவிட்டுத்தன்மையும் உடையவராயிருக்கிறீர்களா? நீங்கள் நற்செய்தியின் வல்லமையினால் இறைவனுக்குப் பணிசெய்கிறீர்களா? அல்லது ஒரு தீய ஆவி உங்களுக்குள் வாழ்ந்து உங்களை நடத்துகிறதா?
கேள்வி:
- யூதர்கள் ஆபிரகாமுடைய பிள்ளைகள் அல்ல என்பதை இயேசு எவ்வாறு அவர்களுக்கு நிரூபித்துக் காட்டினார்?