Previous Lesson -- Next Lesson
4. தனது தேச மக்கள் முன்பு பவுலின் வாதம் (அப்போஸ்தலர் 22:1-29)
அப்போஸ்தலர் 22:9-16
9 என்னுடனேகூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை.10 அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ; நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.11 அந்த ஒளியின் மகிமையினாலே நான் பார்வையற்றுப்போனபடியினால், என்னோடிருந்தவர்களால் கைலாகுகொடுத்து வழிநடத்தப்பட்டுத் தமஸ்குவுக்கு வந்தேன்.12 அப்பொழுது வேதப்பிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற சகல யூதராலும் நல்லவனென்று சாட்சிபெற்றவனுமாகிய அனனியா என்னும் ஒருவன்,13 என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வைடைவாயாக என்றான்; அந்நேரமே நான் பார்வையடைந்து, அவனை ஏறிட்டுப்பார்த்தேன்.14 அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும், நீதிபரரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார்.15 நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய்.16 இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள்போகக் கழுவப்படு என்றான்.
தமஸ்குவின் வாசல்கள் அருகில் சவுலின் கூட்டாளிகள் வருமுன்னே கிறிஸ்துவின் அழகான மகிமையின் ஒளியைக் கண்டார்கள். அது சூரியனை விட அதிகப் பிரகாசமுடையதாய் இருந்தது. ஆனால் அவர்கள் உயிருள்ள, உயிர்த்தெழுந்த ஒருவரை அறியாதிருந்தார்கள், அவரது சத்ததத்தை கேட்காதிருந்தார்கள். அதுபோலவே மரித்தோரின் உயிர்த்தெழுதலின் போது தெரிந்து கொள்ளப்பட்ட விசுவாசிகள் மட்டுமே கிறிஸ்துவை காண முடியும், அவரது சத்தத்தை புரிந்துகொள்ள முடியும். அவர்கள் மட்டுமே அவருடைய அன்பின் ஆவியை அறிய முடியும். அவரது ஜீவன் அவர்களுக்குள் உள்ளது. அவருடைய நியாயத்தீர்ப்பின் போது அவிசுவாசிகளும், மாய்மாலக்காரர்களும் அழிந்து போவார்கள். நியாயத்தீர்ப்பின் இடிமுழக்க சத்தத்தை மட்டுமே அவர்கள் கேட்பார்கள்.
பவுலுக்கு கிறிஸ்து தன்னை வெளிப்படுத்திய போது, நியாயப்பிரமாண செயல்களை அடிப்படையாகக் கொண்ட தனது சொந்த நீதியை அவன் உடனே விட்டுவிட்டு, ஆண்டவராகிய கிறிஸ்து மற்றும் அவரது கிருபையின் மீது நம்பிக்கை வைத்தான். ஆண்டவர் அவனது விசுவாசத்தை சோதிக்கும்படி தமஸ்குவிற்கு அவனை அனுப்பினார். அங்கே இறைவனுடைய அடிப்படை சித்தத்தை அவன் கேட்டான். ஆண்டவராகிய இயேசு அவனுக்காக வைத்திருந்த சிறப்பான திட்டத்தை அறிந்து கொண்டான். தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி புறஜாதிகளுக்கு பரிசுத்த பணியைச் செய்யும்படியாக நியமிக்கப்பட்டான்.
