Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 112 (Paul Transferred From Jerusalem to Caesarea)
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
உ - எருசலேமிலும் செசரியாவிலும் பவுல் சிறையிலிடப்படுதல் (அப்போஸ்தலர் 21:15 - 26:32)

8. பவுல் எருசலேமிலிருந்த செசரியாவிற்கு மாற்றப்படுதல் (அப்போஸ்தலர் 23:23-35)


அப்போஸ்தலர் 23:23-35
23 பின்பு அவன் நூற்றுக்கு அதிபதிகளில் இரண்டுபேரை அழைத்து, செசரியா பட்டணத்திற்குப் போகும்படி இருநூறு காலாட்களையும், எழுபது குதிரை வீரரையும், இருநூறு ஈட்டிக்காரரையும், இராத்திரியில் மூன்றாம்மணி வேளையிலே, ஆயத்தம்பண்ணுங்களென்றும்; 24 பவுலை ஏற்றி, தேசாதிபதியாகிய பேலிக்ஸினிடத்திற்குப் பத்திரமாய்க் கொண்டுபோகும்படிக்குக் குதிரைகளை ஆயத்தப்படுத்துங்களென்றும் சொன்னதுமன்றி, 25 ஒரு நிருபத்தையும் எழுதினான்; அதின் விவரமாவது:26 கனம்பொருந்திய தேசாதிபதியாகிய பேலிக்ஸ் என்பவருக்குக் கிலவுதியுலீசியா வாழ்த்துதல் சொல்லி அறிவிக்கிறது என்னவென்றால்: 27 இந்த மனுஷனை யூதர் பிடித்துக் கொலைசெய்யப்போகிற சமயத்தில், நான் போர்ச்சேவகரோடே கூடப்போய், இவன் ரோமனென்று அறிந்து, இவனை விடுவித்தேன். 28 அவர்கள் இவன்மேல் சாட்டின குற்றத்தை நான் அறியவேண்டுமென்று இவனை அவர்கள் ஆலோசனைச் சங்கத்துக்குமுன் கொண்டுபோனேன். 29 இவன் அவர்களுடைய வேதத்திற்கடுத்த விஷயங்களைக்குறித்துக் குற்றஞ்சாட்டப்பட்டவனென்று விளங்கினதேயல்லாமல், மரணத்துக்காவது விலங்குக்காவது ஏற்ற குற்றம் யாதொன்றும் இவனிடத்தில் இல்லையென்று கண்டறிந்தேன். 30 யூதர்கள் இவனுக்கு விரோதமாய்ச் சர்ப்பனையான யோசனை செய்கிறார்களென்று எனக்குத் தெரியவந்தபோது, உடனே இவனை உம்மிடத்திற்கு அனுப்பினேன்; குற்றஞ்சாட்டுகிறவர்களும் இவனுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற காரியங்களை உமக்கு முன்பாகவந்து சொல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டேன். சுகமாயிருப்பீராக, என்றெழுதினான். 31 போர்ச்சேவகர் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே, பவுலைக் கூட்டிக்கொண்டு, இராத்திரியிலே அந்திப்பத்திரி ஊருக்குப் போய், 32 மறுநாளில் குதிரைவீரரை அவனுடனேகூடப் போகும்படி அனுப்பிவிட்டு, தாங்கள் கோட்டைக்குத் திரும்பினார்கள். 33 அவர்கள் செசரியா பட்டணத்தில் சேர்ந்து, நிருபத்தைத் தேசாதிபதியினிடத்தில் கொடுத்து, பவுலையும் அவன் முன்பாக நிறுத்தினார்கள். 34 தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது: 35 உன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்களும் வந்திருக்கும்போது உன் காரியத்தைத் திட்டமாய்க் கேட்பேனென்று சொல்லி, ஏரோதின் அரமனையிலே அவனைக் காவல்பண்ணும்படி கட்டளையிட்டான்.

