Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 096 (Riot of the Silversmiths in Ephesus; Paul´s Last Journey to Macedonia and Greece)
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
ஈ - மூன்றாவது அருட்பணி பயணம் (அப்போஸ்தலர் 18:23 - 21:14)

4. வெள்ளித் தட்டார்களினால் எபேசுவில் ஏற்பட்ட கலகம் (அப்போஸ்தலர் 19:23-41)


அப்போஸ்தலர் 19:35-41
35 பட்டணத்துச் சம்பிரதியானவன் ஜனங்களை அமர்த்தி: எபேசியரே, எபேசியருடைய பட்டணம் மகா தேவியாகிய தியானாளுக்கும் வானத்திலிருந்து விழுந்த சிலைக்கும் கோவிற்பரிசாரகியாயிருக்கிறதை அறியாதவன் உண்டோ? 36 இது எதிர்பேசப்படாத காரியமாகையால், நீங்கள் ஒன்றும் பதறிச் செய்யாமல் அமர்ந்திருக்க வேண்டும். 37 இந்த மனுஷரை இங்கே கொண்டு வந்தீர்கள்; இவர்கள் கோவிற்கொள்ளைக்காரருமல்ல, உங்கள் தேவியைத் தூஷிக்கிறவர்களுமல்ல. 38 தெமேத்திரியுவுக்கும் அவனைச் சேர்ந்த தொழிலாளிகளுக்கும் ஒருவன்மேல் ஒரு காரியம் உண்டாயிருந்தால், நியாயம் விசாரிக்கிற நாட்களுண்டு, தேசாதிபதிகளும் இருக்கிறார்கள்; ஒருவர் பேரிலொருவர் வழக்காடிக்கொள்ளட்டும். 39 நீங்கள் வேறே யாதொரு காரியத்தைக்குறித்து விசாரிக்கவேண்டியதானால், அது நியாயசங்கத்திலே தீர்க்கப்படும். 40 இன்றைக்கு உண்டான கலகத்தைக்குறித்து நாம் உத்தரவு சொல்லுகிறதற்கு ஏதுவில்லாதபடியால், இந்தக் கலகத்தைக்குறித்து நாங்கள் விசாரிக்கப்படும்போது, குற்றவாளிகளாகிறதற்கு ஏதுவாயிருப்போமே என்று சொல்லி, 41 பின்பு கூட்டத்தை அனுப்பிவிட்டான்.

அந்த கோபங்கொண்ட கூட்டத்தின் நடுவில் ஒரு ஞானமுள்ள மனிதரும் அமர்ந்திருந்தார். அவர் அமைதியாக இருந்து தன்னுடைய மக்களைப் புரிந்துகொண்டார். அவர்கள் அவரை நகரத்தின் அதிகாரி என்று அழைத்தார்கள். அவர் கூச்சலிட்டுக்கொண்டிருந்த மக்களுடன் பேச முயற்சிசெய்யவில்லை. அவர்கள் இரண்டு மணிநேரம் கத்தி முடிந்த பிறகுதான் அவர்களுடன் பேசினார். அவர்கள் கூப்பாடுபோட்டு களைப்படைந்த பிறகு அவர்களைக் கடிந்துகொள்வதுதான் சிறந்தது என்று அவர் கருதினார். அங்கு வந்திருந்த கூட்டத்தில் பெரும்பான்மையானவர்கள் அந்த நாளின் சூட்டில் களைத்துப் போனபோது அவர்கள் நடுவில் எழுந்து நின்று பேச ஆரம்பித்தார். அந்த அதிகாரி முதலில் எபேசுவின் பெருமைகளைப் பற்றிப் பேசினார். தியானாளுடைய கருப்புமரச்சிலை வானத்திலிருந்து விழுந்தது என்பதைக் குறித்து யாரும் சந்தேகிக்கத் தேவையில்லை என்று சாட்சியிட்டார். முழு உலகமும் அந்த உண்மையை அறிந்திருப்பதால், அதற்காக சாட்சி கொடுக்கும் என்று கூறினார். ஆகவே தீமையான எதுவும் நடைபெற்றுவிடாதபடி மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றார். எந்த நிலைவந்தாலும் அதைச் சரிப்படுத்துவதற்கு அவர் ஆயத்தமாயிருப்பதாகவும் அவர் சொன்னார்.

