Previous Lesson -- Next Lesson
ஆ) மக்கள் நடுவிலும் ஆலோசனைச் சங்கத்திலும் இயேசுவைக் குறித்த வேறுபட்ட கருத்துக்கள் (யோவான் 7:14-53)
யோவான் 7:31-32
31 ஜனங்களில் அநேகர் அவரை விசுவாசித்து: கிறிஸ்து வரும்போது, இவர் செய்கிற அற்புதங்களைப்பார்க்கிலும் அதிகம் செய்வாரோ என்றார்கள். 32 ஜனங்கள் அவரைக்குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயரும் பிரதான ஆசாரியரும் சேவகரை அனுப்பினார்கள்.
எருசலேமில் பாதகமான சூழ்நிலை காணப்பட்டபோதிலும் பலர் இயேசுவில் செயல்பட்ட வல்லமையை விசுவாசித்தார்கள். அவர்கள், “இவர் ஒருவேளை மேசியாவாக இருக்கக்கூடும்; அவர் மக்கள் விசுவாசிக்கும்படி பல அற்புத அடையாளங்களைச் செய்கிறாரே. தலைநகரத்தில் கூட இயேசுவைப் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்களே” என்று பேசிக் கொண்டார்கள்.
பரிசேயர்கள் தங்கள் உளவாளிகள் மூலமாக மக்கள் நடுவில் ஒரு உயிர்மீட்சி ஏற்பட்டுள்ளது என்றும் அவருடைய இயக்கம் எருசலேமிலும் வேரூன்றி வருகிறது என்றும் அறிந்தபோது தங்கள் எதிரிகளாகிய ஆசாரியர் மற்றும் சதுசேயருடன் கூட்டுச் சேர்ந்து இயேசுவை எதிர்க்கத் திட்டம் பண்ணினார்கள். ஆலயத்திற்குப் பொறுப்பானவர்களாகிய அவர்கள் மூலம் இயேசுவை தேவாலயத்திற்குள் தடைசெய்ய முயற்சித்தார்கள். ஆசாரியர்கள் இயேசுவைக் கைதுசெய்யும் இந்தக் காரியத்தில் அவர்களுடன் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டார்கள்.
கர்த்தருடைய தூதர்கள் தேவாலயப் பிரகாரங்களில் இருந்து இயேசுவைக் கைது செய்வதற்கான அதிகாரிகளுடைய கட்டளைகளை வேலைக்காரர்கள் நிறைவேற்ற முடியாதபடி தடுத்தார்கள். இந்த வேலைக்காரர்களைப் பார்த்தபோது இயேசு பயந்து ஓடவில்லை, மாறாக தன்னுடைய மகிமையை வெளிப்படுத்தினார். இறைவனுடைய இரட்சிப்பின் திட்டத்தை வெளிப்படுத்தும்படி நற்செய்தியாளன் இதை நமக்காகப் பதிவுசெய்திருக்கிறார்.
யோவான் 7:33-36
33 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: இன்னுங் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன். 34 நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள்; நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரவுங்கூடாது என்றார். 35 அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் காணாதபடிக்கு எங்கே போவார், கிரேக்கருக்குள்ளே சிதறியிருக்கிறவர்களிடத்திற்குப் போய், கிரேக்கருக்கு உபதேசம்பண்ணுவாரோ? 36 நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள் என்றும், நான் இருக்கும் இடத்துக்கு நீங்கள் வரக்கூடாது என்றும், இவர் சொன்ன வார்த்தையின் கருத்து என்னவென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
இயேசு எருசலேமில் சில காலம் இருக்கப்போவதாக தன்னுடைய எதிரிகளுக்கு அறிவித்தார். தான் இறைவனுடைய ஆட்டுக்குட்டியாக மரிப்பார் என்பதை அவர் ஏற்கனவே அறிந்திருந்தார். அதேவேளையில் அவர் தன்னுடைய உயிர்த்தெழுதல், பரமேறுதல், மற்றும் பிதாவினிடம் திரும்புதல் ஆகியவற்றின் காலங்களையும் நன்கு அறிந்திருந்தார். நம்மை இரட்சிப்பதற்காக தன்னை அனுப்பிய பிதாவுக்காக அவர் ஏங்கினார். நம்மீது வைத்த அன்பினால் அவர் தன்னுடைய வீட்டைவிட்டு வெகுதூரம்வந்து நம்முடைய உலகத்தில் வாழ்ந்தார்.
அவருடைய உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதலைக் கண்டு அவருடைய சீடர்கள் ஆச்சரியப்படுவார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். அவரோடு பரலோகத்திற்கு எழுந்தருளிப் போகும் ஆவிக்குரிய சரீரம் அவர்களிடமில்லாத காரணத்தினால் அவர்கள் ஏமாற்றமடைவார்கள். அதேபோல அவருடைய எதிரிகள் முத்திரையிடப்பட்ட கல்லறையிலிருந்து காணாமல்போகும் அவருடைய சரீரத்தைத் தேடுவார்கள் என்றும் அறிந்திருந்தார். இரட்சகரை அன்புசெய்யாதவர்களுக்கு ஐயோ. அவர்கள் அவருடைய மகிமையைப் பெறவோ பரலோகத்திற்குச் செல்லவோ இயலாதவர்களாயிருக்கிறார்கள். அவர்களுடைய பாவம் அவர்களை இறைவனிடமிருந்து பிரிக்கிறது. அவிசுவாசம் அவர்களை கிருபையின் ஆளுகைக்குப் புறம்பாக்குகிறது.
இயேசுவின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளத் தவறிய யூதர்கள் மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள கிரேக்க நகரங்களில் உள்ள ஜெபஆலயங்களில் அவர் சுற்றித்திரிவார் என்று மனித வழிகளில் சிந்தித்தார்கள். எபிரெய வேதாகமத்தை அறியாத அந்த கிரேக்க மக்களைத் தன்னைப் பின்பற்றுபவர்களாக்கும்படி அப்படிச் செய்வார் என்று கருதினார்கள். வேறுசிலர், “அவருக்குப் பிரபலமான பேச்சாளராக ஆக வேண்டும் என்றும் கிரேக்கத் தத்துவ ஞானிகளுக்குத் தன்னுடைய கருத்துக்களைச் சொல்லி அவர்களை உயிருள்ள இறைவனிடம் கொண்டுவர வேண்டும் என்றும் விருப்பமிருக்கலாம்” என்று கருதினார்கள்.
யோவான் இந்த நிகழ்ச்சிகளைப் பதிவு செய்தபோது அவர் எபேசுவில் கிரேக்கர்கள் நடுவில் இருந்தார். இரட்சிப்பைக் குறித்த நற்செய்தி அங்கிருந்த யூதர்களுக்கும் பல கிரேக்கர்களுக்கும் எட்டியிருந்தது. கிரேக்கர்கள் நடுவில் பெரிய போதகராயிருக்க வேண்டும் என்று யூதர்கள் கூறியதில் இயேசுவின் வார்த்தைகளை அவர்கள் கேலிசெய்தார்கள் என்று நற்செய்தியாளன் கருதுகிறார். அவர் வெறுமனே தத்துவத்தையும் நல்ல காலத்தையும் போதிப்பவரல்ல. அவர் உயிரைக் கொடுப்பவர். அவரிலிருந்து அழியாத வல்லமை புறப்பட்டு வருகிறது.
கேள்வி:
- அவருடைய எதிர்காலத்தைப் பற்றிய இயேசுவின் முன்னறிவித்தல் என்ன?