Previous Lesson -- Next Lesson
7. சீரியாவில் உள்ள அந்தியோகியாவிற்கு திரும்புதல், அங்கு சகோதரர்களுக்கு ஊழியத்தைக் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தல் (அப்போஸ்தலர் 14:24-28)
அப்போஸ்தலர்கள் 14:24-28
24 பின்பு பிசீதியா நாட்டைக் கடந்து, பம்பிலியா நாட்டிற்கு வந்து,25 பெர்கே ஊரில் வசனத்தைப் பிரசங்கித்து, அத்தலியா பட்டணத்திற்குப் போனார்கள்.26 அங்கே கப்பல் ஏறி, தாங்கள் நிறைவேற்றின கிரியைக்காக தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டுப் புறப்பட்டு அந்தியோகியாவுக்கு வந்தார்கள்.27 அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் புறஜாதிகளுக்கு விசுவாசத்தின் கதவைத் திறந்ததையும் அறிவித்து,28 அங்கே சீஷருடனேகூட அநேகநாள் சஞ்சரித்திருந்தார்கள்.
மிக நீண்ட பயணத்திற்கு பின்பு பவுலும், பர்னபாவும் அந்தியோகியாவிற்கு திரும்பினார்கள். வருகின்ற வழியில் அவர்கள் அனடோலியாவின் தென்பகுதியில் உள்ள பெர்கா என்ற கடற்கரையை ஒட்டியுள்ள பட்டணத்திற்க்கு சென்று பிரசங்கித்தார்கள். அங்கு சபை நிறுவப்பட்டதாக நாம் எதையும் வாசிக்க முடியவில்லை. பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர்களை கடற்கரைக்கு அனுப்பவில்லை. மாறாக மலைப்பகுதிகளுக்கும், வெப்பமிக்க உள்ளான சமவெளிப் பகுதிக்கும் அனுப்பினார். இவ்விதம் அவர்கள் பட்டணத்தை விட்டு வெளியேறி கிழக்கு கரையோரம் கடற்பயணம் செய்து, சிரியாவில் உள்ள அந்தியோகியாவிற்கு திரும்பினார்கள். இந்த அன்பு மிகுந்த சபையில் இருந்து தான் அவர்கள் ஊழியத்திற்கென்று பரிசுத்த ஆவியானவரால் தெரிந்து கொள்ளப்பட்டு அனுப்பப்பட்டார்கள். அப்போது எதுவும் அவர்களுக்கு தெளிவாக புலப்படவில்லை. ஆனால் இப்போது அவர்கள் தங்களது முதல் அருட்பணி பயணத்தை முடித்து திரும்பிய போது, பரிசுத்த ஆவியானவரின் செயல் தெளிவாகப் புலப்பட்டது. எல்லா காலத்திலும், நித்தியத்திலும் தீர்மானிக்கப்பட்ட செயல் நடந்தேறியதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். புறஜாதியில் இருந்து மனந்திரும்பியவர்கள் மற்றும் யூத விசுவாசிகளை உள்ளடக்கிய சபைகள் நிறுவப்பட்டது. இந்த அற்புதமான செயல் சீரியாவில் உள்ள அந்தியோகியாவில் ஆரம்பித்தது. அவர்கள் கடந்து சென்ற ஒவ்வொரு நாட்டிலும் இதே விதமாக பரிசுத்த ஆவியானவர் கனியைக் கொடுக்கும் செயல் தொடர்ந்தது.
புறஜாதிகளுக்கான கதவு விசாலமாக திறக்கப்பட்டது, தெளிவாகத் தெரிந்தது. புறஜாதிகளில் இருந்து அழைக்கப்பட்டவர்கள் திறக்கப்பட்ட இந்த கதவின் வழியாக கடந்து சென்றார்கள். கிறிஸ்துவின் ஐக்கியத்திற்குள் உட்பிரவேசித்தார்கள். இறைவனுடனான உடன்படிக்கையின் உறவிற்கு யூதர்கள் மட்டும் தெரிந்து கொள்ளப்படவில்லை. கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும் அனைவருக்கும் பரிசுத்தமான இறைவனுடன் ஐக்கியம் கொள்ளும் கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது. கிறிஸ்துவின் இரத்தம் அவர்களை தூய்மைப்படுத்துகிறது. பரிசுத்த ஆவியானவர் அவர்களை உருவாக்குகிறார். அவரை விசுவாசிக்கிறவன் இரட்சிக்கப்படுவான்.
மிகப்பெரும் மகிழ்ச்சியுடன் பவுலும், பர்னபாவும் சபை அனைத்தையும் அழைத்தார்கள். அவர்கள் இரவு பகலாக அவர்களின் நீண்ட பயணத்திற்காக விண்ணப்பம் செய்தவர்கள் ஆவார்கள். அவர்கள் இறைவனால் வழிநடத்தப்படவும், காக்கப்படவும் விண்ணப்பம் செய்தார்கள். கிறிஸ்து எவ்விதம் செயல்பட்டார் என்பதையும், அவர்களது குழுப்பணியின் மூலம் என்ன நிறைவேற்றினார் என்பதையும் அப்போஸ்தலர்கள் மகிழ்ச்சியுடன் கூறினார்கள். அதன் விளைவாக அனைவரும் சந்தோஷப்பட்டார்கள். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய இறைவனை மகிமைப்படுத்தினார்கள். இந்த அருட்பணி அறிக்கை மூலமாக ஆண்டவராகிய இயேசுவிற்கு நன்றியும், துதியும் பெரிய அளவில் ஏறெடுக்கப்பட்டது. அவர்கள் பேசியதின் சாராம்சம் கொல்கதாவிற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவதாக இருந்தது.
முதிர்ந்த சகோதரர்களுடன் ஆவிக்குரிய ஐக்கியம் கொண்ட பவுலும், பர்னபாவும் இளைப்பாறினார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியின் புதிய ஐசுவரியமிக்க வரங்களை அனுபவித்தார்கள். கிறிஸ்து தமது சபைக்கு இவைகளை கொடுத்திருந்தார். அவர்கள் இணைந்து இறைவனின் கிருபையை மகிமைப்படுத்தினார்கள். கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும் அனைவருக்கும் இது கொடுக்கப்படுகிறது. பரிசுத்த ஆவியின் வல்லமையோடு இந்த உலகில் பணி செய்ய அவர்களை பெலப்படுத்துகிறது.
விண்ணப்பம்: ஓ, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நாங்கள் உம்மை மகிமைப்படுத்துகிறோம். உம்முடைய இராஜ்யத்திற்குள் பிரவேசிக்கும்படி நீர் அனைத்து மனிதர்களையும் அழைக்கின்றீர். நீர் எங்களுடன் பேசுகிறீர். உமது இரட்சிப்பை எங்களுக்கு உறுதிப்படுத்துகிறீர். பாவத்தில் மரித்த எங்களை உயிர்ப்பியும். உமது இரத்தத்தினால் எங்களை தூய்மைப்படுத்தும் எங்கள் நண்பர்களுக்கு பிரசங்கிக்க எங்களை அனுப்பும் தாழ்மையுடன், அடக்கத்துடன் உமது ஆவியின் மகிழ்ச்சியுடன் நடக்க எங்களுக்கு உதவும். ஒவ்வொரு நாளும் அவரின் வழிநடத்துதலுக்கு கீழ்ப்படிய உதவும்.
கேள்வி:
- இரண்டு அப்போஸ்தலர்களும் தங்களுடைய முதல் மிஷெனரி பயணத்தின் போது அனுபவித்த புதிய உண்மைகள் என்ன?