Previous Lesson -- Next Lesson
அ) விசுவாசத்தினால் வரும் நீதியை யூதர்கள் புறக்கணித்தார்கள், நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரர்களாக இருந்தார்கள் (ரோமர் 9:30-10:3)
ரோமர் 9:30 - 10:3
30 இப்படியிருக்க நாம் என்ன சொல்லுவோம்? நீதியைத் தேடாத புறஜாதியார் நீதியை அடைந்தார்கள்; அது விசுவாசத்தினாலாகும் நீதியே. 31 நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை. 32 என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.33 இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று. 10:1 சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது. 2 தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக்குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல. 3 எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.
கிரியைகள் மூலமாக பெறப்பட்ட நீதி மத போதகர்களை அழிவுக்கு நேராக நடத்திய போது, கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்து பெறப்படும் இறைநீதியை ரோமில் உள்ள சபை அங்கத்தினர்கள் உணர வேண்டும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் முயற்சித்தான். முதல் சபையின் ஆலோசனை சங்கத்திற்கு முன்பு அப்போஸ்தலனாகிய பவுல் அறிக்கையிட்டான். குறிப்பாக நியாயப்பிரமாணத்தினால் நீதியை பெற முயற்சித்தவரிடம், அவர்களில் ஒருவரும் இறைவனின் கட்டளைகளை முழுமையாக கடைப்பிடிக்கவில்லை என்று குறிப்பிட்டான். கிறிஸ்துவில் பிரசன்னமாகியுள்ள இறைவனின் கிருபை மட்டுமே மனிதனை இரட்சிக்கும். அவனுடைய செயல்களால் அவன் இரட்சிக்கப்பட முடியாது. (அப்போஸ்தலர் 15:6-11) இருளில் நடக்கின்ற மனிதன் பெரிய கல்லில் இடறிவிழுந்து, அழிவதைப் போல, கிறிஸ்துவின் கிருபையைப் புறக்கணிக்கிறவன் இருக்கிறான் (ஏசாயா 8:14; 28:16).
கிறிஸ்து யூதர்களை இறைவனுடன் ஒப்புரவாக்கினார். இருப்பினும் அவருடைய ஒப்பற்ற கிருபையை புறக்கணித்ததால் அவர்களில் அநேகர் நியாயந்தீர்க்கப்படுவதற்கும் அவர் காரணமாயிருக்கிறார். தங்களுடைய இரட்சகரை அறிந்து கொண்டு, அவரில் விசுவாசம் வைப்பவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்.
அநேக யூதர்கள் நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிப்பதில் கருத்துடன் இருந்தார்கள் என்பதை பவுல் அறிக்கையிட்டான். கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதற்கு ஒவ்வொரு முயற்சியையும் அவர்கள் எடுத்தார்கள். அவர்களுடைய கடமையினிமித்தம் பவுல் அவர்களை நேசித்தான். தங்கள் வாழ்வின் சந்தர்ப்பங்களை அவர்கள் பயன்படுத்தி, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சிறந்த பரிசை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பினார். எனவே பவுல் இறைவனிடம் விண்ணப்பம் செய்தார். அவர்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருந்த இரட்சிப்பைப் பெற அவர்கள் வழிநடத்தப்படும்படி மிகவும் வைராக்கியமாய் விண்ணப்பம் செய்தான்.
ரோம சாம்ராஜ்யத்தின் அநேக பொருளாதார மையங்களில் யூதர்கள் அவர்களுடைய நியாயப்பிரமாணத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதை பவுல் அனுபவப்பூர்வமாகக் கண்டான். தாங்கள் தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள் என்று அவர்கள் கருதினார்கள். மற்றவர்களை ஏளனமாகப் பார்த்தார்கள். கிறிஸ்துவில் உள்ள இறைவனின் புதிய நீதியை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. 613 கட்டளைகளைக் கைக்கொள்வதற்குப் பதிலாக, உபவாசம், விண்ணப்பம், பலிகள், காணிக்கைகள் மற்றும் புனிதப்பயணம் இவைகளால் இறைவனின் உண்மையான நீதியை புறக்கணித்தார்கள். அவர்கள் தங்களை வஞ்சித்துக் கொண்டார்கள். அவர்கள் தங்கள் மீது பாடுகளை வருவித்துக் கொண்டார்கள்.
விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, அசுத்தமான புறவினத்தாரில் இருந்து வந்த உம்முடைய விசுவாசிகளாகிய நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். உம்முடைய கிருபையின் முழுமையினால் நாங்கள் உம்முடைய ஆசீர்வாதங்களை ஒன்றின்பின் ஒன்றாக பெற்றுக் கொண்டோம். உம்முடைய சொந்த நீதியை மிகப்பெரும் ஈவாக நீர் எங்களுக்கு அருளியுள்ளீர். தங்கள் தனிப்பட்ட செயல்கள் மூலம் நீதிமானாக்கப்பட முடியும் என்று எண்ணுகிற மற்ற மதங்களில் உள்ளோர். உம்மை பின்பற்றி நீர் அருளும் ஆசீர்வாதங்களைப் பெறும்படி நாங்கள் விண்ணப்பம் பண்ணுகிறோம். அவர்களுடைய பெருமை உடைக்கப்படட்டும். உம்மை விசுவாசிக்க அவர்களுக்கு உதவும். உம்மை நேசிக்கின்ற பிள்ளைகளாக உம் மீது நம்பிக்கை வைக்க உதவும்.
கேள்விகள்:
- வேறுபட்ட மக்களினத்தில் இருந்து வரும் மில்லியன் கணக்கான விசுவாசிகள் எவ்விதம் இறைவனுடைய நீதியைப் பெறுகிறார்கள்? ஏன் அதில் நிலைத்திருக்கிறார்கள்?
- மற்ற மதங்களைச் சார்ந்த பக்தியுள்ளோர் தங்களுடைய சட்டங்களைக் கடைப்பிடித்து, இறைவனுடைய நீதியைப் பெற ஏன் முயற்சிக்கிறார்கள்?