Previous Lesson -- Next Lesson
1. தேசங்களுக்கு எதிரான இறைவனின் கோபம் வெளிப்படுத்தப்படுகிறது (ரோமர் 1:18-32)
ரோமர் 1:24-25
24 இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத் தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். 25 தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.
இறைவனுடைய கோபாக்கினையின் முதல் நிலையை வசனம் 24 காண்பிக்கிறது. அவரை அறிந்தும், அவரைக் கனப்படுத்தாதவர்களை பரிசுத்தமுள்ள நியாயதிபதி நியாயந்தீர்க்கிறார். அவர்களுடைய இருதயங்களின் இச்சைகளில் அவர்கள் விழுந்துபோகும்படி செய்கிறார். அவர்களுடைய கீழ்ப்படியாமையின் நிமித்தம் அவர்கள் ஆவிக்குரிய குருடர்களாக மாறுகிறார்கள். இந்த பிரபஞ்சத்தின் மையமாக இறைவன் இருப்பதை அவர்கள் காண்கிறதில்லை. தங்களை மையமாகக் கொண்டு வாழ்கிறார்கள். இறைவனை நேசிக்காதவர்கள் மத்தியில் தான் சுய பெருமை தோன்றுகின்றது. இவ்விதமாக அவர்களது வாழ்வின் பாதை மாறுகிறது. அவர்கள் வாழ்வு முடிகின்றது. அவர்கள் இறை ஆவியினால் ஆளப்படாமல் சுய ஆவியினால் ஆளப்படுகிறார்கள். அவர்கள் உலக ஆசைகள் மற்றும் இச்சைகளுக்காக வாழ்கிறார்கள். இறைவனுக்கு முன்பு தங்களுக்கு இருக்கும் பொறுப்பை மறந்து, அவரை மறுதலிக்கிறார்கள்.
மனிதனுடைய சுயசித்தம் அவனுடைய இச்சையினால் அடிமைப்பட்டுக் கிடப்பதால், பாவம் என்பது கொள்கையில் மட்டுமல்ல, நடைமுறையிலும் தோன்றுகின்றது. பெரும்பாலும் எல்லாப் பாவங்களும் சரீரத்திற்கு வெளியே செய்யப்படுகிறது. அதனால் அது பாழாக்கப்படுகிறது. எல்லா வகையான அசுத்தங்களும் உங்கள் மனதில் ஏற்படுகிறது. பாவத்தை செய்வதின் மூலம், உனக்குள் இருக்கும் இறைவனின் சாயலை நீ கறைபடுத்துகிறாய். உனது சரீரம் பரிசுத்த ஆவியின் ஆலயமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. உனது சரீரத்திற்கு எதிரான எந்தவொரு பாவமும் பரிசுத்தஆவியின் ஆலயத்தை தீட்டுப்படுத்துகிற ஓர் செயலாகும். இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட சரீரத்தை கனவீனப்படுத்துகிற, பாழ்ப்படுத்துகிற ஓர் செயலாகும்.
அசுத்தத்திற்கு நேராக சில படிநிலைகள் உண்டு. மனிதன் இறைவனை விட்டு விலகும்போது, சாதாரண நிலையில் இருந்து, அசாதாரண நிலையில் வீழ்ந்து போகிறான். சட்டவிரோதமானதை சட்டப்பூர்வமாகக் கருதுகிறான். இறைவனுடைய சத்தியத்தை திரித்து பேசுவது தான் மனச்சாட்சியற்ற பாவ நிலைக்கு ஓர் அறிமுகம் ஆகும். அவதூறு பண்ணுகிறவன் மற்றவர்களை பாழ்படுத்துகிறான். அவன் தனது சொந்த இச்சைகளுக்கு அடிமைப்பட்டிருக்கிறான். பாவ சோதனையின் கடல் என்பது எவ்வளவு ஆழமானது, அது சரீரத்தையும், ஆத்துமாவையும் கெடுக்கிறது. இறைவனுடைய ஆவியற்ற வாழ்வில் இருந்து சாபங்கள் புறப்படுகின்றன. பாவம் என்பது ஆரம்பத்தில் இனிமையாக, இன்பமாகத் தோன்றும். ஆனால் அதைச் செய்யும் போது நமக்கு வேதனை தான் மிஞ்சும். நம்மை வெட்கப்படுத்தும். இறுதி நியாயத்தீர்ப்பின் போது அவர்களுடைய அருவருப்புகள் வெளியரங்கமாவதினால், அநேகர் வெட்கித் தலை குனிவார்கள்.
