Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 066 (Preaching in Antioch)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
அ - முதலாவது மிஷனரிப் பயணம் (அப்போஸ்தலர் 13:1 - 14:28)

3. அனடோலியாவின் அந்தியோகியாவில் பிரசங்கித்தல் (அப்போஸ்தலர் 13:13-52)


அப்போஸ்தலர் 13:26-43
26 சகோதரரே, ஆபிரகாமின் சந்ததியில் பிறந்தவர்களே, தேவனுக்குப் பயந்து நடக்கிறவர்களே, இந்த இரட்சிப்பின் வசனம் உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.27 எருசலேமில் குடியிருக்கிறவர்களும் அவர்கள் அதிகாரிகளும் அவரை அறியாமலும், ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படுகிற தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களை அறியாமலும், அவரை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்ததினால் அந்த வாக்கியங்களை நிறைவேற்றினார்கள்.28 மரணத்திற்கு ஏதுவானதொன்றும் அவரிடத்தில் காணாதிருந்தும், அவரைக் கொலைசெய்யும்படிக்குப் பிலாத்துவை வேண்டிக்கொண்டார்கள்.29 அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் யாவையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள்.30 தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.31 தம்முடனேகூடக் கலிலேயாவிலிருந்து எருசலேமுக்குப் போனவர்களுக்கு அவர் அநேகநாள் தரிசனமானார்; அவர்களே ஜனங்களுக்கு முன்பாக அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறார்கள்.32 நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே,33 இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்.34 இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம் பற்றினார்.35 அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது. 36 தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்.37 தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை.38 ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும்,39 மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது.40 அன்றியும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்திலே:41 அசட்டைக்காரரே, பாருங்கள், பிரமித்து அழிந்துபோங்கள்! உங்கள் நாட்களில் ஒரு கிரியையை நான் நடப்பிப்பேன், ஒருவன் அதை உங்களுக்கு விவரித்துச் சொன்னாலும் நீங்கள் விசுவாசிக்கமாட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறபடி, உங்களுக்கு நேரிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றான்.42 அவர்கள் யூதருடைய ஜெப ஆலயத்திலிருந்து புறப்படுகையில், அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று புறஜாதியார் வேண்டிக்கொண்டார்கள்.43 ஜெப ஆலயத்தில் கூடின சபை கலைந்துபோனபின்பு, யூதரிலும் யூதமார்க்கத்தமைந்த பக்தியுள்ளவர்களிலும் அநேகர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். அவர்களுடனே இவர்கள் பேசி, தேவனுடைய கிருபையிலே நிலைகொண்டிருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொன்னார்கள்.

பவுல் தனது பிரசங்கத்தின் முக்கிய பகுதியில் மக்களை பரிவன்புடன் அழைத்தான். அவர்கள் ஆபிரகாமின் பிள்ளைகள், இறைவனைத் தேடுபவர்கள். அவர்களுக்கே இரட்சிப்பின் செய்தியானது அனுப்பப்பட்டது. யோவான்ஸ்நானகனைத் தவிர அனைத்து தீர்க்கதரிசிகளும் இறைவனின் வாக்குத்தத்தங்கள் நிறைவேறுதலுக்கு காத்திருந்தார்கள். இப்போது இரட்சிப்பு நிறைவேறியிருக்கிறது, முழுமையாக இருக்கிறது. அதைக் கேட்பவர்களில் உணரப்பட ஆயத்தமாய் இருக்கிறது

பவுல் தனது தேசம் இயேசுவை புறக்கணித்ததை குறித்து பேசாமல் அமைதியாய் இருக்கவில்லை. எருசலேமில் யூதர்களுடைய ஆலோசனைச் சங்கத்தின் அநீதியான தீர்ப்பையும் அவன் மறைக்கவில்லை. அவன் அவர்களுடைய கலகம், கீழ்ப்படியாமை, அநீதி, அறியாமையையும், அதே சமயத்தில் குற்றம், பாவம், துரோகத்தையும் வெளிப்படுத்தி பேசினான். அவர்கள் பரிசுத்த ஆவியின் சத்தத்திற்கு கீழ்ப்படியவில்லை. அவர்கள் ரோம ஆளுநரிடம் இயேசுவை கொண்டு சென்றார்கள். அவரை சிலுவையிலறையும்படி கேட்டுக் கொள்ளத்தக்கதாக மக்களை தூண்டினார்கள். தீர்க்கதரிசிகளால் முன்னுரைக்கப்பட்டபடியே ஆலோசனைச் சங்கத்தின் தீமையான நீயாயத்தீர்ப்பு நடந்தேறியது. யூதர்கள் விரும்பியது போல இயேசு மரிக்கவில்லை என்று பவுல் தன்னைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம் நிரூபிக்கும்படி வெகு ஆவலாய் இருந்தான். ஆனால் ஒவ்வொரு காரியமும் தீர்க்கதரிசனத்தின்படி நடந்தது. இந்த உலகத்தில் இறைவனுடைய சித்தத்தைத் தவிர வேறு ஒன்றும் நிகழ்வதில்லை. மனிதர்கள் பாவிகள் என்பதையும், இறைவனுடைய சித்தத்தை செய்ய விருப்பமற்றவர்கள் என்பதையும் சிலுவை காண்பிக்கிறது. இறைவனுடைய அன்பு எப்போதுமே எதிர்க்கப்படுகிறது.