பவுலுடைய கூட்டாளிகளோ இந்த வாலிபனாகிய அலெக்சாந்தரோ தியானாளுடைய கோவிலைப்பற்றி எதுவும் சொல்லவில்லை என்றும் அவர்கள் யாரையும் கொள்ளையிடவில்லை என்றும் அவர் தொடர்ந்து பேசினார். அந்த மக்கள் இரண்டு மணிநேரம் கூச்சலிட்டுக் கொண்டிருந்தபோது அவர் இந்தக் காரியங்களைப் பற்றி விசாரித்திருக்க வேண்டும். ஆகவே அந்த மூன்று மனிதர்களும் அப்பாவிகளாயிருக்கிறார்கள், அவர்களை இங்கு இழுத்துக்கொண்டு வந்தது மக்கள் கூட்டம் செய்த தவறு என்று அவர் அறிவித்தார்.

வெள்ளித் தட்டாராகிய தெமேத்திரியு பவுலுக்கு எதிராக அதிகாரபூர்வமாக ஒரு முறையீட்டைச் செய்யவில்லை (இப்போதும் கலகத்தைத் தூண்டிவிட்டதற்காக தான் தண்டிக்கப்பட்டுவிடுவோம் என்ற பயத்தில் அவர் அங்கு இல்லாமல் இருந்திருக்கலாம்). ஆகவே வெள்ளித் தட்டார்கள் யார் மீதாவது நியாயமான முறையில் முறையீடு செய்ய விரும்பினால் தான் அதை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருப்பதாகவும் அதிகாரி கூறினார். இவ்வாறு அந்தப் பிரச்சனைக்கு சட்டத்தின்படி தீர்வு காணப்படமுடியும்.

நகரத்தின் அதிகாரி மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அமைதிப்படுத்தினார். அவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைப்பதையோ அவர்கள் ஒன்றாகக்கூடி முடிவெடுப்பதையோ அவர் தடுக்கவில்லை. ஆனால் அவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வாக்குரிமையுள்ள அனைவரும் கூடியிருக்கிற கூட்டத்தில் நியாயமான முறையில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ரோமர்களுடைய ஆட்சிக் காலத்தில் கிரேக்க நகரங்கள் எவ்வாறு நிர்வாகம் செய்யப்பட்டன என்பதைக் குறித்த ஆழமான அறிவைப் பெற்றுக்கொள்ளும் விவரங்களை லூக்கா நமக்கு இந்தப் பகுதியில் எடுத்துக்கூறுகிறார்.

இறுதியாக அந்த ஆளுநர் மக்கள் கூட்டத்தை பயமுறுத்தினார். அவர்களுடைய இந்தவிதமாக கலகம் எபேசு பட்டணம் ரோமர்களிடத்திலிருந்து பெற்றனுபவித்து வரும் சலுகைகளுக்கு உலைவைக்கும் செயலாகிவிடும் ஆபத்திருந்ததை அவர்களுக்கு அவர் சுட்டிக்காண்பித்தார். அந்த நாட்களில் தகுதியற்ற நகரங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை நிறுத்தி அவற்றை தகுதியான நகரங்களுக்கு ரோமர்கள் வழங்கிக்கொண்டிருந்தார்கள். அந்த நகரத்திலிருந்த யாரும் எபேசு பெற்றனுபவித்து வந்த ரோமானிய சலுகைகளை இழப்பதை விரும்பவில்லை. அதற்கு மாறாக அவர்கள் எல்லாவற்றையும்விட அந்த சலுகைகளையே மேலாகக் கருதினார்கள். வெகுண்டெழுந்த மக்களுடைய கோபத்தை இந்த ஞானமுள்ள அதிகாரியின் பேச்சு சாந்தப்படுத்திய காரணத்தினால் அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட்டார்கள்.


