Previous Lesson -- Next Lesson
1. கிறிஸ்துவின் பாவப்பரிகார மரணத்தில் கடவுளுடைய நீதி வெளிப்படுகிறது (ரோமர் 3:21-26)
ரோமர் 3:21-24
21 இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது. 22 அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை. 23 எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, 24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;
நீங்கள்பாவம் நிறைந்தவரா? தங்களுடைய இரத்தம் தீமையானது என்றும் தங்களுடைய நடத்தைகள் கெட்டது என்றும் உணர்ந்து கொண்டதால் தங்களுடைய கடந்தகால செயல்களினால் துக்கமடைந்த பாவிகளிடத்தில்தான் இந்தக்கேள்வி கேட்கப்படுகிறது.
இறைவன் இவ்வுலகத்தை நியாயந்தீர்க்கின்ற போது உங்களுக்குச் சொல்லப்படும் நற்செய்தியை வந்துகேளுங்கள்.
பக்தியுள்ளவர்களும், பாவிகளும், தெரிந்து கொள்ளப்பட்டவர்களும், தொலைந்துபோனவர்களும், நாகரீகமடைந்தவர்களும்,எளியவர்களும், வயோதிபர்களும்,வாலிபர்களும்இயற்கையின் சட்டத்திற்கு முன்பாகவும் தெய்வீகசட்டத்திற்கு முன்பாகவும் இழிவான மனமுடைய பாவிகளாக இருக்கிறார்கள் என்பதை பவுல் நிரூபித்திருக்கிறார்.
அனைத்து மனிதர்களைப் போலவே தாங்களும் இறைவனுடைய மகிமைக்கு முன்பாக குறைவுள்ள மனிதர்களாக இருக்கிறோம் என்பதைஅறிந்திருக்கிறவர்கள்பாக்கியவான்கள். படைப்பில் நமக்குக் கொடுக்கப்பட்ட இறைவனுடைய சாயலை நாம் இழந்து விட்டோம். உங்களுடைய கேடுள்ள நிலை குறித்து நீங்கள்அழுகிறீர்களா?
இறைவனுடைய பரிசுத்தசட்டம் நமக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு அவரே தரும் பதில் என்ன? அவருடைய கட்டளைகளை மீறிய எண்ணற்ற தீயவர்களுக்கு எதிரான தெய்வீக நியாயத்தீர்ப்பு யாது? உங்களுக்கும் எனக்கும் எதிராக கடவுளுடைய நீதியான நியாயத்தீர்ப்பு என்ன?
உயிருள்ளவர்களும் இறந்தவர்களும் வாழும் உலகங்களிலே இந்த இறைவனுடைய நியாயத்தீர்ப்பைக் குறித்தமயான அமைதி நிலவும் போது பரலோகத்திலும் பூலோகத்திலும் வல்லமையான வார்த்தைகள்ஒலிக்கின்றன. “எல்லாரும் நீதிமானாக்கப்படுகிறார்கள்!” ஆனால் “அது சாத்தியமல்ல!” என்று நம்முடைய மனமும் “இல்லை!” என்று சாத்தானும் சொல்கிறது. ஆனால் இறைவனுடைய ஆவியானவர் நம்மை ஆறுதல்படுத்தி, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்ப்பதற்காக சிலுவையில் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரை நமக்குக் காண்பிக்கிறார். அனைத்துப் பாவிகளையும் தண்டிப்பதற்குப் பதிலாக இறைவன் தம்முடைய மகனைத் தண்டித்தார். கேடான மனிதர்களைப் பரிசுத்தப்படுத்துவதற்காக பரிசுத்தமுள்ள இறைவன் தம்முடைய பரிசுத்தமுள்ள மகனைப் பலிகொடுத்தார். இறைவனுடைய ஆசீர்வாதத்தின் பெருக்கத்திற்குள் நாம் இலவசமாக நுழைவதற்காக கிறிஸ்து தம்முடைய உடலின் உபத்திரவங்கள் மூலமாக நம்முடைய ஆவிக்குரிய கடன்களைச் செலுத்தித் தீர்த்தார். நீங்கள் இப்போது விடுவிக்கப்பட்டவராகவும், மீட்கப்பட்டவராகவும், சுதந்திரவாளியாகவும் இருக்கிறீர்கள். பாவமோ, சாத்தானோ, மரணமோ உங்கள் மீது அதிகாரம் செலுத்தமுடியாது. நீங்கள் குற்றமற்றவராகவும் என்றென்றைக்குமாக இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டவராகவும் இருக்கிறீர்கள்.