பாவத்தின் சாராம்சம் என்பது நெறிபிறழ்வு அல்ல. அது தவறான ஆராதனை ஆகும். இறைவனை விட்டு மனிதன் விலகும்போது, உள்ளான நிலையில் பாதிக்கப்படுகிறான். அவன் எந்தவொரு நோக்கமும் இல்லாமல் வாழ ஆரம்பிக்கிறான். இறைவனை அறியாதவர்கள் தங்களுக்கென்று விக்கிரகங்களை உருவாக்கிக் கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். ஏனெனில் அவர்களால் அவைகள் இல்லாமல் வாழ இயலாது. மனிதர்களின் இந்த விக்கிரகங்கள் பொய்யானவை, அழியக்கூடியவை, கையால் செய்யப்பட்டவை. வாழ்விற்கும் நித்தியத்திற்கும் இடையே உள்ள பாதையை மனிதன் தீர்மானிக்க வேண்டும். அப்போது அவன் பணம், ஆவிகள், புத்தகங்கள் அல்லது மக்களுக்கு அடிமைப்படாதிருப்பான்.
நம்முடைய துதிகளையும், கனத்தையும் பெற்றுக்கொள்ள தகுதியுடையவர் ஒருவர் இருக்கிறார். அவரே சர்வவல்லமையுள்ளவர். அவரில்லாமல் எதுவும் நிகழாது. அவர் சர்வவியாபகர், சர்வஞானி. தனது படைப்புகளிடம் இரக்கம் காண்பிப்பவர். அவருடைய துதி எப்போதும் நம்முடைய வாயிலிருக்கட்டும். அவர் உன்னதமானவர், அழியாதவர். அவரில் எவ்வளவேனும் அநீதியில்லை. அவருடைய அன்பு காலைதோறும் புதியதாயிருக்கும். அவருடைய உண்மை பெரியது. அவர் ஒருபோதும் மரிப்பதில்லை அல்லது மாறுவதில்லை. தம்முடைய நீடிய பொறுமையினால் அவர் நம்மை காக்கிறார். மனிதர்கள் தங்களுடைய சிருஷ்டிகரிடம் திரும்பும்போது, அவர்கள் வாழ்வின் அஸ்திபாரத்தை கண்டு கொள்கிறார்கள். அவர்கள் வாழ்வு அர்த்தம் பெறுகிறது. அவர்களது நம்பிக்கைக்கு ஒரு நோக்கம் கிடைக்கிறது.
சிருஷ்டிகர் என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்பதை “ஆமென்” என்ற வார்த்தையின் மூலம் பவுல் தனது வாக்கியத்தை முத்திரையிடுகிறான். அவனுடைய செய்தியானது விண்ணப்பமாக மற்றும் சாட்சியாக இருந்தது. “ஆமென்” என்ற வார்த்தையின் பொருள் “அப்படியே ஆகக்கடவது”. உண்மையாகவே, நிச்சயமாகவே, அதிக உறுதியாக என்று பொருள்படும். இறைவன் ஒப்பிடப்பட முடியாதவர். நமது சிந்தனைகள், திட்டங்களில் இறைவன் முதன்மையான நோக்கமாக காணப்பட வேண்டும். நமது வாழ்வின் செயல்பாடுகள் நமது மனதின் எண்ணங்கள் ஆரோக்கியமானதாக, வலிமையுள்ளதாக இருக்க வேண்டும். இறைவன் இல்லாத உலகம் ஒரு குட்டி நரகம். இங்கே தங்களுடைய இருதயங்களின் இச்சைகளுக்கு ஒப்புக்கொடுத்து, வெட்கக்கேடான அசுத்தங்களால் தங்களை கறைப்படுத்துகிறவர்கள் இருக்கிறார்கள்.
விண்ணப்பம்: நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். பரிசுத்தமுள்ள இறைவனே, நீர் நித்தியமானவர், தூய்மையானவர், நீதியுள்ளவர். நீர் எங்களை சிறப்பாகப் படைத்தீர். உமது இரக்கத்தினால் நீர் எங்களை பாதுகாக்கிறீர். நாங்கள் உம்மை நேசிக்கிறோம். நாங்கள் உமக்காக வாழும்படி, எங்கள் இருதயங்களை உம் பக்கம் இழுத்துக்கொள்ளும். எல்லா நேரங்களிலும் நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். உம்மை விட்டு விலகிப் போனதற்காக எங்களை மன்னியும். எங்கள் அசுத்தங்களில் இருந்து எங்களை தூய்மைப்படுத்தும். எங்கள் சொந்த விக்கிரகங்களில் இருந்து எங்களை விடுவியும். இந்த உலகில் நாங்கள் உம்மைத்தவிர வேறெதையும் நேசிக்காமல் இருக்க உதவும்.
கேள்வி:
- ஒழுங்கற்ற இறை ஆராதனைகளின் விளைவுகள் என்ன?