Previous Lesson -- Next Lesson
6. கொரிந்துவில் பவுலைக் கொல்ல திட்டமிடுதல் – எருசலேமிற்கு பவுலுடன் இணைந்து பயணம் செய்தவர்களின் பெயர்கள் (அப்போஸ்தலர் 20:3-5)
அப்போஸ்தலர் 20:3-5
3அங்கே மூன்றுமாதம் சஞ்சரித்த பின்பு, அவன் கப்பல் ஏறி, சீரியா தேசத்துக்குப்போக மனதாயிருந்தபோது, யூதர்கள் அவனுக்குத் தீமைசெய்யும்படி இரகசியமான யோசனை கொண்டிருந்தபடியால், மக்கெதோனியா தேசத்தின் வழியாய்த் திரும்பிப்போகத் தீர்மானம்பண்ணினான்.4 பெரோயா ஊரானாகிய சோபத்தரும், தெசலோனிக்கேயரில் அரிஸ்தர்க்கும், செக்குந்தும், தெர்பையானாகிய காயுவும், தீமோத்தேயும், ஆசியா நாட்டாராகிய தீகிக்கும் துரோப்பீமும், ஆசியா நாடுவரைக்கும் அவனுக்கு வழித்துணையாய் வந்தார்கள்.5 இவர்கள் முன்னாகப்போய், துரோவாபட்டணத்திலே எங்களுக்காகக் காத்திருந்தார்கள்.
எருசலேமில் துன்புறுத்தப்பட்ட சபைக்கு உதவி செய்யும்படி மக்கெதோனியா, கிரேக்கு, ஆசியா மற்றும் அனடோலியாவில் இருந்த எல்லா சபைகளிடம் இருந்து சேகரித்த உதவிகளை பவுல் ஒழுங்குபடுத்தினான். நாம் இதைக் குறித்து (2 கொரிந்தியர் 8:16-24)-ல் வாசிக்கிறோம். எருசலேம் பயணம் தனிப்பட்ட ஒரு பயணமாகத் தோன்றவில்லை. தெரிந்தெடுக்கப்பட்ட சகோதரர்களின் ஐக்கியத்தோடு அது காணப்பட்டது. தான் நிறுவியிருந்த ஒவ்வொரு சபைகளில் இருந்தும் தெரிந்தெடுக்கப்பட்ட அர்ப்பணமுள்ளவர்களுடன், பவுல் இணைந்து கொண்டான்.
குளிர்காலத்தில் மத்தியத்தரைக்கடலில் கடும்புயல் வீசும் என்பதால் கப்பல்கள் செல்வது கிடையாது. எனவே பவுல் கொரிந்துவிலிருந்து சிரியாவிற்கு கடல் வழியாக வசந்த காலத்தில் பயணம் செய்ய திட்டம் பண்ணினான்.
தாங்கள் புறக்கணிக்கப்படுவதற்கும், அவமானமடைவதற்கும் காரணமாக இருந்த பவுலை, கொரிந்துவில் இருந்த யூதர்கள் கொல்லும்படி தீர்மானித்தார்கள். அவர்களது குற்றச்சாட்டு ரோம ஆளுநருக்கு முன்பாக வந்த போது நிராகரிக்கப்பட்டது. பவுலைக் கொல்லும்படி தீர்மானித்தவர்களில் சிலர் ஒருவேளை எருசலேம் சபைக்காக பவுல் சேகரித்த மிகப்பெரும் தொகையான பணத்தை கொள்ளையிடும்படி எண்ணியிருக்கலாம். ஆனால் கிறிஸ்து அவருடைய ஊழியக்காரனை பாதுகாத்தார். இந்த தீய நோக்கத்தில் இருந்து அவனை பாதுகாத்தார். இந்த திட்டத்தை பவுல் அறிந்த போது, உடனடியாக அவன் தனது திட்டங்களை மாற்றினான். கடல் வழியாக பயணம் செய்யக் கூடாது என்று தீர்மானித்தான். ஏனெனில் அவனுடைய எதிராளிகள் வழியில் அவனைக் கொல்லும்படி திட்டம் பண்ணியிருந்தார்கள். பவுல் அவர்களது குற்றச்செயலுக்கு இடம் கொடுக்கவில்லை. அவன் எபேசுவில் இருந்து கால்நடையாக பயணம் செய்வதை தெரிந்து கொண்டான். அது மிக நீண்ட மற்றும் களைப்புமிக்க பயணமாகவும், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்தை அநேக நாட்கள், மாதங்களாக பயணம் செய்து கடக்க வேண்டியதாகவும் இருந்தது. பவுலும், அவனுடன் இணைந்து சென்றவர்களும் எருசலேமை நோக்கி இவ்வழியில் பயணம் செய்தார்கள்.
