Previous Lesson -- Next Lesson
இ) மனிதன் அறிவினால் அல்ல, செயல்களினால் இரட்சிக்கப்படுகிறான் (ரோமர் 2:17-24)
'''ரோமர் 2:17-24
17 நீ யூதனென்று பெயர்பெற்று, நியாயப்பிரமாணத்தின்மேல் பற்றுதலாயிருந்து, தேவனைக்குறித்து மேன்மை பாராட்டி, 18 நியாயப்பிரமாணத்தினால் உபதேசிக்கப்பட்டவனாய், அவருடைய சித்தத்தை அறிந்து, நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கிறாயே.
19 நீ உன்னைக் குருடருக்கு வழிகாட்டியாகவும், அந்தகாரத்திலுள்ளவர்களுக்கு வெளிச்சமாகவும், 20 பேதைகளுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு உபாத்தியாயனாகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் எண்ணுகிறாயே. 21 இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவு செய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா? 22 விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா? 23 நியாயப் பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா? 24 எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே.'''
பரிசுத்தமான நியாயப்பிரமாணத்தின் சிலாக்கியத்தினால் ஆபிரகாமின் சந்ததியாரை இறைவன் ஆசீர்வதித்தார். அது பரிசுத்தமுள்ள இறைவனின் மகிமையின் மகத்துவத்திற்கு சாட்சி கொடுக்கிறது. நியாயப்பிரமாணத்தின் மதிப்பை யூதர்கள் உணர்ந்திருந்தார்கள். அதை அவர்கள் சார்ந்திருந்தார்கள். இந்த ஆசீர்வாதத்தினால் நிறைந்தவர்களாய், பரலோகத்திற்கு செல்ல இது போதும் என்று எண்ணினார்கள். ஆனால் உண்மையில் நியாயப்பிரமாணம் அது கொடுக்கப்பட்ட விதத்தில் கோபாக்கினைக்கும், நியாயத்தீர்ப்புக்கும் காரணமாக உள்ளது.
யூதர்களை அடையாளப்படுத்தக்கூடிய நல்ல மற்றும் கெட்ட குணங்களை பவுல் பட்டியலிட்டான். வனாந்தரத்து மக்களாகிய அக்கிரமக்காரருக்கு இறை வெளிப்பாடு தரப்பட்டதால் அவர்கள் பெருமையுள்ளவர்களாக மாறினார்கள். அவர்கள் இறைவனையும், அவருடைய சித்தத்தையும் அறிந்திருந்தார்கள். அவர்கள் வாழ்வில் சிறந்த வழியை உணர்ந்திருந்தார்கள். மக்களுக்கு உபதேசிப்பவர்களாக, தேசங்களுக்கு ஒளியாக அவர்கள் கடந்த காலத்தில் இருந்தார்கள்.
நியாயப்பிரமாணம் மனிதர்களை சீர்திருத்தும் வல்லமையை பெற்றிருக்கவில்லை என்பதை பவுல் உறுதிப்படுத்தினான். யூதர்கள் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை, அதன் மூலம் அறிந்திருந்தார்கள் என்பது உண்மைதான். இருந்தாலும் அதனுடைய கட்டளைகளை அவர்கள் முழுமையாக நிறைவேற்றவில்லை. அவர்கள் இறைவனின் இரகசியங்களை அறிந்தார்கள். ஆனால் அவைகளில் நடக்கவில்லை. இரும்பு மனதுடன், அநேகர் வெளிப்பிரகாரமான பக்தி தோற்றத்துடன், அதனுடைய உயர்நிலையை எட்டினார்கள். இருப்பினும் அவர்கள் இருதயங்களில் இருந்து இறைவனுடைய சித்தம் வெளிப்படவில்லை.
அவர்கள் திருடாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர்களின் கண்கள் பேராசையினால் குருடாக்கப்பட்டிருந்தது. ஒருவேளை அவர்கள் விபசாரம் செய்யாதிருக்கலாம். ஆனால் அவர்களின் இருதயங்களில் அசுத்தமான எண்ணங்கள் நிரம்பிக் காணப்பட்டது. மேலும் அவர்கள் இறைவனின் நியாயப்பிரமாணத்தை ஆயிரக்கணக்கான முறை மீறினார்கள். விசுவாசிகளின் வாழ்வில் கூட இறை அன்பு குறைபடுவதை பவுல் அனுபவத்தில் கண்டான். அவர்களுடைய பாவங்கள் மூலம் இறைவனை கனவீனப்படுத்தினார்கள். இறைவனுடைய பரிசுத்த நாமத்திற்கு எதிராக மற்ற நாடுகள் தூஷணம் செய்வதற்கு காரணமாக இருந்தார்கள்.
