Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 111 (Christ’s Appearance to Paul; The zealots’ plot against Paul)
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
உ - எருசலேமிலும் செசரியாவிலும் பவுல் சிறையிலிடப்படுதல் (அப்போஸ்தலர் 21:15 - 26:32)

6. இரவு நேரத்தில் பவுலுக்கு கிறிஸ்து காட்சியளித்தல் (அப்போஸ்தலர் 23:11)


அப்போஸ்தலர் 23:11
11 அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று: பவுலே, திடன்கொள்; நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சிகொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும் என்றார்.

பவுலின் மனச்சாட்சி எப்போதும் தூய்மையாகவே இருந்தது. அவன் இரவும், பகலும் இறைவனுக்கு சேவை செய்தான். அவன் எருசலேமில் இருந்த போது மாறுபட்ட நிலையில் நடந்து கொள்ளவில்லை. எந்தவொரு உள்நோக்கத்துடனும் அவன் கலகத்தைத் தூண்டவில்லை. பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு அவன் கீழ்ப்படிந்தான். அவன் மரிப்பதற்கு ஆயத்தமாக இருந்தான். அவனுடைய ஆண்டவர் அவனுக்காக வேறு திட்டங்களை வைத்திருந்தார். அவனுக்கு இரவு நேரத்தில் தனிப்பட்டவிதத்தில் தரிசனமானார். அவர் அவனிடம் இவ்விதம் கூறினார். “பலங்கொண்டிரு, பயப்படாதே, மரணம் உனக்கு நேரிடாது. பசியுள்ள ஓநாய்கள் போல அவர்கள் உன்னைச் சூழ வந்தாலும், உனக்கு சேதம் நேரிடாது. நான் உன்னுடனே இருக்கிறேன். மிருகங்களின் வாய்களை நான் மூடுவேன். நான் உன்னைச் சுற்றிலும் அக்கினி மதிலாய் இருப்பேன்”.

சகோதரர்கள் அனைவரும் பவுலை விட்டு சிதறிப் போனார்கள். ஆசியா மற்றும் ஐரோப்பாவில் இருந்து வந்தவர்களில் ஒருவன் கூட சிறைச்சாலைக்கு பவுலுடன் இணைந்து செல்லவில்லை. ஆயிரக்கணக்கான யூத விசுவாசிகளுடன் யாக்கோபு வந்து அவனுக்கு உதவவில்லை. அவனுக்காக மத்தியஸ்தப் பணி செய்யவோ, ஆறுதல்படுத்தவோ வரவில்லை. அவன் மறைந்துபோகும் நீராவியைப் போல இருந்தான். ஆனாலும் கிறிஸ்து சிறைச்சாலையில் அவனுடன் இருந்தார். அவரே அவனுக்கு ஆறுதல், நீதி, வல்லமை மற்றும் நம்பிக்கையாக இருந்தார். அருமையான சகோதரனே, கிறிஸ்துவின் பிரசன்னம் இல்லாமல், இந்த வாழ்விலும் அல்லது மறுவாழ்விலும் உனக்கு நம்பிக்கையில்லை. பவுல் எழுதியது போல கிறிஸ்துவே மகிமையின் நம்பிக்கையாக உனக்குள் இருக்கிறார். மரணத்திலும், உபவத்திரவங்களிலும் பரிசுத்த ஆவியின் வல்லமை குறித்த நிச்சயம் தொடர்கின்றது. இந்த நிச்சயத்தை துடைத்தெறிய மூளைச்சலவையாலும் முடியாது.

