Previous Lesson -- Next Lesson
2. கடலில் ஏற்பட்ட புயலும் மால்தாவில் ஏற்பட்ட கப்பற்சேதமும் (அப்போஸ்தலர் 27:14-44)
அப்போஸ்தலர் 27:14-26
14 கொஞ்சநேரத்துக்குள்ளே யூரோக்கிலிதோன் என்னுங்கடுங்காற்று அதில் மோதிற்று. 15 கப்பல் அதில் அகப்பட்டுக்கொண்டு, காற்றுக்கு எதிர்த்துப்போகக்கூடாதபடியினால் காற்றின் போக்கிலே கொண்டுபோகப்பட்டோம். 16 அப்படிக் கிலவுதா என்னப்பட்ட ஒரு சின்ன தீவின் ஒதுக்கிலே ஓடுகையில் வெகு வருத்தத்தோடே படவை வசப்படுத்தினோம். 17 அதை அவர்கள் தூக்கியெடுத்தபின்பு, பல உபாயங்கள் செய்து, கப்பலைச் சுற்றிக் கட்டி, சொரிமணலிலே விழுவோமென்று பயந்து, பாய்களை இறக்கி, இவ்விதமாய்க் கொண்டுபோகப்பட்டார்கள். 18 மேலும் பெருங்காற்றுமழையில் நாங்கள் மிகவும் அடிபட்டபடியினால், மறுநாளில் சில சரக்குகளைக் கடலில் எறிந்தார்கள். 19 மூன்றாம் நாளிலே கப்பலின் தளவாடங்களை எங்கள் கைகளினாலே எடுத்து எறிந்தோம். 20 அநேகநாளாய்ச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்படாமல், மிகுந்த பெருங்காற்றுமழையும் அடித்துக் கொண்டிருந்தபடியினால், இனித் தப்பிப்பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் அற்றுப்போயிற்று. 21 அநேகநாள் அவர்கள் போஜனம்பண்ணாமல் இருந்தபோது, பவுல் அவர்கள் நடுவிலே நின்று: மனுஷரே, இந்த வருத்தமும் சேதமும் வராதபடிக்கு என் சொல்லைக்கேட்டு, கிரேத்தாதீவை விட்டுப்புறப்படாமல் இருக்கவேண்டியதாயிருந்தது. 22 ஆகிலும் திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற் சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது. 23 ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்து நின்று: 24 பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும், இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான். 25 ஆனபடியினால் மனுஷரே, திடமனதாயிருங்கள். எனக்குச் சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன். 26 ஆயினும் நாம் ஒரு தீவிலே விழவேண்டியதாயிருக்கும் என்றான்.
கிரேத்தா தீவிற்கு அருகிலேயே புயல் ஆரம்பித்து விட்டது. அது கடுமையாகி கப்பலை துறைமுகத்தைவிட்டு வெகுதூரம் இழுத்துக்கொண்டு போனது. கப்பலோட்டிகள் எவ்வளவு முயற்சி செய்தும் கப்பலைத் துறைமுகத்திற்கு அருகில் கொண்டுவர முடியவில்லை. ஏனெனில் பலத்த காற்று 276 பயணிகளும் சரக்குகளும் இருந்த அந்தப் பாரமான கப்பலை கடலுக்குள் வெகுதூரம் கொண்டு சென்றிருந்தது. கப்பலில் இருந்த சிறிய படகு தண்ணீரினால் நிரம்பி கப்பல் மூழ்கிவிடாமல் இருப்பதற்காக அதை அவர்கள் தூக்கிவிட்டார்கள். கப்பல் பெலவீனமடைந்தது, அலைக்கழிக்கப்பட்டபோது கிலவுதா என்ற சிறிய தீவுக்கு அருகில் உதவிக்காகச் சென்றார்கள். ஆனால் அங்கு கடுமையான அலைகள் அடித்துக்கொண்டிருந்த காரணத்தினால் அவர்களால் நங்கூரத்தைப் பாய்ச்ச முடியவில்லை. அந்தக் காலத்தில் இரும்பு பட்டைகளும் திருகாணிகளும் இல்லாத காரணத்தினால் கப்பலின் பலகைகள் காற்றினால் சிதறிப்போய்விடாதபடி அவர்கள் கயிறுகளினால்தான் கப்பலைச் சுற்றிக் கட்டியிருந்தார்கள். அதன் பிறகு பாரமான கற்களினால் நிறைந்த பெட்டியை கப்பலுக்கு முன்பாக இறக்கி கப்பலை நிலையாக நிறுத்த முயற்சி செய்தார்கள். இதன் மூலம் அவர்கள் கப்பலுடைய பாரத்தையும் குறைக்க முயற்சித்தார்கள்.
