Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 045 (Simon the Sorcerer and the Work of Peter and John; The Ethiopian Treasurer)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
ஆ - சமாரியா, சீரியா பகுதிகளில் இரட்சிப்பின் நற்செய்தியின் விரிவாக்கம் மற்றும் புற இனத்தவரின் மனமாற்றங்களின் ஆரம்பம் (அப்போஸ்தலர் 8 - 12)

2. மாயவித்தைக்காரன் சீமோனும், சமாரியாவின் பேதுரு மற்றும் யோவான் செய்த பணிகளும் (அப்போஸ்தலர் 8:9-25)


அப்போஸ்தலர் 8:14-25
14 சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள்.15 இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்தஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,16 அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,17 அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள்.18 அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்தஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து:19 நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.20 பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது.21 உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.22 ஆகையால் நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்.23 நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்.24 அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.25 இவ்விதமாய் அவர்கள் கர்த்தருடைய வசனத்தைச் சாட்சியாய் அறிவித்துச் சொன்னபின்பு, சமாரியருடைய அநேக கிராமங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள்.

சமாரியா இறைவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டதை கேள்விப்பட்ட எருசலேம் சபை அங்கத்தினர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார்கள். தனிநபர்கள் மட்டும் அல்ல, அந்த எல்லையை சுற்றியிருந்த திரளான மக்கள் ஞானஸ்நானம் எடுத்தார்கள். இவ்விதமாக சமாரியா எல்லைப் பகுதிகளில் இறைவனுடைய ராஜ்யம் பரவ ஆரம்பித்தது. இங்கு காணப்பட்ட மதம், மற்ற மதங்களில் உள்ள மீதமுள்ளவர்களை உள்ளடக்கியதாக இருந்தது.

அப்போஸ்தலர்களில் பகுத்தறியும் ஆவியைப் பெற்றவர்கள் இவ்விதமாக கூறினார்கள். “பெருந்திரளான இவர்கள் என்ன ஆவியை உடையவர்கள் என்று பரிசோதித்து பார்ப்போம். ” இந்த நாட்டுப் பகுதியை கடந்து செல்ல முயன்றபோது சமாரியர்களால் இயேசு தடுக்கப்பட்டார் என்பதை நாம் கண்டிருக்கிறோம். யோவானும், அவனைச் சேர்ந்தவர்களும் மிகவும் கோபமடைந்து ஆண்டவரைப் பார்த்து இவ்விதம் கேட்டார்கள். “கீழ்ப்படியாத இந்த கிராமங்களின் மக்களை, வானத்திலிருந்து அக்கினியை இறக்கி அழிக்க உமக்குச் சித்தமா?” ஆனால் இயேசுவோ அவர்களை கடிந்து கொண்டு இவ்விதம் சொன்னார். “நீங்கள் இன்ன ஆவியை உடையவர்கள் என்று அறியீர்களா?” இப்போது பேதுருவும், யோவானும் இந்த புதிய எழுப்புதல் பகுதியை பார்வையிட சென்றார்கள். அவர்களும் நம்பிக்கையுடன், அவர்களுடைய ஊழியத்தின் மூலமாக விசுவாசிகளின் மகிழ்ச்சி இன்னும் அதிகமாகத்தக்கதாக சென்றார்கள்.

இரண்டு அப்போஸ்தலர்களும் சமாரியாவிற்கு வந்தபோது, உடனடியாக முக்கியமான ஒன்றை உணர்ந்தார்கள். அற்புதங்களின் விளைவாக ஏற்பட்டிருந்த பேரார்வம் மற்றும் விசுவாசம் இருந்தது. ஆனால் மிக முக்கியமான காரியங்கள் இல்லாதிருந்தது. மனிதர்களில் உள்ளான மாற்றம், பிசாசின் பிடியிலிருந்து முழுவிடுதலை மற்றும் பரிசுத்த ஆவியினால் நிறைந்திருத்தல் ஆகியவை இல்லை. பெருங்கூட்ட மக்கள் இயேசுவை விசுவாசித்தார்கள். அவர்களுக்கு விசுவாசம் இருந்தும், தண்ணீர் ஞானஸ்நானம் எடுத்திருந்தும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்றிருக்கவில்லை.

