Previous Lesson -- Next Lesson
உ) இயேசு விலாவினில் குத்தப்படுதல் (யோவான் 19:31-37)
யோவான் 19:31-37
31 அந்த நாள் பெரிய ஓய்வு நாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.32 அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் மற்றவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள்.33 அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை.34 ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.35 அதைக் கண்டவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான்.36 அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது.37 அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது.
யூதர்கள் தங்களது நியாயப்பிரமாணத்தின் மேல் கொண்டிருந்த மத வைராக்கியத்தால் மனித உணர்ச்சிகள் அற்று மனம் மரத்துப் போயிருந்தார்கள். சிலுவையில் கொல்லப்பட்டவர்களின் சரீரங்கள் இரவுக்குள்ளாக அகற்றப்பட வேண்டும் என்று மோசேயின் சட்டங்கள் கூறுகிறது. ஆகவே யூதர்கள் இந்த மூன்று பேருக்கும் இதன் படி செய்ய முயற்சித்தார்கள். பண்டிகையின் நேரத்தில் அலங்கோலமாய் காட்சியளித்ததை அவர்கள் வெறுத்தார்கள். அந்த மூன்று பேரின் காலெழும்புகளை முறித்து சீக்கிரமாய் முடிவைக் கொண்டு வரும்படி பிலாத்துவிடம் அவர்கள் கேட்டார்கள். சில நேரங்களில் சிலுவையிலறையப்பட்டவர்கள் மூன்று நாட்கள் வரை உயிருடன் இருப்பதுண்டு. துளையிடப்பட்ட கைகள் மற்றும் கால்களில் இருந்து எப்போதும் அதிகமான இரத்தம் வெளியேறுவதில்லை. ஆகவே கை கால் எலும்புகளை பலமாக அடித்து நொறுக்கும்படி சேவகர்கள் சென்றார்கள்.
இயேசு ஏற்கெனவே மரித்து விட்டதைக் கண்டு சேவகர்கள் அங்கேயே நின்றார்கள். பலத்த அடிகளினால் அவருடைய மென்மையான சரீரம் பலவீனமடைந்திருந்தது. உலகத்தின் மீதான இறைவனின் கோபாக்கினை மற்றும் நமது பாவங்களின் பாரத்தினால் அவரது ஆத்துமா பெருந்துயரம் அடைந்திருந்தது. இறைவனுடன் நம்மை ஒப்புரவாக்கும்படி இயேசு, அவருடைய தீர்மானத்தின் படியே மரித்தார். மத காரியங்களைக் குறித்த அக்கறையுடன் அல்லாமல், யூதர்கள் இயேசு மரித்ததை உறுதிப்படுத்திக் கொள்ளும் ஆர்வத்துடன் இருந்தார்கள். சேவகர்களில் ஒருவன் ஈட்டியை எடுத்து கிறிஸ்துவின் இதயத்தின் அருகில் விலாவிலே குத்தினான். நீரும், இரத்தமும் புறப்பட்டு வந்தது. பெரிய வெள்ளியின் ஆறாம் மணி நேரத்திற்கு முன்பே இயேசு மரித்துவிட்டார் என்பதை அது நிரூபித்தது.
இச் சம்பவம் ஒரு கிறிஸ்தவனுக்கு இறைவனின் வெற்றியை மூன்று விதங்களில் கூறுகிறது. முதலாவது யூதர்கள் சாத்தானால் தூண்டப்பட்டு கிறிஸ்துவின் எலும்புகளை முறித்துப்போட எண்ணினார்கள். அப்போது ஒருவரும் சிலுவைப் பலியை தெய்வீகமான பலி என்று உரிமை கோர முடியாது. பஸ்கா பண்டிகையின் போது பலி செலுத்தப்படும் ஆடு பழுதற்றதாக, இருக்க வேண்டும், எலும்புகள் முறிக்கப்படக் கூடாது. (யாத்திராகமம் 12:46) ஆகவே இறைவன் தனது குமாரனை மரணத்திலும் பாதுகாத்தார். அவர் நியமித்த இறைவனின் ஆட்டுக்குட்டியை ஒருவரும் தவறு என்று மறுத்துப் பேச முடியாது.
இரண்டாவது சேவகர்களால் இயேசு விலாவினில் குத்தப்பட்டது குறித்து சகரியா12:10 வசனம் கூறுகிறது. முப்பது வெள்ளிக் காசுகளுக்கு பழைய ஏற்பாட்டு மக்கள் தங்கள் மேய்ப்பரை மதிப்பிட்டதை தீர்க்கதரிசி காண்கிறார். சகரியா11:13, இருப்பினும் இறைவன் தமது கிருபையின் ஆவியை, விண்ணப்பத்தின் ஆவியை தாவீதின் வீட்டார் மேலும், எருசலேம் நகர மக்கள் மீதும் பொழியப்பண்ணுவார். அப்போது அவர்கள் கண்கள் திறக்கப்படும், சிலுவையில் அறையப்பட்டவரை அறிந்து கொள்வார்கள். அவருடைய பிதாவானவரையும் அறிவார்கள். இந்த ஒளியூட்டப்படுதல் இல்லாமல் அவர்கள் இறைவனை அறிய முடியாது அல்லது அவருடைய இரட்சிப்பை அறிய முடியாது. இறைவனின் ஆவியைப் பெற்றவர்கள் சிலுவையில் அறையப்பட்டவரை காண்பார்கள். நாம் வேதத்தில் வாசிப்பது போல, “தாங்கள் குத்தினவரை அவர்கள் நோக்கிப் பார்த்தார்கள்”.
மூன்றாவதாக நடந்த எல்லாவற்றிற்கும் சாட்சியாக சிலுவையினருகே இறுதி வரை உண்மையாக இருந்த சீஷன் பேசியிருக்கிறான். அவன் சேவகர்களை விட்டு தூரமாய் ஒடிப்போகவில்லை. மரணத்தின் பின்பும் ஆண்டவரை விட்டு விலகவில்லை. அவன் இயேசுவின் விலாவினருகே ஈட்டியால் குத்துவதைப் பார்த்தான். நமக்கு இறைவனின் அன்பைக் குறித்து சாட்சி கொடுக்கிறார். திரியேகத்தில் ஒற்றுமை, நித்திய வாழ்வில் விசுவாசம் வைத்து பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரை பெற்றுக் கொள்வோம்.
விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, நீர் பாவங்கள், சாத்தான் மற்றும் நியாயத்தீர்ப்பு அனைத்தின் மீதும் வெற்றி பெற்றிருக்கிறீர். நீர் உயிருள்ள இறைவன், பிதாவுடன் பரிசுத்த ஆவியானவரால் ஆளுகை செய்கிற அரசர்.
கேள்வி:
- கிறிஸ்துவின் எலும்புகள் முறிக்கப்படவில்லை என்ற உண்மையில் இருந்து, நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?