Previous Lesson -- Next Lesson
அ) முற்பிதாக்களின் நாட்களைக் குறித்த விபரம் (அப்போஸ்தலர் 7:1-19)
அப்போஸ்தலர் 7:17-19
17 ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் சமீபித்தபோது,18 யோசேப்பை அறியாத வேறொரு ராஜா தோன்றின காலமளவும், ஜனங்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள். 19 அவன் நம்முடைய ஜனங்களை வஞ்சனையாய் நடப்பித்து, நம்முடைய பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான்.
ஆ) மோசேயின் நாட்கள் (அப்போஸ்தலர் 7:20-43)
அப்போஸ்தலர் 7:20-29
20 அக்காலத்திலே மோசே பிறந்து, திவ்விய சவுந்தரியமுள்ளவனாயிருந்து, மூன்று மாதமளவும் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான்.21 அவன் வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.22 மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.23 அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேல் புத்திரராகிய தன்னுடைய சகோதரரைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் எண்ணமுண்டாயிற்று.24 அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாய் நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணைநின்று, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயஞ்செய்தான்.25 தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு இரட்சிப்பைத் தருவாரென்பதைத் தன்னுடைய சகோதரர் அறிந்து கொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை அறியவில்லை.26 மறுநாளிலே சண்டைபண்ணிக்கொண்டிருக்கிற இரண்டுபேருக்கு அவன் எதிர்ப்பட்டு: மனுஷரே, நீங்கள் சகோதரராயிருக்கிறீர்கள்; ஒருவருக்கொருவர் அநியாயஞ்செய்கிறதென்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான்.27 பிறனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் உன்னை ஏற்படுத்தினவன் யார்?28 நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட மனதாயிருக்கிறாயோ என்றான்.29 இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.
ஸ்தேவான் மோசேயை புறக்கணிப்பதாக பொய் சாட்சிகள் குற்றம் சாட்டினார்கள். அவனது போதகத்தை தவறாக வியாக்கியானம் செய்தார்கள். ஆகவே ஸ்தேவானுக்கு, மோசேயின் வாழ்க்கையை குறித்து மேலும் விபரங்களுடன் பேச வேண்டிய தேவை ஏற்பட்டது. அவன் பழைய ஏற்பாட்டின் மிகப்பெரும் மத்தியஸ்தரைக் குறித்து வெளிப்படையாகவும், முன்னேற்பாடின்றி பேசியும், தனது கருத்துக்களை முன் வைத்தார்.
முதலாவது மோசேயின் குழந்தைப் பருவத்திலிருந்து, அவரது வாழ்க்கைக் கதையை வரிசைப்படுத்தி கூற ஆரம்பித்தான். அவருடைய மக்கள் எண்ணிக்கையில் மிகவும் அதிகமாக எகிப்து தேசத்தில் பெருகினார்கள். எனவே அவர்களது பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும்படி எகிப்தியர்கள் முற்பட்டார்கள். அவர்கள் கூறினார்கள்: “நாம் அவர்களை விட்டுவிட்டால் அவர்கள் பலுகிப் பெருகுவார்கள். நம்மை விட பலவான்கள் ஆவார்கள். நாம் அவர்களை அடிமைப்படுத்தாவிட்டால் அவர்கள் நம்மை அழித்து விடுவார்கள்.
பிரச்சினையின் கடினமான சூழ்நிலை மத்தியிலும் தன் மீது விசுவாசம் வைக்கக் கூடியவருக்கு வெகு அருகில் இறைவன் தோன்றுகிறார். மோசேயின் பெற்றோர்கள் அவன் குழந்தையாய் இருந்த போது அவனை மறைத்து வைத்தார்கள். நைல் நதியின் கரைகளில் வளர்ந்திருந்த நாணற் செடிகளின் அருகில் விட்டுவிட்டார்கள். மோசே என்ற பெயரின் அர்த்தம் “எடுக்கப்பட்டவன்”. பிரச்சினையின் அலைகள் மிக அதிகமாக பெருகியது. அதன் உச்சக்கட்டத்தில் இறைவன் தன்னால் நியமிக்கப்பட்ட இறைவாக்கினரை பாதுகாக்க இடைப்பட்டு செயல்பட்டார்.
