Previous Lesson -- Next Lesson
ஈ) தங்களது அவிசுவாசத்திற்கு இஸ்ரவேலர் பொறுப்புள்ளவர்களா? (ரோமர் 10:16-21)
ரோமர் 10:16-21
16 ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான். 17 ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். 18 இப்படியிருக்க, அவர்கள் கேள்விப்பட வில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள்; அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே. 19 இஸ்ரவேலர் அதை அறியவில்லையா என்று கேட்கிறேன், அறிந்தார்கள். முதலாவது, மோசே: எனக்கு ஜனங்களல்லாதவர்களைக்கொண்டு நான் உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குவேன்; புத்தியீனமுள்ள ஜனங்களாலே உங்களுக்குக் கோபமூட்டுவேன் என்றான். 20 அல்லாமலும் ஏசாயா: என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன், என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் என்று தைரியங்கொண்டு சொல்லுகிறான்.21 இஸ்ரவேலரைக் குறித்தோ: கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாயிருக்கிற ஜனங்களிடத்திற்கு நாள்முழுதும் என் கைகளை நீட்டினேன் என்று அவன் சொல்லியிருக்கிறான்.
மேசியாவிற்காக காத்திருந்த யூதர்களில் பெரும்பான்மையானோர் அவரை அல்லது அவரில் உள்ள நற்செய்தியின் வெற்றியை அறியவில்லை என்பதே பவுல் ரோம சபைக்கு சாட்சியிடும் காரியமாகும். அவர்கள் எல்லா காலங்களிலும் இறை வார்த்தைக்கு எதிர்த்து நின்றார்கள். இது தீர்க்கதரிசி ஏசாயாவின் காலத்தில் வெளிப்படையாகக் காணப்பட்டது. 2700 ஆண்டுகளுக்கு முன்பு தனது மக்களுக்காக தன்னுடைய பாடுகள் மற்றும் துக்கம் நிறைந்த விண்ணப்பங்களில் ஏசாயா இவ்விதம் கூறினான். “நம் மூலம் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்?” (ஏசாயா 53:1).
அநேக யூதர்கள் நற்செய்தியை கேட்டார்கள். ஆனால் அவர்கள் அதை புரிந்துகொள்ளவும் இல்லை, விசுவாசிக்கவும் இல்லை. சிலர் தங்களுக்கு அருளப்பட்ட கிருபையை உணர்ந்தார்கள். ஆனால் அதற்கு கீழ்ப்படிய விருப்பமில்லை. அவர்கள் தங்களது இரட்சிக்கும் ஆண்டவரை நேசிப்பதைவிட, கீழ்ப்படியாமையின் சூழலையும், கடினப்பட்ட தேசத்தையும் நேசித்தார்கள். தங்களது கிருபை நிறைந்த சிருஷ்டிகளுக்கு பயப்படுவதை விட மனிதர்களுக்குப் பயந்தார்கள்.
பவுல் தனது முந்தைய பேச்சைத் தொகுத்து இவ்விதமாக பதிலளித்தான். விசுவாசம் பிரசங்கிப்பதன் மூலம் வருகிறது. ஒரு கீர்த்தனைபாடல் அல்லது குறிப்பிட்ட வேத வசனம் அல்லது வேறுவிதத்தில் நற்செய்தி உங்களை சந்தித்திருக்கலாம். இறைவன் உனது இருதயக் கதவைத் தட்டும்போது, நீ அவருக்கு உடனடியாக கதவைத் திறக்கிறாய், இல்லையெனில் நீ ஆபத்தில் இருக்கிறாய். நற்செய்தியைக் கொண்டு வந்த அனைவரும் உயர்ந்த கருத்துக்கள் அல்லது விளக்கங்களுடன் அதைக் கொண்டு வராமல், சராசரி மனிதனும் புரிந்து கொள்ளக்கூடிய எளிமையான வார்த்தைகளில் பேசினார்கள். கேட்பவர்களின் மொழியில் ஒரு பிரசங்கி வார்த்தையைக் கொண்டுவர வேண்டும். அதனுடைய உள்ளடகத்தை அவன் முழுமையாகக் கொண்டு வர வேண்டும். ஒவ்வொருவரும் பிரசங்கிக்கும் போது நடைமுறை உதாரணங்களைக் கொடுக்கும்படி கற்றுக்கொள்ள வேண்டும். தனிப்பட்ட விதத்தில் நட்புடன் பேசப் பழக வேண்டும். வார்த்தை மற்றும் இறைவனின் சித்தத்தை வெளிப்படுத்தும் போது, விண்ணப்பம் அதனுடன் இணைந்தே இருக்க வேண்டும். ஒரு பிரசங்கி தான் கூறும் ஒவ்வொன்றையும் நம்புகிறான். அவன் தனது சாட்சியை துதி மற்றும் இறைவனுக்கு ஏறெடுக்கும் நன்றியினால் முடிசூட்டுகிறான்.