பவுல் யூத மார்க்கத்தில் இருந்து வந்த ஒரு கிறிஸ்தவன். அவனுடைய மக்கள் பெற்றிருந்த சிறப்பான ஆசீர்வாதங்களை அறிந்தவனாக இதை எழுதினான். ஆகவே அவனுடைய நாட்டின் பாவங்களையும் மற்றும் அவதூறுகளையும் வெளிப்படுத்த, அவன் உரிமை உடையவனாக இருந்தான். அதனுடைய பெரிய மீறுதல்கள் மற்றும் குற்றங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அத் தேசத்தின் நீதி என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. இந்த மக்கள் அல்லது தேசத்திற்கு விரோதமான குற்றச்சாட்டைப் போல, வேறு எவருக்கும் இல்லை. அவர்களுடைய நடத்தையின் மூலமாக இறைவனுடைய நாமம் தூஷிக்கப்பட்டது. நியாயப்பிரமாணத்தில் மக்களுக்கு வெளிச்சத்தைக் கொண்டு வரும்படியான, அவர்களுடைய உண்மையான அழைப்பிற்கு அவர்கள் செவி கொடுக்கவில்லை. அதற்கு எதிரான காரியத்தை செய்தார்கள். பவுலைப் போல தைரியமுடன் சாட்சியிடக்கூடிய மனிதர்கள் இன்று தேவை. நம்முடைய ஆசீர்வாதங்களை மறுதலிக்காமல், அதே சமயத்தில் நமது பாழ்பட்ட சமுதாயத்தில் இருந்து பக்தியின் முகமூடியைக் களைந்து போட வேண்டும். மனந்திரும்புதலும், உள்ளம் உடைக்கப்படுதலும் அவசியம்.
நீ ஆபிரகாமின் மக்களை நியாயம்தீர்க்கிறாயா? எச்சரிக்கையாயிரு. அவர்கள் உன்னைப் போல் பாவம் நிறைந்தவர்கள்.
இறைவன் தெளிவாகச் சொன்னார். “நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்”. உனது பரலோகப் பிதாவைப் போல, நீ மெய்யாகவே பரிசுத்தமுள்ள, பரிபூரணமுள்ள கிறிஸ்தவனாக இருக்கிறாயா? உனது நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்தில் இருந்து உனது பிதாவை மகிமைப்படுத்தும்படி, உனது ஒளி மனிதர்கள் முன்பு பிரகாசிக்கின்றதா? உனது வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதா? கிறிஸ்துவின் மீட்பை மறுதலிப்பவர்களை விட, நீ நல்லவனாக இராததால், உனது நண்பர்கள் உனது மதத்தை அலட்சியம் செய்கிறார்களா? இறைவனுடைய நாமத்திற்கு எதிரான தூஷணத்திற்கு நீ ஒரு காரணமா? உனது அன்பு மற்றும் தாழ்மையின் மூலம் பரலோகப் பிதா, தன்னை வெளிப்படுத்துகிறாரா?
விண்ணப்பம்: பரிசுத்தமுள்ள, உன்னதமான இறைவனே. நான் அறிந்திருப்பதைவிட, என் பாவம் பெரியது. எனது கீழ்ப்படியாமை மற்றும் மாய்மாலத்தினால், அநேகர் உமது நாமத்தை தூஷணம் செய்ய நான் காரணமாக இருந்திருக்கிறேன். என்னை மன்னியும். நான் உமக்கு முன்பாக சரியாக நடக்கவில்லை. எனது குறைவுள்ள அன்பு, தூய்மையின்மை மற்றும் பொறுமையின்மைக்காக என்னை மன்னியும். மற்றவர்கள் என்னில் உம்மைக் காணத்தக்கதாக, நீர் உமது சாயலில் என்னைப் படைத்தீர். உமது கட்டளைகளுக்கு கீழ்ப்படியும்படி எனக்கு உதவும். உமது சாயல் இன்னும் அதிகம் அதிகமாய் என்னில் பிரகாசிக்க செய்யும். எனது பலவீனங்கள், தவறுகள் மற்றும் சுயத்திலிருந்து என்னை இரட்சியும்.
கேள்வி:
- நியாயப்பிரமாணத்தின் ஆசீர்வாதங்கள் மற்றும் யூதர்கள் மீதான அதனுடைய சுமைகள் என்ன?