Previous Lesson -- Next Lesson
2. மாயவித்தைக்காரன் சீமோனும், சமாரியாவின் பேதுரு மற்றும் யோவான் செய்த பணிகளும் (அப்போஸ்தலர் 8:9-25)
அப்போஸ்தலர் 8:9-13
9 சீமோன் என்று பேர்கொண்ட ஒரு மனுஷன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தைக்காரனாயிருந்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியா நாட்டு ஜனங்களைப் பிரமிக்கப்பண்ணிக்கொண்டிருந்தான். 10 தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான் என்று எண்ணி, சிறியோர் பெரியோர் யாவரும் அவனுக்குச் செவிகொடுத்துவந்தார்கள்.11 அவன் அநேக காலமாய்த் தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள்.12 தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம்பெற்றார்கள். 13 அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைப்பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் கண்டு பிரமித்தான்.
அக்காலத்தில் நப்லஸ் சுற்றியிருந்த பகுதிகள் அநீதியின் ஆவியினால் ஆட்கொள்ளபட்டிருந்தது. நியாயப்பிரமாணத்தின் சத்தியத்தின் ஒரு பிரிவினராக இருந்த சமாரியர்கள், பல்வேறுபட்ட பகுதிகளின் கலப்பின மக்களாக இருந்தார்கள். அநேக தீய ஆவிகள் அவர்களை ஆட்கொண்டிருந்தது. இப்படிப்பட்ட ஆவிகள் அவர்களுடைய வீடுகளில் நிறைந்திருந்தது. அவர்களுடைய மனங்களை ஆட்கொண்டிருந்தது. இந்த ஆவிகளால் ஆட்கொள்ளப்பட்டிருந்த சமாரியாவில் குறிப்பாக தீய ஆவியினால் வழிநடத்தப்பட்ட சீமோன் என்ற நன்கு அறியப்பட்ட மாயவித்தைக்காரன் இருந்தான். அவனைப் பின்பற்றுபவர்களும் அங்கே இருந்தார்கள். நற்செய்தியின் நல்ல செய்தி அங்கு வந்த போது இருளின் கட்டுகள் அநேகரை விட்டு விலகியது. கட்டப்பட்டவர்களை கிறிஸ்துவின் வார்த்தை விடுவித்தது. பரலோகின் ஒளி சாத்தானின் இருளை துரத்தியது. கிறிஸ்துவே இன்றும் வெற்றியாளராக இருக்கிறார்.
தன்னுடைய வல்லமையினால் அநேக மக்கள் மீது அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்த மாயவித்தைக்காரன், தன்னை மிகப்பெரியவனாக காண்பித்துக் கொண்டான். அவனை நெருங்கி பின்பற்றியவர்கள் மிகப்பெரிய இறைவனின் வல்லமை என்று அழைத்தார்கள். சாத்தானின் ஆவியின் சாராம்சம் பெருமை, அகங்காரம் மற்றும் ஆளுமையாக இருக்கிறது என்பது மீண்டும் ஒரு முறை இதன் மூலம் நிரூபணமாகிறது. ஆனால் கிறிஸ்துவோ தாழ்மையுள்ளவராக, சாந்தமுள்ளவராக இருக்கிறார். அவருடைய பிதாவிற்கு எல்லா மகிமையையும். கனத்தையும் அவர் கொடுத்தார். அவர் குற்றவாளியைப் போல நம்முடைய இடத்தை எடுத்துக்கொண்டு, நமக்காக மரித்தார்.
இந்த இருள் நிறைந்த பட்டணத்திற்கு கிறிஸ்துவின் வல்லமையோடு தாழ்மையின் அப்போஸ்தலனாக பிலிப்பு வந்தபோது, நற்செய்தியின் ஒளி பிரகாசிக்க ஆரம்பித்தது. அநேக மக்கள் ஒளியூட்டப்பட்டார்கள். மாயவித்தைக்காரன் சீமோனை மிகவும் நெருங்கிப் பின்பற்றியவர்கள் இப்போது பிலிப்புவின் வார்த்தைகளை நம்பி, அவனை நோக்கி விரைந்தார்கள். அவர்கள் முதலாவது தங்கள் பாவங்களிலிருந்து இரட்சிப்பை தேடவில்லை அல்லது அங்கே பெரிய மனந்திரும்புதலும் ஏற்படவில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் கிறிஸ்துவின் நாமத்தில் நடப்பிக்கப்பட்ட அற்புதங்களைக் கண்டு வியந்தார்கள். அவருடைய வல்லமை மற்றும் பாதுகாப்பு வேண்டும் என்று விரும்பினார்கள். அவர்கள் ஞானஸ்நானம் எடுக்க ஆரம்பித்தார்கள் உண்மையில் கிறிஸ்துவின் மீதான அவர்களுடைய விசுவாசம் ஒரு நிலைத்திருக்கம் விசுவாசமாக இல்லை. அது வெறும் நம்பிக்கையாகவும், பிலிப்பு செய்த காரியங்களைக் குறித்த பாராட்டுதலுமாகவும் இருந்தது.