கிறிஸ்து ஆதி முதற்கொண்டு பவுலுக்காக ஆயத்தம்பண்ணியிருந்ததை அவனிடம் தெரிவித்தார். அக்காலத்தில் முழு உலகத்திற்கும் தலைநகரமாக இருந்த ரோமிற்கு அவனை அனுப்புவதன் மூலம் அவனுடைய ஊழியத்திற்கு முடி சூட்டவிரும்பினார். இந்த இலக்கை அடைவதன் மூலம் கிறிஸ்துவின் வெற்றிப் பவனி முழுமையடையும். மிகப்பெரிய தோல்வியின் நேரத்தில், அந்த இரவில் சோர்வுற்றிருந்த போது கிறிஸ்து பவுலை ஆறுதல்படுத்தினார், அவனை உயிர்ப்பித்தார். அவனுடைய ஊழிய பயணத்தின் கடைசி பகுதியை நிறைவேற்றுவான் என்றும், ரோமில் அவருக்காக சாட்சி பகருவான் என்றும் உறுதியளித்தார். அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகம் எருசலேமில் துவக்கி ரோமில் நிறைவுபெறும் அதிசயத்தை இது விளக்குகின்றது. பவுல் அவனது கடைசி பயணத்தில் துவக்கத்தில் நிற்கும் தொடர் ஓட்டக்காரனைப் போல நின்றான். பவுல் சிறைப்பட்டிருந்தான், கட்டப்பட்டிருந்தான். இருப்பினும் அவனது உள்ளான மனிதனில் பவுல் மெய்யாகவே விடுவிக்கப்பட்டிருந்தான். கிறிஸ்துவினால் அவனுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டதைத் தவிர வேறு எதுவும் அவனுக்கு நிகழாது என்பதை அவன் அறிந்திருந்தான். இவ்விதமாக அவன் தன்னை கிறிஸ்துவுக்கு சிறைப்பட்டவன் என்று அழைத்தான். பவுல் சங்கிலிகளால் கட்டப்பட்டு ரோமாபுரியை தனது ஆண்டவருக்காக ஜெயிக்கும்படி சென்றான்.


7. பவுலுக்கு எதிராக செலோத்தே பிரிவினரின் சதித்திட்டம் (அப்போஸ்தலர் 23:12-22)


அப்போஸ்தலர் 23:12-22
12 விடியற்காலமானபோது, யூதரில் சிலர் ஒருமித்து, தாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டார்கள்.13 இப்படிக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டவர்கள் நாற்பதுபேருக்கு அதிகமாயிருந்தார்கள். 14 அவர்கள் பிரதானஆசாரியர்களிடத்திலும் மூப்பர்களிடத்திலும் போய்: நாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் ஒன்றும் புசிப்பதில்லையென்று உறுதியான சபதம்பண்ணிக்கொண்டோம்.15 ஆனபடியினால் நீங்கள் ஆலோசனைச் சங்கத்தாரோடே கூடப்போய், அவனுடைய காரியத்தை அதிக திட்டமாய் விசாரிக்க மனதுள்ளவர்கள்போலச் சேனாதிபதிக்குக் காண்பித்து, அவர் நாளைக்கு அவனை உங்களிடத்தில் கூட்டிக்கொண்டுவரும்படி அவரிடத்தில் கேட்பீர்களாக. அவன் கிட்டவருகிறதற்குள்ளே நாங்கள் அவனைக் கொலைசெய்ய ஆயத்தமாயிருப்போம் என்றார்கள்.16 இந்தச் சர்ப்பனையைப் பவுலினுடைய சகோதரியின் குமாரன் கேள்விப்பட்டு, கோட்டைக்குள்ளே போய், பவுலுக்கு அறிவித்தான்.17 அப்பொழுது பவுல் நூற்றுக்கு அதிபதிகளில் ஒருவனை அழைத்து, இந்த வாலிபனைச் சேனாதிபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோம்; அவரிடத்தில் இவன் அறிவிக்கவேண்டிய ஒரு காரியம் உண்டு என்றான்.18 அந்தப்படியே அவன் இவனைச் சேனாதிபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோய்: காவலில் வைக்கப்பட்டிருக்கிற பவுல் என்னை அழைத்து, உமக்கொரு காரியத்தைச் சொல்லவேண்டுமென்றிருக்கிற இந்த வாலிபனை உம்மிடத்திற்குக் கொண்டுபோகும்படி என்னைக் கேட்டுக்கொண்டான் என்றான்.19 அப்பொழுது சேனாதிபதி அவனுடைய கையைப்பிடித்துத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: நீ என்னிடத்தில் அறிவிக்கவேண்டிய காரியம் என்னவென்று கேட்டான்.20 அதற்கு அவன்: யூதர்கள் பவுலின் காரியத்தை அதிக திட்டமாய் விசாரிக்க மனதுள்ளவர்கள்போல, நீர் நாளைக்கு அவனை ஆலோசனைச் சங்கத்தாரிடத்தில் கொண்டுவரும்படி உம்மை வேண்டிக்கொள்ள உடன்பட்டிருக்கிறார்கள்.21 நீர் அவர்களுக்குச் சம்மதிக்கவேண்டாம்; அவர்களில் நாற்பதுபேருக்கு அதிகமானவர்கள் அவனைக் கொலைசெய்யுமளவும் தாங்கள் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டு, அவனுக்குப் பதிவிருந்து, உம்முடைய உத்தரவுக்காக இப்பொழுது காத்துக்கொண்டு ஆயத்தமாயிருக்கிறார்கள் என்றான்.22 அப்பொழுது சேனாதிபதி: நீ இவைகளை எனக்கு அறிவித்ததாக ஒருவருக்குஞ்சொல்லாதே என்று கட்டளையிட்டு, வாலிபனை அனுப்பிவிட்டான்.

