Previous Lesson -- Next Lesson
5. லீஸ்திராவில் சபை ஸ்தாபிக்கப்படுதல் (அப்போஸ்தலர் 14:8-20)
அப்போஸ்தலர் 14:19-20
19 பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள் வந்து, ஜனங்களுக்குப் போதனைசெய்து, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனானென்று எண்ணி, அவனைப் பட்டணத்துக்கு வெளியிலே இழுத்துக்கொண்டுபோனார்கள்.20 சீஷர்கள் அவனைச் சூழ்ந்துநிற்கையில், அவன் எழுந்து, பட்டணத்திற்குள் பிரவேசித்தான். மறுநாளில் பர்னபாவுடனேகூடத் தெர்பைக்குப் புறப்பட்டுப்போனான்.
இந்த வித்தியாசமான நிகழ்வைக் குறித்து கேள்விப்பட்ட யூதர்கள் அருகில் இருந்த பட்டணங்களில் இருந்து வந்தார்கள். பவுலுக்கும் பர்னபாவுக்கும் எதிராக அப்பட்டணத்து மக்கள் இருப்பதை அறிந்து லீஸ்திராவிற்கு விரைந்து வந்தார்கள். அவர்களின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை அவர்கள் வைத்தார்கள். அவர்களை ஏமாற்றுக்காரர்கள், பாரம்பரியத்தை கெடுப்பவர்கள், பட்டணத்து நன்மைக்கு ஆபத்தானவர்கள் என்று கூறினார்கள். இந்த வஞ்சகர்கள் பக்கமாக கோபமுற்ற பொது மக்கள் சாய்ந்தார்கள். பட்டணத்து தலைவர்களுடன் இணைந்து கொண்டு, இரண்டு அப்போஸ்தலர்களையும் கொல்ல முற்பட்டார்கள். பிற்பாடு திரள் கூட்ட மக்கள் அவர்களைப் போலவே பவுலும் மனிதன் தான், தெய்வம் அல்ல என்பதை உணர்ந்து அவனைச் சுற்றி நின்று கல்லெறிந்தார்கள். எந்த ஒரு மின்னலோ அல்லது இடியோ அவனிடம் இருந்து வெளிப்படாததைக் கண்டு மகிழ்ந்தார்கள். அவர்களைப் போல அவனும் பலவீனமான மனிதன் என்பதை அவர்களுக்குக் காண்பித்தது.எனவே மிகக்கொடூரமாக அவனைத் தாக்கினார்கள். கூரான கற்களை அவன் மீது சரமாரியாக எறிந்தார்கள். அவர்களது தெய்வங்களை இகழ்ந்து பேசியவனை தாக்கினார்கள். அவன் இரத்தம் சொட்டச்சொட்ட காயங்களுடன் கீழே விழுந்தான். மிக மோசமான நிலையில், எண்ணிலடங்கா கற்களால் சூழப்பட்டவனாக கீழே கிடந்தான். மென்மையான பர்னபாவை அவர்கள் தாக்கவில்லை. இந்த இயக்கத்தின் பின்னால் இயக்குவிசையாக இருக்கக் கூடிய வல்லமையுடன் பிரசங்கித்த பவுலை மட்டும் குறிபார்த்து தாக்கினார்கள். எங்கிருந்து ஆபத்து வரும் என்பதை நரகம் அறிந்துள்ளது. எருசலேமில் முன்பு கல்லெறியப்பட்ட ஸ்தேவானையும், அப்போது அவன் எதிரிகளின் குற்றச் செயல்களை மன்னித்ததையும், தனது ஆவியை உயிருள்ள இயேசுவின் கைகளில் ஒப்புவித்ததையும் பவுல் நிச்சயம் நினைவு கூர்ந்திருக்கக் கூடும்.