நாம் விரும்பாவிட்டாலும், கிறிஸ்தவர்களில் பெரும்பாலோரின் விசுவாசம் இப்படித்தான் உள்ளது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். அது வெறும் அறிவு சார்ந்த நம்பிக்கையாக உள்ளது. சுருக்கமாக சொன்னால் வெளித்தோற்றத்தில் அவர்கள் ஞானஸ்நானம் எடுத்தார்கள், திருநியமங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்கள், மேலும் ஆண்டவரின் அற்புதங்கள் மற்றும் வழிநடத்துதலை காண வாஞ்சையாயிருந்தார்கள். எப்படியிருப்பினும், சத்தியத்தின்படி அவர்கள் இன்னும் இரட்சிப்பை பெற்றிருக்கவில்லை. தீய ஆவிகளின் சங்கிலிகளால் அவர்களுடைய இருதயங்கள் கட்டப்பட்டிருந்தது. பழைய கொள்கைகளின் மீதமிருந்தவைகளின் சிந்தனைகளால் ஆட்கொள்ளப்பட்டிருந்தார்கள். அவர்களுடைய சரீரங்களில் பாவம் குடிகொண்டிருந்தது. அன்பு, தாழ்மை, சுய தியாகம் மற்றும் சுய வெறுப்பு இவைகளின் மூலம் இறைவனின் வல்லமை அவர்களில் வெளிப்படவில்லை.

நற்செய்தியின் வெளிச்சத்தில் நாம் தனிநபர்களாக, திருச்சபைகளாக நம்மை ஆராய்ந்து பார்க்க வேண்டும். கிறிஸ்தவ விசுவாசத்தில் தனிப்பட்ட விதத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களின் ஐக்கியமாக நாம் இருக்கிறோமா? நாம் அன்பின் ஆவியினால் நிறைந்துள்ள பரிசுத்தவான்களா? சுயத்திற்கு மரித்து, இறைவனுக்காக வாழுகின்றோமா? கிறிஸ்துவை அறிந்துகொள்ளுதல், விசுவாசத்தைக் குறித்த அறிவு அல்ல சபை பாரம்பரியத்தில் நிலைத்திருத்தல் ஆகியவைகள் உங்களை இரட்சிக்கும் என்று நினைக்காதீர்கள். மதரீதியான சிந்தனைகள் மற்றும் குருட்டுத்தனமான மதவெறி இருந்தாலும், இறைவனின் ஜீவன் இல்லையென்றால், நீங்கள் ஆவிக்குரிய நிலையில் மரித்தவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் உண்மையாகவே பரிசுத்த ஆவியின் வரத்தை பெற்றிருக்கிறீர்களா? கிறிஸ்துவின் வல்லமை, ஜீவன், மகிழ்ச்சி மற்றும் நீதி நமது அழிந்து போகக்கூடிய சரீரங்களில் உண்டாகும்படி, பிதாவினுடைய வாக்குத்தத்தத்தை நாம் அடையத்தக்கதாக கிறிஸ்து நம்முடைய பாவங்களையெல்லாம் சிலுவையில் மன்னித்துவிட்டார். உங்களது பக்தியுள்ள கற்பனையான வாழ்க்கையைக் குறித்து திருப்தி அடைய வேண்டாம். உங்களது மத செயல்பாடுகளை மகிமைப்படுத்த வேண்டாம். மனம்திரும்புங்கள், மனமாற்றம் அடையுங்கள். தொடர்ந்து அவருடைய ஆவியினால் நிரப்பப்படும்படி கிறிஸ்துவிடம் கேளுங்கள். அப்போது நீங்கள் உங்கள் துன்மார்க்க நிலையை காணமுடியும். உங்களது பாவமுள்ள சுயத்தை வெறுத்து ஒடுக்க முடியும். நித்திய வாழ்வினால் நிறைந்திருக்கும் புதிய படைப்பாக, கிறிஸ்து உங்களை உருவாக்குவார்.

அருமையான சகோதரனே, கிறிஸ்தவ சபையில் செயல்படும் சாத்தானின் ஆவியைப் போல இருந்த மாயவித்தைக்காரன் சீமோனைப் போல செயல்படாதபடி கவனமாய் இருங்கள். அவன் அப்போஸ்தலர்களிடம் இருந்து புறப்பட்ட இறைவனின் வல்லமையை கண்டான். அதை இச்சித்தான். இந்த வல்லமையை அவனுக்கும் கொடுப்பார்கள் என்று அவன் நினைத்தான். அப்போது அவனும் மற்றவர்களுக்கு இதைத் தர முடியும் என்று நினைத்தான். ஒருவேளை அப்படி நடந்திருந்தால், அவன் பிலிப்புவைவிட வல்லமை மிக்கவனாக மாறியிருப்பான். மக்களுக்காக செயல்படுகிற இந்த உதவிக்காரனை விட்டுவிட்டு, மாயவித்தைக்காரன் சீமோனிடம் திரும்பியிருப்பார்கள்.