உலக இரட்சகரை மக்கள் கொன்ற போது இறைவனுடைய மாட்சிமையும், வல்லமையும் மறைந்து போகவில்லை. உன்னதமானவர் தனது குமாரனின் மரணத்தின் மூலம் வெற்றியைக் காண்பித்தார். ஏனெனில் அவர் இயேசுவை கல்லறையில் இருந்து எழுப்பினார். பவுல் தனது பிரசங்கத்தில் இறைவனின் மாபெரும் செயலான இயேசு உயிர்த்தெழுதலைக் குறித்து நான்கு முறை குறிப்பிடுகிறான். சிலுவையில் அறையப்பட்டவர் ஒரு குற்றவாளியைப் போல மரிக்கவில்லை. இறைவனின் திட்டத்துடன் அவர் இணைந்து காணப்பட்டார். பவுலுடைய செய்தியின் உறுதியான மூலைக்கல்லாக கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த செய்தி இருந்தது. இயேசு தனது மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு தம்முடைய சீஷர்களுக்கு அநேக நாட்கள் தன்னை உயிரோடிருக்கிறவராக காண்பித்தார் என்று பவுல் சாட்சியிட்டான். அவருடைய மகிமையுள்ள உயிர்த்தெழுந்த சரீரம் குறித்த சத்தியத்திற்கு அவர்களே கண்கண்ட சாட்சிகளாய் இருந்தார்கள்

உயிர்த்தெழுதலை அடிப்படையாக வைத்து பவுல் பழைய ஏற்பாட்டில் இருந்து இறைவன் நித்தியமான, பரிசுத்த, மகிமையுள்ள குமாரனை பெற்றிருக்கிறார் என்று தெளிவுப்படுத்தினான். இறைவன் இயேசுவின் பிதாவாக இருக்கிறபடியால், அவர் அவருக்கு உண்மையுள்ளவராக தொடர்ந்து இருந்தார். கல்லறையில் இருந்து அவரை எழுப்பினார். அவரை அவருடைய மகிமைக்கு உயர்த்தினார். மிகப்பெரிய ராஜாவும், தீர்க்கதரிசியுமான தாவீது இந்த உயர்ந்த தீர்க்கதரிசனங்களை கேட்டிருந்தான். இருப்பினும் அவனுக்கு இவைகள் பொருந்தவில்லை. அவனுடைய சரீரம் இன்னும் கல்லறையில் வைக்கப்பட்டிருக்கிறது. அது அழிந்து போனது, தனது மண்ணுக்கு மறுபடியும் திரும்பிச் சென்றது. பெந்தேகொஸ்தே நாளின் போது சங்கீதம் 16:10 மற்றும் அப்போஸ்தலர் 2:27 வசனங்களில் இயேசுகிறிஸ்துவில் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியதை பேதுரு உறுதிப்படுத்தினான். பரிசுத்த இறைவன் தீமையை பார்ப்பது என்பது இயலாத காரியம் என்று பவுல் அந்தியோகியாவில் சாட்சியிட்டான்.

