Previous Lesson -- Next Lesson
3. அனடோலியாவின் அந்தியோகியாவில் பிரசங்கித்தல் (அப்போஸ்தலர் 13:13-52)
அப்போஸ்தலர்கள் 13:44-52
44 அடுத்த ஓய்வுநாளிலே கொஞ்சங்குறையப் பட்டணத்தாரனைவரும் தேவவசனத்தைக் கேட்கும்படி கூடிவந்தார்கள்.45 யூதர்கள் ஜனக்கூட்டங்களைக் கண்டபோது பொறாமையினால் நிறைந்து, பவுலினால் சொல்லப்பட்டவைகளுக்கு எதிரிடையாய்ப் பேசி, விரோதித்துத் தூஷித்தார்கள்.46 அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்திய ஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக்கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்.47 நீர் பூமியின் கடைசிபரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவைத்தேன் என்கிற வேதவாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறபடியினால் இப்படிச் செய்கிறோம் என்றார்கள்.48 புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்.49 கர்த்தருடைய வசனம் அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று.50 யூதர்கள் பக்தியும் கனமுமுள்ள ஸ்திரீகளையும் பட்டணத்து முதலாளிகளையும் எடுத்துவிட்டு, பவுலையும் பர்னபாவையும் துன்பப்படுத்தும்படி செய்து, தங்கள் எல்லைகளுக்குப் புறம்பாக அவர்களைத் துரத்திவிட்டார்கள்.51 இவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்துக்குப் போனார்கள்.52 சீஷர்கள் சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டார்கள்
பரிசுத்த ஆவியானவர் பவுலை வழிநடத்தினார்.கிறிஸ்துவின் நற்செய்தியை புறக்கணித்ததன் மூலம் அழகான சீப்புரு தீவு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது. அனடோலியாவின் அந்தியோகியா எல்லைப் பகுதிக்கு அவர்கள் வந்தார்கள். ஆவியானவர் செயலின் அடையாளங்கள் தோன்றியது. அப்போஸ்தலரின் சாட்சியின் மூலம் முழு பட்டணமும் அசைக்கப்பட்டது. ஒரு ஓய்வுநாளில் இருந்து அடுத்த ஓய்வுநாள் வரை உள்ள ஏழு நாட்களில் பவுலும், பர்னபாவும் நீதியின் மீது தாகமாயிருந்த அநேக மக்களுக்கு நற்செய்தியை கூறினார்கள். இயேசுவில் இருக்கும் புதிய நம்பிக்கை குறித்து அவர்களுக்கு அறிவித்தார்கள். இதன் மூலம் அந்தியோகியாவில் ஆண்டவருடைய நிலம் உழப்பட்டது, உரமிடப்பட்டது. ஜெப ஆலயங்களில் உள்ள புறஜாதிகள் நியாயப்பிரமாணத்திற்கு தங்களை ஒப்புக்கொடாமலும், யூதமதத்திற்கு திரும்பாமலும் இருப்பதை ஜெப ஆலயத்து மூப்பர்கள் கண்டார்கள். மரித்தோரிலிருந்து எழுந்தவரின் மீது விசுவாசம் வைத்து பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்வதைக் கண்டார்கள். அவர்கள் இயேசுவிற்கு விரோதமாக தூஷணமாக பேசினார்கள். நற்செய்தியை புறக்கணித்தார்கள். யூதர்களின் மூப்பர்கள் பவுலுக்கு எதிராக குரல் எழுப்பி, அவனுக்கு மாறுபட்டு நிற்பதைப் பார்ப்பது எவ்வளவு பயங்கரமாக உள்ளது. மேலும் பவுல் தனது செய்தியை தொடர்ந்து பேசாதபடி அவர்கள் தடுக்க முயற்சித்தார்கள். ஆனால் நூற்றுக்கணக்கான மக்கள் ஆவிக்குரிய தாகத்துடன் இரட்சிப்பின் செய்திக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போஸ்தலன் பேசுவதை நிறுத்தினான். யூதர்களை நேரடியாக பார்த்து பேச ஆரம்பித்தான். மிகவும் உறுதியாக அதே சமயத்தில் கெஞ்சும் இருதயத்துடன் பேசினான். “நீங்கள் முதலாவது இரட்சிப்பின் செய்தியை கேட்கும்படி பரிசுத்த ஆவியானவர் என்னை வழிநடத்தினார். இறைவன் தெரிந்தெடுத்த உங்கள் முற்பிதாக்கள் நிமித்தம் உங்களுக்கு பங்கும், உரிமையும் உண்டு”. ஆனால் நீங்கள் கிறிஸ்து தரும் வாழ்வை பெற்றுக்கொள்வதற்கு தகுதியுள்ளவர்களாக உங்களை கருதவில்லை. நீங்கள் ஆவிக்குரிய மரணத்தில் தொடர்ந்து இருக்கிறீர்கள். நீங்கள் நியாயப்பிரமாணத்திற்கு சேவை செய்பவர்களாக உள்ளீர்கள். நீங்கள் மன்னிப்பு பெறாதவர்களாக வாழ்கிறீர்கள். சுய மீட்பை தவறாக நம்புகிறீர்கள். எனவே இறைவன் விதித்த கடுமையான நியாயத்தீர்ப்பு உங்களுக்கு நேரிடும். உங்கள் சகோதரர்கள் எருசலேமில் உண்மையான கிறிஸ்துவை புறக்கணித்தது போல நீங்களும் செய்கிறீர்கள்.
