Previous Lesson -- Next Lesson
3. உலகம் கிறிஸ்துவையும் அவரது சீஷர்களையும் வெறுக்கிறது (யோவான் 15:18 – 16:3)
யோவான் 15:26-27
26 பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார். 27 நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.
உலகம் இறைவனை வெறுத்து, அவருடைய ஒரே மகனைச் சிலுவையில் அறைந்ததற்கு பதிலாக இந்த திரித்துவ இறைவன் என்ன செய்தார்? தம்முடைய பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார். பரிசுத்த ஆவியானவரின் வருகை இந்நாட்களிலுள்ள அதிசயமாகும். அவர் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு வருகிறபடியினாலும் தன்மையிலும் எண்ணங்களிலும் முற்றிலும் இறைவனோடு ஒத்திருக்கிறபடியாலும் பரிசுத்த ஆவியின் வருகை இறைவன் இவ்வுலகத்திற்கு வருகிறார் என்பதையே குறிக்கிறது. அவர் படைப்பில் பங்குள்ளவராக உலகத்தின் மீட்பை விரும்புகிறார். ஆவியானவர் இவ்வுலகத்திலிருக்கும் தீமையை நியாயம்தீர்த்து, அனைத்து அசுத்தங்களையும் வெளிப்படுத்தவதால் நம்மைப் பரிசுத்தத்திற்கு நேராக நடத்துகிறார். இவ்வுலகம் பெருமையினாலும், பிடிவாதத்தினாலும், வஞ்சனையினாலும் திக்குமுக்காடிக்கொண்டிருக்கும்போது, பரிசுத்த ஆவியின் பிரசன்னம் சீஷர்களுடைய தாழ்மைக்கும் சுயவெறுப்புக்கும் தூண்டுகோலாக அமைகிறது. முதன்மையாக அவர் சத்திய ஆவியாக இருந்து உலகத்தின் தீமைகளைக் கண்டித்து உணர்த்துகிறார்.
அதேவேளையில் சீஷர்களுடைய இரட்சிப்பை முழுமைப்படுத்தும் இறைமகன் இயேசுவே என்று அவர்களைப் பரிசுத்த ஆவியானவர் ஆறுதல்படுத்துகிறார். இந்த ஆறுதலின் ஆவியானவர் குமாரனுடைய அன்பில் நாம் இறைவனையே காணும்படியாக நம்முடைய ஆவிகளில் இயேசுவுக்குச் சாட்சிகொடுக்கிறார். பரிசுத்த ஆவியானவரின்றி மெய்யான சத்தியத்தை நம்மால் உணர்ந்துகொள்ள முடியாது. பரிசுத்த ஆவியானவர் நம்மை நற்செய்தியின் மூலமாக அழைத்து, அவருடைய ஈவுகளினால் நம்மில் ஒளியேற்றி, மெய்யான விசுவாசத்தினால் நம்மைப் பரிசுத்தப்படுத்தாவிட்டால், நம்முடைய சொந்த முயற்சியினாலோ, செயல்பாடுகளினாலோ நாம் ஒருபோதும் இயேசு கிறிஸ்துவை நம்முடைய கர்த்தராக ஏற்றுக்கொண்டிருக்கவும் முடியாது அவரிடம் நாம் வந்திருக்கவும் முடியாது என்பதை நாம் அனைத்து விசுவாசிகளுடனும் சேர்ந்து அறிக்கை செய்கிறோம். அவரே நம்மை ஒரே விசுவாசத்தில் காத்துக்கொள்கிறார். பரிசுத்த ஆவியானவரே நம்முடைய சாட்சியை வலுவுள்ளதாக்குகிறார். நீங்கள் கிறிஸ்துவை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ய விரும்பினால் உங்களுடைய சொந்த அறிவையோ அனுபவத்தையோ சார்ந்திருக்க வேண்டாம். ஞானத்தின் ஆவியானவரிடம் உங்களை முழுவதுமாக ஒப்புக்கொடுங்கள். இயேசுவை எவ்வாறு கனப்படுத்தலாம் என்பதை அறிந்துகொள்ளும்படி அவருடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். இவ்வாறு நீங்கள் பரிசுத்த ஆவியானவருடைய சத்தத்திற்கு உள்ளபூர்வமாகச் செவிகொடுத்தால், அது கர்த்தராகிய இயேசுவின் திறமையான அப்போஸ்தலனாக அவருக்காக பேசவும் சாட்சிபகரவும் உங்களுக்குத் துணைசெய்யும்.
இயேசு தம்முடைய பன்னிரெண்டு அப்போஸ்தலர்களையும் தம்முடைய சாட்சிகளாகத் தெரிந்துகொண்டார். அது அவர்களுக்கே உரிய தனிச்சிறப்பான ஆசீர்வாதம். அவர் இயேசுவின் இவ்வுலக வாழ்க்கைக்கும் ஊழியத்திற்குமான கண்கண்ட சாட்சிகள். அவர்கள் கண்டும், கேட்டும், தொட்டும் இருக்கிறதைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறார்கள். அவர்களுடைய வார்த்தைகள் இறைவன் இவ்வுலகத்தில் இருக்கிறார் என்பதை நியாயப்படுத்துவதாக உள்ளது. நம்முடைய விசுவாசம் அந்த சாட்சியையே சார்ந்திருக்கிறது. இயேசு ஒரு புத்தகத்தையோ, ஒரு நிருபத்தையோ எழுதவில்லை. மாறாக தம்முடைய மீட்பளிக்கும் செய்தியை பரிசுத்த ஆவியானவருடைய சாட்சிக்கும், தம்முடைய சீஷர்களுடைய நடத்தைக்கும் பேச்சுக்கும் ஒப்புக்கொடுத்தார். சத்திய ஆவியானவர் பொய் சொல்ல மாட்டார். கிறிஸ்தவினுடைய சீஷரடகளின் வாயின் மூலமாக அவருடைய அன்பின் வல்லமையை நோயுற்ற இந்த உலகத்திற்கு நிரூபித்துக் காண்பிக்கிறார். “பரிசுத்த ஆவி உங்களில் வரும்போது, நீங்கள் பெலனடைந்து எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” என்று இயேசு தாமே கூறியிருக்கிறார்.
விண்ணப்பம்: பரிசுத்தராகிய இறைமைந்தனே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நீர் பிதாவோடும் பரிசுத்த ஆவியோடும் ஒன்றாயிருக்கிறீர். எங்களைத் திக்கற்றவர்களாக விடாமல், உம்முடைய பரிசுத்த ஆவியானவரை நீர் சாட்சியாக அனுப்பியிருக்கிறீர். உம்முடைய வருகையினால் நாங்கள் பரிசுத்தப்படுவோமாக. பலர் உம்மை விசுவாசிக்கும்படி உமக்குச் சாட்சியிட எங்களுக்கு கற்றுத்தாரும்.
கேள்வி:
- கிறிஸ்துவைச் சிலுவையில் அறைந்த உலகத்தை இறைவன் எவ்வாறு சந்திக்கிறார்?