பிரசங்கம் என்பது கொள்கைகளை கற்றுக்கொடுப்பது அல்ல. அது ஆண்டவரிடம் இருந்து வருகின்ற அழைப்பு. அவர்கள் அவரால் பலப்படுத்தப்பட்டு, அதற்கென்று கட்டளை பெற்றிருக்கிறார்கள். ஆகவே ஆண்டவர் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசம் என்பது நற்செய்தியில் நமது விசுவாசம் என்பதாகும். ஆண்டவர் கவனித்துக் கேட்கும் மக்களுக்கு தமது வார்த்தையை கொடுத்திருக்கிறார். அதன் மூலம் மக்களை எச்சரிக்கிறார், கண்டித்து உணர்த்துகிறார், அழைக்கின்றார், உற்சாகப்படுத்துகிறார், அசைக்கின்றார். கிறிஸ்துவின் இடத்தில் இருந்து ஒரு பிரசங்கி பேசுவதில்லை. அவன் உண்மையுள்ள ஸ்தானாபதியாக செயல்பட்டு, அப்போஸ்தலனாகிய பவுலைப் போல இவ்விதம் கூறுகிறான். “ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்” (2கொரிந்தியர் 5:20).
பவுல் ஆச்சரியப்படுகிறான்: கிறிஸ்துவின் இரட்சிப்பைக் குறித்து அநேக யூதர்கள் கேள்விப்படவில்லை. ஒரே இரட்சகரைக் குறித்து அவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை. அப்போஸ்தலனின் கேள்விக்கு சங்கீதம் 19:5-ல் நாம் பதிலைக் காண்கிறோம். இறைவனின் வார்த்தை நீதியின் சூரியனைப் போல உள்ளது. வானத்தின் ஒருமுனையில் அது உதிக்கின்றது. அதனுடைய ஓட்டப் பாதை மறுமுனையில் முடிகின்றது. அதனுடைய உஷ்ணத்திலிருந்து எதுவும் மறைந்திருக்கவில்லை. சூரியன் உலகிற்கு ஒளி தருவது போல, நற்செய்தி உலகிற்கு ஒளி தருகிறது. இயேசுவின் காலத்தில் அவருடைய அற்புதங்களைக் காண, அவருடைய வார்த்தைகளைக் கேட்க பெருந்திரளான மக்கள் ஓடோடி வந்தார்கள். இன்று கேட்க விரும்புகிறவன் கேட்கட்டும். தேடுகிறவன் கண்டடையிட்டும் என்று நாம் கூறலாம். வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழச்சிகள் நற்செய்தியைக் கேட்க விரும்பும் மக்களுக்கு உதவி செய்கின்றன.
இன்று மனிதன் கேட்கிறான். எதை நான் தெரிந்துகொள்வது? பணம் அல்லது ஆவியானவரா? பணம் அல்லது இறைவனா? புகழ் , அதிகாரம், பாலுறவு அல்லது பொழுதுபோக்கு எதை நான் தேடுகிறேன்? அல்லது இறைவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதற்கு கீழ்ப்படிய விரும்புகிறேனா? மக்கள் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் சுய திருப்திக்கென்று தங்களை ஒப்புக்கொடுத்துள்ளார். யார் தன்னைப் படைத்தவரின் வார்த்தையைக் கேட்டு, அவருக்கு சேவை செய்ய விரும்புகிறான்? பவுல் இன்னும் ஆச்சரியத்துடன் தொடர்கிறான். ஒருவேளை யாக்கோபின் பிள்ளைகள் தங்களுக்கு சொல்லப்பட்டதை புரிந்து கொள்ளாமலிருக்கலாம். ஒருவேளை நற்செய்தி முழுமையாக அவர்களுக்கு கொடுக்கப்படாமலிருக்கலாம். ஆனால் இறைவன் மோசேயின் மூலமாக இவ்விதம் பதிலளித்தார். “தெய்வம் அல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலை மூட்டி, தங்கள் மாயைகளினால் என்னைக் கோபப்படுத்தினார்கள்; ஆகையால் மதிக்கப்படாத ஜனங்களினால் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, மதிகெட்ட ஜாதியினால் அவர்களைக் கோபப்படுத்துவேன்” (உபாகமம் 32:21).
மோசேயின் ஆண்டவர் பேசியபோது மக்களிடம் இவ்விதம் கூறினார்: “நீங்கள் என்னுடைய வார்த்தையைக் கேட்க ஆயத்தமாக இல்லையென்பதால், நான் தெரிந்துகொள்ளப்படாத, கற்றுத் தேறாத மக்களுக்கு எனது அன்பைத் தருவேன். அவர்களுக்கு என்னை வெளிப்படுத்துவேன். தெரிந்துகொள்ளப்படாத தேசம் எனது இரக்கத்தைப் பெறுவதை நீ காண்பதின் மூலம், உனக்கு எரிச்சல் மூட்டுவேன். அவர்கள் என்னை நேசிக்கும்படி, கனப்படுத்தும்படி வழிநடத்துவேன்.