கல்வியில் தேர்ந்த இந்த நியாயப்பிரமாண மேதையின் பெருமையை உடைக்க கிறிஸ்து சபையில் இருந்து எளிய சகோதரனை தெரிந்தெடுத்தார். யூத மதத்தில் இருந்து வந்த ஓர் விசுவாசி அனனியா. கிறிஸ்துவில் அவனது விசுவாசத்தின் மூலம் இறைவனுடைய குடும்பத்தின் ஒரு அங்கமாக இருந்தான். ஆண்டவரின் நாமத்தினால் அவன் பவுலிடம் வந்தான். அவனது பார்வை திரும்பக் கிடைக்கும்படியாக செயல்பட்டான். சவுலுக்கு உடனடியாக பார்வை கிடைத்தது. கிறிஸ்துவின் மகிமை அவனது கண்களை குருடாக்கியது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவனை அந்தகார இருளில் இருந்து மனந்திரும்புதலுக்கும், விசுவாசத்திற்கும் நேராக வழிநடத்தினார். பவுலின் கண்கள் திறக்கப்பட்டது. அவன் கிறிஸ்துவிற்குள் ஒரு சகோதரனைக் கண்டான். அவன் மூலமாகத் தான் பரிசுத்த ஆவியானவர் தங்கியிருக்கிற இறைவனுடைய சபையைக் குறித்து பவுல் அறிந்து கொண்டான். இது நம்முடைய காலத்தின், சபையின் காலத்தின் இரகசியமாக இருக்கிறது.
நமது சொந்த மகிழ்ச்சிக்காக மட்டுமே கிறிஸ்து நம்முடைய ஆவிக்குரிய கண்களைத் திறக்கவில்லை. நாம் இறைவனுடைய சித்தத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். அவருடைய செயலின் மூலமாக நாம் மாற்றமடைய வேண்டும். பவுல் அனனியா மூலமாக ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுடைய இறைவனின் சித்தத்தை அறிந்து கொண்டார். அதை உலகிற்கு வெளிப்படுத்த இந்த கொலைகார நியாயப்பிரமாண மேதைக்கு கர்த்தர் கிருபை செய்தார். இறைவனின் உண்மையான சித்தம் என்ன? பரிசுத்த ஆவியானவரால் பிறந்த இயேசுவை நீதியுள்ளவராக, பரிசுத்தமுள்ளவராக அறிந்து கொள்வதே அவரது சித்தம். நாம் அவர் மீது விசுவாசம் வைக்கவே இறைவன் விரும்புகிறார். உங்கள் கண்கள் திறக்கப்பட்டுள்ளதா? இறைவனின் இரக்கம் மற்றும் அவருடைய உன்னத அன்பை இயேசுவின் மூலம் நீங்கள் உணர்ந்து கொண்டீர்களா? அவர் சிலுவையில் காண்பித்த பொறுமை, இப்போதிருக்கும் அவருடைய மகிமையை நீங்கள் அறிந்துள்ளீர்களா? நீங்கள் இயேசுவை அறியும்படியும், அவரது சத்தத்தை கேட்கும்படியும் இயேசுவின் வாழ்வைக் குறித்து படியுங்கள். நம்முடைய ஆண்டவர் மரித்தவர் அல்ல, அவர் உயிரோடிருக்கிறார். அவர் வாழுகிறார், பேசுகிறார், ஆறுதல் தருகிறார், கட்டளையிடுகிறார். மனிதன் அப்பத்தினாலே மாத்திரம் அல்ல, இறைவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். இரட்சகரின் சத்தத்தை கவனியுங்கள். அவருடைய உடன்படிக்கை, அவருடைய ஐக்கியத்தில் அவர் உங்களை உறுதிப்படுத்துவார். அப்போது அவருடைய சாயலுக்கு ஒப்பாக நீங்கள் பரிசுத்தராவீர்கள். இறைவனின் சித்தத்திற்கு தாழ்மையுள்ள சாட்சியாக இருப்பீர்கள்.
நசரேயனாகிய இயேசு ஒரு சாதாரணமான மனிதன் அல்ல, அவர் வல்லமையுள்ள ஆண்டவர். நற்செய்தியின் மூலம் நீங்கள் அவரை சந்திக்க முடியும். நீங்கள் அவருடைய குணாதிசயத்தின் அழகை காண முடியும். பரிசுத்த ஆவியின் செயலின் மூலம் நீங்கள் அவரை அறிய முடியும். அவருடைய அனுதின வழிநடத்துதலினால் நீங்கள் கீழ்ப்படிய முடியும். ஆண்டவருக்கு சாட்சியாக இருப்பதற்கு நீங்கள் தெரிந்து கொள்ளப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவர் யார் என்பதையும், என்ன செய்தார் என்பதையும், எல்லா மனிதர்களுக்கும் ஆண்டவர் இயேசுவை அறிவிக்க வேண்டும்.
