Previous Lesson -- Next Lesson
1. எருசலேமில் உள்ள கிறிஸ்தவ சபையின் முதல் உபத்திரவமும் சமாரியா முழுவதும் விசுவாசிகள் சிதறிப்போகுதலும் (அப்போஸ்தலர் 8:1-8)
அப்போஸ்தலர் 8:4-8
4 சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள்.5 அப்பொழுது பிலிப்பென்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப் போய், அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக்குறித்துப் பிரசங்கித்தான்.6 பிலிப்பு செய்த அதிசயங்களை ஜனங்கள் கேள்விப்பட்டு கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள்.7 அநேகரிலிருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டு அவர்களை விட்டுப் புறப்பட்டது. அநேகந்திமிர்வாதக்காரரும் சப்பாணிகளும் குணமாக்கப்பட்டார்கள்.8 அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று.
கிறிஸ்தவ சபையை அழிப்பதற்கு சாத்தான் எப்போதும் முயற்சி செய்கிறான். ஸ்தேவான் இரத்தசாட்சியாக மரித்தவுடன் மிகப்பெரிய உபத்திரவம் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு ஏற்பட்டது. இருப்பினும் சாத்தானின் தாக்குதலால் சபை அழிந்து போகவில்லை. மாறாக அவருடைய ஆவிக்குரிய வாழ்வு உறுதிப்படுத்தப்பட்டது. பிசாசிற்கு அடிமையாக செயல்பட்ட சவுல் ஆணவத்துடன், விசுவாசிக்கும் ஆண்கள், பெண்களை எருசலேமின் சிறைச்சாலையில் போட்டபோது அவர்களுக்கு பாடுகளும், உபத்திரவங்களும் நேரிட்டது. ஆலோசனைச் சங்கத்தின் அதிகாரத்திற்கு உட்படாத பல எல்லைப் பகுதிகளுக்கு சபையின் அநேக அங்கத்தினர்கள் சிதறிப் போனார்கள். இந்த அகதிகள் உடனடியாக புதிய வீட்டைப் பெற இயலவில்லை. ஒருவேளை வெகுவிரைவில் எருசலேமில் உள்ள தங்களது வீடுகளுக்கு திரும்பிச் செல்லும் நம்பிக்கையில் இருந்திருக்கலாம். அதே சமயத்தில் அவர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு வரவில்லை. இறைவனின் இராஜ்யத்தைக் குறித்து பிரசங்கித்தார்கள். பாடுகளின் மத்தியிலும் கிறிஸ்துவின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வாழ்ந்தார்கள். அவர்களது விசுவாசம் உடைக்கப்படாமல் இருந்தது. அவர்களது நம்பிக்கை அக்கினியினால் சோதிக்கப்பட்டது. யாக்கோபு சொன்ன வார்த்தைகளின் ஆழமான அர்த்தத்தை அவர்கள் அறிந்திருந்தார்கள். “நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரணகிரியை செய்யக்கடவது..யாக்கோபு (1:4)
ஏழு உதவிக்காரர்களில் ஒருவனாகிய பிலிப்பு சமாரியாவின் எல்லைப் பகுதிக்கு சென்றான். நப்லஸ்க்கு அருகில் உள்ள சீகேமில் அவன் தங்கினான். அவன் இறைமைந்தனைக் குறித்து விவரித்துப் பேசினான். இறைமைந்தன் மரணத்தை ஜெயித்தவர், பாவத்திலிருந்து இரட்சிப்பவர், சாத்தானை வென்றவர், பரலோகிற்கு ஏறிச் சென்றவர், இறைவனுடன் நம்மை ஒப்புரவாக்குபவர், இப்போதும் நமக்காக பரிந்து பேசுபவர், வலது பாரிசத்தில் வீற்றிருப்பவர் மேலும் இறைவனுடன் இணைந்து ஆளுகை செய்பவர் ஆவார். அவரைத் தேடுபவர்களில் எல்லா தீய வல்லமைகளையும் மேற்கொள்பவர், மேலும் அவருடைய ஆவியானவருக்கு நேராக அவர்களை நடத்துபவர் ஆவார். கிறிஸ்துவின் கரத்தில் ஒரு கருவியாக பிலிப்பு மாறியபோது, பரிசுத்த ஆவியானவரின் அபரிமிதமான வல்லமை அவனில் இருந்து புறப்பட்டது. அசுத்த ஆவிகளினால் பிடிக்கப்பட்டவர்களிலிருந்து மிகுந்த சத்தத்துடன் தீய ஆவிகள் வெளியேறி ஓடியது. நம்பிக்கையற்ற மக்கள் ஆறுதல் அடைந்தார்கள், முடவர்கள் நடந்தார்கள். எல்லா மக்களும் களிகூர்ந்தார்கள், பிரசங்கியாருடன் ஏகமனதாக இணைந்து கொண்டார்கள். கிறிஸ்துவின் இரட்சிப்பு கிடைத்தது. நகரம் முழுவதும் மகிழ்ச்சியினால் நிறைந்தது.
கேள்வி:
- கிறிஸ்துவின் மீது வைக்கும் விசுவாசத்திற்கும், அவருடைய ஊழியக்காரர்களின் வார்த்தைகளில் வைக்கும் நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?