ஏசாயா மூலமாக கிறிஸ்துவிற்கு 600 ஆண்டுகள் முன்பு இறைவன் அறிவித்தார். “என்னைக்குறித்து விசாரித்துக் கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்” (ஏசாயா 65:1; ரோமர் 9:30).
இன்றைக்கு அவிசுவாசிகளின் வாழ்வில் இறைவன் குறுக்கிட்டு, அவரை உணரும்படியாக செயல்படுவதை நாம் பார்க்கிறோம். சொப்பனங்கள், நிகழ்வுகள் மற்றும் வியாதிகள் மூலம் அவர் மக்களிடம் இடைப்படுகிறார். இந்த பிரபஞ்சத்தின் வளர்ச்சி குறித்து இன்றைய விஞ்ஞான உலகில் விஞ்ஞானிகள் பதில் அளிக்க முடியவில்லை. அவர்கள் சிருஷ்டிகர் ஒருவர் இருப்பதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை. ஆனால் அதே சமயத்தில் இறைவனின் சொந்த மக்கள் தங்கள் ஆண்டவரை புறக்கணிக்கிறார்கள். அவரை விட்டு விலகிச் செல்கிறார்கள். அறியாத மக்களை தமது சொந்த மக்களாக மாற்றுவதற்கு ஆண்டவருக்கு ஆயிரக்கணக்கான வழிகள் உண்டு. இந்த உண்மை ஓர் இரகசியம் ஆகும். பவுல் தனது அருட்பணி பயணங்களின் போது துன்பத்தையும், சந்தோஷத்தையும் இணைந்து அனுபவித்தான் (அப்போஸ்தலர் 28:24-31).
இறைவன் ஏசாயாவிற்கு அறிவித்திருந்தார். “ நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின்படி நடக்கிற முரட்டாட்டமான ஜனத்தண்டைக்கு நாள் முழுதும் என் கைகளை நீட்டினேன். ” (ஏசாயா 65:2,3) தன்னுடைய கீழ்ப்படியாமையின் மக்களிடம் எப்போதும் அவர் தனது கரங்களை நீட்டிக் கொண்டிருந்தார். ஒரு குழந்தை கீழே விழாதபடி தாயானவள் தனது கரங்களை நீட்டுவது போல ஆண்டவர் செயல்பட்டு தனது மக்களை இரட்சிக்க விரும்பினார். ஆனால் அவருக்கு அவர்கள் செவி கொடுக்கவில்லை. அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியவில்லை. அவருக்கு எதிர்த்து நின்றார்கள்.
அவரை விட்டு விலகிச் செல்கின்ற மற்றும் தாறுமாறாய் வாழ்கின்ற மக்களை, முரட்டாட்டம்பண்ணுகிறவர்களை கைவிடாத இறைவனின் அன்பு எவ்வளவு பெரியது எல்லா நேரங்களிலும் அவர் தனது அன்பைத் தருகின்றார். இருப்பினும் இறுதியில் தெரிந்து கொள்ளப்பட்ட மக்களில் பெரும்பான்மையானோருக்கு நியாயாதிபதி தனது நியாயத்தீர்ப்பை வழங்குவார். அவர்கள் அவருக்கு கீழ்ப்படியவில்லை. அவர்களை அவர் காப்பாற்றுவதை விரும்பவில்லை. குழியை குறித்த எச்சரிப்பு பெற்ற குருடன் அதை மதியாமல் குழிக்குள் விழுந்து போவதைப் போல அவர்கள் விழுந்தார்கள். ஆகவே ஆண்டவர் இஸ்ரவேலுக்கு அறிவித்தார். ஆண்டவர் அவர்களை நேசித்திருந்தாலும் அவர்களது கேடான நிலைக்கு அவர்கள் தான் காரணம் என்று கூறினார்.
விண்ணப்பம்: இயேசு கிறிஸ்துவின் பிதாவே, தாயைப் போல எங்களிடம் கரங்களை நீட்டிக் கொண்டிருக்கிற நீர் எங்கள் பிதாவாக இருக்கிறீர். நாங்கள் கீழே விழாதபடி பாதுகாக்கிறீர். உமது அன்பிற்காக உம்மை ஆராதிக்கிறோம். யாக்கோபின் பிள்ளைகளுடைய காதுகளைத் திறந்தருளும். அவர்கள் இயேசுவின் வார்த்தையைக் கேட்டு, மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் கீழ்ப்படிய உதவும்.
கேள்விகள்:
- இன்று எவ்விதம் ஒவ்வொரு மனிதனும் விரும்பினால் நற்செய்தியைக் கேட்டு, புரிந்துகொண்டு, ஏற்றுக்கொள்ள முடியும்?
- ஏன் இறைவன் எல்லா தேசங்களிலும் தெரிந்துகொள்ளப்பட்ட தனது மக்களிடம் இருந்து புதுப்பிக்கப்பட்ட தனிநபர்களை உருவாக்குகிறார்?