Previous Lesson -- Next Lesson
11. பேதுருவும் யோவானும் சிறையிலடைக்கப்படுதல், நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுதல் (அப்போஸ்தலர் 4:1-22)
அப்போஸ்தலர் 4:19-22
19 பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள். 20 நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள். 21 நடந்த சங்கதிகளைக்குறித்து எல்லாரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், ஜனங்களுக்குப் பயந்து அவர்களைத் தண்டிக்க வகையொன்றுங்காணாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள். 22 அற்புதமாய்ச் சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான்.
இரண்டு அப்போஸ்தலர்களும், சுகமாக்கப்பட்ட மனிதனும் இயேசுவின் நாமத்தில் இனி ஒருபோதும் பிரசங்கிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்மானித்தது. அந்த இரண்டு சாட்சிகளும் இறைவனுடைய சித்தம் மற்றும் மனிதர்களுடைய ஆலோசனை இரண்டுக்கும் இடையே எதை தெரிந்தெடுப்பது என்று வரும் போது இறைவனுக்கு கீழ்ப்படிவதை தவிர வேறு வழி இல்லை என்று பதிலளித்தார்கள். மாய்மாலமான உண்மையின் அனைத்து வடிவங்களையும், பாவனைகளையும் அவர்கள் எதிர்த்து நிற்க வேண்டியதாய் இருந்தது. புரட்சியைக் கொண்டு வரும் ஆவியினால் இந்த எதிர்ப்பு வரவில்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு கீழ்ப்படிவதின் மூலம் இது ஏற்பட்டது. ஆயுத புரட்சிக்கு இவர் விசுவாசிகளை வழிநடத்தாமல், இயேசுவிற்காக தைரியமாய் சாட்சிபகரும்படி வழிநடத்தினார்.
இரண்டு அப்போஸ்தலர்களும் இணைந்து பதிலளித்தார்கள். “நாங்கள் கண்டதையும். கேட்டதையும் குறித்து எங்களால் பேசாமலிருக்கக் கூடாது,. மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுடனான அனுபவங்களால் அவர்களது இருதயங்கள், வாழ்வுகள் நிறைந்திருந்தது. இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். ஆகையால் பிரியமான சகோதரனே, நாள் முழுவதும் நீ எப்படி பேசுகிறாய்? எத்தனை முறை நீ இயேசுவின் நாமத்தை உச்சரிக்கிறாய்? ஆண்டவரின் ஆவியானவர் உனக்குள் வாசம் பண்ணுகிறாரா? அல்லது பணம், ஒழுக்கமின்மை, பேதங்கள் இவைகளின் ஆவிகள் உன்னை ஆளுகை செய்கிறதா? நீ என்ன பேசுகிறாயோ அதுவாகவே நீ இருக்கிறாய். நீ எதைக் குறித்து அமைதியாக இருக்கிறாயோ அதுவல்ல நீ. இயேசுவின் பரிசுத்தமான சாட்சிகள் அவர்களுடைய உயிருள்ள ஆண்டவரை மகிமைப்படுத்துவதற்கு உதவுவதில்லை. அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றுள்ளார்கள். அவர் இயேசுவிற்கு சாட்சிகளாய் இருக்கும்படி அவர்களை உருவாக்குகிறார். இது அவர்களுடைய பணி, ஊழியம், அதிகாரம் ஆகும். இறைவனின் வல்லமை என்பது இயேசுவின் செயல்கள் மற்றும் வார்த்தைகளைக் குறித்த சாட்சியை உள்ளடக்கியுள்ளது. ஆகவே பேசுங்கள். அமைதியாய் இருக்க வேண்டாம். நீங்கள் பேசும் முன்பு விண்ணப்பம் பண்ணுங்கள். இல்லையெனில் நீங்கள் சத்தமிடும் வெண்கலம் அல்லது கொட்டு அடிக்கும் டிரம் போல இருப்பீர்கள்.