செத்த நாயை இழுத்துச் செல்வதைப் போல, அந்தக் கூட்டத்தினர் கல்லெறியப்பட்ட பவுலை இழுத்துக்கொண்டு பட்டணத்து வாசல்களுக்கு வெளியே போட்டார்கள். அந்த நாள் நிகழவுகளினால் களைப்புற்றவர்களாக அவர்கள் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பினார்கள். இரத்தம் வடிந்துகொண்டிருந்த பவுலின் சரீரத்தை சுற்றி நின்று சீஷர்கள் இணைந்து விண்ணப்பம் செய்தார்கள். மரணத்தின் மீதான கிறிஸ்துவின் வல்லமையை நம்பி விண்ணப்பம் செய்தார்கள். சுற்றி நின்று விண்ணப்பம் செய்ததின் மூலம் இறைவனின் வல்லமை வெளிப்பட்டு பவுல் எழுந்தான். காயங்களுடன், இரத்த கறைபடிந்த ஆடைகளுடன் பவுல் கிறிஸ்துவுக்குள்ளான தனது சகோதரர்களை அமைதியாக பார்த்தான். அவன் இருள் நிறைந்த வனாந்தரத்திற்கு ஓடிப்போகவில்லை. அவன், அவர்களுடன் இணைந்து கொலைக்காரப் பட்டணத்திற்கு திரும்பி வந்தான். அவர்களது எதிரிகள் மத்தியில் மீண்டும் வந்தான். கிறிஸ்து அவனை மரிக்கவிடவில்லை என்பதை அவன் அறிந்திருந்தான். மீண்டும் பணி செய்ய அவன் எழுப்பப்பட்டான். தனது வலிமிகுந்த காயங்கள் மத்தியிலும் அவன் அவிசுவாசிகளின் ஆத்துமாக்களை இறைவனின் அன்பிற்குள் உறுதிப்படுத்தினான்.
அடுத்த நாள் தெர்பை என்ற அருகில் இருந்த பட்டணத்திற்கு பர்னபாவும், பவுலும் நடந்து சென்றார்கள். பவுல் மிகுந்த களைப்புடன் இருந்தான். இன்னமும் அவனது காயங்களில் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இருப்பினும் அவனது இருதயம் மகிழ்ச்சியினாலும், சந்தோஷத்தினாலும் நிறைந்திருந்தது. ஏனெனில் லீஸ்திராவில் கிறிஸ்து ஓர் உயிருள்ள சபையை நிறுவிவிட்டார். அப்போஸ்தலர்களின் முன் மாதிரி மூலம் சீஷர்கள் இயேசுவின் நாமத்தைக் குறித்து கற்றுக்கொண்டார்கள்.
விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, உமது நாமம் பரிசுத்தமுள்ள இறைவன். உம்மை பின்பற்றுபவர்களை சாத்தான் வெறுத்து, அவர்களை அழிக்க விரும்புகிறான். உமது சத்தியத்தை நாங்கள் புரிந்துகொள்ள, எங்களுக்கு உதவும். அதை விவேகத்துடன் அறிக்கையிட உதவும். எங்கள் எதிரிகளை நேசிக்க உதவும். எங்களை வேதனைப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியும். எங்கள் பட்டணத்தில் உமது சபை ஸ்தாபிக்கப்படும்படி நாங்கள் மன்றாடுகிறோம். ஆமென்.'
6. தெர்பையில் ஊழியம், புதிதான சபைகளை உறுதிப்படுத்த திரும்புதல் (அப்போஸ்தலர் 14:21-23)
அப்போஸ்தலர் 14:21-23
21 அந்தப் பட்டணத்தில் அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அநேகரைச் சீஷராக்கினபின்பு, லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பிவந்து,22 சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.23 அல்லாமலும் அந்தந்தச் சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்திவைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்.
