Previous Lesson -- Next Lesson
அ) இயேசு ஒரு விபச்சாரியை மனந்திரும்புதலுக்கு நடத்துகிறார் (யோவான் 4:1-26)
யோவான் 4:16-24
16 இயேசு அவளை நோக்கி: நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா என்றார். 17 அதற்கு அந்த ஸ்திரீ: எனக்குப் புருஷன் இல்லை என்றாள். இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான். 18 எப்படியெனில், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய் என்றார். 19 அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். 20 எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள். 21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது. 22 நீங்கள் அறியாததைத் தொழுது கொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. 23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். 24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
இயேசு ஜீவ தண்ணீர் மீதான விருப்பத்தை அந்தப் பெண்ணில் தோற்றுவித்த பிறகு, இறைவனுடைய அந்தக் கொடையைப் பெற்றுக்கொள்ள அவளுக்கிருக்கும் தடையாகிய அவளுடைய பாவத்தை அவளுக்குக் காண்பித்தார். நீ ஒரு விபச்சாரி என்று கடினமான வார்த்தைகளினால் அவர் அவளைக் காயப்படுத்தவில்லை. மாறாக அவள் தன்னுடைய புருஷனைக் கூப்பிடும்படி மென்மை யாகக் கூறினார். இவ்வாறு கேட்டது அவளுக்கு வேதனையளிப்பதாக இருந்தது. எல்லாப் பெண்களைப் போலவும் இவளும் கணவனுடைய பாதுகாப்பிற்காகவும் பராமரிப்புக்காவும் ஏங்கினாள். ஆனால் அவள் தனிமையானவளாகவும், வெறுக்கப்பட்டவளாகவும், தன்னுடைய அவமானத்தை இயேசுவுக்குச் சொல்ல விரும்பாதவளாகவும் காணப் பட்டாள். ஆகவே எனக்கு கணவன் இல்லை என்று சொல்லி தப்பித்துக்கொள்ள முயன்றாள்.
அவளுடைய அந்தக் கூற்று உண்மைதான் என்று இயேசு உறுதி செய்தார். ஏனென்றால் அவருக்கு எல்லா இரகசியங்களும் தெரியும். அவள் கைவிடப்பட்டவளும், தனிமையானவளும், இச்சையினால் அன்பைத் தேடுகிறவளும், ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து பாவத்தில் விழுந்துகொண்டிருப்பவளாகவும் இருந்தாள்.
ஒவ்வொரு விபச்சார நடவடிக்கையும் மனசாட்சியை கெடுத்துப்போடும் பேரழிவுக்குரிய செயல், அது உள்ளுணர்வுகளை நோய்கொள்ளச் செய்யும், அதைப் பெண்களில் காணக்கூடியதாக இருக்கும். அப்படிப்பட்ட பெண் இன்னும் தன்னுடைய கணவனுக் காகவும், புரிந்துகொள்ளுதலுக்காகவும் ஏங்குகிறாள்.
இப்போது அவளுக்கு இயேசு ஒரு சாதாரண மனிதனல்ல என்பது தெரிந்தவிட்டது; அவருக்கு தீர்க்கதரிசன சக்தி இருக்கிறது. தன்னுடைய பிரச்சனைக்கு இறைவன் மட்டுமே உதவிசெய்யக்கூடும் என்று அவளுடைய உள்மனதில் அறிந்திருந்தாள். ஆனால் அந்த இறைவனை அவள் எங்கே கண்டுபிடிப்பாள்? எந்த வழியில் அவரிடம் போவாள்? விண்ணப்பமும் சமயச் சடங்குகளும் அவளுக்கு அந்நியப்பட்டுப் போயின. பல வருடங்களாக அவள் எந்த சமயச் சடங்குகளிலும் கலந்துகொண்டதில்லை. ஆனாலும் அவள் விடுதலைக்காகவும் இறைவனோடு சமாதானத்திற்காகவும் ஏங்கினாள்.
தான் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்ற தாகத்தையும் அவளுடைய உள்ளத்தில் ஏற்படுத்திய பிறகு, இயேசு, நாம் ஆராதிக்கும் இடம் முக்கியமானதல்ல, நாம் ஆராதிக்கும் நபரே முக்கியமானவர் என்பதை அவளுக்குக் காண்பித்தார். இறைவன் பரலோக பிதா என்பதை இயேசு அவளுக்குக் காண்பித்தார். இறைவனை அறிந்துகொள்வ திலுள்ள இரட்சிப்பை அவர் அவளுக்கு அருளினார். பிதா என்ற முக்கியமான வார்த்தையை அவர் மூன்று முறை பயன்படுத்துகிறார். அறிவோ பக்தியோ இறைவனைக் குறித்த அறிவை நமக்குத் தராது. அது கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின் மூலமாக வருகிறது.