மனிதனாகிய இயேசுவில் இறைவனின் ஜீவனும் பரிசுத்தமும் தங்கியிருந்தது. அவர் மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தார். அதே சமயத்தில் இறைவனின் வரங்கள் அனைத்தும் அவரிடமிருந்தே நீரூற்றைப்போல புறப்பட்டு வருகிறது. உயிருள்ள இயேசுவே நம்முடைய பாவங்களை மன்னிக்கிறார் என்று அப்போஸ்தலர் சாட்சியிட்டார்கள். நியாயப்பிரமாணத்தை கைக்கொள்வதினால் ஒருவன் நீதிமானாக்கப்பட முடியாது. வெற்றியடைந்த ஒருவரை எவரெல்லாம் உறுதியாகப் பற்றிக்கொள்கிறார்களோ அவர்கள் நீதிமானக்கப்படுகிறார்கள். இதை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள். இது வெளிப்படையானது, எளிமையானது கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பவன் எவனோ அவன் நீதிமானாக்கப்படுகிறான், பரிசுத்தமாக்கப்படுகிறான், என்றென்றும் வாழுகிறான். நீங்கள் உண்மையாகவே அவரை உறுதியாக பற்றிக்கொண்டீர்களா?

நற்செய்தியானது முடிவெடுக்கும்படி தூண்டுகிறது. ஒன்று, ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும். அப்படிப்பட்ட தீர்மானம் இரட்சிப்புக்கு நேராகவோ அல்லது கடின இருதயத்திற்கு நேராகவோ வழிநடத்துகிறது. நித்திய வாழ்வு அல்லது நித்திய மரணத்திற்கு நேராக வழிநடத்துகிறது. அவர்களில் அநேகர் தன்னுடைய வார்த்தைகளை விசுவாசிக்க மாட்டார்கள் என்று பவுல் ஏற்கெனவே அறிவித்திருந்தான். அவர்களுக்கு அது இயலாத காரியமாகத் தோன்றியது. ஆபகூக் தீர்க்கதரிசி முன்னுரைத்தது உண்மையாக இருக்கிறது. (ஆபகூக் 1:5) மனிதனுடைய இருதயத்தின் நினைவிற்கும் மனதிற்கும் அப்பாற்பட்டு இறைவன் மிகப்பெரிய வேலையை செய்கிறார். எனவே இறைவன் உண்மையாகவே நிறைவேற்றுகிறதை அநேகர் விசுவாசிக்கிறதில்லை.

அந்தக் கூட்டத்தின் முடிவில் பவுலையும், பர்னபாவையும் அடுத்த ஓய்வு நாளுக்கு வந்து இரட்சிப்பின் செய்தியைக் குறித்து இன்னும் அதிகமாக கூறும்படி அழைத்தார்கள். அவர்களின் வார்த்தைகள் அவர்களுடைய மனதை ஆட்கொண்டது. ஆவிக்குரிய ஆர்வத்தினால் அவர்களை நிறைத்தது. அவர்களது வீட்டில் இறைவனுக்குப் பயந்திருந்த சில யூதர்களும் அவர்களுடன் இணைந்து கொண்டார்கள். அவர்களுடன் கிருபையினால் கிடைக்கும் இரட்சிப்பைக் குறித்து நீண்ட மணிநேரங்கள் பேசினார்கள். இரட்சிப்பின் அஸ்திபாரம் கிருபை என்பதை அப்போஸ்தலர்கள் ஆரம்பத்தில் இருந்தே தெளிவுபடுத்தி காண்பித்தார்கள். மனிதன் தானாகவே செய்ய இயலாத ஒன்றையும் அது நிர்ப்பந்திக்கவில்லை. நற்செய்தி என்பது கடைப்பிடித்து நடக்கவேண்டிய சட்டத்திட்டங்கள் அல்ல. நமக்கு பாவமன்னிப்பை வழங்குகின்ற இறைவனது செயலை நற்செய்தி சாட்சியிடுகிறது. தங்களது இருதயங்களில் இயேசுவின் மீது விசுவாசம் வைக்கும் அனைவருக்கும் கிறிஸ்துவின் வல்லமையும், வாழ்வும் இலவசமாக வழங்கப்படுகிறது.

விண்ணப்பம்: பரலோகில் இருக்கும் எங்கள் பிதாவே, நீர் உமது குமாரனை மரணத்தில் இருந்து எழுப்பியதற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். அவர் நிமித்தம் எங்களுடைய எல்லாப் பாவங்களையும் மன்னியும். உமது குமாரனில் எங்களை நிலைநிறுத்தும். உமது இரட்சிப்பின் செய்தியினால் எங்களுடைய மனங்களை நிரப்பும். நாங்கள் உமது வல்லமை, செயல் மற்றும் வெற்றியை சாட்சிபகர உதவும்.

கேள்வி:

  1. இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து பவுல் என்ன பிரசங்கித்தான்? அவருடைய உயிர்த்தெழுதலை ஆதாரமாக வைத்து அவன் கூறிய நற்செய்தி என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on October 07, 2013, at 10:30 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)