நாங்கள் பழைய ஏற்பாட்டைச் சார்ந்தவர்கள் என்றாலும் அதற்கு கட்டுப்படவில்லை. ஏனெனில் கிறிஸ்து புறஜாதிகளிடத்திற்கும் எங்களை அனுப்பினார். உலகளாவிய நிலையில் நற்செய்தியை அறிவிப்பதின் மூலம் நாங்கள் ஏசாயா தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறோம். கிறிஸ்து புறஜாதிகளுக்கு ஒளியாயிருக்கிறார். (ஏசாயா 49:6) உலகத்தின் கடைசி பரியந்தமும் இரட்சிப்பை கொண்டு செல்கிறார்.
இந்த தீர்க்கதரிசனம் தன்னைக் குறித்து சொல்கிறது என்பதைப் பவுல் புரிந்துகொண்டு தைரியமடைந்து, உறுதியான விசுவாசத்தை பெற்றான். தீர்க்கதரிசி ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தின்படி புறஜாதிகளுக்கு அப்போஸ்தலன் என்ற நிலையை பெற்றுக்கொண்டான். பவுல் கிறிஸ்துவில் இருந்தான். அவன் தனது சொந்த ஒளியை பிரதிபலிக்கவில்லை. அவனில் இருந்த கிறிஸ்துவின் ஒளியை பிரதிபலித்தான். பவுலின் பிரசங்கத்தை பயன்படுத்தி இன்றும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களை இரட்சகர் இரட்சிக்கிறார். இந்த அப்போஸ்தலனைப் போல வேறு எவரும் கிறிஸ்துவுக்குள் நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல் மற்றும் மீட்கப்படுதல் குறித்த அர்த்தங்களை தெளிவுப்படுத்தியதில்லை. இவன் இறைவனுடைய அன்பினால் வழி நடத்தப்பட்டவன் ஆவான்.
இரண்டு அப்போஸ்தலர்கள் மற்றும் யூதர்கள் இடையே நிகழ்ந்த கண்டனங்கள் மற்றும் பழிச் சொற்களை பெருந்திரள் கூட்டம் உன்னிப்பாக கவனித்தது. யூதர்கள் வைராக்கியம், பகை, கோபம் மற்றும் தூஷணத்தால் நிறைந்திருப்பதை அவர்கள் கண்டார்கள். ஆனால் பவுலும் பர்னபாவும் சமாதானத்துடன், தாழ்மை, அன்பு, துக்கம் மற்றும் இரக்கத்தினால் நிறைந்திருப்பதைக் கண்டார்கள். இரட்சிப்பிற்காக யூதர்கள் மட்டும் தெரிந்துகொள்ளப்படவில்லை என்பதை அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள். இவர்களில் வெளிப்பட்ட இறைவனின் அன்பினால் அவர்கள் ஆட்கொள்ளப்பட்டார்கள். அவர்கள் மூலமாக பேசிய ஆவியானவரின் வார்த்தையை நம்பினார்கள். அவர்கள் கூறியதின் ஆழமான மற்றும் மேன்மையான காரியங்களை முழுமையாக புரிந்து கொள்ளவில்லையெனினும் விசுவாசித்தார்கள்.
இரண்டு அப்போஸ்தலர்களின் சாட்சியை மகிழ்ச்சியுடன் அநேக புறஜாதியினர் ஏற்றுக்கொண்டார்கள். எல்லா மக்களுக்கும் இரட்சிப்பு ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளது என்பதை விசுவாசித்தார்கள். அவர்கள் முதிர்ச்சியுடன் உறுதியான மற்றும் விவேகமுள்ள விசுவாசத்திற்குள் வரவில்லையென்றாலும் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார்கள். சிலரில் காணப்பட்ட ஆரம்ப உற்சாகம் குறையத் தொடங்கியது. இரட்சிப்பில் உறுதியாக இருந்தவர்கள் மட்டுமே கிறிஸ்துவில் நிலைத்திருந்தார்கள்; இரட்சகருக்கு தங்களை முழுமையாக அர்ப்பணித்தார்கள். அவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டார்கள். ஆனால் சிலரே தெரிந்துகொள்ளப்பட்டார்கள். இந்த இரகசியத்தை லூக்கா விளக்கப்படுத்துகிறார். இறைவன் மட்டுமே இருதயங்களை அறிகிறார். நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள். பரமபிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் ஒருவனும் இயேசுவினிடத்தில் வருவதில்லை. எல்லா மனிதரும் இரட்சிப்படைய இறைவன் விரும்புகிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அவர்கள் அனைவரும் வரவில்லை. ஒவ்வொரு விசுவாசியும் தனக்குள் ஒரு பெரிய இரகசியத்தை உடையவனாக இருக்கிறான். நமது விசுவாசம் என்பது கூட இறைவனிடமிருந்து வரும் ஈவு மற்றும் சிலாக்கியமாக உள்ளது. நீ அதற்காக இயேசுவிற்கு நன்றி கூறுகிறாயா? எல்லா அவிசுவாசமும் பாவம் என்பது உனக்குத் தெரியுமா? இயேசுவை புறக்கணிக்கும் அனைவரும் நியாயத்தீர்ப்பு நாளின் போது ஆக்கினைத் தீர்ப்படைவார்கள்.
