Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 003 (Introduction to the Book)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)

1. அப்போஸ்தலர் நடபடிகளுக்கான அறிமுகமும் கிறிஸ்துவின் இறுதி வாக்குத்தத்தமும் (அப்போஸ்தலர் 1:1-8)


அப்போஸ்தலர் 1:3-6
3 அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். 4 அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். 5 ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.

கிறிஸ்து மரணத்திலிருந்து உயிரோடு எழுந்தருளியதிலிருந்து இறைவனுடைய அரசு ஒளிரத்தொடங்கியது. மரணமடைந்த ஒருவர் உயிரோடு எழுந்து வந்து, நாற்பது நாட்கள் அவருடைய நண்பர்களுக்குக் காட்சியளித்து, அவர்களோடு அமைதியாக அமர்ந்திருந்து, உணவருந்தி, கதவு பூட்டப்பட்டிருக்கையில் அமைதியாக அறைகளுக்குள் வந்து போய்க்கொண்டிருந்தார் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள். உயிரோடிருந்த, உயிர்த்தெழுந்து இயேசுவின் இந்த நடவடிக்கைகள் சீடர்களுடைய மனதில் ஆழமான பாதிப்பை உண்டுபண்ணியிருந்தது. ஏனெனில் அவர்கள் நியாயமற்ற முறையிலும் அவமானத்துக்குரிய வகையிலும் அவர் தண்டிக்கப்பட்டதை அனுபவித்திருந்தார்கள். அவர் எவ்விதமாக மக்களாலும் தலைவர்களாலும் புறக்கணிக்கப்பட்டு, பரிகசிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு சிலுவையில் மரணமடைந்தார் என்பதை அவர்கள் கண்டிருந்தார்கள். அவருடைய உடல் வெள்ளிக்கிழமையில் அடக்கம் செய்யப்பட்டபோது, அவருடைய மரணமும் அடக்கமும் அவர்களுடைய நம்பிக்கை அனைத்துக்கும் முடிவாக அமைப்போகிறது என்று அவர்கள் கருதினார்கள்.

ஆனால் அவருடைய உயிர்த்தெழுதலின் நாள் முடிவற்ற காலம் முடிவுறும் காலத்திற்குள் நுûழுந்தாற்போல ஒரு புதிய யுகத்தின் பேரொளியாக ஒளிரத்தொடங்கியது. கிறிஸ்து இவ்வுலகத்திற்கு மீண்டும் எழுந்தருளி வந்தது, அவருடைய அரசு இவ்வுலகத்திற்குரியதல்ல என்றும், அது சந்தோஷம், நீதி, அன்பு, உண்மை, தாழ்மை மற்றும் இச்சையடக்கம் ஆகியவற்றினால் நிறைந்த, அழியாத, ஆவிக்குரிய அரசு என்றும் நிரூபித்தது. வெறுப்பும், அசுத்தமும், பெருமையும், பொய்யும், போர்களும், அநீதியும் நிறைந்த உலகத்திலே புதிய ஏற்பாட்டின் கடிதங்கள் அனைத்தும் பரலோக உண்மைகளை விளக்குவதாக அமைந்துள்ளன. நாற்பது நாட்களாக கிறிஸ்து, நியாயப்பிரமாணங்களிலும், சங்கீதங்களிலும், தீர்க்கதரிசன நூல்களிலும் நீதியுள்ள தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட அற்புதமான நிகழ்வுகளின் இரகசியங்களை தம்முடைய சீடர்களுக்கு விளக்கினார். அவர்கள் இறைவனுடைய அரசின் வருகைக்காக ஏங்கிக்கொண்டிருந்தவர்களாகவும், அதன் ஒளிக்காக காத்துக்கொண்டிருந்தார்கள். இப்போது பரலோக காரியங்கள் வந்துவிட்டது. நித்திய அரசன் தோன்றிவிட்டார். அவருடைய சீடர்களுடைய கண்களுக்கு முன்பாக நின்றுகொண்டிருக்கிறார்.

இறைவனுடைய தீர்க்கதரிசிகள் கொலைசெய்யப்பட்டதும், இறைவனுடைய மகன் சிலுவையில் அறையப்பட்டதுமான எருசலேமில் இறைவனுடைய அரசு ஆரம்பமாகிறது. சமாதானத்தின் நகரத்தில் தன்னுடைய உண்மையான சமாதானத்தை நிலைநிறுத்துகிறார். அங்கிருந்து கலிலேயாவின் மீனவர்களாகிய தம்முடைய சீடர்கள் திபேரியாக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என்று பணிக்கிறார். அவர்கள் தீமை செய்கிற அந்த நகரத்தில் தானே இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்வரை காத்திருந்து விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று கட்டளையிடப்படுகிறார்கள்.

