Previous Lesson -- Next Lesson
3. இஸ்ரேலின் பெரும்பான்மையானோர் அவருக்கு எதிராக இருந்தும் இறைவன் நீதியில் நிலைத்திருந்தார் (ரோமர் 9:6-29)
இ) குயவன் மற்றும் அவனது கலம் குறித்த உவமை யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் உரியது (ரோமர் 9:19-29)
ரோமர் 9:19-29
19 இப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம்பிடிக்கிறார்? அவர் சித்தத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னுடனே சொல்லுவாய். 20 அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா? 21 மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? 22 தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், 23 தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன? 24 அவர் யூதரிலிருந்துமாத்திரமல்ல, புறஜாதிகளிலுமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே. 25 அந்தப்படி: எனக்கு ஜனங்களல்லாதவர்களை என்னுடைய ஜனங்கள் என்றும், சிநேகிக்கப்படாதிருந்தவளைச் சிநேகிக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன். 26 நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது. 27 அல்லாமலும் இஸ்ரவேல் புத்திரருடைய இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், மீதியாயிருப்பவர்கள் மாத்திரம் இரட்சிக்கப்படுவார்கள் என்றும்; 28 அவர் நீதியோடே சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்றும் ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான். 29 அல்லாமலும் ஏசாயா முன்னே சொன்னபடி: சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காதிருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவுக்கு ஒத்திருப்போம்.
மனித சித்தம், அவனுடைய பெருமை, அவனுடைய உணர்வு அனைத்தும் இறைவனுடைய தெரிந்தெடுப்பு, சித்தம் மற்றும் செயல்களுக்கு எதிராக உள்ளது. ஒரு கீழ்ப்படியாத மனிதன் யானையிடம் இவ்விதம் கூறும் ஒரு எறும்பைப் போல இருக்கிறான். “நீ ஏன் இவ்விதம் என் மீது? (ஏசாயா 45:9).
மனிதன் இறைவனிடம் கேள்வி கேட்கவும், அவரோடு வழக்காடவும் எந்த உரிமையும் இல்லை. ஏனெனில் மனிதனுடைய திறமை என்பது இறைவனுடைய எல்லையற்ற ஞானம், பரிசுத்தம் மற்றும் அன்பை விட மிக மிகக் குறைவான ஒன்று.
தனிநபர்கள் மற்றும் நாடுகள் தங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்திக் கொண்டிருக்கிற இக்காலத்தில், அவர் மீது தன்னுடைய நம்பிக்கையை வைத்திருக்கிறவன், உலகின் ஆண்டவருக்கு தான் கீழ்ப்படிவதால், அவரை நன்றியுடன் வணங்க வேண்டும். இவ்விதமாக தான் நாம் இந்த உண்மையை ஏற்க வேண்டும். ஹிட்லர் தன்னுடைய கோபத்தில் ஆறு மில்லியன் யூதர்களைக் கொல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனை யாரும் தடுத்து நிறுத்தவோ அல்லது கேள்வி கேட்கவோ இயலவில்லை. இதைப் போலவே ஸ்டாலினும் அவனது நாட்டுத் திட்டங்களை அமல்படுத்தும் போது 20 மில்லியன் மக்களை ஒருவரும் அறியா சூழலில் கொல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இறைவனின் நியாயத்தீர்ப்புகளை விளக்குவதற்கு பவுல் ஒரு ஒப்புமையைத் தருகின்றான். ஒரே களிமண்ணில் இருந்து குயவன் கனத்திற்குரிய பாத்திரத்தையும், கெட்டுப்போனதை ஒதுக்கி வைக்கவும் செய்கிறான் (எரேமியா 18:4-6).
அப்போஸ்தலன் இந்த உவமையைச் சார்ந்து, இறைவனுடைய கோபாக்கினையின் பாத்திரங்கள் குறித்து பேசுகிறான். இறைவன் நீண்ட காலமாக அவைகள் மீது பொறுமையுடன் இருந்தார். இறுதியில் அழியும்படி அவைகளை விட்டுவிட்டார். பழையதில் இருந்து மகிமைக்கு ஏதுவான பாத்திரங்களை இறைவன் திட்டம் பண்ணியதையும் பவுல் குறிப்பிடுகிறான். அவருடைய கிருபையின் பாத்திரங்கள், படைத்தவரின் மகிமையின் வெளிப்பாடாகக் காணப்படுகின்றன. அவைகள் அவரிடம் திரும்பும்.