ஞானஸ்நானம் எடுத்திருந்தும் மாய்மாலமான மனந்திரும்புதினால் ஒரு பெருமையுள்ள பிசாசாக அந்த மனிதன் இருந்ததை இது சுட்டிக் காண்பிக்கிறது. அவன் அதிகார ஆசையுள்ளவனாகவும், ஆணவமிக்கவனாகவும் இருந்தான். இறைவனின் வார்த்தை என்னும் பட்டயத்தால், அவனுடைய பாவங்களில் இருந்து அவன் விடுவிக்கப்படாமல் இருந்தான். இதுவே அவனுடைய உள்ளான நிலையாக இருந்தது. தீய அதிகாரங்கள் மற்றும் வல்லமைகளில் இருந்து மீட்கப்படுவது தான் நம்முடைய இரட்சிப்பு ஆகும். அது வெறுமனே ஓர் மதஉணர்வு அல்ல அல்லது அறிவுப்பூர்வமான புரிதலும் அல்ல.

சீமோனின் தீய குணம் விரைவில் அவனுடைய பண ஆசையின் மூலம் நிரூபணமாகியது. அவன் கைகளை வைப்பதினால் உண்டாகும் வல்லமையினால் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாக நினைத்தான். சிலுவையில் கிறிஸ்துவின் ஒப்பற்ற தியாகத்தை குறித்த கிறிஸ்தவத்தின் செய்தியின் சாராம்சத்தை அவன் உணர்ந்து கொள்ளவில்லை. பணம், நற்செயல்கள், அன்பளிப்பு அல்லது வேறு எந்த காரியத்தாலும் இறைவனின் கிருபையை பெற்றுக்கொள்வது கூடாத காரியம் ஆகும். அப்படிப்பட்ட பேரம் பேசுதலும் இறைவன் இறங்கி வருவதில்லை. அவர் இரக்கமுள்ள பிதாவாக இருக்கிறபடியால், இலவசமாகவும், நித்தியமாகவும் அதைக் கொடுக்க விரும்புகிறார். அன்புள்ள ஒருவரை விட்டுவிலக முற்படுபவன் வியாபாரியாக இருக்கிறான். அவன் தீய இடமாகிய நரகத்தினுள் சென்று விழுவான்.

பேதுரு உடனடியாக அந்த மாய்மாலக்காரனிடம் கூறினார். “உன் பணம் உன்னோடே கூட நாசமாகக் கடவது. நீ சுயநலம், அதிகார ஆசை, அகங்காரம் மற்றும் பொய்யினால் நிறைந்துள்ளாய். நீ இறைவனின் ஆவியால் பிறக்கவில்லை. நீ பிசாசின் மகனாக இருக்கிறாய். நீ கிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருப்பதாக கூறுகிறாய். நீ ஞானஸ்நானம் எடுத்திருக்கிறார். ஆனாலும் நீ இறைவனுடைய ராஜ்யத்தில் பங்காளியாக இல்லை. முன்பு இருந்ததைப் போலவே உனது வழிகள் இன்னமும் கோணலானவையாக உள்ளன. ஆகவே நீ பெருமையுள்ளவனாக கறைபட்டு, துன்மார்க்கனாகவும், பாதகனாகவும் இருக்கிறாய். நீ மனித வழிகளில் யோசிக்கிறாய். பரிசுத்த ஆவியானவரின் ஒளியூட்டுதலில் நீ இல்லை. ஓ! பரிதாபமான சீமோனே, நீ எல்லாக் காரியத்தையும் பணத்தினால் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறாய். நீ இறைவனுடைய ஆவியின் கிருபையை வாங்க நினைக்கிறாய். உனது பெருமை மற்றும் இச்சையில் இருந்து மனந்திரும்பு. உனது துன்மார்க்கம் ஒழியட்டும். உனது வாழ்வின் திட்டம் மாற்றி அமைக்கப்படட்டும். இறைவனுக்கு முன்பாக உனது பாவங்களில் இருந்து கண்ணீரோடு மனந்திரும்பு. உனது துன்மார்க்கத்தை உனக்கு மன்னிக்கும்படி அவரிடம் கேள். உன்னை தீய கட்டுகளில் இருந்து விடுவிக்கும்படி கேள். நீ அழிவுக்கேதுவான கோபத்திற்கு உனது இதயத்தை திறந்து கொடுத்துள்ளாய். அந்நிலையை மாற்றிவிடு. இறைவனின் மன்னிப்பிற்காக கெஞ்சு. அப்போது அவர் உன்னுடைய பாவத்தை மன்னிப்பார். நீ உனது பாவத்திலிருந்து முழுமையாகவும், மனப்பூர்வமாகவும் பிரிந்த வரவில்லையென்றால், அவர் உன்னை மன்னிக்கமாட்டார். நீ மனந்திரும்பினால், உனக்காக ஆயத்தம் பண்ணப்பட்டுள்ள மன்னிப்பையும், பாதுகாப்பையும் பெற்றுக்கொள்வாய்.