எல்லா தெய்வங்களையும் நாம் பிதா என்று அழைக்க முடியாது என்று இயேசு தெளிவுபடுத்தினார். சமாரியர்கள் பல தெய்வங்களை வணங்கினார்கள். ஆனால் யூதர்களோ வரலாற்றில் தம்மை வெளிப்படுத்தியவரும், தாவீதின் வம்சத்தில் உலகத்தின் இரட்சகராக வெளிப்படுவார் என்று வாக்களித்தவருமாகிய கர்த்தரைத் தொழுது கொண்டார்கள்.
வேதாகமத்தின் சமயம் உலகம் முழுவதும் பரவக்கூடியதாக இருந்தது. அதனால் ஒரு குறிப்பிட்ட தேவாலயத்துடன் தொடர்புடையதா யிருந்த ஆராதனை விடுவிக்கப்பட்டது. பரிசுத்த ஆவியானவர் வாசம்பண்ணும் விசுவாசிகள் இறைவனுடைய ஆலயமாயிருக்கி றார்கள். அவர்களுடைய வாழ்க்கை முழுவதுமே இறைமகிமையின் ஆராதனையாக மாறுகின்றது. அவருடைய அன்பின் பெருக்கத்திற்குள் அவர்கள் நுழைவதால் கிறிஸ்துவின் மீட்போ அவர்களுடைய தனித்தன்மையாகிறது. அவர்கள் இறைவனுடைய வல்லமையினால் நீதியான, நேர்மையான, சுத்தமான வாழ்க்கையைத் தெரிந்தெடுத்திருக்கின்றார்கள். அவர்களுடைய பரலோக பிதா அவர்களைப் புதுப்பித்திருக்கிறார். அவர்களுடைய உள்ளம் முழுவ தும் துதியினால் நிறைந்திருக்கிறது. இறைவனுடைய பிள்ளைகள் அவரை எங்கள் பரலோக பிதாவே என்று நன்றியோடும், அர்ப்பணத்தோடும், உள்ளபூர்வமாக அழைக்கும்போது இறைவன் பிரியப்படுகிறார்.
இறைவன் ஆவியாயிருக்கிறார். அவர் ஒரு விக்கிரகமோ மாயாவியோ அல்ல. அவர் நம்முடைய தகப்பன், நாம் அவருடைய ஆவியை அறிந்திருக்கிறோம். அவரை அணுகுவதற்கு நமக்கிருக்கும் பலவீனத்தையும் இயலாமையையும் அவர் அறிந்திருக்கிறார். அவர் தம்முடைய குமாரனில் நம்மிடம் வந்து, அவருடைய பலியினால் நம்மைச் சுத்திகரித்து, நமக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு இன்னும் பல பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள ஆசை; அவருடைய பிள்ளைகளே அவருக்கு ஆவியோடும் உண்மையோடும் ஆராதனையைச் செலுத்தமுடியும். எங்களுடைய வாழ்க்கை அவருடைய அன்பிற்கான பதிற்செயலாக மாறும்படி அவர் எங்களைப் பரிசுத்த ஆவியினாலும், சத்தியத்தினாலும், கிருபை யினாலும் நிரப்பும்படி பிதாவிடம் நாங்கள் விண்ணப்பிக்கிறோம்.
யாருமே இறைவனைச் சரியாக ஆராதிக்க முடியாது. அதனால்தான் பரிசுத்த ஆவியாகிய வரத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார். அவருக்குள் நாம் உண்மையுடன் விண்ணப்பிக்கிறவர்களாகவும், சந்தோஷத்தோடு சேவை செய்கிறவர்களாகவும், தைரியத்தோடு சாட்சி பகருகிறவராகவும் மாறுகிறோம். அப்போது கிறிஸ்துவின் சிலுவையிலிருந்து வரும் பரிசுத்த ஆவியின் வல்லமையோடு பிதாவை நேசிக்கும் ஆராதனையாக நம்முடைய வாழ்க்கை மாறும். உண்மை யான ஆராதனையை ஏற்படுத்துவதற்காக கிறிஸ்து தேவாலயத்தைச் சுத்திகரித்தார். கிறிஸ்துவில் அந்தப் பாவமுள்ள பெண்ணுக்கு பிதா வெளிப்படுத்தப்பட்டார். அவள் தன்னுடைய பாவத்தையும் தாகத்தை யும் அறிக்கை செய்தபோது, இயேசு அவளுக்குக் கிருபை கொடுத்தார்.