இரட்சிப்பினால் நிறைந்திருந்தவர்கள் பரிசுத்த ஆவியானவரின் மகிழ்ச்சியை அந்தியோகியோ மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களுக்கு பரப்பினார்கள். இப்படிப்பட்ட பிரசங்கத்தைப் போன்ற பிரசங்கத்தினால் தான் எழுப்புதலின் ஒவ்வொரு வெளிப்பாடும் ஆரம்பிக்கிறது. நற்செய்தியை சாட்சியிடுகிற ஒவ்வொருவரும் எந்தவொரு தொகையையும் அதற்கென்று பெறுவதில்லை என்பது வெளிப்படையான ஒன்று. ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அவர்களை யாரும் வழிநடத்துவதில்லை. பரிசுத்த ஆவியானவர் மட்டுமே கிறிஸ்துவை பின்பற்றுபவர்களில் செயல்படுகிறார், வழி நடத்துகிறார்.
இருப்பினும் மதத்தலைவர்கள் மத்தியில் சாத்தானின் ஆவியும் தொடர்ந்து வேலை செய்கிறது. அவர்கள் நியாயப்பிரமாணத்தை காப்பவர்களைப் போல பாசாங்கு பண்ணினார்கள். அனடோலியாவின் அந்தியோகியாவை சேர்ந்த யூதர்கள், அந்தியோகியா பெண்களிடம் வந்து, அவர்கள் தங்கள் கணவன்களுக்கு அழுத்தம் கொடுத்து பட்டணத்தை விட்டு போகச் செய்யும்படி தூண்டினார்கள். சூழ்ச்சியும், அதிகாரமும் நற்செய்தி பரவுவதற்கு எதிராக உள்ளன. ஆனால் விசுவாசிகளில் பரிசுத்த ஆவியானவர் வெற்றியடைந்தார். அவர்கள் பாடுகளை பொறுமையாய் சகித்தார்கள். அந்த பிரச்சனைகள் மத்தியிலும் பரிசுத்த ஆவியின் மகிழ்ச்சியினால் அவர்கள் பெலப்பட்டார்கள்.
பவுலும் பர்னபாவும் பட்டணத்தை விட்டுப் போனார்கள். தங்கள் கால்களில் இருந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப் போட்டார்கள். புறக்கணிக்கப்படும் போது கிறிஸ்து என்ன செய்ய கட்டளையிட்டாரோ அதையே அவர்கள் செய்தார்கள். புறக்கணித்தவர்களை இறைவனுடைய நியாயத்தீர்ப்பிற்க்கு ஒப்புக்கொடுத்தார்கள். பரிசுத்த ஆவியின் மகிழ்ச்சியினால் நீங்கள் நிறைந்திருக்கிறீர்களா? அல்லது நீங்கள் கிறிஸ்துவின் இரட்சிப்பை புறக்கணிக்கிறீர்களா? நீங்கள் இறைவனுடைய நியாயத்தீர்ப்பிற்க்கு ஆளாவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். உமது சிலுவை மரணத்தின் மூலமாக நீர் மனிதர்களை இரட்சிக்கிறீர். ஒவ்வொரு விசுவாசிக்கும் உமது வாழ்வின் ஆவியைத் தருகிறீர். எங்கள் தேசத்தின் ஒவ்வொரு பட்டணத்திலும் உமது அழைப்பைக் கேட்கும்படி நீர் தெரிந்துகொண்டவர்கள் உமது நற்செய்தியினால் நிரப்பப்படவும், உலகத்தின் ஒளியாக அவர்கள் மாறவும் நாங்கள் விண்ணப்பம் பண்ணுகிறோம்.
கேள்வி:
- புறஜாதிகளுக்கு பிரசங்கிப்பதற்கான தனது உரிமையை பவுல் எவ்விதம் சாட்சியிட்டார்? இந்த விசுவாசம் விக்கிரக ஆராதனைக்காரர்கள் மத்தியில் எப்படி உணரப்பட்டது?