இதைப்போலவே அருமையான சகோதரனே, சகோதரியே மனமாற்றம் அடையாமல், மனந்திரும்பாமல் நீ இருந்தால் உனது திருச்சபைக்கு ஆபத்தாக இருப்பாய். இறைவனுக்கும், சாத்தானுக்கும் இடையில் உமது மனம் அலைபாய்வதால் அநேகருடைய இருதயங்களுக்கு நஞ்சை செலுத்துகிறவனாக இருப்பாய். அநீதியின் கயிறுகளால் உன்னுடன் இணைந்திருப்பவர்களை கட்டுவாய். இவ்விதமாய் பரலோகத்திற்கு அல்ல, நரகத்திற்கு நீ ஒரு வாசலாக மாறுவாய். உமது வார்த்தைகள் மக்களை தீட்டுப்படுத்தும். ஒருவரையும் இரட்சிக்காது.

துரதிர்ஷ்டவசமாக, மாயவித்தைக்காரன் சீமோன் உண்மையாக மனம்திரும்பவில்லை. அவன் அப்போஸ்தலர்களுக்கு முன்பு முழங்கால்படியிடவில்லை, அவனுடைய பாவத்தை அறிக்கையிடவில்லை. மாறாக, அப்போஸ்தலர் பேதுருவின் வார்த்தைகளில் இருந்த ஆவிக்குரிய எச்சரிப்பு குறித்து வெறுமனே பயந்தான். அனனியா மற்றும் சப்பீராளின் விஷயத்தில் எருசலேமில் பரிசுத்த ஆவியானவர் செய்ததைப் போல மாயவித்தைக்காரனுக்கு மரணத்தைக் கொண்டு வரவில்லை. சீமோன் மறுபடியும் பிறக்கவில்லை, அவன் பரிசுத்த ஆவியானவரைப் பெறவில்லை. ஆகவே மனந்திரும்புவதற்கான வாய்ப்பு இன்னமும் அவனுக்கு இருந்தது.

மாய்மாலம் நிறைந்த மாயவித்தைக்காரன் மனம் திரும்பவில்லை என்பதை சபை வரலாற்றின் மூலம் நாம் அறிந்துகொள்கிறோம். தன்னையே கடவுளாக அறிவிக்கின்ற ஒரு கள்ளப்போதனையை உருவாக்குபவனாக மாறிப்போனான். இப்படிப்பட்ட போதனை எல்லாவிதமான பாலியல் பாவங்களையும், அசுத்தமான விபச்சாரத்தையும் ஏற்றுக்கொள்கிறது. எங்கே மத சம்பந்தமான மகிழ்ச்சியான காரியங்களிலும், கிளர்ச்சியூட்டும் காரியங்களிலும் சாத்தானின் ஆவி தோன்றுகிறதோ அங்கே இது நடைபெறுகிறது. பணம் மற்றும் பாலுறவு காரியங்களை வைத்து விரைவில் பிரிவினைகள் ஏற்படுகிறது. ஆகையால் பிரியமான சகோதரனே மிகவும் கவனத்துடன் எச்சரிக்கையாயிரு. கிளர்ச்சியூட்டும் மதசம்பந்தமான எல்லா இயக்கங்களில் இருந்தும் நீ விலகியிரு. மனந்திரும்பு கிறிஸ்துவின் ஏழ்மை மற்றும் மனதிருப்தியை உரிமையாக்கிக் கொள். பரிசுத்த ஆவியானவரின் தூய்மையை தெரிந்துகொள். அவருடைய வல்லமையினால் சுயகட்டுப்பாடுடன் நடந்துகொள்.