ஜனங்களின் அதிகாரிகள் எவ்விதத்தில் இவர்களை தண்டிப்பது என்று தெரியாமல் இருந்தார்கள். ஜனங்களின் மத்தியில் ஏற்பட்ட பேரார்வத்தை தடுக்கமுடியவில்லை. கிறிஸ்துவின் சாட்சிகளை தடுத்து நிறுத்த முடியவில்லை. அவர்களது சொந்த அதிகாரம் ஆபத்துக்குள்ளாவதை தடுக்க முடியவில்லை. ஆகவே அவர்களை எச்சரித்தார்கள். அவர்கள் பயமுறுத்தும் முறையை நம்பினார்கள். கிறிஸ்துவின் இயக்கத்தின் கழுத்தை நெறித்து கொல்ல நினைத்தார்கள். ஆனாலும் முழு எருசலேமும் இறைவனின் துதியால் நிரம்பிக் காணப்பட்டது மிகவும் ஆச்சரியமான ஒரு காரியம். இந்த அற்புதமான சுகமாக்குதலினால் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்திருந்தார்கள். உன்னதமானவரின் பிரசன்னம் இன்றும் தங்களது பட்டணத்தை விட்டு விலகவில்லை என்பதை அவர்கள் உடனடியாக உணர்நது கொண்டார்கள். அந்த மனிதனுக்கு நடந்ததை கண்டு கொண்டார்கள். கிறிஸ்துவின் சாட்சிகள் மூலமாக இரட்சிப்பின் வல்லமை செயல்பட்டது.
12. திருச்சபையின் பொதுவான விண்ணப்பம் (அப்போஸ்தலர் 4:23-31)
அப்போஸ்தலர் 4:23-31
23 அவர்கள் விடுதலையாக்கப்பட்ட பின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள். 24 அவர்கள் அதைக் கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர். 25 புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும், 26 கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே. 27 அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி, 28 ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள். 29 இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து, 30 உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள். 31 அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.
இரண்டு அப்போஸ்தலர்களும் விடுவிக்கப்பட்டவுடன் மீண்டும் அந்த மேலறைக்கு சென்றார்கள். அங்குதான் சில சகோதரர்கள் இணைந்து, தொடர்ச்சியாக விண்ணப்பம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் சிறையில் இருக்கும் வரை, அவர்கள் முறை வைத்து தொடர்ந்து விண்ணப்பம் செய்தார்கள். சிறையில் இருப்பவருக்கு ஆண்டவர் வல்லமை, ஞானம், தைரியம், வழிநடத்துதல், மற்றும் பாதுகாப்பு தரும்படி விண்ணப்பம் செய்தார்கள். பேதுருவும் யோவானும் திரும்பிப்போனார்கள். தேசத்து அதிகாரிகள் முன்பு இயேசுவின் நாமத்தைக் குறித்தும், இரட்சிப்பைக் குறித்தும் சாட்சி பகர ஆண்டவர் எவ்விதம் உதவினார் என்று சொன்னார்கள். அனைவரும் அகமகிழ்ந்தார்கள், இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள். அதே சமயத்தில் இயேசுவின் நாமத்தில் பிரசங்கிக்கக் கூடாது என்ற ஆலோசனைச் சங்கத்தாரின் கட்டளையை நினைத்து வருத்தப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் அனைவரும் இந்த முடிவிற்கு உட்பட்டவர்களாக இருந்தார்கள். அந்த அதிகாரிகள் அனைவரும் மனந்திரும்ப வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்களின் இருதயமோ இயேசுவிற்கு நேராக மேலும் கடினப்பட்டது. அவர்கள் பிரதான ஆசாரியர்கள் மற்றும் மூப்பர்களின் இரட்சிப்பிற்காக விண்ணப்பம் செய்தார்கள். ஆனால் விளைவோ புறக்கணிப்பும், பயமுறுத்தலுமாக இருந்தது.
