Previous Lesson -- Next Lesson
4. உங்கள் பகைவர்கள் மற்றும் எதிராளிகளை நேசியுங்கள் (ரோமர் 12:17-21)
ரோமர் 12:17-21
17 ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். 18 கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். 19 பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். 20 அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய் 21 நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.
இயேசு “கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல்” என்ற கட்டளையை மேற்கொண்டார். அதற்கு ஒரு முடிவைக் கொண்டு வந்தார். (யாத்திராகமம் 21:24; லேவியராகமம் 24:19,20; மத்தேயு 5:38-42) எல்லா பகைவர்களையும் நேசிக்கவும், அவர்களை ஆசீர்வதிக்கவும் புதிய கட்டளைகளைக் கொடுத்தார். பழைய உடன்படிக்கையின் சட்டத்தினுடைய அனைத்து தாற்பரியங்களையும் அவர் மேலாதிக்கம் செய்தார். நம்முடைய கறைபடிந்த உலகின் மத்தியில் பரலோக பிதாவிடம் நம்மை அவர் வழிநடத்துகிறார்.
பரிசுத்த ஆவியின் நடத்துதலின்படி அப்போஸ்தலனாகிய பவுல் இயேசுவின் கட்டளைகளின்படி வாழ்ந்து, அவைகளை சபைகளுக்கு கற்றுக்கொடுத்தான். ஆகவே ஒருவன் உன்னை ஏமாற்றினால், உன்னைக் குறித்து தீமையாகப் பேசினால் நீ கடினமாகவும், கசப்பாகவும் நடந்து கொள்ளாதே. ஒடுக்கப்பட்டோருக்கு நீதியை நிலைநாட்டும் ஆண்டவரிடம் உனது பிரச்சினையைக் கூறு. சத்தியத்திற்காக சாட்சியாக நில். கடினமாக நடந்து கொள்ளாதே. சமாதானத்தைக் கொண்டுவர முயற்சிசெய். உனது நேரம் மற்றும் உனது உரிமைகளை தியாகம்செய். உன் மீதும், உனது பகைவன் மீதும் இறைவன் தனது சமாதானத்தைக் கொண்டுவரும்படி வேண்டுதல் செய். ஒவ்வொரு கடின இருதயத்தையும் ஆண்டவரின் அன்பு மென்மையாக்கும்.
கிறிஸ்தவத்தில் பழிவாங்குதல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. இறைவன் மட்டுமே தமது பரிசுத்தத்தில் நீதியுள்ளவர். அனைத்து சூழ்நிலைகளையும் அறியக் கூடியவர். ஞானம் மற்றும் நீதியினால் நியாயந்தீர்ப்பவர் (உபாகமம் 32:35).
மற்றவர்களை நாம் நியாயந்தீர்க்காதபடி இயேசு நம்மை தடுக்கிறார். நம்முடைய அறிவு குறைவுள்ளது. அவர் தெளிவாகக் கூறுகிறார். “ 1 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். 2 ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். 3 நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? 4 இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? 5 மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்” (மத்தேயு 7:1-5).
நம்முடைய பெருமை மற்றும் சுயத்திலிருந்து ஆண்டவரின் இந்த வார்த்தைகள் நம்மை கீழே கொண்டு வருகிறது. ஒருவரும் பூரணமானவர் இல்லை என்பதை நமக்கு காண்பிக்கிறது. நாம் அனைவரும் குறைவுள்ளவர்கள், தவறு செய்பவர்கள், பாவம் செய்வோரை நியாயத்தீர்ப்பதில் துரிதமுள்ளவர்கள். நாம் மனந்திரும்பாமல் நம்மை ஆராய்ந்து பார்க்காமல் இருக்கிறோம். நமது பகைவர்களை நேசிக்க வேண்டும் என்ற இயேசுவின் வார்த்தைகளை பவுல் நடைமுறையில் இவ்விதம் விளக்கப்படுத்துகிறான். உனது பகைவன் அப்பமோ, உணவோ வாங்க வழியின்றி இருக்கும் போது, அவனை பசியுடன் வாட விடாதே. அவன் தண்ணீரின்றி தவிக்கும் போது, உனக்கு தண்ணீர் இருந்தால், அவன் தாகம் தீர்க்கப்பட்ட இலவசமாகக் கொடு. உனது பகைவனின் தேவைகளை சந்திப்பதில் நீ பங்கெடுக்க வேண்டும். ஞானமுள்ள அரசனாகிய சாலமோன் கூறுகிறான். “ உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு. அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார். ” (நீதிமொழிகள் 25:21,22) இந்த ஞானம் என்பது புதிய தத்துவம் அல்ல. அது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒன்று. ஞானம் இல்லை என்பது பிரச்சினை அல்ல. பெருமை மற்றும் கடின இருதயங்கள் தான் பிரச்சினைக்கு காரணம், தங்களது பாவங்களுக்காக மன்னிப்பு கேட்காத நிலை மற்றும் பணியாத நிலை, மன்னிக்காத நிலை தான் காரணம்.
அற்புதமான ஒரு வாக்கியத்தின் மூலம் பவுல் தனது பேச்சை தொகுத்து கூறுகிறான். “நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.” (ரோமர் 12:21) இந்த வசனத்தின் மூலம் அப்போஸ்தலன் உனக்கு சொல்ல விரும்புவது: தீமை உன்னில் ஆழமாய் வேரூன்றாதபடி காத்துக்கொள். நீ தீமையுள்ளவனாய் இராதே. கிறிஸ்துவின் நன்மை மற்றும் அறிவுக்கெட்டாத அன்பினால் தீமையை மேற்கொள். இந்த கொள்கை தான் நற்செய்தியின் இரகசியம் ஆகும். இயேசு உலகத்தின் பாவத்தை தன்மீது சுமந்தார். தனது பரிசுத்த அன்பு, பரிகாரபலி மரணம் மூலம் அதை மேற்கொண்டார். கிறிஸ்துவே வெற்றியாளர். நீ தீமையை மேற்கொள்ளும்படி அவர் விரும்புகிறார். மற்றவர்கள் உனக்கு கொண்டு வரும் தீமையை பொறுத்துக்கொள்ள நீ ஆவிக்குரிய வல்லமையை பெறுகிறாய். உனது விண்ணப்பங்கள் மற்றும் பொறுமை நிறைந்த அன்பினால் அதை மேற்கொள்கிறாய்.
விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். இறை அன்பின் தற்சுரூபம் நீர். யாரையும் கட்டாயப்படுத்துகிறவர் நீர் அல்ல. பழிவாங்கும் உணர்வு உமக்கு இல்லை. உமது பகைவர்களை நீர் மன்னிக்கிறீர். “பிதாவே, இவர்களுக்கு மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்கள் அறியாதிருக்கிறார்கள்” என்று வேண்டுதல் செய்தீர். உமது ஆவியினால் எங்களை நிரப்பும். எங்கள் பகைவர்களை மன்னிக்க, ஆசீர்வதிக்க எங்களுக்கு உதவும். உம்மைப் போல அவர்களை பொறுத்துக்கொள்ள கிருபை செய்யும்.
கேள்வி:
- பகையுணர்வு மற்றும் பழிவாங்குதல் இன்றி எவ்விதம் நம்முடைய பகைவர்களை நாம் மன்னிக்கிறோம்?