பவுலுடன் பயணம் செய்தவர்களில் குறைந்த பட்சம் எட்டுபேரைக் குறித்து நாம் வாசிக்கிறோம். இவர்களைக் குறித்ததான விவரங்கள், நாம் கிரேக்கு மற்றும் அனடோலியாவின் சபையைக் குறித்த நிலைகளின் உண்மையை நமக்குத் தருகின்றது. பவுலின் மிஷெனரிப் பணியின் விளைவுகளை நாம் புரிந்து கொள்ள உதவுகிறது. நீங்கள் கிரேக்கு மற்றும் சின்ன ஆசியாவின் வரைபடம் வைத்திருந்தால், இந்தப் பாடத்தை படிக்கும் இந்நேரத்தில் அதைப் பாருங்கள். நற்செய்தியும் சபையும் உறுதியாக நாட்டப்பட்ட மிகப்பரந்த பகுதிகளை நீங்கள் காணமுடியும்.
முதலாவது நாம் பெரோயா சபையைக் குறித்து வாசிக்கிறோம். அங்கு விசுவாசமுள்ள ஒரு தகப்பன் சோபத்தர் என்ற தனது மகனை பவுலின் கைகளில் ஒப்புவித்தான். வெகுமதிகளை எருசலேமிற்கு கொண்டு செல்லும்படி பவுலின் கூட்டாளிகளுடன் சகோதரர்கள் சார்பாக இவனும் இணைந்து கொண்டான். பெரேயாவை விட்டு ஏதேன்சுக்கு உடனடியாக கடந்து செல்லும்போது மிகக் குறுகிய நேரமே இருந்ததால், பெரோயா சபை அழிந்து போகவில்லை. மாறாக அது கிறிஸ்துவிற்குள் உறுதியாக நாட்டப்பட்டு உண்மையுடன் வளர்ந்து வந்தது.
வணிகப்பட்டணமாகிய தெசலோனிக்கேயில் இருந்து பவுல் அரிஸ்தர்ககு மற்றும் செக்குந்தரை தன்னுடன் இணைத்துக் கொண்டான். அரிஸ்தர்க்கு பவுலுடன் ஏற்கெனவே எபேசுவில் இணைந்து பயணம் செய்ய ஆரம்பித்திருந்தான். எபேசுவில் பவுலைத் தாக்குவதற்காக அரங்கத்திற்குள் பாயந்தோடி வந்த பெரும் கூட்ட மக்கள் இழுத்துப் போட்ட இரண்டு வாலிபர்களுள் இவனும் ஒருவன். (அப்போஸ்தலர் 19:29). அது மாத்திரம் அல்ல, கிறிஸ்துவின் உறுதியான பாதுகாப்பினால் அவன் காத்துக் கொள்ளப்பட்டான். இந்த அனுபவத்தின் மூலமாக, அவன் பவுலைக் குற்றம் சாட்டவில்லை. மாறாக அவனுடன் இணைந்து பயணத்தை நிறைவு செய்தான். பவுலின் நீண்ட மற்றும் கசப்பான சிறைச்சாலை நேரங்களில் அவனை ஆறுதல்படுத்தினான். ரோமாபுரியை நோக்கிச் சென்ற அவனது பயணத்தில் மோசமான ஆபத்துகள் இருந்தும் தொடர்ந்து சென்றான். (கொலோசெயர் 4:10; பிலேமோன் 24).
பிலிப்பு சபையை விட்டு கடந்து செல்லும்போது இந்தப் பட்டணத்து விசுவாசிகளின் பிரதிநிதியாக மருத்துவராகிய லூக்கா பவுலுடன் இணைந்து கொண்டான். (20:6) இதன் மூலமாக நற்செய்தியாளரும் மருத்துவருமாகிய லூக்கா, அப்போஸ்தலனுடன் தனது முக்கியமான நீண்ட பயணத்தை மேற்கொண்டான். இத் தருணத்தில் தனது சிறப்பு வாய்ந்த நூலுக்கான விவரங்களை சேகரித்தான். அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தை தான் சந்தித்த மக்கள் பகிர்ந்து கொண்ட சாட்சிகளை அடிப்படையாக வைத்து கட்டி எழுப்பினான்.