இரண்டு அப்போஸ்தரும் விடுதலை ஆனவுடன் மேலும் ஒரு அற்புதம் நடந்தது. இயேசுவின் நாமத்தைக் குறித்துப் பேசுவதை தடைசெய்யும் கட்டளையை எதிர்த்து செயல்படும் சிறந்த வழியை திருச்சபை கலந்தாலேசித்தது. அதனுடைய அங்கத்தினர்கள் ஒத்துப்போவதையோ, எதிராகப் பேசுவதையோ அல்லது அனுகூலமான நேரங்களுக்கு காத்திருப்பதையோ முன் மொழியவில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் முழங்கால்படியிட்டு விண்ணப்பம் செய்தார்கள். அவர்கள் வானத்தையும், பூமியையும், அனைத்தையும் உண்டாக்கின சர்வ வல்லமையுள்ள இறைவனை நோக்கித் திரும்பினார்கள். மக்கள், சம்பவங்கள் மற்றும் அதிகாரங்களை விட்டு அவர்கள் திரும்பினார்கள். உன்னதமானவர் அவர்களுடைய பிதாவாக இருக்கிறார். அவரிடம் அனைத்து கேள்விகளையும் அவர்கள் கேட்க முடியும். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு காரணமாக இருந்த ஆலோசனைச் சங்கத்தாரின் பயமுறுத்தலை அவருக்கு முன்பாக அவர்கள் எதிர்கொள்ள முடியும்
சங்கீதம் 2-ல் உள்ள சில வசனங்களைக் கொண்டு இவர்கள் அனைவரும் ஒரே குரலில், இறைவனின் குடும்பமாய் விண்ணப்பம் பண்ணும்படி பரிசுத்த ஆவியானவர் வழிநடத்தினார். யூதர்களின் இருதயங்களில் நிறைந்து காணப்பட்ட துதியின் சங்கீதங்களில் இதுவும் ஒன்று. தீர்க்கதரிசன ஆவியினால் அவர்கள் அனைவரும் தீர்க்கதரிசிகளாக மாறினார்கள். அவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான இயக்கங்கள், ரோம பேரரசின் முன்னேற்றங்களில் இறைவன் மற்றும் அவருடைய கிறிஸ்துவிற்கு எதிரான மனிதனின் கலகத்தன்மையை கண்டார்கள். நமக்கும் இப்படிப்பட்ட தீர்க்கதரிசன பார்வை தேவை. நமது சூழலில் தற்போதைய அரசியல், பொருளாதாரம் மற்றும் ஆன்மீக முன்னேற்றங்கள் இவைகளில் நம்முடைய நிலை குறித்து அறிவது அவசியம். உலகம் காலத்துடன் போட்டிபோட்டு வேகமாய் இயங்குகிறது. வேறுபட்ட மக்கள், நாடுகள் அந்திகிறிஸ்துவின் கீழ் ஒரே பெரிய உலகமாய் இணைக்கப்பட உள்ளார்கள். இறைவனுக்கும் அவருடைய கிறிஸ்துவிற்கும் எதிராக யுத்தம் செய்ய உள்ளார்கள்.
