Previous Lesson -- Next Lesson
4. தனது தேச மக்கள் முன்பு பவுலின் வாதம் (அப்போஸ்தலர் 22:1-29)
அப்போஸ்தலர் 22:1-8
1 சகோதரரே, பிதாக்களே, நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப்போகிற நியாயங்களுக்குச் செவிகொடுப்பீர்களாக என்றான்.2 அவன் எபிரெயுபாஷையிலே தங்களுடனே பேசுகிறதை அவர்கள் கேட்டபொழுது, அதிக அமைதலாயிருந்தார்கள். அப்பொழுது அவன்:3 நான் யூதன், சிலிசியாநாட்டிலுள்ள தர்சுபட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டு, இன்றையத்தினம் நீங்களெல்லாரும் தேவனைக்குறித்து வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல நானும் வைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.4 நான் இந்த மார்க்கத்தாராகிய புருஷரையும் ஸ்திரீகளையும் கட்டி, சிறைச்சாலைகளில் ஒப்புவித்து, மரணபரியந்தம் துன்பப்படுத்தினேன்.5 அதற்குப் பிரதான ஆசாரியரும் மூப்பர் யாவரும் சாட்சிகொடுப்பார்கள்; அவர்கள் கையிலே நான் சகோதரருக்கு நிருபங்களை வாங்கிக்கொண்டு, தமஸ்குவிலிருக்கிறவர்களும் தண்டிக்கப்படும்படிக்கு, அவர்களைக் கட்டி, எருசலேமுக்குக் கொண்டுவரும்படி அவ்விடத்திற்குப்போனேன்.6 அப்படி நான் பிரயாணப்பட்டுத் தமஸ்குவுக்குச் சமீபமானபோது, மத்தியான வேளையிலே, சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது.7 நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.8 அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார்.
தன்னைக் கொல்ல நினைத்தவர்களை பவுல், சகோதரர்களே, பிதாக்களே என்று அழைத்தான். அவர்களது வெறுப்பு மற்றும் மத வெறிக்காக, அவர்களை அவன் நியாயம் தீர்க்கவில்லை. அவர்களை நேசித்தான். அவர்களது அறியாமையை மன்னித்தான். புதிய ஏற்பாட்டின்படி யூதர்கள் பரிசுத்த ஆவியினால் பிறந்த இறைவனின் குடும்பத்தின் அங்கத்தினர்கள் அல்ல. ஆனாலும் பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்களை அடிப்படையாக வைத்து பவுல் இவ்விதமாக அழைத்தான். அவர்களது தாய் மொழியில் அமைதியுடன் இருந்த கூட்டத்தினரிடம் புறஜாதிகளின் அப்போஸ்தலன் பேசினான். அவர்களது பிதாக்களின் நிமித்தம் அவர்களை கனப்படுத்தி பேசினான். தனது வஸ்திரங்கள் கிழிக்கப்பட்டிருந்தபோதும், காயங்களில் இரத்தம் வடிந்தபோதும், அவனது சரீரத்தில் கட்டப்பட்டிருந்த சங்கிலிகள் அசைந்து கொண்டிருந்த போதும் அவன் பேசினான்.
பவுல் தனக்காக வாதாடுவதாக பேசினான். பிறகு என்ன? யூதர்கள் அவனுக்கு எதிராக வைத்த குற்றச்சாட்டு என்ன? பவுல் தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் கீழ்நிலைக்கு இறங்கி செல்லவில்லை. புறஜாதியானை தேவாலயத்தில் கொண்டு வந்ததினால் பரிசுத்த ஆலயம் தீட்டுப்பட்டது என்பதே அவன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டிற்கு என்ன பதில் கூற முடியும். தனக்கு நேரிட்ட உபத்திரவத்திற்கான காரணம் என்ன என்பதை தெளிவாகக் கூறினான். யூதமதத்தில் இருந்து மக்களை வழிவிலகச் செய்வதாகவும், இறைவனுடனான உடன்படிக்கையில் விருத்தசேதனமற்ற புறஜாதிகளை கொண்டு வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள். பவுல் தனது பதிலில், கிருபையின் நற்செய்தியை தான் கண்டுபிடிக்கவில்லை என்பதையும், அவனாக விருப்பப்பட்டு புறஜாதிகளுக்கு பிரசங்கிக்கவில்லை என்பதையும் அந்த மக்களிடம் கூறினான். அவனுக்கு தனிப்பட்ட விதத்தில் உயிருள்ள ஆண்டவர் காட்சி அளித்தார். எழுந்து எல்லா மனிதருக்கும் முன்பாக இயேசுவைக் குறித்து சாட்சி பகரும்படியான கட்டளை கொடுக்கப்பட்டது. எனவே புதிய கொள்கை என்பது பவுலிடம் உருவாகி வந்தது அல்ல, அது உயிர்த்தெழுந்த ஆண்டவரிடம் இருந்து வந்தது. பவுலின் வாழ்வில் கிறிஸ்து ஒரு மாற்றத்தை கொண்டு வந்தார். அவரே கிருபையின் நற்செய்தியின் வெளிப்பாட்டைத் தந்தார். புறஜாதிகளுக்கு பிரசங்கிக்க கட்டளை கொடுத்தார்.
தனது பேச்சின் முதல் பகுதியில் பவுல் தனது இளம்பிராயத்தில் இருந்த பக்தி வைராக்கியம் குறித்து பேசினான். அவன் கிரேக்க தோற்றமுடைய புகழ்வாய்ந்த தர்சு பட்டணத்தில் பிறந்தவன். மிக முக்கியமான அவன் எருசலேமில் பயிற்றுவிக்கப்பட்டவன். அந்த சூழ்நிலைகள் அவனுக்கு யூத தன்மையையும், கலாச்சாரத்தையும் கொடுத்திருந்தது.