கிருபையைக் குறித்த ஒரு தத்துவத்தை பவுல் தனது வாழ்வின் அனுபவ அறிவு மூலமாக கற்றுக்கொள்ளவில்லை. இறைவனுடைய கோபாக்கினைக்கு உட்பட்டவர்கள் மற்றும் அவருடைய மகிமைக்கு உட்பட்டவர்களுக்கு இடையேயுள்ள பிரிவைக் குறித்து அவன் விளக்குகிறான். அவன் புறவினத்தாரை மட்டும் குறிப்பிடவில்லை. தெரிந்து கொள்ளப்பட்ட யூதர்களையும் குறிப்பிடுகிறான். அவருடைய மக்கள் அல்லாதவர்களை அவருடையவர்களாக மாற்றுவதைக் குறித்து இறைவன் ஓசியாவிற்கு வெளிப்படுத்தியதை காண்பித்தான். (ஓசியா 2:23). அப்போஸ்தலனாகிய பேதுரு புறவின விசுவாசிகளுக்கு தனது முதல் நிரூபத்தை எழுதும் போது இதை உறுதிப்படுத்தினான். நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள். முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள், இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள் (1பேதுரு 2:9,10).
பவுலைப் பொறுத்த மட்டில் இந்த நோக்கம் என்பது இறைத்தன்மை வாய்ந்த ஒன்று. தெரிந்துகொள்ளப்படாதவர்களை இறைவன் தெரிந்துகொண்டார். அழைக்கப்படாதவர்களை இறைவனுடைய பிள்ளைகளாகும்படி அழைக்கிறார். (ரோமர் 9:26; 1யோவான் 3:1-3) அதேசமயத்தில் ஏசாயா தீர்க்கதரிசி குறிப்பிடுவதையும் பவுல் தெளிவுப்படுத்துகிறான். கீழ்ப்படியாத மக்கள் தங்கள் கீழ்ப்படியாமையில் தொடர்ந்திருக்கும் போது, அவர்கள் அழியும்படி இறைவன் அனுமதிக்கிறார். அவர்கள் கடற்கரை மணலைப் போல அதிக எண்ணிக்கையுடன் இருக்கிறார்கள்.
உயிருள்ள ஆண்டவர் அவருடைய மக்கள் மீது அக்கறையுள்ளவராக இருக்கிறார். அவர்கள் அனைவரும் நிர்மூலமாவதில்லை. மீதமுள்ள ஒரு சிறிய பரிசுத்த கூட்டம் இறைவனுடைய ஆவிக்குரிய வாக்குத்தத்தங்களை உணர்ந்து கொள்வார்கள். (ஏசாயா 11:1-6). அழைக்கப்பட்டவர்களில் அநேகர் சோதோம் மற்றும் கொமோராவுக்கு ஒப்பாக மாறிவிடுவார்கள். சேனைகளின் கர்த்தர் நமக்குக் கொஞ்சம் மீதியை வைக்காதிருந்தாரானால், நாம் சோதோமைப்போலாகி, கொமோராவுக்கு ஒத்திருப்போம் (ஏசாயா 1:9).
யூதர்கள் அழியும் வரை கடினப்படுத்தப்பட்ட போது, தெரிந்துகொள்ளப்படாத புறவினத்தாரை இரட்சிக்கவும், அவர்களை முழுமையாக பரிசுத்தமாக்கவும் இறைவன் உரிமையுள்ளவராக இருக்கிறார் என்பதை பவுல் அன்புடன் ரோமில் உள்ள யூதர்களுக்கு கற்றுக்கொடுக்க விரும்பினான். இது கொள்கை ரீதியாக ஏற்பட்ட ஒரு அனுபவம் அல்ல. யூதர்கள் தங்கள் சுய நீதியில் தங்களை உயர்த்திய போது, அப்போஸ்தலனுடைய இருதயத்தில் உணரப்பட்ட ஒன்று. அவர்கள் மனந்திரும்பும் படியாக அழைத்தான். இயேசுவே இரட்சிப்பை வழங்குகின்ற வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியா என்பதை அவர்கள் அறிக்கையிட வேண்டும். ஆனால் இன்றும் பெரும்பான்மையான யூதர்கள் அவரை நிராகரிக்கிறார்கள்.
விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, எங்கள் மீது நீர் பொறுமையுடன் இருப்பதை உணராமல் நாங்கள் இருப்பதற்காக எங்களை மன்னியும். நீர் நீண்டகாலமாக எங்களை நேசிக்கிறீர். எங்களை தண்டிக்கவும், அழிக்கவும் இல்லை. உமது அன்பை நாங்கள் நன்றியுடன் நினைவுகூர்ந்து செயல்படும்படி எங்களை பரிசுத்தப்படுத்தும். உமது பரிசுத்த ஆவியின் நடத்துதலுக்கு மகிழ்ச்சியுடன் கீழ்ப்படியும்படி நடத்தும்.
கேள்விகள்:
- இறைவனுடைய கோபாக்கினையின் பாத்திரங்கள் யார்? அவர்களுடைய கீழ்ப்படியாமைக்கு காரணம் என்ன?
- இறைவனின் மகிமைக்கேதுவான பாத்திரங்களின் நோக்கம் என்ன? அவர்களுடைய ஆரம்பம் எது?