இயேசுவைக் கொல்லுவதற்கு இறைவனின் எதிரிகள் இணைந்து சந்தித்துக் கொண்ட போதே எருசலேமில் பிசாசின் ஆவியினால் வழிநடத்தப்பட்ட இந்த இயக்கம் தோன்றியது. யூதநாடும், ரோம அதிகாரிகளும் அடிப்படையில் வேறுபட்டாலும் ஆண்டவராகிய கிறிஸ்துவிற்கு எதிராக ஒன்றாக இணைந்தார்கள். ரோம ஆளுநர் பிலாத்து, ஏரோதுமன்னன், காய்பா, மற்றும் சூழ்ச்சி நிறைந்த நீதிபதிகள் அனைவரும் தோற்றுப் போனார்கள். அவர்களுடைய தீர்ப்பு நீர்த்துப்போனது, மதிப்பிழந்து போனது. ஆனால் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவோ கல்லறையில் அழிந்து போகவில்லை. அவர் உயிர்த்தெழுந்தார். மனிதர்களின் அனைத்து தீய நோக்கங்களையும் இறைவனின் வெற்றிக்கு நேராக திருப்பினார். இறைவனிடம் அன்பாய் இருக்கிறவர்களுக்கு அனைத்து காரியங்களும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது. உன்னதமானவரின் திட்டங்கள் புரிந்து கொள்ள முடியாதவை, கிருபை, இரக்கம் மற்றும் மனதுருக்கத்தால் நிறைந்தவைகளாய் உள்ளன. இறைவனின் எதிரிகளும் அவருக்கு சேவை செய்ய வேண்டும். பரலோகப் பிதாவின் சித்தமில்லாமல் இந்த உலகில் ஒன்றும் நடக்காது. மரணத்தின் கரங்களில் அவர் நம்மை விட்டுவிட மாட்டார்.
இந்த விசுவாசத்துடன், அந்த விண்ணப்பம் செய்யும் கூட்டத்தார் தைரியம் அடைந்து அதிகாரிகளின் பயமுறுத்தலை இயேசுவின் கரங்களில் வைத்து விட்டார்கள். அவர்கள் தங்களுடைய போராட்டம், சித்ரவதையை குறித்து அதிகம் பேசவில்லை. ஆனால் இயேசுவின் நாமத்தைக் குறித்து பேசக்கூடாது என்ற அநீதியாளர்களின் கட்டளையை குறித்த விஷயத்தில் அவர்கள் இறைவனை நம்பினார்கள். பரிசுத்த ஆவியானவர் அவர்களை வழிநடத்தினார். இயேசு கிறிஸ்துவிற்கு சாட்சி பகர்கின்ற அவர்களுடைய பணியில் இன்னும் அதிகமான வல்லமையை ஆண்டவரிடம் கேட்டார்கள். இறைவனிடம் உதவியை நாடினார்கள். நாசரேத்தூர் இயேசுதான் உலக இரட்சகர் என்பதை மக்களுக்கு ஞானம், தைரியம் மற்றும் பெலத்துடன் வெளிப்படுத்த உதவும்படி கேட்டார்கள். இறைவனின் வார்த்தைக்கு இது ஓர் பரிசுத்தமான சாட்சி ஆகும். அவருக்கு சாட்சி பகரும் ஒருவர் மூலம் இறைவன் நேரடியாக பேசுகிறார், அவரது சாட்சியை ஆசீர்வதிக்கிறார். மனிதர்கள் மீட்கப்பட, சுத்தமடைய, பரிபூரணமடைய சிலுவைக்கு நேராக அனைவரையும் பரிசுத்தமானவர் அழைக்கிறார். பிரியமான விசுவாசியே, நீ இறைவனுக்காக உனது வாயைத்திறந்து பேசுகிறாயா? அல்லது இன்னமும் நீ பயப்படுகிறாயா? தைரியம், வல்லமையுடன் பேசக்கூடிய வரம், பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல் இவைகளுக்காக நீ விண்ணப்பம் செய்கிறாயா?
விண்ணப்பம் செய்யும்படி மக்கள் கூடும்போது இறைவனின் வல்லமையால் அவர்கள் எழுப்பப்படுகிறார்கள். அவர்கள் தனிப்பட்ட நபர்களாக தங்களது விசுவாசத்தை உறுதிப்படுத்தும்படி அடையாளங்களை தேடவில்லை. ஆனால் தற்போது இரட்சகரின் நாமத்தை மகிமைப்படுத்தாமல் முழு சபையும் சுகமாக்குதல், அற்புதங்களுக்காக இறைவனைக் கெஞ்சுகிறது. அவர்களில் உள்ள விசுவாசம் சந்தேகத்திற்குரியது, பலவீனமானது. இயேசுவைத் தவிர பரலோகிற்கு செல்ல வேறு வழியில்லை என்பதை அவர்கள் உணர வேண்டும். இயேசுவே தமது கரங்களில் பரலோகம் மற்றும் நரகத்தின் திறவுகோல்களை வைத்திருக்கிறார்.
