Previous Lesson -- Next Lesson
அ) மற்றவனை நியாயந்தீர்க்கிறவன் தன்னையே நியாயந்தீர்க்கிறான் (ரோமர் 2:1-11)
ரோமர் 2:6-11
6 தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். 7 சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். 8 சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும். 9 முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும். 10 முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும். 11 தேவனிடத்தில் பட்சபாதமில்லை.
அருமையான சகோதரனே, இறைவனுடைய நியாயத்தீர்ப்பின் நியமங்களை நீ அறிந்திருக்கிறாயா? எல்லா மனிதர்களும் முக்கியமான காலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஞானமுள்ளவர்கள் மட்டுமே அந்நேரத்திற்காக தங்களை ஆயத்தப்படுத்துகிறார்கள். கிருபையின் அப்போஸ்தலன் நமக்கு தெளிவாக இறுதி நியாயத்தீர்ப்பைக் குறித்து வெளிப்படுத்துகிறான். நம்மை நியாயம் தீர்க்கும் போது நம்முடைய நன்மைகள் மற்றும் தீய செயல்கள் சோதித்துப் பார்க்கப்படும். மத்தேயு 25-ம் அதிகாரத்தில் கிறிஸ்து இக்காரியத்தை தெளிவுபடுத்துகிறார். இறைவனுடைய பார்வையில் நாம் எளியோருக்கு, புறக்கணிக்கப்பட்டோருக்கு என்ன செய்தோம் என்பது வெளிப்படுத்தப்படும். கிறிஸ்துவானவர் உபவாசம், விண்ணப்பித்தல், புனித பயணம் செல்லுதல், நற்செயல்கள் செய்தல் இவைகளைப் பற்றி குறிப்பிடாமல், தேவையுள்ளோருக்கு காண்பிக்கப்படும் இரக்கம் குறித்து பேசுகிறார்.
உங்கள் இருதயம் கடினமாக அல்லது மென்மையாக மற்றும் பெருமையுடன் அல்லது இரக்கத்துடன் தோற்றமளித்தாலும், உங்களுடைய அன்பின் இரகசிய செயல்கள் வெளிப்படுத்தப்படும். எளியவர் மற்றும் சிறியோர் மீது ஏளன இகழ்ச்சி மற்றும் வெறுப்பைக் காண்பிக்கிற ஓர் கல்வியறிவு பெற்ற மனிதனாக நீ இருக்கிறாயா? தகுதியிழந்தோர், அருவருக்கப்படுவோர், விதவைகள் மற்றும் பெற்றோரை இழந்தோர் மீது கிறிஸ்துவின் அன்பை நீங்கள் காண்பிக்கிறீர்களா? உனது ஆராதனை, பக்திக்குரிய வெளிப்பிரகாரமான உறுதியான நடவடிக்கைகளினால் அல்ல, உங்கள் அன்பின் செயல்களின் நிமித்தம் உங்களுக்கும் பலன் கிடைக்கும்.
நம்முடைய இருதயங்களில் இறைவனுடைய அன்பு ஊற்றப்படுகின்ற வழியை பவுல் காண்பிக்கிறான். உலக ஐசுவரியங்கள் மற்றும் அழியக்கூடிய மகிமை இவைகளுக்குப் பின்பு ஓடாமல் இறைவனுடைய மகிமையை நோக்கி அவன் தன் மனதைச் செலுத்துகிறான். அவன் இறைவனுக்கு அருகில் வருகிறான். அவருடைய இரக்கத்தினால் மாற்றம் பெறுகிறான். இறைவனுடைய மகிமையைத் தேடுபவன் தனது சொந்த பெருமை நொறுக்கப்படுவதை பார்க்கிறான். அவன் தன்னை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. இப்படி மனந்திரும்புகிற நபர் இறைவனுடைய மன்னிப்பிற்கு தனது இருதயத்தைத் திறக்கிறார். அவருடைய இரக்கத்தை உறுதியான கேடகம் போல் பிடித்துக் கொள்கிறான். தனது அழியும் தன்மையை உணரும் ஒவ்வொருவனும் நித்திய வாழ்வை அடையும்படி வாஞ்சிக்கிறான். அதை விசுவாசத்துடன் ஏற்றுக்கொள்கிறான். நித்திய ஆவியானவரின் திட்டங்களில் பங்குகொள்கிறான். ஆகவே கவனமாயிருங்கள். உங்கள் செயல்களினால் நீங்கள் இரட்சிக்கப்படவில்லை. நீங்கள் இறைவனுக்காக ஏங்கியபோது உங்கள் பலவீனத்தில், அவருடைய பெலன் வெளிப்பட்டது. அவருடன் அன்பின் நோக்கங்களை நீங்கள் உணரும்படி, உங்கள் ஆத்துமாவை அவருடைய அன்பு மேற்கொண்டது. நீங்கள் இறைவனைத் தேடி என்றென்றும் வாழுவீர்களா?