5. மக்கதோனியா மற்றும் கிரேக்கத்திற்கு பவுலின் இறுதிப் பயணம் (அப்போஸ்தலர் 20:1-3)


அப்போஸ்தலர் 20:1-3
1 கலகம் அமர்ந்தபின்பு, பவுல் சீஷரைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, வினவிக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப் போகப்புறப்பட்டான். 2 அவன் அந்தத் திசைகளிலே சுற்றி நடந்து, சீஷர்களுக்கு வெகுவாய்ப் புத்தி சொல்லி, கிரேக்கு தேசத்திலே சேர்ந்தான். 3 அங்கே மூன்றுமாதம் சஞ்சரித்த பின்பு, அவன் கப்பல் ஏறி, சீரியா தேசத்துக்குப்போக மனதாயிருந்தபோது, யூதர்கள் அவனுக்குத் தீமைசெய்யும்படி இரகசியமான யோசனை கொண்டிருந்தபடியால், மக்கெதோனியா தேசத்தின் வழியாய்த் திரும்பிப்போகத் தீர்மானம்பண்ணினான்.

வளர்ந்துவரும் திருச்சபை ஆபத்துகளிலும் உபத்திரவங்களிலும் இருந்து தப்பிப்பது அரிது என்பதை எபேசுவில் ஏற்பட்ட கலகத்திலிருந்து பவுல் அறிந்துகொண்டார். எங்கெல்லாம் ஆசீர்வாதம் பெருகுகிறதோ அங்கெல்லாம் பிசாசினுடைய தாக்குதல்களும் பெருகுகிறது. திருச்சபை விசுவாசிகள் விழித்திருந்து “எங்களைச் சோதனையில் விழவிடாமல் தீமையிலிருந்து விடுவியும்” என்று விண்ணப்பிக்க வேண்டும். பவுலும் அவருடைய உண்மையுள்ள கூட்டாளிகளும் அந்த கலகத்தின்போது விண்ணப்பித்துக் கொண்டிருந்தார்கள். திபேரியாக் கடலின் புயலை அடக்கியதைப் போலவே ஆண்டவர் அவர்களுடைய விண்ணப்பத்தைக் கேட்டு, அந்த மக்கள் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி, அங்கிருந்த தமது பிள்ளைகளைக் காப்பாற்றினார்.

எபேசுவில் வெடித்துக் கிழம்பிய வெறுப்புக்குப் பிறகு பவுல் அந்த நகரத்தில் மட்டுமல்ல, அந்த பிராந்தியத்திலேயே இருக்க முடியாது என்பதை விசுவாசிகள் உணர்ந்துகொண்டார்கள். எபேசுவின் நகரங்களிலும் வீதிகளிலும் பவுல் நடந்து திரிய முடியாதவாறு அந்த மக்கள் கூட்டத்தின் மனங்களில் பழிவாங்கும் எண்ணம் தேங்கியிருந்தது. நகரத்தில் தனக்கு ஆபத்துக் காத்திருக்கிறது என்பதற்காக பவுல் அந்த மக்களை விட்டு ஓடிப்போக நினைக்கவில்லை. அது அவருடைய தகப்பனுக்குரிய சிந்தையைக் காண்பிக்கிறது. அப்போது அவர் கிறிஸ்துவின் சீடர்களைக் கூப்பிட்டு ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அந்தக் கூட்டம் அந்த அரங்கத்தில் கூடிய கூட்டத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாயிருந்தது. தன்னை உண்மையாகப் பின்பற்றுகிற அனைவருக்கும் பரிசுத்த ஆவியானவரைக் கொடுக்கிற கிறிஸ்துவின் பிரசன்னத்தில் பவுல் அழுதவர்களுக்கு ஆறுதல் சொன்னார்.