கிரேக்கு மற்றும் மக்கெதோனியா சபைகள் மட்டும் எருசலேம் சபைக்கு பிரதிநிதிகள் மற்றும் உதவிகளை மட்டும் அனுப்பவில்லை. இந்த பயணத்தில் அனடோலியா மற்றும் ஆசியாவைச் சேர்ந்த விசுவாசிகளும் பங்கு கொண்டார்கள். பவுலின் உண்மையுள்ள உடன் ஊழியன் தீமோத்தேயுவைத் தவிர, தெர்பையைச் சேர்நத காயுவைக் குறித்து நாம் வாசிக்கிறோம். அநேக ஆண்டுகள் ஆன பிறகும் சின்ன ஆசியாவின் இந்த சபைகளுக்கும், அப்போஸ்தலனுக்கும் இருந்த உறவு ஒருபோதும் முடிவடையவில்லை என்பது இதன் மூலம் உணர்த்தப்படுகிறது.
எபேசுவில் இருந்து வந்த மற்றுமொரு சகோதரன் தெர்கியு ஆவான். பவுலின் நீண்ட சிறைக் காலத்தில் அவனுடன் இருந்தவன் இவன். அவன் ஒரு எழுத்தாளன். எபேசியர், கொலோசெயர் மற்றும் பிலேமோன் நிரூபங்களை கொண்டு சென்றவன் இவன். கிரேக்குவில் இருந்து எருசலேம் சென்ற பயணக் காலத்தில் ஆண்டுகள் முழுவதும் அப்போஸ்தலுடன் இணைந்து பயணம் செய்தவர்களுடன் உண்மையான விசுவாசியாக இருந்தவன் இவன். இவன் ரோமாபுரியில் மீண்டும் ஒரு முறை பவுலை சந்தித்தான். அவனுக்கு பணியாளனாகவும் செயல்பட்டான்.
எருசலேமில் அப்போஸ்தலன் சிறைப்பிடிக்கப்படுவதற்கு காரணமாக இருந்த, எபேசுவில் இருந்து வந்த துரோப்பீமுவைக் குறித்தும் நாம் வாசிக்கிறோம். விருத்தசேதனம் பண்ணாத இந்த புறஜாதியான வாலிபனை பவுல் தேவாலயத்திற்குள் கொண்டுவந்தான் என்று யூதமத வெறியர்கள் குற்றம் சாட்டினார்கள்.
பவுல் எருசலேமிற்கு திரும்பி வந்தது கிறிஸ்துவின் வெற்றிப் பவனிக்கு ஒத்திருந்தது. ஏனெனில் அவனது இருதயத்தில் இறைவனின் ஐசுவரியமிக்க அன்பு நிறைந்தவனாக, புறஜாதிகளின் பிரதிநிதிகளாக உண்மையுள்ள மனிதர்களை இணைத்துக் கொண்டு அப்போஸ்தலன் அங்கு திரும்பி வந்திருந்தான். அவர்கள் வெறுமனே வார்த்தைகளை மட்டும் கொண்டு சென்று துன்பம் அனுபவித்த சபையை சந்திக்கவில்லை. அவர்கள் குறிப்பிடத்தக்க பணத்துடன் வந்திருந்தார்கள். பரிசுத்த ஆவியானவரின் ஆலயத்தில் அதை செலுத்தும் நோக்கத்துடன் வந்தார்கள். பரிசுத்தவான்களின் காணக்கூடிய ஐக்கியம் இவ்விதமாக இருந்தது.
விண்ணப்பம்: ஆண்டவராகிய கிறிஸ்துவே, நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். உம்மைப் பின்பற்றும் ஒவ்வொரு நாட்டு மக்களில் இருந்தும் நீர் எங்களை தெரிந்தெடுத்துள்ளீர். இறைவனின் ஆட்டுக்குட்டியாகிய உம்மை பின்பற்றச் செய்கிறீர். அவர்கள் தங்களுடைய சரீரங்களையும், ஜீவனையும் இறைவனுக்கு உகந்த பலியாக ஒப்புக் கொடுக்கிறார்கள். எங்களது பிள்ளைகள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நீர் எங்களை ஏற்றுக்கொள்ளும்படி நாங்கள் கேட்கிறோம். பொதுவான நித்தியப் பணிக்காக எங்களை பரிசுத்தப்படுத்தும்.
கேள்வி:
- பவுலின் கூட்டாளிகளின் மிகப்பெரிய எண்ணிக்கையின் சிறப்புத் தன்மை என்ன?