துன்புறுத்தப்பட்ட இரண்டு அப்போஸ்தலர்களும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்களாக சின்ன ஆசியாவின் சிறிய பட்டணமாகிய தெர்பை மக்களுக்கு பிரசங்கித்தார்கள். அநேகர் கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்தார்கள். பாவத்தில் மரித்த நிலையை விட்டுவிட்டு இறைவனின் வாழ்வு நீதி மற்றும் பரிசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்கள். இதன் மூலம் இரண்டு அப்போஸ்தலர்களும் கிறிஸ்துவின் கட்டளையை நிறைவேற்றினார்கள். கிறிஸ்து கூறினார். “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (மத்தேயு 28:19-20)
இந்த வார்த்தைகளினால் இரண்டு அப்போஸ்தலர்களும் குறிப்பாக ஈர்க்கப்பட்டார்கள். “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்”. ஏனெனில் அவர்களது சபைகள் புதியவைகளாக இருந்தன. கிரேக்க மொழியில் அவர்களுக்கு வேதாகமம் இல்லை. கூட்ட ஒழுங்குகள் இல்லை. அவர்களது எதிரிகளுடன் கலந்துரையாடுவதற்கான அனுபவம் இல்லை. அப்போஸ்தலர்கள் அவர்களுக்கு தாயைப் போல இருந்தார்கள். தனது சிறிய பிள்ளைகளை கவனித்துக்கொள்ளும் தாயைப் போல, அவர்களைப் போஷிக்கவோ அல்லது அவர்களை பராமரிக்கவோ வேண்டியதின் தேவையை உணர்ந்தார்கள். அவர்களால் விட்டுவிடப்பட்ட ஆவிக்குரிய பிள்ளைகளைக் காண வாஞ்சையாய் இருந்தார்கள் மரணத்தைக் கண்டு அவர்கள் பயப்படவில்லை. தங்களை துன்புறுத்திய பட்டணங்களுக்குள் தைரியமாக திரும்பிப் போனார்கள். அன்பு மேற்கொள்கிறது. எல்லா பயத்தையும் புறம் தள்ளுகிறது. அதுவே மனிதனுக்குள் மிகப்பெரிய உந்துவிசையாக இருக்கிறது.
இரண்டு அப்போஸ்தலர்களும் லீஸ்திராவிற்கு திரும்பிச் சென்றார்கள். இங்கு தான் பவுலின் மீது குற்றம்சுமத்தப்பட்டது. அவர்கள் பெருங்கூட்ட மக்களுக்கு பிரசங்கிக்கவில்லை. ஆனால் கிறிஸ்து தனது ராஜ்யத்திற்கென்று தெரிந்தெடுத்தவர்கள் மற்றும் உலகத்திலிருந்து பிரிந்து வரும்படி அழைக்கப்பட்டவர்களாக இருக்கிற விசுவாசிகளை பலப்படுத்தினார்கள். இந்தப் பணியின் மூலம் பிரசங்கத்தினால் பக்திவிருத்தி அடையச்செய்யும் காரியத்தை இரண்டு பேரும் செய்தார்கள். அவர்கள் கனவுகளைக் குறித்து, கற்பனையான நம்பிக்கைகளைக் குறித்து பேசவில்லை. இறைவனுடைய ராஜ்யத்திற்குள் அநேக உபத்திரவங்கள் வழியாக கடந்து செல்ல வேண்டுமென்று அவர்கள் மிகத் தெளிவாக சாட்சியிட்டார்கள். பாடுகள் இல்லாமல் நீங்கள் இறைவனின் ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க இயலாது. நீங்கள் பகை, பொய், துன்புறுத்தல் மற்றும் கிறிஸ்துவிற்காக பாடுகள் என்ற அலைகளை சந்திப்பீர்கள். அவைகளே கிருபையின் விஸ்தாரத்திற்குள் நீங்கள் பிரவேசிப்பதற்கான அடையாளமாக இருக்கிறது.
இரண்டு அப்போஸ்தலர்கள் இறைவனின் ராஜ்யம் என்ற பதத்தை நன்கு புரிந்து வைத்திருந்தனர். குமாரனின் வல்லமையினால் இது தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ராஜ்யத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது, எல்லா விசுவாசிகளும் அவரது மகிமையான வருகையையும், இந்த பூமியில் அவரது வல்லமையின் வெளிப்பாட்டையும் எதிர்பார்க்கிறார்கள். பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்த ஒவ்வொரு நபரும் இன்று இறைவனுடைய ராஜ்யத்தின் அங்கத்தினராக இருக்கிறான். இயேசு கிறிஸ்து தனது பரிசுத்தம், தாழ்மை மற்றும் அன்புடன், தனது சொந்த இரத்தத்தினால் அவரது ராஜ்யத்திற்கான அங்கத்துவத்தை நமக்கு விலைக்கிரயம் கொடுத்து வாங்கியிருக்கிறார். கிறிஸ்துவின் விரிவான எல்லைக்குள் நீங்கள் உட்பிரவேசித்து விட்டீர்களா? பிதாவின் ராஜ்யம் வெளிப்படுவதற்காகவும், நமது இரட்சகராகிய கிறிஸ்துவின் வருகைக்காகவும் நீங்கள் காத்திருக்கிறீர்களா? உங்கள் இரட்சிப்பு அல்லது அநேக சபைகளின் வளர்ச்சி என்பது இறைவனின் ராஜ்யத்தின் முடிவு அல்ல. மாறாக அது பரிசுத்த ஆவியின் வல்லமையுடன் வாழுகின்றவர்களுடன் ஐக்கியம் கொண்டு பிதாவின் மகிமையுடன் குமாரன் வெளிப்படுகிறது ஆகும். ஆகையால் கிறிஸ்து கூறினார்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். மத்தேயு (6:33).