தெய்வீக வாக்குத்தத்தின் உண்மையான பொருளை கிறிஸ்து ஆரம்பத்திலிருந்தே தம்முடைய சீடர்களுக்கு வெளிப்படுத்தி வருகிறார். அதன்படி அவர்கள் அவரைக் இறைவனாக அறிந்துகொள்வார்கள். அவர் தம்மை அவர்களுடைய தகப்பனாக வெளிப்படுத்துவார், அவர்கள் அவருடைய சிறப்பான, பாதுகாப்பைப் பெற்ற பிள்ளைகளாக மாற்றப்படுவார்கள். அவர்கள பயங்கரமாக அழிப்பவரையும் தாங்கள் அறியாத நீதிபதியையும் கண்டு பயப்படத் தேவையில்லை. கிறிஸ்துவின் சிறப்பான செய்தி இதுதான்: பரிசுத்தமுள்ள இறைவனே இரக்கமுள்ள தந்தையாகவும் இருக்கிறார். இந்த வெளிப்படுத்தலினால் நம்முடைய கலாச்சாரம் மாற்றமடைந்துள்ளது. வரப்போகிற இறைவனுடைய அரசு ஒரு தகப்பனுடைய அரசாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொண்டிருக்கிறோம். அவருடைய பிள்ளைகள் சேவை செய்யும் இளவரசர்களாகவும் விண்ணப்பம் செய்யும் நீதிபதிகளாகவும் இருப்பார்கள். இறைவனுடைய நியாயமான கோபத்திலிருந்து நம்மை எல்லாம் தப்புவிக்க மரணத்தை ஏற்றுக்கொண்ட இயேசுவின் உதாரணத்தைப் அவர்கள் பின்பற்றுவார்கள்.

லூக்கா இயேசுவின் இறுதியான வார்த்தைகளில் சிலவற்றை நமக்காகப் பதிவு செய்திருக்கிறார். “பிதாவின் வாக்குறுதிகளை என்னிடமிருந்து நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்”. மாபெரும் பரிசுத்தராயிருந்து, நம்மை தம்முடைய பிள்ளைகளாகத் தத்தெடுத்து, அவருடைய தன்மையினால் நம்மை நிரப்பி, நம்மை இறைவனுடைய பிள்ளைகளாக்கும் அவருடைய ஒரே மகனுடைய அனைத்துப் போதனைகளின் சுருக்கமாக இந்த வாக்கியம் அமைந்திருக்கிறது. இதுதான் இயேசுவினுடைய சிலுவை மரணத்தின் நோக்கமாயிருந்தது. அவர் நம்முடைய பாவங்களை மன்னித்து, நாம் இறைவனிடம் வந்து அவருடைய அன்பிற்கு உரியவர்களாகும்படி, நம்மைப் பரிசுத்தப்படுத்துகிறார். நம்முடைய நடத்தையினால் அவருடைய பெயர் பரிசுத்தமாக்கப்பட வேண்டும்.

இதற்கு முன்பாக, வானத்தையும் பூமியையும் அசைக்கப்போகின்ற ஒரு பெரிய மாற்றம் வரும் என்று திருமுழுக்கு யோவான் அறிந்திருந்தார். தீமையும் சுய நலமும் நிறைந்த மக்களுடைய கல்லான இருதயங்களும் புறக்கணிக்கிற மனங்களும் ஆயத்தப்படுத்தப்படாமல் இறைவனுடைய அரசு வராது என்பதை, வனாந்தரத்தில் வாழ்ந்த இயேசுவின் முன்னோடியாகிய இவர் அறிந்திருந்தார். அவர்கள் மரணத்திற்கு உரியவர்கள் என்பதைக் காண்பிக்கும்படி மனந்திரும்பியவர்களுக்கு அவர் யோர்த்தான் நதிக்கரையில் திருமுழுக்குக் கொடுத்தார். அவர்கள் திருமுழுக்குப் பெற்று தண்ணீரிலிருந்து எழுந்து வருவது அவர்களில் இறைவன் தரவிருக்கும் புதிய படைப்பாகிய புதிய தன்மையை அடையாளப்படுத்தியது. யோவான் தன்னுடைய திருமுழுக்கு அந்த மக்களை உண்மையில் மாற்றமடையச் செய்யாது என்று அறிக்கையிட்டு அவர்களுக்கு போதனை செய்தார். மக்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்குவது எந்த மனிதனும் தன்னையோ மற்றவர்களையோ மாற்ற முடியாது என்பதையே காண்பிக்கிறது. நாம் அனைவரும் தீயவர்களாகவும், கீழ்த்தரமானவர்களாகவும், மாம்சத்திற்குரியவர்களாகவும் இருப்பதால் ஒருவரும் எந்த சடங்கினாலும் தன்னைச் சுத்திகரித்துக்கொள்ள முடியாது.