நடந்ததை விவரிக்கும்படிக்கு அனனியா பவுலுக்கு நேரமளிக்கவில்லை. அவன் உடனடியாக இறைவனுடைய முதன்மையான சித்தத்தை விளக்கினான். அவனது வாயில் கிருபையின் வார்த்தைகளை வைத்தான். இந்த இறைவனின் செயல் நம்மையும் செயல்படத் தூண்டுகிறது. இது கற்பனை அல்ல. இருப்பினும் பவுலின் பாவங்கள் அங்கே ஆவிக்குரிய தடையாக இருந்தது. அவனுடைய அறியாமை, இறைவனுடனான பகை, அப்பாவி மக்களை கொன்ற செயல் போன்ற பாவங்கள் இருந்தன. ஆனால் இயேசு சிலுவையிலே அனைத்து பாவங்களையும் அகற்றிவிட்டாôர். அருமையான சகோதரனே அவனுடைய பாவங்கள் அனைத்தையும் கிறிஸ்துவின் இரத்தம் நீக்கிவிட்டது என்பதை அறிந்துகொள்ளுங்கள். பவுல் பிறக்கும் முன்பாகவே கிருபையினால் நீதிமானாக்கப்பட்டான். அவன் இந்த உண்மையை ஏற்றுக்கொண்டான். இந்த இலவசமான நீதிமானாக்கப்படுதலில் விசுவாசம் வைத்தான். அதற்கு சாட்சியாக ஞானஸ்நானம் எடுத்தான். ஞானஸ்நான அடையாளம் மூலமாக கல்வியில் சிறந்த சட்ட மேதை சுயத்திற்கு மரிக்க வேண்டியது அவசியமாக இருந்தது. கிறிஸ்துவிற்கு நிபந்தனையற்ற நிலையில் தன்னை ஒப்புக்கொடுப்பதன் மூலம் இரட்சிப்பை தேடவும், முழுமையான பரிசுத்தத்தை அடையவும் அவன் தனது தேவையை அறிக்கையிட வேண்டியதிருந்தது.
அருமையான சகோதரனே, நீ ஞானஸ்நானம் எடுத்திருக்கிறாயா? நீ உனது பழைய வாழ்வை விட்டுவிட்டு உறுதியாகவும், இறுதியாகவும் கிறிஸ்துவின் எல்லைகளுக்குள் நுழைந்திருக்கிறாயா? சிலுவையின் நிமித்தம் நீ நீதியுள்ளவனாய் இருக்கிறாய். உனது இரட்சிப்பில் நம்பிக்கை வை. ஏனெனில் கிறிஸ்து அதை முழுமையாகவும், பூரணமாகவும் செய்திருக்கிறார். உனது ஞானஸ்நானத்தின் அர்த்தத்தை உணர்ந்துகொள். கிறிஸ்துவின் மரணம் மற்றும் வேண்டுதலினால் நீ பரிசுத்தமுள்ள இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறாய். அவர் மூலமாக நீ என்றென்றும் வாழும்படியாக உனது ஆண்டவரிடம் விண்ணப்பம்பண்ணு.
விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நீர் எனது பாவங்களை முழுமையாக நீக்கிவிட்டீர். எனது குறைகளையும், தவறுகளையும் உமக்கு முன்பாக அறிக்கையிடுகிறேன். உமது பிரசன்னத்தை விட்டு என்னைத் தள்ளிவிடாதேயும். என் கண்களுக்கு முன்பாக உமது சாயலை வெளிப்படுத்தும். நான் மறுபடியும் பிறக்கவும், திருமுழுக்கு என்ற அடையாளத்தின் மூலம் உம்முடனான ஐக்கியத்தில் வரவும் உதவிசெய்யும்.
கேள்வு:
- இறைவனுடைய சித்தத்தின் சாராம்சம் என்ன?