நீங்கள் இதை நம்புகிறீர்களா? மீட்பின் நற்செய்தியை நீங்கள் நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்கிறீர்களா? நீங்கள் கண்ணாடியில் உங்களைப் பார்க்கும்போது முன்பு போலவே தோற்றமளித்தாலும், ஏதோ ஒன்று புதிதாக இருப்பதை நீங்கள் உணருவீர்கள். இறைவன் உங்களை நேசிப்பதாலும் தம்முடைய ஒரே மகனுடைய மரணத்தின் மூலமாக உங்களுடைய பாவங்களில் இருந்து உங்களை விடுவித்து நீதிமானாக்கியிருப்பதாலும் நன்றியறிதலும் மனமகிழ்ச்சியும் உங்கள் கண்களில் மின்னுவதை நீங்கள் காண்பீர்கள். இந்த உண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது புறக்கணித்துவிடலாம். இந்த முழு உலகத்தையும் நீதிமான்களாக்கும் வேலையை இறைவன் ஏற்கனவே செய்து முடித்துவிட்டார். மறுபடியும் கிறிஸ்து சிலுவையில் மரணமடைய வேண்டிய தேவையில்லை. யார் இந்த உண்மையை நம்புகிறார்களோ அவர்கள் இரட்சிக்கப்படுகிறார்கள். யார் இந்த இரட்சிப்பைப் பற்றிக்கொள்கிறார்களோ அவர்கள் நியாயந்தீர்க்கப்படுவதில்லை. உங்களுடைய விசுவாசம் உங்களை இரட்சிக்கிறது.
அனைத்து மனிதர்களும் தீயவர்களாகவும் மரணத்திற்கும் அழிவுக்குமாக நியமிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் இறைவன் தம்முடைய இரக்கத்தினால் அனைவரையும் நீதிமான்களாக்கி, தமக்கு அவர்கள் நித்தியகாலமாகச் சேவை செய்யும்படி, வாழ்வதற்காக வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார். இந்த உலகளாவிய கிருபை இவ்வுலகத்தில் இருக்கும் எந்த சமயத்திலும் காணப்படுவதில்லை. நற்செய்தியில் மட்டுமே இது காணப்படுகிறது. இறைவனுடைய அன்பு அனைத்து மனிதர்களையும் மீட்டிருக்கிறது; படித்தவர்களையும், படிக்காதவர்களையும், முக்கியமானவர்களையும் முக்கியமற்றவர்களையும், தத்துவ ஞானிகளையும், எளிவர்களையும், முதியவர்களையும் சிறுவர்களையும் அவர் மீட்டிருக்கிறார். அவர்கள் அனைவரையும் இறைவன் நீதிமான்களாக்கியிருக்கிறார். எவ்வளவு காலம்தான் நீங்கள் அவருடைய கிருபைக்கு முன்பாக நீங்கள் அமைதியாக இருப்பீர்கள்? முன்னேறி வாருங்கள், உங்கள் நண்பர்களை அழைத்து, அவர்களுடைய சிறைக் கதவுகள் முழுவதும் திறந்திருக்கிறது என்று கூறுங்கள். அவர்கள் நற்செய்தியில் நியமிக்கப்பட்டிருக்கிறபடி விடுதலை பெறுவதற்கு உரிமையுள்ளவர்களாக இருக்கிறார்கள். விரைவாக இறைவனுடைய புதிய விடுதலையை அவர்களுக்கு அறிவியுங்கள்.
அன்புள்ள சகோதரனே! நீங்கள் தனிப்பட்ட முறையில் கிறிஸ்துவையும் அவருடைய மீட்பையும் பெற்றுக்கொண்டிருக்கிறீர்களா? உங்களுடைய இரக்கமுள்ள மீட்பராக நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்களா? அப்படியானால் நான் உங்களை வாழ்த்துகிறேன். நீங்கள் கிறிஸ்துவின் பாடுகளுக்காகவும் மரணத்திற்காகவும் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும். ஏனெனில் அவர் மட்டுமே உங்களை விடுவித்து, சுத்திகரித்து, நீதிமானாக்குகிறார். ஆகவே உங்களுடைய விசுவாசத்தினால் அவரைக் கனப்படுத்தி, ஓய்வின்றி அவருக்கு நன்றி செலுத்துங்கள். அவருடைய மகிமையான கிருபைக்கு நன்றி செலுத்துவதாகவே உங்களுடைய மீதமுள்ள வாழ்நாட்கள் அமையட்டும்.
விண்ணப்பம்: அன்புள்ள ஆண்டவராகிய இயேசுவே, நீர் எங்களுக்காக சிலுவையில் மரணமடைந்த காரணத்தினால் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவதோடு உம்மில் அன்புகூருகிறோம். கிறிஸ்துவின் பரிகார மரணத்தின் மூலமாக, எங்களுடைய பாவங்களை எலலாம் மன்னித்த இரக்கமுள்ள பிதாவே நாங்கள் உம்மைத் தொழுகிறோம். பரிசுத்த ஆவியானவரே, கிருபையாக அறிவைக் கொடுத்து எங்களை நீதிமான்களாக்கி, எங்களுடைய பாவ மன்னிப்பை உறுதி செய்தபடியால் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியதற்காக திரியேக இறைவனே உமக்கு நன்றி சொல்கிறோம். எங்களுடைய வாழ்க்கைக்கு நீர் காண்பித்த அந்த மாபெரும் கிருபைக்கு நன்றியுள்ளவர்களாக வாழும்படி நீர் எங்களுக்குப் போதித்து, எங்களைப் பரிசுத்தப்படுத்தும்.
கேள்வி:
- விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதலில் இருக்கும் முதன்மையான கருத்துக்கள் யாவை?