லூக்கா தெயோப்பிலுவிற்கு ஒரு காரியத்தை தெளிவுப்படுத்துகிறான். பவுலுடன் ஆலோசனைச் சங்கம் நடத்திய பேச்சு வார்த்தையில் எவ்விதம் செலோத்தேயினர் அதிருப்தியாக இருந்தார்கள் என்பதை லூக்கா சுட்டிக் காட்டுகிறான். யூத தேசத்தை பாழ்படுத்துபவனாக பவுலை நினைத்து, அவனைக் கொல்ல எத்தனித்தார்கள். ஆலோசனைச் சங்கம் கருதுவதை இவர்கள் இரகசியமாக செயல்படுத்த எண்ணினார்கள். எனவே பவுலுக்கு மிகப்பெரும் ஆபத்து காத்திருந்தது.

ஆனால் கிறிஸ்து ரோம சேனாபதியை பயன்படுத்தி பவுலை பாதுகாத்தார். ரோமனாகிய பவுல் சிறைப்பட்டவனாக, 1000 போர் வீரர்களுக்கு அதிபதியாக இருந்தவனின் கட்டுப்பாட்டில் இருந்தான். இந்த பகுதியில் ரோம அதிகாரி எவ்விதம் பட்சமாய் நடந்து கொண்டான் என்பதை லூக்கா தெரிவிக்கிறான். தான் செய்த தவறை சரிசெய்யும்படியாக அந்த அதிகாரி விரும்பினான்.

லூக்காவின் குறிப்புகளில் இருந்து பவுலுக்கு திருமணமான சகோதரி இருப்பதை அறிந்துகொள்வது சுவாரஸ்யமாக இருக்கிறது. அவள் எருசலேமில் வாழ்ந்தவள், அவளுக்கு பிள்ளைகள் இருந்தார்கள். பவுலின் பெற்றோர்கள், அவர்களது பிள்ளைகள் தர்சு பட்டணத்தில் இருந்து தங்கள் சொந்த ஊரான எருசலேமிற்கு திரும்பியிருக்க வாய்ப்புண்டு. யூதர்களின் வழக்கப்படி, அவர்கள் மரணத்தின் போது தங்கள் பரிசுத்த நிலத்தில் அடக்கம்பண்ணப்பட அவர்கள் விரும்பியிருக்கலாம். பவுலைப் போல அவர்களும் கிறிஸ்தவ விசுவாசிகளா? என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் பக்தி வைராக்கியமிக்க, கலகக்காரர்களான நியாயப்பிரமாணவாதிகளிடம் தொடர்பு உள்ளவனாக பவுல் சகோதரியின் மகன் இருந்தான் என்பதை நாம் காண்கிறோம். பவுலைக் கொல்லும்படியாக செலோத்தேயினர் திட்டம் பண்ணுவதை அவன் கேட்டான். பவுலின் சகோதரி இதைக் கேள்விப்பட்ட போது, அவள் தனது சகோதரனை காப்பாற்ற விரும்பினாள். அவனுக்காக தனது உயிரையே பணயம் வைக்கத் துணிந்தாள். தனது மகனை சிறைச்சாலைக்கு அனுப்பி, பவுலுக்கு இருக்கும் ஆபத்தை தெரிவிக்கும்படி செய்தாள். பவுல் இதைக் கேள்விப்பட்டபோது, தனது சகோதரியின் மகனை சேனாதிபதியிடம் அனுப்பினான். அவன் இந்த சதித்திட்டம் பற்றி கேள்விப்பட்டு வெகுவாய் கோபமுற்றான். பவுலை பாதுகாக்கும்படி உடனடியாக செயல்படத் துவங்கினான். ரோம ஆளுநரின் இருப்பிடமான செசரியாவிற்கு அவனை அனுப்பத் தீர்மானித்தான். இக்காரியத்தில் பவுல் தொடர்ந்து நியாயம் விசாரிக்கப்பட ஏதுவாக இப்படிச் செய்தான்.

