Previous Lesson -- Next Lesson
ஆ) மற்ற மக்களைவிட இறைவன் இஸ்ரவேல் மக்கள் மீது கொண்டிருந்த கிருபையினால் அவர்களது மீறுதல் அதிகமானது (ரோமர் 10:4-8)
ரோமர் 10:4-8
4 விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார். 5 மோசே நியாயப் பிரமாணத்தினாலாகும் நீதியைக்குறித்து: இவைகளைச் செய்கிற மனுஷன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான். 6 விசுவாசத்தினாலாகும் நீதியானது: கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணும்படி பரலோகத்துக்கு ஏறுகிறவன் யார்? 7 அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணும்படி பாதாளத்துக்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாதிருப்பாயாக என்று சொல்லுகிறதுமன்றி; 8 இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.
நியாயப்பிரமாணத்தின் முதன்மையான இலக்கு கிறிஸ்து இயேசு என்று பவுல் சாட்சியிட்டான். இயேசுவே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறார். அவராலேயன்றி ஒருவரும் பிதாவினிடம் வர இயலாது (யோவான் 14:6)
நியாயப்பிரமாணத்தின் எல்லா கோரிக்கைகளையும் கிறிஸ்து முழுமையாக நிறைவேற்றினார். எல்லோருக்கும் ஒரு முன் மாதிரியானார். நாம் அவருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நம்முடைய பாவ நிலையைக் காண்கிறோம். யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இது பொருந்தும். எல்லோரும் பாவம் செய்து இறைமகிமையை இழந்து போனார்கள். எல்லோரும் அன்பு மற்றும் சத்தியத்தை இழந்து போனார்கள் (லேவியராகமம் 18:5; ரோமர் 3:23).
அதே சமயத்தில் தமது பாவப் பரிகாரபலியின் மரணத்தின் மூலம் கிறிஸ்து முழு உலகத்தையும் பரிசுத்தமான இறைவனுடன் ஒப்புரவாக்கினார். (2கொரிந்தியர் 5:18-21). கிறிஸ்து பழைய நியாயப்பிரமாணத்தை முழுவதும் நிறைவேற்றினார். எனவே அவர் நம்முடைய புதிய பிரமாணமாக இருக்கிறார். அவருக்குள் நாம் கிருபையின் பிரமாணத்தைப் பார்க்கிறோம். அவருடைய பலி மரணத்தின் மூலம் நமது புதிய உரிமை நிறைவேற்றப்படுகிறது. நாம் கிருபையினால் நீதிமானாக்கப்பட்டு, நித்திய வாழ்வை பெற்றுக்கொள்கிறோம். கிறிஸ்துவே நம்முடைய நீதியாக இருக்கிறார். (ஏசாயா 45:24; எரேமியா 23:6; 33:16) அவரிடம் திரும்புகிற ஒருவரும் நியாயம் தீர்க்கப்படுவதில்லை.
மோசேயின் நியாயப்பிரமாணத்தில் ஆண்டவர் கூறுகிறார். என் கற்பனைகளைக் கைக்கொள்பவன் பிழைப்பான். ஆனால் இயேசுவைத் தவிர ஒருவரும் இறைவனின் கட்டளைகளைக் கைக்கொள்ளவில்லை. ஆகவே ஒருவரும் தன்னில் தானே நீதியுள்ளவராக இல்லை. எனவே தான் யூதர்கள் விண்ணப்பம், ஆராதனைகள், உபவாசம், மூலம் இறைவனுடைய கோபத்திலிருந்து தப்பிக்க வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவைக் குறித்த எதிர்பார்ப்புகளுடன் இருந்தார்கள். ஆனால் அவர்கள் மெய்யான மேசியாவை நெருங்கி வரவில்லை. அவரைக் குறித்து கேட்கவுமில்லை. விசுவாசத்தினால் வரும் நீதிக்காக ஒரு புதிய கிறிஸ்து பரலோகத்தில் இருந்து இறங்கி வரத் தேவையில்லை. மரணத்திலிருந்து ஒரு புதிய கிறிஸ்து உயிர்த்தெழுந்து வரத் தேவையில்லை. கிறிஸ்து நமக்காக இறங்கி வந்தார். (லூக்கா 2:11) மரணத்திலிருந்து உயர்த்தெழுந்தார். (மத்தேயு 28:5,6). இந்த ஜீவ வார்த்தை அநேகரை சந்தித்தது. பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தி கிறிஸ்துவின் அதிகாரத்தினால் நிறைந்திருந்தது. அதைக் கேட்பவன் மற்றும் விசுவாசிப்பவன் தனது இருதயத்தில் நற்செய்தியின் ஆசீர்வாதத்தைப் பெறுகிறான். நாம் நம்மை அறிந்திருப்பதை விட அதிக ஐசுவரியமாய் இருக்கிறோம். ஆகவே மற்றவர்களுக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் பாவத்திலும், மீறுதலிலும் மரித்தவர்களாயிருந்தும், தங்களை சிறந்தவர்களாக, பலமுள்ளவர்களாக எண்ணிக் கொள்கிறார்கள்.
விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்க, எங்களுக்காகப் பலியாக நீர் உமது ஒரேபேறான குமாரனை அனுப்பினீர். அவருடைய உலகளாவிய பலி மரணத்தினால், நியாயப்பிரமாணம் நம்மைக் குற்றம் சாட்ட முடியாது. இயேசு நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார். நம்மை கிருபையின் காலத்திற்குள் கொண்டு வந்துள்ளார். ஆமென்.
கேள்விகள்:
- பவுல் கூறுகின்ற “கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்” என்பதன் அர்த்தம் என்ன?
- ஏன் யூதர்கள் வரப்போகிற மேசியாவிற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்?