மேலும் அநேக சமாரியர்கள் உண்மையாக மனந்திரும்பியிருப்பதை அப்போஸ்தலர்கள் கண்டுபிடித்தார்கள். பரிசுத்த ஆவியினால் மனமாற்றத்தை சமாரியர்கள் பெற்றிருந்தார்கள். அப்போஸ்தலர்கள் கிளர்ச்சியுடனோ அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்டோ பிரசங்கிக்கவில்லை. மாறாக அவர்கள் இருதயம் சுத்தமாக்கப்படுவதை வலியுறுத்தினார்கள். அவர்கள் உண்மையான மறுபிறப்பை வலியுறுத்தினார்கள். ஏனெனில் இரண்டாவது பிறப்பு இல்லையென்றால், ஒருவரும் இறைவனின் ராஜ்யத்தில் அனுமதிக்கப்படுவதில்லை.

அருமையான சகோதரனே, இன்று இறைவனுடைய ஆவியானவருக்கு உன்னையே ஒப்புக்கொடுக்கும்படி நாங்கள் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உன்னுடைய பாவங்களை அவர் கண்டித்து உணர்த்தும்படி அவரிடம் கேள். அவைகளை மேற்கொண்டு, அவைகளை சாகும்படி அழித்துவிடு. கிறிஸ்துவின் இரத்தத்தின் மீது வைக்கும் விசுவாசத்தினால் உன்னை பரிசுத்தப்படுத்தும்படி அவரிடம் கேள். அவர் உன்னை நிரப்புவார். அநேகருக்கு நீ ஆபத்தைக் கொண்டு வராதபடி சாலையின் மையப்பகுதியில் நீ தொடர்ந்து நிற்காதே.

விண்ணப்பம்: பரிசுத்தமான ஆண்டவரே, தயவுகூர்ந்து எங்களை அழித்துவிடாதிரும். கிறிஸ்துவின் இரத்தத்தினால் என்னுடைய எல்லா பாவங்களில் இருந்தும் என்னை தூய்மைப்படுத்தும். எல்லா பெருமை, அசுத்தம், அதிகார ஆசை மேலும் மாய்மாலம் ஆகியவைகளை உமது பரிசுத்த ஆவியானவர் என்னை விட்டு அகற்றுவாராக! நான் எனது சுயத்திலிருந்து விடுதலையாகவும், எல்லா தீய ஆவிகளிலிருந்து விடுபடவும் உதவி செய்யும். விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாகிய கிறிஸ்துவில் நாம் மறுபடியும் பிறப்பிக்கப்பட கிருபை செய்யும்.


3. மனமாற்றம் மற்றும் எத்தியோப்பிய பொக்கிஷக்காரனின் ஞானஸ்நானம் (அப்போஸ்தலர் 8:26-40)


அப்போஸ்தலர் 8:26-40
26 பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி: நீ எழுந்து, தெற்கு முகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்ப் போ என்றான்.27 அந்தப்படி அவன் எழுந்துபோனான். அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து;28 ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக் கொண்டிருந்தான்.29 ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்.30 அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்றான்.31 அதற்கு அவன்: ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும் என்று சொல்லி; பிலிப்பு ஏறி, தன்னோடே உட்காரும்படி அவனை வேண்டிக்கொண்டான்.32 அவன் வாசித்த வேதவாக்கியம் என்னவென்றால்: அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்; மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.33 அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போயிற்று; அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும் என்பதே.34 மந்திரி பிலிப்பை நோக்கி: தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக்குறித்தோ, வேறொருவரைக்குறித்தோ? எனக்குச் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.35 அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக்குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான்.36 இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்.37 அதற்குப் பிலிப்பு: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுது அவன்: இயேசு கிறிஸ்துவைத் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி;38 இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள், பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங்கொடுத்தான்.39 அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான்.40 பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அவ்விடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவுக்கு வருகிறவரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டுவந்தான்.

நப்லஸில் உயிருள்ள கிறிஸ்துவின் தூதன் பிலிப்புவிற்க வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த அவருடைய ஊழியத்தை விட்டுவிட்டு வெப்பம் மிகுந்த தென்பகுதிக்கு, பாலைவன சாலையில் செல்லும்படி கட்டளையிட்டார். மனிதனோ அல்லது மிருகமோ பாலைவனத்தில் வசிப்பதில்லை. பிரசங்கியாளர் இருதயம் ஒருவேளை கீழ்ப்படியாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவன் சுயத்தை மறுத்து, எழுந்து, அவனுடைய ஆண்டவருக்கு கீழ்ப்படிந்து சென்றான். தனது கீழ்ப்படிதல் மூலம் கிறிஸ்துவின் வெற்றியை அவன் மகிமைப்படுத்தினான். நற்செய்தியின் வல்லமைக்குள் ஒரு முழு தேசத்தையும் ஆதாயப்படுத்த அவன் உதவினான்.