அடுத்த நாள் மூழ்கிப் போய்விடுவோம் என்ற பயத்தினால் கப்பலுடைய பாரத்தைக் குறைப்பதற்காக கோதுமைகளைத் தூக்கி கடலில் எறிந்தார்கள். இதன் மூலமாக கப்பல் ஒருவாறு அலைகளைத் தாண்டக்கூடியதாக இருந்தது. புயல் மூன்றாம் நாளும் கடுமையாக இருந்ததால் அவர்கள் கப்பலின் உபகரணங்களையும் தண்ணீரில் வீசத் தொடங்கினார்கள். அவர்கள் பாய் மரத்தையும் வெட்டி அதன் பாய்களோடு கடலில் வீசத் தொடங்கினார்கள். அப்போதும் புயல் கடுமையாக வீசியது, கடல் தீவிரமாகக் கொந்தளித்துக்கொண்டிருந்தது. பல பயணிகள் வாந்தி எடுத்து, மயக்க நிலையை அடைந்தார்கள். அவர்கள் மூன்று நாட்களாகச் சந்திரனையோ சூரியனையோ காணவில்லை. அவர்களில் பலர் இறைவன் தங்களைக் காப்பார் என்று உபவாசித்து விண்ணப்பித்துக்கொண்டிருந்தார்கள். நாட்கள் நீண்டவைகளாகவும் நிமிடங்கள் மணிநேரங்களாகவும் கடந்தன. அவர்கள் நம்பிக்கை இழந்து சோர்ந்து போனார்கள். சமையல்காரர்கள் உணவு தயாரிக்கவில்லை, அதனால் கடலோடிகளும், கைதிகளும், போர்வீரரும் சோர்வுற்று பெலவீனப்பட்டார்கள்.
பவுல் அவர்களுக்கு முன்பாக நின்று அவர்களைத் திடப்படுத்தினார். இயற்கையின் கடும் சீற்றத்தின் நடுவிலும் அவர்களுடைய அறிவீனத்தை அவர்களுக்கு உணர்த்தி அவர்களைக் கடிந்துகொண்டார். அவருடைய அனுபவமிக்க ஆலோசனையை அவர்கள் செவிகொடுத்துக் கேட்காத காரணத்தினாலேயே இந்தக் கொடுந்துயர் அவர்களுக்கு நேரிடத்து என்று சாடினார். அவநம்பிக்கைதான் இழப்புகளையும் பேரழிவுகளையும் உண்டுபண்ணுகிறது. மற்றவர்கள் எல்லாம் அழுது புலம்பிக்கொண்டிருந்தபோது பவுல் மட்டும் விண்ணப்பித்துக் கொண்டிருந்தார். இன்னும் தங்கள் இருதயத்தில் கடினமுள்ளவர்களுக்காக விண்ணப்பிக்கும்படி அவருடைய நண்பர்கள் அவரோடு சேர்ந்து நின்றார்கள். நரகத்தின் சக்திகள் அன்பின் ஐக்கியத்தினால் எதிர்கொள்ளப்பட்டது. கிறிஸ்து அவர்களுடைய விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்து, ஒரு தேவதூதனை பவுலிடத்தில் அனுப்பினார். அவர் வந்து பவுல் சீசருக்கு நற்செய்தியை சொல்லாமல் மரணமடைவதில்லை என்று அவருக்கு உறுதியளித்தார். ஆனால் அந்தக் கப்பலுடைய உரிமையாளரின் மனக்கடினத்தின் காரணமாக கப்பல் மூழ்கிப்போகும். பவுலும் அவருடைய நண்பர்களும் செய்த விண்ணப்பத்தின் காரணமாக அதிலுள்ள உயிர்கள் அனைத்தும் காக்கப்படும். இந்த நிகழ்வு தற்காலத்திற்கான பெரிய உதாரணமாக இருக்கிறது உங்களுக்குப் புரிகிறதா? இறைவனுடைய கோபம் இந்த முழு உலகத்தையும் சாத்தானுக்கும் அவனுடைய தூதர்களின் வல்லமைக்கும் ஒப்புக்கொடுக்காமல் இருப்பதற்குக் காரணம் என்ன? நம்பிக்கையாளர்கள் தொடர்ந்து விண்ணப்பித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இந்த உலகம் இன்றும் காக்கப்பட்டு வருகிறது. நம்பிக்கையாளர்களுடைய விண்ணப்பத்தினாலும் திருச்சபையினுடைய எதிர்நோக்குக்காவுமே இவ்வுலகத்தின் மனிதர்கள் தப்பிப் பிழைத்திருக்கிறார்கள்.