மோசேயை பயிற்றுவிக்கும்படி அதி உன்னதமான காரியங்கள் அவனுக்கு வழங்கப்பட்டது. இந்த இளம் வாலிபன் பார்வோனின் குடும்பத்தில் நுழைந்தான். அங்கு எகிப்தின் தலைசிறந்த கல்வியை அவன் பெற்றுக்கொண்டான். மேலும் அவன் எகிப்தின் மந்திரங்களின் இரகசியங்கள், மரித்தோருக்கான சடங்குகள் மற்றும் ஆவி தொடர்பு போன்ற காரியங்களை கற்றுக்கொண்டான். அவனது வாலிப காலத்தில் அவன் விசுவாசியாய் இருக்கவில்லை. மற்ற மனிதர்களைப் போல அவனும் ஒரு துன்மார்க்கமான மனிதனாக இருந்தான்.
பிறகு அவன் தான் ஒரு எகிப்தியன் அல்ல என்பதையும், எபிரெயன் என்பதையும் அறிந்து கொண்டான். அவனுடைய மக்கள் அடிமைப்படுத்தப்பட்டு, துன்பத்தை அனுபவித்தார்கள். அவன் உடனடியாக, தீவிரமாக செயல்பட்டான். அவனுடைய மக்களை கட்டுப்படுத்தவும், ஆளுகை செய்யவும் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த ஒரு எகிப்தியனை அவன் கொன்று போட்டான். அவனது கல்வி அனைத்தும் அவனுக்கு உதவவில்லை. வன்முறை மற்றும் இரத்தம் சிந்ததுல் மூலமாக தன்னுடைய மக்களை காப்பாற்ற தனது திறமைகள் குறித்து அவன் எண்ணிக்கொண்டிருந்தான். இது தான் அநேகர் வீழ்ந்து போவதற்கான வஞ்சகத்தின் வழியாக உள்ளது. அவர்கள் தந்திரங்கள், வல்லமைகள் மற்றும் வெடி குண்டுகளை வைத்து சூழ்நிலைகளை மாற்றி அமைக்க விரும்புகிறார்கள். அவர்கள் அனைவரும் மோசேயைப் பின் தொடர்ந்து, அவனைப் போல கொலைக்காரர்களாக மாறுகிறார்கள். சத்தியத்தைப் பொறுத்தமட்டில் அவர்கள் எதையும் மாற்றி அமைக்கவில்லை. நமக்கு புதிய தீர்வுகள் தேவை இல்லை. புதுப்பிக்கப்பட்ட மனிதர்கள் தான் தேவை. இயேசுவின் காலத்தில் இஸ்ரவேலின் ஆட்சியாளர்கள் மனுஷகுமாரனை கொன்றார்கள். அவரைக் கொன்றதன் மூலம் அவர்களது மக்களை காப்பாற்றி விட்டதாக அவர்கள் சொல்லிக் கொண்டார்கள். அவர்களைப் போலவே அவர்களுடைய இருதயங்களும் காணப்பட்டது. யுத்தங்கள், அடிமைத்தனங்கள், அநீதிகள் ஒருபோதும் தேசங்களுக்கிடையே ஒப்புரவாகுதலை கொண்டுவராது. அவைகள் காரியங்களை மேலும் மோசமாக்கும்.