கந்தாகே நீதிமன்றத்தில், எத்தியோப்பிய ராணிக்கு, மிக உன்னதமான பொக்கிஷக்காரன் என்ற பதவியில் இருந்த செழிப்புமிக்க மனிதன், எருசலேமில் இருந்து தன்னுடைய நாட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தான். ஒருவேளை அவன் இறைவனின் ஒருமைத் தன்மையைக் குறித்து கேள்விப்பட்டிருக்கலாம். யூத அருட்பணியாளர்கள் நைல் நதியின் நடுவில் எலிபன்டைன் தீவுப் பகுதியை மையமாகக் கொண்டு செயல்பட்ட யூத அருட்பணியாளர்கள் மூலமாக அவருடைய நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கக் கூடும். இறைவனுக்காக எல்லா மனிதர்களும் தாகத்துடன் இருப்பினும், எல்லா மதங்கள் மற்றும் கலாச்சாரங்களில் உத்தம மனதுடன் அவரைத் தேடுபவர்கள் மாத்திரமே உண்மையான இறைவனுடன் தனிப்பட்ட உறவிற்குள் வருகிறார்கள்.

இந்த உயர் அதிகாரி ஒரு அண்ணகனாக இருந்தான். அவருடைய ராணிக்கு நம்பிக்கைக்குரிய ஆலோசகராக இருந்தான். அவனுக்கும், அவனுடைய நாட்டிற்கும் இறைவனுடைய ஆசீர்வாதம் வேண்டும் என்பதற்காக தூரமாய் இருந்த பரிசுத்த நிலத்திற்கு சென்றிருந்தான். எருசலேமில் அவன் ஆண்டவரை ஆராதித்தான். ஆனால் அவனுடைய இருதயமோ வெறுமையாக இருந்தது. ஆலயத்தின் உள்ளே இருக்கும் ஆராதனையின் முற்றப்பகுதிக்கு, அண்ணகர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே அவன் அதிகவிலை கொடுத்து தோற்சுருள்களில் ஒன்றை வாங்கினான். அந்த தோற்சுருள் ஏசாயா புத்தகத்தை உள்ளடக்கியதாக இருந்தது. இப்படிப்பட்ட தோள்சுருள்கள் கும்ரான் குகைகளில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த பொக்கிஷக்காரன் அந்த புத்தகத்தை எபிரெயு மொழியில் வாசித்தானா அல்லது அதனுடைய கிரேக்க மொழிபெயர்ப்பை வாங்கிச் சென்றானா என்பது நமக்குத் தெரியாது. அவன் அதை வாசிக்கவும், புரிந்தகொள்ளவும் கூடியவனாக இருந்தான் என்பது தான் முக்கியமான காரியம் ஆகும். அவன் பழைய ஏற்பாட்டின் ஆவியினால் தனது இருதயத்தை நிரப்ப ஆசையாய் இருந்தான். புதிய சிந்தனைகள், வல்லமை மற்றும் ஒளியூட்டப்படுதலுடன், அவன் வீட்டிற்குச் செல்ல வாஞ்சித்தான். அவனுடைய கரங்களில் பெரிய பொக்கிஷத்தை உடையவனாக இருந்தான்.

அவன் வாசிக்கும்போது கிறிஸ்துவைக் குறித்த தீர்க்கதரிசன பகுதியைக் கண்டான். அது இறைவனின் தாழ்மையுள்ள ஆட்டுக்குட்டியைக் குறித்த வசனங்கள் ஆகும். இறைவனைத் தேடும் இந்த புறஇனத்தைச் சேர்ந்தவனுடன் இணைந்து கொள்ளும்படி பரிசுத்த ஆவியானவர் பிலிப்புவை வழிநடத்தினார். இறைவனுக்காக தேடுதலையும் அவரை தேடுவதற்கான ஆரம்பத்தையும் கொண்டு வருகிற ஞானமுற்ற கேள்வியை பிலிப்பு அவனிடம் கேட்டான். “நீ வாசிக்கிறதின் அர்த்தம் உனக்குத் தெரியுமா? உத்தமமான பொக்கிஷக்காரன் பெருமையுடன் இல்லாததற்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். அவன் இவ்விதம் சொல்லவில்லை”. நான் வேதவசனங்களின் அர்த்தங்களை சரியாக அறிந்து வைத்திருக்கிறேன். மேலும் நான் ஒவ்வொன்றையும் புரிந்து வைத்திருக்கிறேன்”. அவன் தனது பலவீனத்தை தாழ்மையுடன் அறிக்கையிட்டான். தனது தாழ்மையின் மூலம் இறைவனின் ஞானத்தை அவன் பெற்றுக்கொண்டான் தனக்கு எல்லாம் தெரியும் என்றும் தான் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று நினைப்பவனுக்கு ஐயோ! அவனது இருதயமும், மனமும் எப்போதும் நற்செய்திக்கு மூடியே இருக்கும்.