இரண்டு அப்போஸ்தலர்களும் விசுவாசம், பாடுகள் மற்றும் மகிமையை குறித்து மட்டும் பிரசங்கிக்கவில்லை. அவர்கள் நடைமுறை நீதியில் சபைகள் அனைத்தையும் ஒழுங்குபடுத்தினார்கள். அவர்கள் ஆவிக்குரிய முதிர்ச்சியுடன் ஒருமனப்பட்டு, அனுபவமிக்க மூப்பர்களை தெரிவுசெய்தார்கள். ஏழை மற்றும் வியாதியஸ்தரை பொறுப்புடன் கவனிக்கவும், கூட்ட ஒழுங்குகளை ஏற்படுத்தவும் அவர்களை நியமித்தார்கள். கிறிஸ்துவைப் பின்பற்றுவதின் மூலம் இந்த மூப்பர்களின் வாழ்வு பரிசுத்தம், இரட்சிப்பு மற்றும் தன்னடக்கம் முன்மாதிரியாகக் காணப்பட்டது.
இவ்விதம் இரண்டு அப்போஸ்தலர்களும் சபைகளை திடப்படுத்தினார்கள். பின்பு அடுத்த பகுதிகளுக்கு கடந்து சென்றார்கள். அவர்கள் சபைகளை எல்லா நாட்களும் அவர்களுடன் இருக்கும் கிறிஸ்துவாகிய பிரதான மேய்ப்பராகிய கிறிஸ்துவிடம் ஒப்படைத்தார்கள். இந்த ஒப்படைத்தலை நிறைவேற்றும் போது அவர்கள் விண்ணப்பம் மற்றும் உபவாசத்தினால் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள். அவர்கள் புதிய ஊழியர்களிடமும், சபைகளின் முக்கியமான அங்கத்தினர்களிடமும், பரிசுத்த ஆவியின் நிறைவைக் கண்டார்கள். அவர்கள் கிறிஸ்து தமது சபையின் மீது கொண்டிருக்கும் உயர்ந்த பொறுப்பை நம்பினார்கள். அப்போஸ்தலர்கள் சட்டங்கள், சடங்குகள் அல்லது சபைகளுக்கான கீதங்கள் எதையும் உருவாக்கவில்லை. அதற்குப் பதிலாக அவர்களை உயிருள்ள கிறிஸ்துவின் கரங்களில் ஒப்புவித்தார்கள். அவருடைய வெற்றிப்பவனியில் உடன் வரும் அனைவரையும் அவரே முழுமையாக பரிசுத்தப்படுகிறார் என்பதை மனதில் வைத்திருந்தார்கள்.
விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நீர் உமது சபையின் தலையாக இருக்கிறீர். நீர் உண்மையுள்ள மேய்ப்பராக இருக்கிறீர். புதிய விசுவாசிகள் அனைவருக்காகவும் நாங்கள் விண்ணப்பம் செய்கிறோம். அவர்களை ஆசீர்வதியும். உமது தாழ்மையின் ஆவியினால் அவர்களை நிரப்பும். அவர்கள் வல்லமை, அன்பு, ஞானம், நற்செய்தி அறிவிக்க ஆயத்தம். இவைகளினால் நிறைந்திருக்க உதவும். தினந்தோறம் உமது சீஷர்கள் செய்யும் தவறுகளை மன்னியும். பொறுப்பு மிக்க மூப்பர்களை அவர்களுக்குத் தாரும். அவர்கள் தன்னடக்கம், சத்தியம் மற்றும் வல்லமையுடன் பிறருக்காக செயல்பட உதவும்.
கேள்வி:
- பவுலும், பர்னபாவும் திரும்பி வந்த போது புதிய சபைகளுக்கு எவ்விதம் ஊழியம் செய்தார்கள்?