விண்ணப்பம்: பரலோக பிதாவே, நாங்கள் உம்மை எங்கள் இருதயத்தில் கனப்படுத்த வேண்டும் என்றும், எங்கள் நடத்தைகளில் பரிசுத்தமாயிருக்க வேண்டும் என்றும், உம்முடைய கிருபைக்காக உம்மைத் துதிக்க வேண்டும் என்றும் நீர் விரும்புகிறபடியால் உமக்கு நன்றி. எங்களுடைய ஆராதனையை ஆசீர்வதியும். உம்மை எப்போதும் மகிமைப்படுத்திய உம்முடைய குமாரனை பின்பற்றும் வேலைக்காரர்களாக எங்களை மாற்றும். விண்ணப்பத்தின் ஆவியினால் எங்களை நிரப்பும். உம்முடைய நற்செய்தியிலிருந்து வரும் உம்முடைய வார்த்தைகளின்படி எப்போதும் செயல்படுகிறவர்களாய் எங்களை மாற்றும்.
கேள்வி:
- மெய்யான ஆராதனையை தடுப்பது எது, அதை ஊக்குவிப்பது எது?
யோவான் 4:25-26
25 அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும் போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். 26 அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.
இயேசுவின் அன்பின் வார்த்தைகளில் இருந்த சக்தியையும் சத்தியத்தையும் அந்தப் பெண் உணர்ந்துகொண்டாள். அவர் தனக்குக் கொடுக்கும் வாக்கின் நிறைவேறுதலைக் காண விரும்பினாள். வரப்போகிற கிறிஸ்துவைக் குறித்த தீர்க்கதரிசனத் தைக் குறித்து நினைத்துப் பார்த்தாள். அவருடைய நாமத்தின் மேல் அவள் நம்பிக்கை வைத்து, அவர் மட்டுமே இறைவனை உண்மையாக ஆராதிப்பதைக் குறித்து தனக்குச் சொல்ல முடியும் என்று நம்பினாள்.
இந்தப் பெண்ணிடம் இயேசு தன்னைத் தெளிவாக வெளிப்படுத் தியதைப் போல இதற்கு முன் எந்த சந்தர்ப்பத்திலும் அவர் தன்னை வெளிப்படுத்தவில்லை என்பது ஆச்சரியமானது. இறைவனால் அனுப்பப்பட்டவரும், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவருமான எதிர்பார்க்கப்பட்டவர் நானே என்று அவர் சொன்னார். இறைவன் மனிதனுக்குக் கொடுக்கும் கொடை நானே; மாம்சத்தில் வந்த இறைவார்த்தையும் அனை வருக்காகவும் ஆயத்தமாக்கப்பட்ட இரட்சிப்பும் நானே என்றார்.
மேசியா என்றால் இராஜாதி இராஜா, தீர்க்கதரிசிகளின் தலைவர் மற்றும் பிரதான ஆசாரியர் என்று பொருள் என்பதை அந்தப் பெண் அறிந்திருக்கவில்லை. அவருடைய வருகை உயிர்த் தெழுதலுடன் தொடர்புடையது என்றும் அதன்பிறகு பூமி யெங்கும் சமாதானம் பரவும் என்றும் அவள் ஒருவேளை கேள்விப்பட்டிருக்கலாம். அவருடைய பெயருடன் தொடர்புள்ள யூதர்களின் அரசியல் கனவுகளைப் பற்றியும் அவள் கேள்விப் பட்டிருக்கலாம். ஆனால் அவளுக்கு வேண்டியதெல்லாம் தன் னுடைய பாவத்திலிருந்து தன்னை விடுவிக்கும் ஒரு இரட்சகர். கிறிஸ்துவே அதைத் தனக்குத் தரமுடியும் என்றும் விசு வாசித்தாள்.
அதற்கு இயேசு, உன்னுடன் பேசுகிற நானே அவர் என்று கூறினார். நானே என்ற இந்த சொற்றொடரில் பரலோகத்தின் திட்டங்களும் தீர்க்கதரிசிகளின் வாக்குத்தத்தங்களும் சந்திக் கின்றன. சாதாரண மனிதன் தானே மேசியா என்று இதைவிட வெளிப்படையாக உரிமைகோர முடியாது. அந்திக் கிறிஸ்து மட்டுமே அப்படிப்பட்ட ஒரு பொய்யான கோரிக்கையை முன்வைக்க முடியும். ஆனால் அறியாமையுள்ள எந்தப் பாவியையும் வெறுத்தொதுக்காத கிறிஸ்து மாம்சத்தில் வந்த அன்பாயிருக்கிறார். அவர் அந்நியப்பெண்ணாகிய சமாரியப் பெண்ணுக்குக் கூட இரக்கம் காட்டுகிறார். அவர் இரக்கமாயி ருக்கிறார், நியாயத்தீர்ப்பாயில்லை.