கோபாக்கினையின் பாத்திரமாக முன்குறிக்கப்பட்டிருப்பதால் அல்லது அழிவுக்கு ஆயத்தமாயிருப்பதால் தீமையுள்ள ஒருவன், தீமையைச் செய்கிறது கிடையாது. மாறாக அவனுக்கு சத்தியத்திற்கு கீழ்ப்படியும் விருப்பம் இல்லையென்பதால் அவன் அப்படிச் செய்கிறான். தீய செயல்கள் திடீரென்று செய்யப்படுகிறவைகள் அல்ல. அவைகள் நீண்ட, தவறான காரியங்களின் விளைவு ஆகும். நம்முடைய மனச்சாட்சிக்கு பொருந்தாத அனைத்து செயல்களையும் எதிர்க்கிறது. அது நம்மை கண்டிக்கிறது. இறைவனின் பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள் என்று எச்சரிக்கின்றது. இருப்பினும் தன்னை கடினப்படுத்துகிற ஒருவன், இறைவனின் சத்தத்தை புறக்கணிக்கிறான். கீழ்ப்படியாமையின் ஆவிக்கு தன்னை ஒப்புக்கொடுத்து, தனது குற்றச்செயலை பயமின்றி செய்கிறான். அவனுடைய மனச்சாட்சியை கொன்றுவிடுகிறான். நம்மைச் சுற்றியுள்ள சோதனைகளுக்கு நம்மை ஒப்புக்கொடுப்பதின் விளைவே நம்முடைய தீய செயல்கள் ஆகும். மற்றும் தீய திரைப்படங்கள், புத்தகங்கள், நண்பர்கள், நமது இருதயத்து சிந்தனைகள் தீமை செய்ய நம்மை கவர்கின்றன.
இறைவனின் ஆவிக்கு எதிர்த்து நிற்கும் ஒவ்வொருவனும் நியாயத்தீர்ப்பை அடைகிறான். இறைவனுடைய ஈவுக்கு எதிராக தனது இருதயத்தை அடைக்கிறான். உன்னதமானவரை அவமதிக்கிறான். அவருடைய கோபத்தைத் தூண்டுகிறான். எல்லா கீழ்ப்படியாமையின் மக்கள் மீதும் நிச்சயமாக இறைவனுடைய தண்டனைகள் வந்து விழும். அவர்கள் துன்பப்பட்டு, பாடுபடுபவார்கள். நீ கிறிஸ்துவின் வல்லமையில் அன்புடன் வாழுகின்றாயா? அல்லது நீதியுள்ள நியாயாதிபதியின் கோபத்தில் நீ மூழ்கிப் போகிறாயா? இந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல் நீ தப்பிக்க இயலாது. ஆகவே ஆயத்தப்படு. நல்லவர்கள் மற்றும் தீயவர்கள் என்று பிரிக்கப்படுகின்ற நாளுக்காக உன்னை ஆயத்தப்படுத்து.
தனது வாக்கியத்தில் முதலாவது யூதர்கள் மீது நியாயத்தீர்ப்பு வரும் என்று பவுல் கூறுகிறான். பழைய உடன்படிக்கை அவர்கள் மீது மிகப்பெரிய பொறுப்பை சுமத்தியது என்று பவுல் குறிப்பிடுகிறான். முதலாவது கணக்கு செலுத்தும்படி இறைவன் அவர்களை அழைக்கிறார். பரிசுத்த ஆவியின் செயல்பாட்டினால் இறைவனிடம் வந்த யூதர்கள் ஒவ்வொருவரும் மகிமையுள்ளவரின் ஒளியோடு பிரகாசிப்பார்கள். ஆனால் தங்கள் இருதயத்தை கடினப்படுத்திய மக்கள் மற்றவர்களுக்கு முன்பாக நரகத்தில் சென்றடைவார்கள். ஏனெனில் அவனுக்குள் இருக்கும் கீழ்ப்படியாமையின் ஆவியை மாற்றியமைக்க இறைவனின் ஆவியானவரை அவன் அனுமதிக்கவில்லை.
கிரேக்கர்கள், மங்கோலியர்கள், நீக்ரோக்கள் போன்ற அனைத்து இனமக்களுக்கும் இறைவன் அருகே செல்ல உரிமை உண்டு. ஏனெனில் எல்லா மனிதர்களையும் படைத்தவர் அவர். அவர் இன பாகுபாட்டை ஒருபோதும் ஆதரிப்பதில்லை. அவருக்கு முன்பாக அனைவரும் சமமாக இருக்கிறார்கள். அவருடைய அழகான மகிமையின் முன்பு ஒரு பணக்காரனின் ஒளி கூட மங்கிப்போய்விடும். நாம் அனைவரும் படைத்தவர் முன்பு ஒன்றுமில்லை. பிஷப்மார்கள், பெரிய தலைவர்கள், நட்சத்திரங்கள் இவர்களை விட தங்கள் வீடுகளில் பணி செய்யும் தாய்மார்கள் மற்றும் எளிய சகோதரர்கள், கிறிஸ்துவின் ஆவியில் அதிகமாய் பிரகாசிக்கிறார்கள்.