ஓர் மிக நீண்ட உரையாடல் தொடங்கியது. உலகத்தின் பாவங்களை தாழ்மை, மற்றும் அன்புடன் தன்மீது சுமந்து கொண்ட இயேசுவே இறைவனின் உண்மையான ஆட்டுக்குட்டி என்பதை பிலிப்பு அவனுக்கு காண்பித்தான். எல்லா மக்களையும், அந்த அண்ணகனையும் மற்றும் அவனுடைய மக்களையும் இரட்சிக்கும்படி இயேசு சிலுவையில் தொங்கிய போது இறைவனுடைய கோபாக்கினையை தன்மீது ஏற்றுக்கொண்டார். சிலுவையில் அறையப்பட்ட அவர் மீது வைக்கும் விசுவாசம் கடந்த கால தவறுகளைக் குறித்த புரிந்துகொள்ளுதலை இருதயத்தில் கொண்டு வருகிறது. இறைவனின் வாழ்விற்கு இப்பொழுதும், எதிர்காலத்திலும் விசுவாசியின் இருதயத்தை அது திறக்கின்றது. இறைவனின் ஆட்டுக்குட்டியின் மூலமும், சிலுவையின் ஒப்பற்ற தன்மையின் மூலமும் வாழ்வின் வழிக்கு, தாகத்துடன் இருந்த அவனை பிலிப்பு வழி நடத்தினான்.

இந்த நெருக்கமான மற்றும் முக்கியமான உரையாடலின் சாட்சியை பரிசுத்த ஆவியானவர் உறுதிப்படுத்தினார். இறைவனைத் தேடிய இவன் கேட்டான், புரிந்துகொண்டான், விசுவாசித்தான். அவன் உடனடியாக கிறிஸ்துவுக்கு தன்னுடைய வாழ்வை ஒப்புக்கொடுக்கும்படி தீர்மானித்தான். கிறிஸ்துவை ஆண்டவராகவும், மீட்பராகவும் ஏற்றுக்கொண்டான். அவன் வனாந்தரத்தில் கொஞ்சம் தண்ணீரைக் கண்டவுடன், ஞானஸ்நானம் தரும்படி கேட்டான்.

சமாரியாவில் ஏற்பட்ட அனுபவத்தின் நிமித்தம், பிலிப்பு இவனுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதை ஒருவேளை தாமதப்படுத்தியிருக்கலாம். ஞானஸ்நானத்தின் சிலாக்கியத்தில் பெற்றிருக்க வேண்டிய அடிப்படைக் கொள்கைகளை அவன் அறிவித்தான். “நீ முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லை”. உனது எண்ணங்கள், மனம், உணர்வுகள் அல்லது சித்தம் இவைகளில் மட்டுமல்ல, முழு இருதயத்தோடும் விசுவாசிக்க வேண்டும். பாதி மனதுடன் இயேசுவை நோக்கியும், பாதிமனது உலகத்தை நோக்கியும் வருபவர்களின் இருதயத்தில் இறைவனின் ஆவியானவர் தங்குவதில்லை. இயேசு உன்னை நித்தியத்தில் ஏற்றுக்கொள்ளும்படி, அவரை முழுமையாகத் தெரிந்துகொள்.