கமாலியேலின் பாதத்தருகே அவன் அமர்ந்து கற்றுக் கொண்டபோது மிகப்பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. அநேக ஆண்டுகளாக நியாயப்பிரமாண மேதையாகவும், யூத சட்டத்தின் நன்கு அறியப்பட்ட பண்டிதராகவும் இருந்தவர் கமாலியேல். வாலிபனாக இருந்த சவுல் தனது இருதயத்தில் மட்டும் நியாயப்பிரமாணத்தை வைக்கவில்லை; அதை தீவிரமாக நடைமுறைப்படுத்தினான். அவன் சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தவன், யூத மத சம்பிரதாயங்களை கைக்கொண்டவன், இறைவன் மீது வைராக்கியம் கொண்டவன். அவன் தனது சொந்த ஒழுக்கம் மற்றும் பலவீனமான மனித திறமைகள் மூலம் பரிசுத்தமான ஒருவரை கனப்படுத்த, மகிமைப்படுத்த, அவருக்கு சேவைபுரிய ஆர்வமுடன் இருந்தான்.
அவன் ஜென்மப் பகையுடன் கிறிஸ்தவர்களை வெறுத்தான். ஏனெனில் அவர்கள் இறைவனை அடையும் வழியான நியாயப்பிரமாணத்தை புறந்தள்ளி, கிருபையை சார்ந்து கொண்டார்கள். மேலும் பரிசுத்தமானவரின் அன்பின் மீது தங்களது நம்பிக்கையை முழுவதும் வைத்தார்கள். இந்த பரிசுத்தமானவரே கிறிஸ்துவில் வெளிப்பட்டார். பிதாவை சென்றடையும் ஒரேவழி தான் ஒருவரே என்பதை அறிவித்தார். இறைவன் மற்றும் அவரது நியாயப்பிரமாணத்தின் மீதான வைராக்கியத்தினால் பவுல் கிறிஸ்தவர்களை துன்புறுத்தினான். அவன் அதீத வெறுப்புடன் அவர்களை அழிப்பதில் மட்டும் திருப்தி அடையவில்லை. அனுமதிக்கப்படாதிருந்தும் அவன் பெண்களைக் கொன்றான். ஆசியாவில் இருந்து வந்து, அவனுக்கு எதிராக குற்றம் சாட்டின யுதர்கள் இவன் கூறியதை நம்பவில்லை. பிரதான ஆசாரியன் மற்றும் அனைத்து மூப்பர்களிடமும் அவனது வார்த்தைகளின் உண்மையைக் குறித்து அவர்கள் கேட்க வேண்டும்.
இயேசுவை விசுவாசிப்பவர்களை முற்றிலும் அழித்தொழிக்க, யூத ஆலோசனைச் சங்கமானது இந்த வைராக்கியமிக்க வாலிபனுக்கு அதிகாரம் கொடுத்து, தமஸ்குவுக்கு அனுப்பினார்கள். அவன் போகும் வழியில் நாசரேத்தூர் இயேசு அந்த வறண்ட பாலைவனத்தில் தன்னை அவனுக்கு வெளிப்படுத்தினார். இயேசுவின் சிலுவை மரணத்தின் மீது கட்டப்பட்ட அஸ்திபாரங்களைத் தகர்த்து பவுல் தனது வாழ்வை கட்டியெழுப்ப நினைத்தான். கிறிஸ்துவின் முகத்தில் இருந்த மகிமையின் ஒளி, நியாயப்பிரமாணத்தின் மீத வைராக்கியமாய் இருந்தவனும், இறைவனுக்கு எதிராக செயல்பட்டவனுமாய் இருந்த பவுலை செயலற்றவனாய் மாற்றியது.
அறியாமையினால், பக்திவைராக்கியத்துடன் செயல்பட்ட இந்த எதிரியை உன்னதமானவர், இரக்கம் நிறைந்தவர் அழிக்கவில்லை. அவனை ஈவாக மன்னித்தார். சபையின் மீதான அவரது அன்பை அவனுக்கு அறிவித்தார். பரிசுத்த ஆவியானவருக்குள் அவர் சபையுடன் ஒன்றாயிருக்கிறார். இந்த வெளிப்பாட்டின் மூலம் ஒரு புதிய உலகம் மற்றும் புதிய சத்தியம் பவுலின் வாழ்க்கையில் வந்தது. தாமதமின்றி அவன் தன்னுடைய ஆண்டவருக்கு கீழ்ப்படிந்தான். தான் என்ன செய்ய வேண்டுமென்பதை அவன் ஆண்டவரிடம் கேட்டான். ஆண்டவர் உங்களிடம் அவரது வார்த்தையுடன் வருகிறாரா? புதிய ஏற்பாட்டின் மகிமையுள்ள ஆண்டவராக அவர் உங்களில் வெளிப்பட்டுள்ளாரா? அவருக்கு நிபந்தனையற்ற நிலையில் கீழ்ப்படிகிறீர்களா? அவருடைய சபையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளீர்களா?
விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நீர் சவுலுக்கு உம்மை வெளிப்படுத்தினீர். உம்மை துன்புறுத்தியவனை உமது அன்பினால் உமது ஊழியக்காரனாக மாற்றினீர். எங்களையும் மாற்றும். இறைவனைத் தேடுபவர்களை உமது ரூபத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்தும். உமது அன்பிற்கு அடிபணிந்து வாழ உதவும்.
கேள்வி:
- நியாயப்பிரமாணத்தின் மீது வைராக்கியமாய் இருந்த சவுலுக்கு ஆண்டவர் காட்சியளித்ததின் முக்கியத்துவம் என்ன?