பவுல் தமஸ்குவிற்குச் செல்லும் வழியில், ஆண்டவரைச் சந்தித்த தருணத்தில், குதிரையிலிருந்து விழுந்ததிலிருந்து தற்போதைய நிகழ்வுவரை அவர் குதிரையில் பயணிப்பதாக நாம் வாசிப்பதில்லை. இப்போது அவர் இரவின் நடுவில் குதிரையில் எழுபது குதிரை வீரர்களும் இருநூறு காலாட்படை வீரர்களும் அவருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பாகச் செல்ல வேகமாகப் பயணித்துக்கொண்டிருக்கிறார். இந்தக் காட்சி போர், தாக்குதல், ஆபத்துக்கள் ஆகியவற்றைக் குறிப்பதாக உள்ளது. நீண்டகாலமாகவே மக்கள் நடுவில் ஒரு பெரிய கலகம் உருவாகும் என்று ரோமர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு ரோமர்களுடைய ஆட்சியை பலஸ்தீனாவில் இருந்த மக்கள் எதிர்த்தார்கள். அப்படிப்பட்ட ஒரு கிளர்ச்சி கி.பி. 69 மற்றும் 70-ல் நடைபெற்றது. அதனால் யூத மக்கள் கொடூரமாகக் கொன்றழிக்கப்பட்டு, மீதமுள்ளவர்கள் நாடற்று இரண்டாயிரம் ஆண்டுகள் அலைந்து திரிபவர்களாக உலகெங்கிலும் சிதறடிக்கப்பட்டார்கள்.

எழுபது நாட்கள் பயணம் செய்து எழுபது குதிரைவீரர்களால் பாதுகாப்புடன் செசரியாவிற்குக் கொண்டுவரப்பட்ட கைதியாகிய பவுல் ஒரு ரோமக் குடிமகன் என்று தளபதியினால் எழுதப்பட்ட கடிதத்துடன் ஆளுனரிடத்தில் ஒப்படைக்கப்பட்டார். அந்தக் கடிதத்திலிருந்த கூற்று சூழ்நிலையைத் தலைகீழாக மாற்றியமைத்தது. ஏனெனில் ஒரு ரோமக் குடிமகன் யூதர்களால் கொலைசெய்யப்பட இருந்த தருணத்தில் தளபதி தலையிட்டு இத்தனை பலத்த பாதுகாப்புடன் அந்தக் கைதி அனுப்பப்பட்டிருக்கிறார் என்பதாக பிரச்சனை மாற்றமடைந்தது.

மேலும் அக்கடிதத்தில் பவுல் ஒரு குற்றவாளி அல்ல என்பதும் அவர் ரோமச்சட்டத்திற்கு எதிராக எதுவும் செய்யவில்லை என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு யூதர்களுடைய நீதிச்சட்டத்தைப் பற்றியதாகவும், அது நீதிச்சட்டத்தையும் தீர்க்கதரிசிகளையும் புரிந்துகொள்ளவதில் ஏற்பட்ட கருத்துவேற்றுமையினால் உருவானதென்றும் தெரிந்துகொண்டபோது அவருக்கு மரண தண்டனை கொடுப்பதற்கான நியாயமான காரணம் எதையும் தளபதியால் காணமுடியவில்லை. இப்படிப்பட்ட பிரச்சனைகள் வெறுப்பையும் கெட்ட எண்ணத்தையும் மக்களுடைய மனதின் ஆழத்தில் ஏற்படுத்தக்கூடியது. அதன் காரணமாகத்தான் அந்த நாற்பது பேரும் பவுலைக் கொல்ல சதி செய்தார்கள் என்பதை அந்தத் தளபதி அறிந்துகொண்டார். அதனால்தான் அவர் சமய உணர்வுகளும் குழப்பங்களும் அதிகம் நிறைந்து காணப்பட்ட யூதர்களுடைய கலாச்சாரத்தின் மையமாகிய எருசலேமிலிருந்து வெகுதூரத்திலிருந்த ரோம நகரமாகிய செசரியாவிற்கு பவுலை அனுப்பினார். குற்றஞ்சாட்டப்பட்ட பவுலையும் குற்றஞ்சாட்டுகிறவர்களையும் ரோமர்களுடைய நிர்வாகத்திற்கும் ஒழுங்கிற்கும் பேர்போன நகரத்தின் ஆளுனரினால் விசாரிக்கப்படுவதற்கு விரைவாக அனுப்பிவைத்தார் அந்தத் தளபதி.