கப்பல் மூழ்கிப் போகும்படி தத்தளித்துக்கொண்டிருந்தது, பயணிகள் அனைவரும் பயத்தினால் நிறைந்திருந்தார்கள். இந்தத் தருணத்தில் பவுல் அவர்களுக்கு ஒரு பிரசங்கத்தையோ இறையியல் பாடத்தையோ வழங்கவில்லை. மாறாக தன்னுடைய உறுதியான நம்பிக்கையைப் பற்றி அந்தக் கடல் அலைகளின் சத்தத்தையும் விட உரத்த சத்தமாக அவர்களிடத்தில் அறிவித்தார். தன்னிடத்தில் இறைவனுடைய தூதுவன் சொன்ன வார்த்தைகளை இறைவன் நிச்சயமாக நிறைவேற்றுவார் என்பதை பவுல் நிச்சயமாக நம்பினார். அதனால் அவர்களுடைய கப்பல் மணலில் சேதமுறுவதையும் அவர்கள் அந்த சிறிய தீவில் கரையேறுவதையும் நன்கு எதிர்பார்த்தார். அந்தக் கப்பல் உடைந்துபோவது தவிர்க்க முடியாததாக இருந்தது. ஆனாலும் அந்த அழிவின் நடுவிலும் அவர்களுக்கு விடுதலையும் வாழ்வும் கிடைத்தது. நம்முடைய நாடுகளின் எதிர்காலங்களுக்கு இறைவன் தரும் பதிலும் இதுதானே? நீங்களும் உங்களுடைய சகோதர சகோதரிகள் அனைவரும் காக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விண்ணப்பியுங்கள். ஏனெனில் நாம் அனைவரும் ஒரே கப்பலில் பயணம் செய்கிறோம். நற்செய்தியைத் தங்கள் இதயத்தில் சுமந்து செல்பவர்களைக் அழிக்கும்படி சாத்தான் எத்தணிக்கிறான். ஆகவே நீங்கள் சோதனையில் விழுந்துவிடாதபடி விழித்திருந்து விண்ணப்பியுங்கள்.
விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே பவுலுடைய அழிவின் நேரத்தில் நீர் அவரை ஆறுதல்படுத்த ஒரு தூதனை அனுப்பியமைக்காக உமக்கு நன்றி. உம்முடைய நாமத்தின் நிமித்தமாகத் துன்பப்படுகிறவர்கள் அல்லது சிறைப்பட்டவர்கள் அனைவருக்கும் ஆறுதலளிக்கும் தூதர்களை அனுப்பியருளும். எங்களுடைய கலாச்சாரத்தின் மீதுவரும் புயல்களிலிருந்து எங்களையும் எங்கள் நாட்டு மக்கள் அனைவரையும் நீர் காத்தருளும்.
கேள்வி:
- அந்தக் கப்பலில் இருந்த பலர் நம்பிக்கையற்றவர்களாக இருந்த போதிலும் இறைவன் ஏன் அவர்கள் அனைவரையும் காப்பாற்றினார்?