பொக்கிஷக்காரன் தனது முடிவை தெரிவித்தான். ஞானஸ்நானம் தரும்படி வலியுறுத்திக் கேட்டான். அவன் தேர்வில் வெற்றியடைந்தான். இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தை ஒரே வாக்கியத்தில் சுருக்கிக் கூறினான். “இயேசு கிறிஸ்து இறைவனுடைய குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன்”. இந்த கூற்றின் மூலம், அவன் பரிசுத்த திரித்துவத்தின் இரகசியத்தை உணர்ந்து கொண்டதை சாட்சியிட்டான். கிறிஸ்துவின் மீட்பில் அவனும் இணைந்து கொண்டான். அவன் இறைவன் பிதாவாக இருக்கிறார் என்பதை விசுவாசித்தான். அவர் தரும் நித்திய வாழ்வில் பங்கெடுத்தான். இந்த அறிக்கை ஒரு வெற்றுக் கொள்கை அல்ல. உலகத்தில் உள்ள எல்லா அணுகுண்டுகளையும் விட வல்லமை வாய்ந்தது. சற்று ஆழமாக யோசியுங்கள் அருமையான சகோதரனே, இந்த சாட்சியின் அறிக்கையின் அர்த்தம் என்னவென்றால், நீயும் இறைவனின் பிள்ளையாக மாறமுடியும். நித்தியமான இறைவன், அவருடைய குமாரனாகிய இயேசுவின் மூலம் நம்முடைய பிதாவாக இருக்கிறார்.

மனந்திரும்பிய இந்த விசுவாசிக்கு பிலிப்பு ஞானஸ்நானம் கொடுத்த பிறகு பரிசுத்த ஆவியானவர் உடனடியாக அவனை விட்டு பிலிப்புவை கொண்டுபோய்விட்டார். இனி அவன் பிரசங்கியாருடன் இணைந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இயேசுவை மட்டும் உறுதியாக பிடித்துக் கொண்டான். இந்த பொக்கிஷக்காரனின் நிலை மாயவித்தைக்காரனின் நிலையை விட வித்தியாசமாக இருந்தது. ஏனெனில் மாயவித்தைக்காரன் பிலிப்புவை தன் அருகில் வைத்துக்கொண்டான், ஆனால் கிறிஸ்துவிற்கு நெருக்கமாக வரவில்லை. இறைவனிடம் விண்ணப்பம் செய்து, துதிகளை ஏறெடுத்து, அவரை ஆராதித்தவனாக, இந்த புதிய ஞானஸ்நானம் எடுத்த பொக்கிஷக்காரன் சென்றான். அவன் உன்னதமானவரை எருசலேமில் சந்திக்கவில்லை. ஆனால் வனாந்தரத்தில் சந்தித்தான். கிறிஸ்துவின் விரிவான எல்லைக்குள் அவன் முழுமையாக பிரவேசித்தான். இறைவனாகிய ஆண்டவர் எத்தியோப்பியனாகிய இந்த அண்ணகனை யூதர்களைப் போல புறக்கணிக்கவில்லை. அவனை ஏற்றுக்கொண்டார், அணைத்துக்கொண்டார், அவனுக்கு தேவையான அனைத்தையும் வழங்கினார்.

வனாந்தரத்தில் இருந்து பாலஸ்தீனாவில் கடற்கரைப் பட்டணங்களுக்கு பிலிப்புவை பரிசுத்த ஆவியானவர் கொண்டு வந்தார். அங்கே அவன் தென்பகுதியில் இருந்து வடபகுதியில் இருந்த கர்மேல் மலைக்கு பயணம் செய்தான். எல்லா இடங்களிலும் இயேசுவின் நாமத்தைக் குறித்துப் பிரசங்கித்தான், அவனுடைய ஆண்டவருக்கு வழியை ஆயத்தம்பண்ணினான்.

விண்ணப்பம்: எங்கள் பரிசுத்தமான ஆண்டவரே, உம்முடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து, உம்முடைய ஆவியின் வல்லமையினால் எத்தியோப்பிய பொக்கிஷக்காரனுக்கு நற்செய்தியை பிரசங்கித்த உம்முடைய ஊழியக்காரன் பிலிப்புவிற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உம்முடைய சிலுவையில் அறையப்பட்ட குமாரன் மீது அந்த எத்தியோப்பியன் வைத்த விசுவாசத்தின் மூலம் அவனை மரணத்திலிருந்து வாழ்விற்கு கொண்டு வந்தீர். அதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். உம்மைத் தேடுகிற அனைத்து மக்களையும் நாங்கள் கண்டுபிடிக்கும்படி உம்முடைய பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு எங்களை வழிநடத்தும். அவர்கள் உம்மில் என்றென்றும் வாழும்படி, அவர்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் பதில் தரும்படியாக, உம்முடைய குமாரனை அவர்கள் கண்களுக்கு முன்பாக உயர்த்தும்.

கேள்வி:

  1. எத்தியோப்பிய பொக்கிஷக்காரனுக்கு பிலிப்பு விளக்கிச் சொன்ன நற்செய்தி என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on July 02, 2013, at 09:55 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)