இவ்வாறு புறவினத்தின் அப்போஸ்தலன் கண்ணீர் மல்க எபேசு திருச்சபை மக்களிடமிருந்து விடைபெற்றார். பிலிப்பு, தெசலோனிக்கேயா, பெரோயா ஆகிய பட்டணங்கள் வழியாக தன்னுடைய நீண்ட பயணத்தை அவர் ஆரம்பித்தார். கொரிந்தியருக்கு எழுதப்பட்ட தன்னுடைய இரண்டாவது கடிதத்தில் அவருடைய அனுபவத்தை அவரே விளக்குகிறார் (7:5): “நாங்கள் மக்கதோனியா நாட்டில் வந்தபோது, எங்கள் உடலுக்கு இளைப்பாறுதல் ஒன்றுமில்லாமல், எப்பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டடோம். புறம்பே போராட்டங்களும் உள்ளே பயங்களும் இருந்தன. ஆகிலும் சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற இறைவன் எங்களுக்கும் ஆறுதல் செய்தார்”. கோடைகாலத்தில் கடற்கரையோர விடுதிகளில் ஓய்வெடுப்பதற்குப் பவுல் தன்னுடைய பிரயாணத்தை மேற்கொள்ளவில்லை. அவர் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்தார். மதவாதம், வெறுப்பு, பாவச் சோதனைகள் ஆகியவற்றுடனான அவருடைய போராட்டம் அதிக கடினமாயிருந்தது. பவுல் இறைவனுடைய வார்த்தையினால் நிறைந்திருந்தார். அவர் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் பிரசங்கம் செய்தார். பிரசங்கத்தை மட்டுமல்ல, திருச்சபைகளை பெலப்படுத்துதல், போதனை அளித்தல், கட்டியெழுப்புதல் ஆகிய அனைத்தையும் அவ்வாறே செய்தார். பவுல் ஒரு உண்மையுள்ள மேய்ப்பனைப் போல இருந்து, வழிவிலகிப்போன ஆடுகளைத் தேடிக்கண்டுபிடித்தார், உபத்திரவத்தினால் காயப்பட்டவர்களுடைய காயங்களைக் கட்டினார், பிடிவாதமாக எதிர்த்து நின்றவர்களைக் கண்டித்தார்.

கி. பி. 56-ல் பவுல் கொரிந்து பட்டணத்தில் நுழைந்தார். தத்துவத்தினாலும் பல்வேறு சோதனைகளினாலும் பிரிந்திருந்த அந்த சபையில் மூன்று மாதகாலம் பணியாற்றினார். அத்துடன் அங்கிருந்த காலத்தில் தன்னால் உருவாக்கப்படாத ரோமாபுரி திருச்சபைக்கு தன்னுடைய நீண்ட கடிதத்தையும் எழுதினார். இந்தக் கடிதத்தில் அப்போஸ்தலன் அதிக ஞானத்தோடும் தர்க்கரீதியாகவும் கிறிஸ்தவ போதனைகளை நெறிப்படுத்தி எழுதினார். அத்தேனே பட்டணத்திலிருந்தவர்கள் பவுலிடத்தில் தத்துவஞானத்தை எதிர்பார்த்தார்கள்; அவர் அவர்களுக்கு தத்துவஞானக் கருத்துக்களைச் சொல்லவில்லை. கிறிஸ்தவ உபதேசத்தின் ஆழ்நத கருத்துக்களை அறிந்துகொள்ளும் அளவிற்கு அவர்களுக்கு முதிர்ச்சியிருக்கவில்லை. கிறிஸ்தவ உபதேசத்தை இன்றுவரை தெளிவாக எடுத்துரைக்கும் ஒரு பிரசங்கமாக இந்தக் கடிதம் காணப்படுகிறது. இன்றும் இக்கடிதத்தின் மூலமாக பரிசுத்த ஆவியானவர் உலகத்திற்குப் பிரசங்கத்துக்கொண்டிருக்கிறார்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே நீரே வெற்றிபெற்ற ஆளுனராயிருப்பதால் உமக்கு நன்றி. நீர் உம்முடையவர்களை வாழ்வில் ஏற்படும் புயல்கள், கடினமான சூழ்நிலைகள், ஆபத்துக்கள், சோதனைகள் வழியாக வழிநடத்தி வருகிறீர். நாங்கள் நிலையான விசுவாசத்துடனும், அன்பின் பிரவாகத்துடனும், உயிருள்ள நம்பிக்கையுடனும் உம்மை ஒருமித்து மகிமைப்படுத்தும்படி, எங்கள் திருச்சபைகளுக்கு உண்மையுள்ள ஊழியர்களையும் தைரியமாக விண்ணப்பிக்கிறவர்களையும் தந்தருளும்.