யூத ஒற்றுமையை பவுல் அழிக்கின்றான் என்று கருதி முழு எருசலேமும் கொந்தளிப்பாய் இருந்தது. ஆனால் பவுல் ரோம அரசாங்கத்தின் சிறப்பான பாதுகாப்பின் கீழ் இருந்தான். பவுலுக்கு எதிராக செலோத்தேயினர் கொண்டிருந்த பகைமையைத் தூண்டிவிட இந்த ஒரு காரணமே போதுமானதாக இருந்தது. அவர்கள் அவனைக் கொல்லும்படியாக இரகசியமாக திட்டம் பண்ணினார்கள். அதைச் செய்யும் வரை புசிப்பதில்லை என்று சபதம் பண்ணிக் கொண்டார்கள். அவர்கள் நீண்ட நேரம் பசியுடன், தாகத்துடன் இருந்தார்கள். கிறிஸ்து தனது ஊழியக்காரனை ஒரு புதிய பணிக்காக நியமித்து செயல்பட்டுக் கொண்டிருந்தார். உண்மையான விடுதலை என்பது அரசியல் விடுதலை அல்ல என்றும் பாவம், மரணம் மற்றும் இறைவனின் கோபாக்கினையில் இருந்து அடையும் மீட்பு தான் உண்மையான விடுதலை என்பதை அனைவரும் காணும்படியாக அவர் சிறைப்பட்டவனாகிய பவுலை ரோமிற்கு அனுப்பினார். குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் (யோவான் 8:36) கட்டப்பட்டிருந்த சிறைக் கைதிக்குள்ளும் கிறிஸ்து தரும் ஆவிக்குரிய விடுதலையை நாம் பவுல் மூலம் காண்கிறோம். கிறிஸ்து இருதயங்களுக்கு, அதனுடைய இச்சைகள் மற்றும் பெருமையில் இருந்து விடுதலை தருகிறார். நம்மைச் சுற்றியிருக்கும் சூழ்நிலைகள் எப்படியிருந்தாலும் இறைவனுடைய துதிக்கு நேராக நம்மை வழிநடத்துகிறார்.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நீர் உயிருள்ளவர். உமது ஊழியர்கள் சிறைச்சாலையில் இருந்தாலும் அவர்களுக்காக நீர் அக்கறைப்படுகிறீர். உமது கண்மணியைப் போல அவர்களைப் பாதுகாக்கிறீர். எல்லா நேரங்களிலும் உமது பிரசன்னத்தினால் எங்களை பாதுகாத்தருளும். உமது நாமத்தின் நிமித்தம் சிறைப்பட்ட அனைவரையும் ஆறுதல்படுத்தும். அவர்கள் மெய்யான விடுதலையின் மகிழ்ச்சியை அனுபவிக்க அருள்செய்யும்.

கேள்வி:

  1. ஏன் செலோத்தேயினர் பவுலைக் கொல்ல விரும்பினார்கள்? ஏன் பவுல் ரோமிற்கு பயணம் செய்ய வேண்டியதாக இருந்தது?