இறைவன் அவருடைய அன்பின் அளவைக் கொண்டு நம்மை அளக்கிறார். இறைவனின் அன்பில் தன்னை மாற்றியமைக்க எவன் அனுமதிக்கிறானோ, அவன் ஏற்றுக்கொள்ளப்படுகிறான். மற்றவர்களைவிட தன்னை அதிகம் நேசித்து, தன் இருதயத்தை கடினப்படுத்துகிறவன் இறைவனை விட்டு விலகிப் போகிறான். ஆண்டவர் நீதி, உண்மையுள்ளவர். அவரிடத்தில் பட்சபாதம் இல்லை.
இறைவனைப் போல ஒருவனும் நீதிமான் இல்லை, இரக்கமுள்ளவன் இல்லை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அவரைத் தேடும் ஒவ்வொருவரையும் பரலோகப் பிதா தமது வல்லமையினால் மாற்றி அமைக்கிறார். அவருடைய அன்பினால் அவன் நீதிமான் ஆகிறான். ஆனால் இறைவனுடைய இரக்கத்தினால் ஏற்படும் அப்படிப்பட்ட மாற்றம் உடனடியாக நிகழும் என்று நினைக்காதீர்கள். பெருமையின் மீதான வெற்றியை பெறுவதற்கு காலம் தேவை. ஆனால் வீழ்ச்சி அடைந்த மக்களுக்கு வேலைக்காரர்களாக இருக்க வெகுசிலருக்கே விருப்பம். எனவேதான் இயேசு நமக்கு முன்பாக ஆயக்காரரோடும், விபச்சாரக்காரரோடும் பந்தியிருந்தார். நாம் நம்முடைய கடின இருதயத்தை விட்டுவிட்டு, புதிய இருதயத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இறைவன் பாவிகளை நேசிப்பதைப் போல, நாம் அவர்களை நேசிக்க வேண்டும்.
நீடிய பொறுமையுடன் அன்பின் செயல்களில் நிலைத்திருப்போருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து உனக்குத் தெரியுமா? இறைவன் தம்முடைய சொந்த மகிமையை, அவருடைய கிருபையின் ஆவிக்கு தங்களை ஒப்புக்கொடுக்கும் அனைவருக்கும் உடுத்துவிப்பார். ஆகவே மனிதனுடைய நித்திய முடிவு என்பது அவருடைய முதல் திட்டத்திற்கு சற்றும் குறையாத ஒன்றாகும். அவர் மனிதனை தனது சாயலில் படைத்தார். அவருடைய மகிமை மற்றும் குணாதிசயங்களை இந்த மனித சரீரத்தில் அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். தகுதியற்றோர் மீது காண்பிக்கப்படும் இரக்கத்தினால், அவர்களை உன்னதமானவர் கனப்படுத்துகிறார். அவருடைய நீதியின் நிமித்தம் தள்ளப்பட்டோர் மற்றும் புறக்கணிக்கப்பட்டோர் இருதயங்களில் அவருடைய சமாதானம் தங்கியுள்ளது.
இறைவன் மகிழ்ச்சியுடன், அவருடைய மகிமையில் மறுரூபப்படுத்தப்பட்ட சந்தோஷமுள்ள இருதயத்தோர், பரிசுத்த ஆவியின் செயலுக்கு தங்கள் இருதயத்தை கடினப்படுத்தியோர் ஆகியோர் பிரிக்கப்படுகின்ற நாளாக நியாயத்தீர்ப்பின் முடிவு இருக்கும். தங்கள் இருதயத்தை கடினப்படுத்துவோர் நரகத்தின் நித்திய ஆக்கினைக்கு விரைந்து செல்வார்கள். ஆகவே வஞ்சிக்கப்படாதிருங்கள். இறைவன் தம்மை பரியாசம்பண்ண வொட்டார். மனிதன் எதை விதைக்கிறானோ, அவன் அதை அறுப்பான்.
விண்ணப்பம்: ஆண்டவரே, என்னுடைய அன்பு குறைவானது. என்னுடைய சுயநலம் பெரியது. நான் உமக்கு முன்பாக அசுத்தமுள்ளவனாக இருக்கிறேன். என்னுடைய பாவங்களை எனக்கு மன்னியும். உமது அன்பின் செயல்களை கவனிக்கும்படி என் கண்களை திறந்தருளும். தியாகமுள்ள வாழ்வு மற்றும் நற்செயல்களுக்கு நேராய் என்னை வழிநடத்தும். என்னிடத்தில் நன்மை ஏதும் இல்லை. என்னை காப்பாற்றும். எனது இருதயத்தை உமது அன்பினால் நிரப்பும். அவமதிக்கப்படுவோர் மற்றும் பாவிகளை நேசிக்க உதவும். அவர்களை ஆசீர்வதியும். நீர் எவ்விதம் விலகிச் செல்வோரை காப்பாற்றுகிறீரோ, அவ்விதம் நானும் இருக்க உதவும்.
கேள்வி:
- இறுதி நியாயத்தீர்ப்பில் உள்ள இறை நியதிகள் என்ன?