Previous Lesson -- Next Lesson
ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களின் வாழ்வில் வெளிப்படுகின்ற இறைவனுடைய நீதி (ரோமர் 12:1-15:13)
1. இறைவனுக்கு உங்களை முழுமையாக அர்ப்பணிப்பதின் மூலம் உங்கள் வாழ்வில் பரிசுத்தமாக்கப்படுதல் பெறப்படுகின்றது (ரோமர் 12:1)
ரோமர் 12:2
2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
ரோமில் உள்ள சபை மக்கள் பரிசுத்த திரியேகருக்குள் ஆவி மற்றும் சத்தியத்துடன் தங்களை அர்ப்பணிக்கும்படி பவுல் அழைக்கிறான். பாவத்தின் எல்லாவித சோதனைக்கும் எதிரான ஆவிக்குரிய யுத்தத்திற்க்கு அவர்களை அழைக்கிறான்.
கிறிஸ்து அருளும் இரட்சிப்பை பெற்றுக் கொள்வதற்க்கு இந்த ஆவிக்குரிய போராட்டம் வழிநடத்துவதில்லை. மாறாக ஆண்டவர் தனது நீதியை உனது வாழ்வின் பரிசுத்தமாகுதலின் மூலம் காண்பிக்க விரும்புகிறார்.
உனது வாழ்வின் பரிசுத்தமாகுதலுக்கான வழிமுறைகளை பவுல் இப்போது கூறுகிறான்.
அ) கிறிஸ்து இல்லாத மற்ற மக்கள் புகழ், செல்வம், காமம் அல்லது சிற்றின்பம் இவைகளைத் தேடுவது போல, நீ உன் வாழ்வில் தேடக் கூடாது. இயேசு தருகின்ற பரிசுத்த நடக்கையை வெளிப்படுத்த வேண்டும். உனது சிந்தனைகள் மற்றும் உனது பணியில் அவருடைய அப்போஸ்தலர்களின் வாழ்வு முறையை காண்பிக்க வேண்டும்.
ஆ) இவைகளை நீ கைக்கொள்ளும்போது, ஆண்டவர் புதிதாக்கப்பட்ட மனதை உனக்கு அருளுகின்றார். ஆடம்பர வாழ்வில் மகிழ்ந்திருப்பது உனது நோக்கமாக இருக்கக் கூடாது இறைசிந்தனைகளைக் குறித்து நீ சிந்திக்க வேண்டும். கிருபையின் ஆவியானவர் உனது இருதயம் மற்றும் சித்தத்தை பரிசுத்தப்படுத்துவார்.
இ) நீ இறைவனின் சித்தத்தை அறிய வேண்டும். உன்னைக் குறித்து இறைவன் விரும்புவதை புரிந்து கொள்ள வேண்டும். அவருடைய திட்டத்தின்படி நீ செயல்பட வேண்டும். அவர் புறக்கணிப்பதை நீயும் புறக்கணிக்க வேண்டும். இந்த ஆவிக்குரிய முதிர்ச்சியை பெறும்படி, நீ பரிசுத்த வேதாகமத்தை தொடர்ந்து வாசிக்க வேண்டும். நீ பரலோகப் பிதாவை பிரியப்படுத்தவும், திருப்திப்படுத்தவும் அவரது வழிநடத்துதலை தேட வேண்டும்.
ஈ) நன்மை செய்யுங்கள். நன்மையைக் குறித்து பேசுவது மட்டுமல்ல, செய்யுங்கள், உங்கள் நேரம் மற்றும் பணத்தை கொடுங்கள் என்று பவுல் கூறுகிறான். நன்மை எது? என்பதை இறைவனிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். பரிசுத்த வேதாகமத்தில் இருந்து ஞானத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். இறைவனைப் பிரியப்படுத்தும் அனைத்து காரியங்களுக்கு நேராக பரிசுத்த ஆவியானவர் உன்னை பயிற்றுவிப்பார்.
உ) உனது வாழ்வில் ஆவிக்குரிய முழுமையைத் தேடு. நீ சுயமாக பரிபூரணம் அடைய முடியும் என்பது இதன் பொருள் அல்ல. உனது இயலாமையை இயேசு நிரப்பும்படி, அவரிடம் கேள். அப்போது நீ அவருக்காக செய்யும் ஒவ்வொரு காரியமும் முழுமையாகவும், உண்மையாகவும் இருக்கும். பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியத்தினால் இது உனக்கு ஈவாக அருளப்படுகின்றது.
ஊ) இவ்விதமாக நீ வாழும்போது, நீ இறைவனுடன் வாழ்கின்றாய். உனது பலவீனத்தில் இறை ஆவியானவர் செயல்படுகின்றார். கொல்கதாவில் தன்னையே பலியாக ஒப்புக் கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்தி நீ மகிழ்ச்சியுள்ள மனிதனாக மாறுகிறாய்.
விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, நாங்கள் சுயநலமாய் வாழ்ந்து, இறைவனை விட எங்களை அதிகமாய் நேசித்ததற்காக எங்களை மன்னியும். உண்மையான ஆவிக்குரிய வாழ்வு வாழும்படி எங்கள் நோக்கங்களை மாற்றும். இயேசு எங்களுடைய எல்லாப் பாவங்களையும் சிலுவையில் மன்னித்துள்ளார். உமது பரிசுத்த ஆவியானவர் எங்கள் வாழ்வில் வல்லமையாக இருக்கிறார். ஆண்டவரே! உமக்கு என்றென்றுமாக எங்களை அர்ப்பணித்து உம்மை நேசிக்க எங்களுக்கு உதவும்.
கேள்வி:
- இயேசுவைப் பின்பற்றுவோர் பரிசுத்தமான வாழ்வு வாழ்வதற்கான வழிமுறைகள் என்ன?