வனாந்தரத்தில் வந்த தீர்க்கதரிசியாகிய திருமுழுக்கு யோவான் மனந்திரும்புகிறவர்களுக்கு பரிசுத்த ஆவியினால் திருமுழுக்குக் கொடுக்கவிருக்கும் இறைவனுடைய ஆட்டுக்குட்டியை மக்களுக்குச் சுட்டிக்காட்டினார். அவர் பரிசுத்த ஆவியினால் பிறந்து, தொடர்ந்து பாவமில்லாதவராக வாழ்ந்தார். அவர் ஆவியில் பழுதற்ற பலியாகத் தம்மை இறைவனுக்கு ஒப்புக்கொடுத்து, நாமும் இந்த ஆசீர்வாதமான ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி, உண்மையுள்ளவர்கள் அனைவரையும் தம்முடைய பிதாவோடு ஒப்புரவாக்கினார். நீங்கள் பிதாவின் வாக்குறுதியை உணர்ந்துகொண்டிருக்கிறீர்களா? ஆவியானவர் உங்களில் வாழும்படி தீர்மானித்திருக்கிறார். அது நடைபெறும்போது கிறிஸ்து உங்கள் இருதயத்தில் இருப்பார், உங்கள் உடல், உயிருள்ள இறைவனுடைய ஆலயமாக மாறும். நீங்கள் இன்று இறைவனை பெற்றுக்கொள்ள ஆயத்தமாயிருக்கிறீர்களா?

கிறிஸ்து எப்போதுமே தாழ்மையுள்ளவராயிருந்தது போல நீங்களும் உங்களைத் தாழ்த்தி இறைவனுடைய வாக்குறுதிக்காக ஆயத்தப்படுங்கள். திருமுழுக்கு யோவான் சொன்னதைப் போல “நான் உங்களுக்குப் பரிசுத்த ஆவியினால் திருமுழுக்குக் கொடுப்பேன்” என்று இயேசு சொல்லவில்லை. மாறாக அந்த மகிமையை அவர் தம்முடைய பிதாவிற்குக் கொடுத்துவிட்டார். பரிசுத்த ஆவியானவரே அவர்களிடம் வருவதற்குத் தீர்மானித்திருக்கிறார் என்று அவர்களுக்குப் போதித்தார். பிதாவும் குமாரனும் பரிசுத்த ஆவியானவரை வழங்குவதில் முழுவதும் ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள். ஏனெனில் பிதாவினிடத்திலிருந்தும் குமாரனிடத்திலிருந்தும் புறப்பட்டு வரும் இந்த ஆவியானவர் அன்பின் ஆவியானவராயிருக்கிறார். அன்புள்ள சகோதரனே, நீங்கள் இறைவனுடைய அன்பை உணர்ந்திருக்கிறீர்களா? தம்முடைய சீடர்கள் காத்திருந்து, விண்ணப்பிக்க வேண்டும் என்று கிறிஸ்து கட்டளையிட்டிருப்பதற்கு இணங்க நீங்களும் அவரைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பதுடன் ஆயத்தப்படுகிறீர்களா?

விண்ணப்பம்: ஓ, கர்த்தராகிய இயேசுவே, நீரே பரிசுத்தர். நீர் மனந்திரும்புகிறவர்களுக்கு பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் ஐக்கியத்திலே திருமுழுக்குக் கொடுக்கிறீர். அதன் மூலம் அவர்கள் மிகப்பெரியவனாகிய இறைவனுக்கும் அவருடைய நியாயத்தீர்ப்புக்கும் பயப்படாமல், அவரைத் தங்கள் உண்மையான தகப்பனாக நேசித்து, அவருக்கு மகிழ்வுடன் கீழ்ப்படிந்து, உம்முடைய பெயரை அறிவித்து, உம்முடைய சாயலுக்கு ஒப்பாக மறுரூபமாக்கப்படுகிறார்கள். “பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்ற தனிச்சிறப்பான விண்ணப்பத்தை கூறும்படி எங்களை நீர் அனுமதித்தற்காக உமக்கு நன்றி. ஆமென்.

கேள்வி:

  1. பிதாவினுடைய வாக்குறுதி என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on May 29, 2013, at 09:47 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)