Previous Lesson -- Next Lesson
10. எதிர்பாராத பிரச்சினைகளின் போது விசுவாசத்தில் பலமுள்ளோர் எவ்விதம் நடந்துகொள்ள வேண்டும்? (ரோமர் 15:1-5)
ரோமர் 15:1-5
1 அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும். 2 நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன். 3 கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார். 4 தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது. 5 நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு,
பவுல் உணவு மற்றும் பானங்களின் பாரம்பரியங்கள் குறித்து அறிந்து வைத்திருந்தான். நியாயப்பிரமாணத்தில் இருந்து விடுவிக்கப்பட்டோர் மற்றும் பலமுள்ளோரை அவன் சந்தித்தான். அவனும் அப்படிப்பட்டவர்களில் ஒருவனாக தன்னைக் கருதினான். ஆனால் தனது சுதந்திரத்தை அவன் சுருக்கிக்கொண்டு புதிய விசுவாசிகளான பலவீனமுள்ளோரை தாங்கும்படி செயல்பட்டான். நாம் விரும்புகிற வண்ணம் நாம் வாழக்கூடாது. எல்லாக் காரியத்தைக் குறித்தும் நிச்சயமற்ற நிலையில் இருக்கும் மனந்திரும்பியோரின் விருப்பத்தைக் கவனிக்க வேண்டும். அவர்கள் நன்மைக்காக, பக்தி விருத்திக்காக செயல்பட வேண்டும். நமது ஆசைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றுவதைவிட மற்றவர்களின் பக்திவிருத்தி முக்கியமானதாகும்.
சபையின் எல்லாப் பக்கத்திலும் சுயநலமுள்ள குறுகிய ஆவியை இந்த கோட்பாடு உடைத்தெறிகிறது. நம்முடைய கனவுகளைப் பொறுத்து நமது வாழ்வு, செயல்களை நாம் தீர்மானிக்கவில்லை. விசுவாசத்தில் பலவீனரைத் தாங்கி இயேசுவிற்கு பணி செய்கிறோம். நமது சிந்தனை “நான்” என்பதல்ல, இயேசு மற்றும் அவருடைய சபை தான் நமது பிரதான சிந்தனையாக இருக்கின்றது. இயேசு தனக்காக வாழவில்லை. தனது மகிமையைத் துறந்து மனிதன் ஆனார். அவர் குற்றச்சாட்டுகள், நிந்தைகள், பாடுகளை உலகை இரட்சிக்கும்படி ஏற்றுக்கொண்டார். இறுதியாக அனைவருக்காகவும் மரித்தார். அவர் குற்றவாளிகளை இரட்சிக்கும்படி, அவர்களை கட்டியெழுப்பும்படி அவர் குற்றவாளியைப் போல் அவமானப்படுத்தப்பட்டபோதும் ஏற்றுக்கொண்டார்.
பரிசுத்த வேதாகமத்தின்படி தாழ்மை, எளிமை, நீடிய பொறுமையுடன் இயேசு வாழ்ந்தார். அவர் தனது ஊழியங்களுக்கான வழிநடத்துதல் மற்றும் வல்லமையை பழைய ஏற்பாட்டு புத்தகங்களில் இருந்து எடுத்தார். சபையில் பணிபுரிய விரும்பும் ஒருவன் அல்லது கிறிஸ்துவை புறக்கணிப்போர் மத்தியில் செயல்பட விரும்பும் ஒருவன் இறைவார்த்தையில் ஆழமாய் வேரூன்றியிருக்க வேண்டும். இல்லையெனில் அவன் பணியில் வல்லமை மற்றும் மகிழ்ச்சியை இழந்துவிடுவான்.
பவுல் இந்தப் பாடங்களைக் குறித்த நீண்ட ஆராய்ச்சிக்குப்பின் இறைவனைக் குறித்து இவ்விதம் கூறுகிறான். இறைவன் சமாதானத்தின், ஆறுதலின் இறைவன். (ரோமர் 15:5) சுயநலமுள்ள, முரட்டாட்டமுள்ள மனிதர்களைப் பொறுத்துக் கொள்வதற்கு படைத்தவருக்கு நீடிய பொறுமை தேவைப்படுகிறது. அவர் தமது குமாரனாகிய இயேசுவில் ஆறுதலைக் காண்கிறார். ரோமில் உள்ள மக்களை பொறுமை மற்றும் ஆறுதலின் ஆவியோடு விண்ணப்பங்களை ஏறெடுக்கும்படி பவுல் வழி நடத்தினான். விசுவாசிகள் மத்தியில் இருந்து சபை ஒற்றுமை வருவதில்லை. அது கிறிஸ்துவிடம் இருந்து மட்டுமே வருகின்றது. அவருக்குள் மட்டுமே சபையின் சிந்தனைகள் இணைக்கப்படுகின்றன. கிறிஸ்து இல்லாமல் வெற்றி இல்லை. சபையில் ஒற்றுமை இல்லை. அதில் உள்ள அனைவரும் துதியுடன் இணைந்து சர்வவல்லமையுள்ள, நியாயாதிபதியானவர், அகிலத்தைப் படைத்தவர் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிதா என்று அறிந்துகொள்கிறார்கள்.
இயேசு மட்டுமே தனது பாடுகள் மற்றும் மரணத்தின் மூலம் பரிசுத்தமானவருடன் நம்மை ஒப்புரவாக்குகிறார். அவர் மரித்தோரில் இருந்து எழுந்து நம்மை விலைக்கிரயம் கொடுத்து வாங்கியுள்ளார். அவர் பரமேறிப் போயிருக்கிறார். நாம் அவருடைய பிள்ளைகளாக தத்து எடுக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய இரக்கமுள்ள பிதாவை, இயேசுகிறிஸ்துவின் பிதாவை நாம் மகிழ்ச்சியுடன் துதிக்கிறோம். அவரும், அவருடைய குமாரனும் பரிபூரணமானவர்கள், ஒன்றாயிருப்பவர்கள். எனவே சபையின் அங்கத்தினர்கள் பிரிக்கமுடியாத ஐக்கியத்தில் இயேசுவுக்குள் கட்டப்பட்டிருக்கிறார்கள்.
விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, நாங்கள் உம்மை மகிமைப்படுத்துகிறோம். நீர் பிதா என்பதை எங்கள் ஆண்டவராகிய இயேசு எங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். உம்முடன் ஒப்புரவாக்கியுள்ளார். உமது அன்பின் ஐக்கியத்தில் உமது பரிசுத்த ஆவியினால் எங்களை கட்டியுள்ளார். விசுவாசிகள் மத்தியில் காணப்படும் வேறுபட்ட கருத்துகள் மத்தியிலும் பரிபூரணமான அன்பின் ஐக்கியத்தை இந்த அன்பு நிறைவேற்றுவதாக.
கேள்வி:
- ரோமர் 15:5-6 ன் பொருள் என்ன?