இப்படிப்பட்ட நம்பிக்கை உண்மையாக ஆவிக்குரிய விசுவாசம் அல்ல. பெருங்கூட்டமக்கள் வல்லமை மிக்க நற்செய்தியாளர் பிலிப்புவை நோக்கி விரைந்தார்கள். ஆனால் அவர்கள் மனந்திரும்பவில்லை. மாயவித்தைக்காரன் சீமோன் இறைவனின் பெரிய வல்லமை பிலிப்புவில் இருப்பதைக் கண்டான். எனவே ஒரு மேற்போக்கான மாற்றம் இவனுக்குள்ளும் வெளிப்பட்டது. அவன் கிறிஸ்துவின் செய்தியாளருக்கு தெளிவாக ஒப்புக்கொடுத்தான். மனதில் ஏற்றுக்கொண்ட செய்திக்கு அடையாளமாக ஞானஸ்நானம் எடுத்தான். இருப்பினும் அவனுடைய இருதயம் கடினமாகவே இருந்தது. அவனுடைய ஆவியும் கல்லாக இருந்தது. அவன் இன்னமும் தீய ஆவியினால் நிறைந்தவனாக இருந்தான். அவன் மாய்மாலம் பண்ணினான். பிலிப்புவை உறுதியாக பற்றிக்கொண்டான். ஆனால் இயேசுவைப் பற்றிக்கொள்ளவில்லை. அவன் பிலிப்புவை கவனித்துப் பார்த்தான். இறைவனின் மனிதனிடம் உள்ள அவனுடைய வல்லமை மற்றும் மகிழ்ச்சிக்கு பின்னால் உள்ள இரகசியத்தை அவனிடம் இருந்து கற்றுக்கொள்ள விரும்பினான். பிலிப்புவிடம் இருந்து வெளிப்பட்ட கிறிஸ்துவின் வல்லமையை அவன் கண்டபோது இன்னும் அதிகமாக அவன் பிரமிப்படைந்தான். ஆனாலும் அதை சரியாய் அடையும் நிலையில் அவன் இல்லை.
பிலிப்புவின் கரத்தினால் கொண்டுவரப்பட்ட நப்லஸில் ஏற்பட்ட இந்த எழுப்புதல் மூலம் நாம் சிலவற்றை கற்றுக்கொள்கிறோம். இறைவனுடைய வார்த்தையை பெருங்கூட்டமாக ஏற்றுக்கொள்வதோ அல்லது இறைவனுடைய வல்லமை வழிந்தோடுவதோ, மெய்யான மனந்திரும்புதல், மெய்யான விசுவாசம், மனமாற்றம், மற்றும் இரட்சிப்பிற்கு நேராக மக்களை வழிநடத்தாது. சுபாவத்தின் படி அனைத்து மக்களும், பொதுவாக பக்தியுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஆவிக்குரிய அற்புதங்களை நம்ப ஆயத்தமாயிருக்கிறார்கள். கவரக்கூடிய பேச்சுகளுக்கு கை தட்டுகிறார்கள், கவர்ச்சிக்கும், கவர்ந்திழுக்கும் செய்திக்கும் ஒப்புக்கொடுக்கிறார்கள். அவர்கள் சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த கிறிஸ்துவிற்கு தங்களை ஒப்புக்கொடுக்கவில்லை. அவர்கள் சுயத்தை மறுதலிக்கவும் ஆயத்தமாக இல்லை. அருமையான சகோதரனே, நீ கிறிஸ்துவில் நடப்பட்டுள்ளாயா? அல்லது அவருடைய சபையில் ஒரு உளவாளியாக நீ இருக்கிறாயா?
விண்ணப்பம்: ஆண்டவரே! நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உம்முடைய நற்செய்தி பிசாசுகளைத் துரத்தவும், அநேகர் விசுவாசிக்கும்படி விடுதலையைத் தரவும் ஆசீர்வாதமான வல்லமையுள்ளதாக இருக்கிறது. எங்கள் சொந்த ஊரில் நாங்கள் செயலற்றவர்களாக இராதபடி உதவும். நாங்கள் எங்கே பிறந்தோமோ, அங்கே இராதபடி எங்களுடைய சுற்றுப்பகுதிகளுக்கு செல்லவும், உம்முடைய நாமத்தைக் குறித்து பிரசங்கிக்கவும் உதவும். அப்போது இயேசுவின் நாமத்தில் தீய ஆவிகள் விலகிச்செல்லவும், தனிநபர்கள் மனந்திரும்பவும் உம்முடைய பரிசுத்த ஆவியினால் மறுபிறப்பு அடையவும் உதவிசெய்யும். ஆமென்.
கேள்வி:
- சீமோனின் பாவம் என்ன? அதை எப்படி மேற்கொள்வது, பேதுரு அவனிடம் என்ன கூறினான்?