வினாக்கள் – 7

அருமையான வாசகரே,
நீங்கள் இந்த சிறிய புத்தகம் மூலம் அப்போஸ்தலர் நடபடிகளுக்கான எங்களது விளக்கங்களை படித்துள்ளீர்கள். கீழ்க்காணும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் எழுதுங்கள். நீங்கள் 90 % கேள்விகளுக்கு சரியான பதில் எழுதினால், நாங்கள் இதனுடைய தொடர்ச்சியை உங்களுக்கு அனுப்பி வைப்போம். உங்களது பக்திவிருத்திக்கு இது உதவியாக இருக்கும். தயவுசெய்து உங்களது முழுப்பெயர் மற்றும் முகவரியை தெளிவாக பதில் தாளில் எழுதுங்கள்.

  1. பவுலின் கூட்டாளிகளின் மிகப்பெரிய எண்ணிக்கையின் சிறப்புத் தன்மை என்ன?
  2. பவுலின் மூலமாக வாலிபனை கர்த்தர் உயிரோடு எழுப்பியதின் முக்கியத்துவம் என்ன? துரோவாவில் வாரத்தின் முதலாம் நாள் ஏன் கர்த்தருடைய பந்தி அனுசரிக்கப்பட்டது?
  3. பவுல் ஏன் துரோவாவில் இருந்து எபேசுவிற்கு தனியாக நடந்து சென்றான்?
  4. அப்போஸ்தலனாகிய பவுலின் பிரசங்கத்தின் தன்மை, உள்ளடக்கம் மற்றும் சுருக்கம் என்ன?
  5. ஏன் இறைவனின் மந்தையின் மேய்ப்பர்கள் எல்லா நேரங்களிலும் கவனத்துடன் இருக்க வேண்டும்?
  6. ஏன் வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுப்பதே பாக்கியம்?
  7. தீருவில் பவுலின் அனுபவங்கள் என்ன?
  8. எருசலேமில் தனக்கு காத்திருந்த துன்பங்களுக்காக ஏன் பவுல் பயப்படவில்லை?
  9. தேவாலயத்தில் ஆராதனை செய்யும்படி சுத்திகரிப்பை நிறைவேற்ற வேண்டும் என்று யாக்கோபு ஏன் பவுலிடம் கேட்டான்?
  10. ஏன் யூதர்கள் பவுலைக் கொல்ல விரும்பினார்கள்?
  11. நியாயப்பிரமாணத்தின் மீது வைராக்கியமாய் இருந்த சவுலுக்கு ஆண்டவர் காட்சியளித்ததின் முக்கியத்துவம் என்ன?
  12. இறைவனுடைய சித்தத்தின் சாராம்சம் என்ன?
  13. புறஜாதிகளிடம் இயேசு தன்னை அனுப்பியதாக பவுல் கூறிய போது ஏன் யூதர்கள் கோபத்துடன் கிளர்ந்தெழுந்தார்கள்?
  14. ஏன் பவுல் நியாயப்பிரமாணத்தின் மீது சாராமல், தனது மனச்சாட்சியின் மீது சார்ந்து கொண்டான்? வரப்போகின்ற கிறிஸ்துவின் மீதான விசுவாசம் மற்றும் மரித்தோரின் உயிர்த்தெழுதல் ஆகிய நம்பிக்கைகளின் விளைவாக பரிசேயர்கள் ஏன் பவுல் தண்டிக்கப்படாதிருக்க எண்ணினார்கள்?
  15. ஏன் செலோத்தேயினர் பவுலைக் கொல்ல விரும்பினார்கள்? ஏன் பவுல் ரோமிற்கு பயணம் செய்ய வேண்டியதாக இருந்தது?

அப்போஸ்தலர் நடபடிகளுக்கான தேர்வை நீங்கள் எழுதிமுடிக்க நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம். நீங்கள் நித்திய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள வாஞ்சிக்கிறோம். உங்களது பதில்களுக்காக காத்திருக்கிறோம். உங்களுக்காக விண்ணப்பம் செய்கிறோம். எங்களது முகவரி:

Waters of Life
P.O.Box 600 513
70305 Stuttgart
Germany

Internet: www.waters-of-life.net
Internet: www.waters-of-life.org
e-mail: info@waters-of-life.net

www.Waters-of-Life.net

Page last modified on March 04, 2014, at 12:37 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)