ஆளுனராகிய பெலிக்ஸ் பவுல் சிலிசியாவில் உள்ள தர்சுப் பட்டணத்தைச் சேர்ந்தவர் என்று அறிந்தபோது அவரை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று முடிவுசெய்தார். ஏனெனில் வெகுதூரத்திலுள்ள தர்சு பட்டணத்திலிருந்து வரும் ஒருவருக்கு யூதர்களுடைய நீதிச்சட்டத்தையும் வழக்கங்களையும் பற்றிய இரகசியங்கள் தெரிந்திருக்காது என்று அவர் கருதினார். ஆளுனர் தான் தங்கியிருந்த ஏரோதின் மாளிகையிலேயே பவுலையும் சிறைவைத்தார். பவுலை மிகுந்த பாதுகாப்பான இடத்தில் அல்லது முற்றத்தில் சிறைவைப்பதன் மூலமாக எருசலேமிலிருந்த அவரைக் குற்றஞ்சாட்டும்படி வந்திருந்த நாற்பது பேரும் பவுலிடத்திற்கு இரகசியமாக வந்துவிடாதிருக்க அவர் யோசித்திருக்கலாம்.

இந்தக் காரியங்களைத்தான் பவுல் ரோமருக்கான தன்னுடைய கடிதத்தில் எழுதுகிறார். யூதேயாவிலுள்ள அவிசுவாசிகளுடைய கரங்களிலிருந்து தான் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்கள் தன்னுடைய ஊழியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ரோம திருச்சபை மக்களைத் தான் சந்திப்பதால் அவர் புத்துணர்வு அடையும்படி அவர்களிடத்தில் வந்து அவர்களைக் கண்டு மகிழ்வுற வேண்டும் என்றும் தனக்காக விண்ணப்பம் செய்யும்படி பவுல் வேண்டிக்கொள்கிறார் (ரோமர் 15:30-32). இந்த விண்ணப்பத்திற்கு இறைவன் பதில்கொடுத்தபோதிலும் அந்த பதில் அவருடைய எதிர்பார்ப்பின்படி அமையவில்லை. அவர் ரோமாபுரிக்கு சுதந்திரமான மனிதனாகச் செல்லவில்லை, கிறிஸ்துவின் தூதராக விலங்கிடப்பட்ட நிலையில் அங்கு கொண்டுசெல்லப்பட்டார்.

பவுல் சிறையிலிருந்தபோது என்ன சிந்தித்தார்? அவர் செசரியாவிற்கு வந்து பதினான்கு நாட்கள்தான் ஆகிறது. அவர் பிரசங்கியாகிய பிலிப்புவுடன் ஒரு இரவு தங்கியிருக்கிறார். அதன் பிறகு தீர்க்கதரிசியாகிய அகபு வந்து அவர் சங்கிலிகளையும் பிரச்சனைகளையும் சந்திக்கவிருக்கிறார் என்று பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் அவருக்கு அறிவித்தார். அவர் கோவில் படிகளில் நின்று மூர்க்கமான மக்கள் கூட்டத்திற்கு உயிருள்ள இறைவனைக் குறித்து சாட்சிகொடுத்த பிறகு அன்று இராத்திரியில் ஆண்டவர் அவரைச் சந்தித்தார். மேலும் அக்காலத்து உலகத்தின் மையமாக இருந்த ரோமாபுரியிலும் அவர் தனக்கு சாட்சியிட வேண்டும் என்று ஆண்டவர் அவருக்குச் சொன்னார். இவ்வாறு பவுலுடைய வாழ்வைப் பார்க்கும்போது, அவர் தன்னுடைய சொந்த விருப்பத்தின்படி நடவாமல் இறைவனுடைய சித்தத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்தார். மற்ற மக்களை உற்சாகப்படுத்தும் பணியை எப்போதும் செய்துவந்த பவுலுடைய வாழ்வில் இந்த நாட்கள் மிகவும் கடினமான நாட்களாகவே இருந்திருக்க வேண்டும். அவருடைய உதவியும் திருப்பணியும் தேவைப்பட்ட திருச்சபைகளை விட்டுப் பிரிந்து, சிறையில் அடைந்து கிடந்தார்.

விண்ணப்பம்: இறைவா, எங்களை எங்கள் விருப்பத்திற்கு நடத்தாமல் உம்முடைய சித்தப்படி நடத்துவதற்காக உமக்கு நன்றி. நீர் எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டு, உமக்கு சாட்சியிடும்படி எங்களைக் காக்கிறீர். நாங்கள் எங்கள் சொந்த வழிகளில் நடக்கும்போது எங்களை மன்னித்து, உம்முடைய பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலின்படி நடக்க எங்களுக்கு உதவியருளும். ஆமென்.

கேள்வி:

  1. எப்போது பவுல் செசரியாவிற்கு மாற்றம் செய்யப்பட்டார்? ஏன்?

www.Waters-of-Life.net

Page last modified on March 04, 2014, at 12:37 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)