கேள்வி:

  1. ஏன், எந்த சந்தர்ப்பத்தில் பவுல் எபேசு திருச்சபையைவிட்டுச் செல்கிறார்?

கேள்விகள் – 6

அன்பார்ந்த வாசகருக்கு,
நீங்கள் அப்போஸ்தலர் நடபடிகளுக்கு நாங்கள் எழுதியிருக்கும் இந்த விளக்கங்களை வாசித்ததால் கீழ்க்காணும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியும். உங்கள் பதில்கள் 90 சதவீதம் சரியாக இருந்தால் இந்த வேதவிளக்க வரிசையின் அடுத்த நூலை உங்கள் நன்மைக்காக இலவசமாக அனுப்பித் தருவோம். உங்கள் விடைத்தாளில் உங்கள் பெயரையும் முகவரியையும் முழுமையாகக் குறிப்பிடத் தவறவேண்டாம்.

  1. இயேசு கிறிஸ்து எவ்வாறு கர்த்தாதி கர்த்தரும் இராஜாதி இராஜனுமாயிருக்கிறார்?
  2. பவுல் ஒரு நகரத்திற்குள் செல்லும்போது நற்செய்தி அறிவிப்பதற்கு அவர் கையாண்ட முறை யாது?
  3. அத்தேனே பட்டணத்தில் காணப்பட்ட பல தெய்வங்களைக் கண்டு பவுல் ஏன் மனமடிவடைந்தார்?
  4. அத்தேனே தத்துவ ஞானிகளுக்கு முன்பாக பவுல் செய்த பிரசங்கத்தின் முதல் பகுதியின் மூன்று முக்கிய கருத்துக்கள் யாவை?
  5. இறுதி நாளில் இறைவனுடைய நீதித் தீர்ப்பிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி யாது?
  6. கொரிந்து பட்டணத்தில் பவுலுக்கு இறைவன் கொடுத்த குறிப்பான வாக்குறுதி என்ன?
  7. பவுல் தன்னுடைய இரண்டாவது அருட்பணி பயணத்தில் பணிசெய்த நான்கு நகரங்கள் யாவை?
  8. உழைப்பாளிகளான தம்பதியினருக்கும் அப்பொல்லோவிற்கும் இடையில் ஏற்பட்ட தொடர்பிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் நான்கு முக்கியமான உண்மைகள் யாவை?
  9. எபேசுவிலிருந்தவர்கள் பரிசுத்த ஆவியை எப்படிப் பெற்றுக்கொண்டார்கள்? நீங்கள் எவ்வாறு இந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஆவியானவரைப் பெற்றுக்கொள்வீர்கள்?
  10. எபேசுவில் இறையரசு எவ்வாறு வெளிப்பட்டது?
  11. இயேசுவின் பெயரும் அவருடைய வார்த்தையும் எபேசுவில் எவ்வாறு பெரிய அளவில் மகிமைப்படுத்தப்பட்டது?
  12. பவுல் ஏன் ரோமாபுரிக்குப் போகவேண்டியிருந்தது?
  13. தெமேத்திரியு பவுலின் மீது ஏன் கோபம்கொண்டார்?
  14. ஏன், எந்த சந்தர்ப்பத்தில் பவுல் எபேசு திருச்சபையைவிட்டுச் செல்கிறார்?

நீங்கள் அப்போஸ்தலர் நடபடிகளுடைய கேள்விகள் அனைத்துக்கும் பதில் எழுதுவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏனெனில் அதன்மூலம் நீங்கள் நித்திய பொக்கிஷத்தைப் பெற்றுக்கொள்வீர்கள். நாங்கள் உங்கள் பதில்களை விண்ணப்பத்துடன் எதிர்பார்க்கிறோம். எங்களுடைய விலாசம்.

Waters of Life
P.O.Box 600 513
70305 Stuttgart
Germany

Internet: www.waters-of-life.net
Internet: www.waters-of-life.org
e-mail: info@waters-of-life.net

www.Waters-of-Life.net

Page last modified on March 04, 2014, at 12:01 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)