தன்னை ஒரு விடுதலையாளராக தனது நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று மோசே கருதினார். ஆனால் அவனது இரண்டு சகோதரர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்ட போது, அவனது இந்த முயற்சியை புறக்கணித்தார்கள். தனது நாட்டு சகோதரர்களின் வார்த்தைகளின் உட்கருத்து பொய்யாக இருப்பதை அவன் உணர்ந்து கொண்டான்.முடிவில் ஒவ்வொரு தனிநபரும் சுயத்தை நேசிப்பவர்களாகவே இருந்தார்கள். தனது சகோதரனே தன்னை வெறுப்பதை மோசே உணர்ந்தான். அடிமைப்படுத்திய அதிகாரத்திற்கு தன்னுடைய கொலையை வெளிப்படுத்த முயன்றதில், அவர்களது உண்மையற்ற தன்மையை அனுபவப்பூர்வமாக கண்டான். அவன் எகிப்திலிருந்து வனாந்தரத்திற்கு உடனடியாக ஓடிப்போனான். அவனது தேசம் அவனைப் புறக்கணித்தது. கிறிஸ்துவும் இதேவித புறக்கணிப்பை அனுபவித்தார். இறைவனுடைய திட்டம் என்பது அவருடைய குமாரன் மூலமாக கடினமான மக்களை மீட்பது ஆகும். இப்படிச் செய்வதின் மூலம் பாவம், மரணம், மற்றும் சாத்தானின் அடிமைத்தனத்தில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட முடியும். நியாயத்தீர்ப்பின் நாளில் கிருபையைக் காண முடியும். ஆனால் அவருடைய தேசம் அவரை அறியவில்லை. அவர்கள் மோசேயை புறக்கணித்ததைப் போல இயேசுவையும் புறக்கணித்தார்கள். அவர்கள் கடினமான இருதயங்களுடன் புறக்கணித்த மக்களாக காணப்பட்டார்கள். இங்கே ஒரு கேள்வி எழும்புகிறது. நம்முடைய நிலை என்ன? நாம் யூதர்களை விட அறிவில் சிறந்தவர்களா? நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறோமோ? அல்லது நாம் அவரைப் புறக்கணிக்கிறோமோ? இன்று நாமும் பரிசுத்த ஆவியானவரின் அழைப்பை கேளாதவர்கள் போல் இருக்கிறோம் அல்லவா?
அரேபிய நாடோடிகள் மத்தியில் மோசே ஒரு அகதியைப் போல் மாறினான். அவன் மனதிருப்தி, மற்றும் தாழ்மையை வனாந்தரங்களில், கடினமான நிலப்பகுதிகளில் மேய்த்தலின் பணியை செய்த போது கற்றுக்கொண்டான். மேய்ப்புப் பணி என்பது கடினமான வேலை ஆகும். அதற்கு தைரியம், பொறுமை மற்றும் அனுபவம் தேவை. மோசே தன்னுடைய வனாந்தர வருடங்களில் அரேபிய மொழியை கற்றிருக்கக் கூடும். இம்மொழி செமிட்டிக் மொழிகளின் ஒரு கிளையான மீதியானியரின் மொழி ஆகும். அவன் ஒரு மீதியானியப் பெண்ணை திருமணம் செய்து கொண்டான். அவன் இரண்டு குமாரர்களுக்கு தகப்பன் ஆனான். இந்த திருமணம் இஸ்ரவேலர்கள் மற்றும் அரேபியர்களுக்கு இடையேயான ஒரு கலப்புத் திருமணம் ஆகும். இதன் மூலம் மோசே இஸ்ரவேலின் மாபெரும் தலைவர் என்பது நிரூபிக்கப்பட்டது. (யாத்திராகமம் 18:1-7)
விண்ணப்பம்: ஆண்டவரே, எனது சொந்த வல்லமையை நான் நம்பியிராதபடி என்னை காத்துக்கொள்ளும். என்னை நானே காப்பாற்றிக் கொள்பவனாக நான் இராதபடி செய்யும். எனது அறிவுத்திறமையின் மூலம் பிறரை கவர்ந்து கொள்ளாதபடி என்னை காத்தருளும். உம்முடைய ஆவியானவர் எனது இருதயத்தை புதுப்பிக்கட்டும். என்னுடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் கிறிஸ்துவின் இரத்தம் என்னை தூய்மைப்படுத்தட்டும். எங்கள் மீது இரக்கமாயிரும். ஆண்டவரே, எங்களை பரிசுத்தப்படுத்தும். உம்முடைய இரட்சிப்பின் முழுமைக்கு நேராக எங்களை வழிநடத்தும்.
கேள்வி:
- மோசே சிறந்த கல்வியினால் சீர்திருத்தப்படவில்லை என்பதை நாம் எப்படி அறிகிறோம்?