இறைவன் தைரியமுள்ள விசுவாச விண்ணப்பத்தை கேட்டார். அதற்கு பதிலளித்தார். ஆதித் திருச்சபை செய்த விண்ணப்பங்களில் வேதத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரே விண்ணப்பம் இது. இறைவன் தன்னுடைய ஆசீர்வதிக்கும் கரங்களை அந்தக் கூட்டத்திற்கு நேராக நீட்டினார். அனைத்து இருக்கைகளும், அந்த இடமும் அசைந்தது. பெந்தேகொஸ்தே நாளின் போது நடந்தது போல அனைவரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்கள். இறைவனின் அன்பின் ஆவியோடு ஒன்றிணைந்து நாம் விண்ணப்பம் ஏறெடுக்கும்போது, அவருடைய சத்தியத்தை வெளிப்படுத்தும்படி நாம் கேட்கும்போது, இறைவன் உடனடியாக, நிச்சயமாக நமது விண்ணப்பத்திற்கு பதிலளிக்கிறார். கிறிஸ்துவின் ஊழியர்களை இறைவன் பலப்படுத்துகிறார். அவர்களில் தைரியத்தை கொண்டுவருகிறார். விசுவாச நம்பிக்கையில் அவர்களை நிலைநிறுத்துகிறார். அவர் அன்பின் ஆவியால் அவர்களை நிரப்புகிறார்.
இந்த தனித்துவமான விண்ணப்பத்தின் விளைவு என்னவாக இருந்தது? இயேசுவின் நாமத்தை குறித்து பேசக்கூடாது என்று அந்த அதிகாரிகள் கட்டளையிட்டிருந்தாலும், அவர்கள் இரட்சகரை குறித்து மிகவும் தைரியமாக, வெளிப்படையாக பேசினார்கள். அவர்கள் அவருடைய நாமத்தைக் குறித்து வீடுகளில், சந்துகளில், தெருக்களில், ஆலயத்து பிரகாரத்தின் பாதைகளில் பிரசங்கித்தார்கள். ஆண்டவர் தம்முடைய ஆவியானவரால் அவர்களை புதுப்பித்து நிரப்பினார். அவருடைய சாட்சிகளாய் இருக்கும்படி பயிற்றுவித்தார். ஆதித் திருச்சபையின் இந்த பிரபலமான விண்ணப்பத்தின் அர்த்தங்களைக் குறித்து கவனமாக சிந்தித்து பார்க்கவேண்டும். பிரியமான விசுவாசியே, நீயும் விண்ணப்பத்துடன் இதை அறிவிப்பதில் பங்கெடுக்க முடியும்.
விண்ணப்பம்: கிருபையுள்ள பிதாவே, நீர் சிருஷ்டிகர், இரட்சகர், எங்கள் நாட்களை முடிப்பவர். உலகமானது அதன் மக்களை உங்களுக்கு எதிராக சேர்க்கின்றது. ஆண்டவரே, அவர்கள் பயமுறுத்தலைக் கவனியும். உமது ஊழியர்களுக்கு உம்முடைய வார்த்தையை பேசும்படியான தைரியம் தாரும். உம்முடைய பரிசுத்தமான குமாரன் இயேசுவின் நாமத்தின் மூலம் அற்புதங்கள், அதிசயங்கள், அடையாளங்கள் நடக்கட்டும்.
கேள்வி:
- பரிசுத்த ஆவியானவர் செயல்படுவதற்கு இறைவனின் வார்த்தையை அறிவிப்பது தேவையானதும், அவசியமானதுமாக உள்ளது ஏன்?