Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 030 (The Apostles before the High Council)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)

17. ஆலோசனைச் சங்கம் முன்பு அப்போஸ்தலர்கள் (அப்போஸ்தலர் 5:26-33)


அப்போஸ்தலர் 5:26-33
26 உடனே சேனைத்தலைவன் சேவகரோடேகூடப்போய், ஜனங்கள் கல்லெறிவார்களென்று பயந்ததினால், பலவந்தம்பண்ணாமல் அவர்களை அழைத்துக்கொண்டுவந்தான். 27 அப்படி அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்துக்கு முன்பாக நிறுத்தினார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி: 28 நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி, அந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான். 29 அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது. 30 நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி, 31 இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார். 32 இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம்; தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள். 33 அதை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு யோசனை பண்ணினார்கள்

இறைவன் தன்னுடைய எதிரிகளை நேசிக்கிறார். நம்முடைய மனம் கற்பனை பண்ணுவதற்கு அப்பாற்பட்டு அவர் தீமைக்கு எதிராக அதிகமான இரக்கம் உள்ளவராக இருக்கிறார். பன்னிரெண்டு அப்போஸ்தலர்கள் மூலமாக சொல்லப்பட்ட வார்த்தைகள் மூலம் மனந்திரும்புதலுக்கான அழைப்பு கொடுக்கப்பட்டது. யூதர்களின் அதிகாரிகளான அனைவருக்கும் அவர்களுடைய ஆண்டவரிடம் திரும்பும்படியான அழைப்பு அது. அந்த ஆலோசனைச் சங்கத்தில் அப்போது அங்கிருந்தவர்களுக்கு மட்டுமல்ல, முழு ஆலோசனைச் சங்கத்தாருக்கும் உரிய அழைப்பு அது.

கிறிஸ்துவின் ஸ்தானாபதிகளாக இருந்தவர்களிடம் ஆலயத்து தலைவன் சென்றான். அவர்கள் அவனுடன் ஆலோசனைச் சங்கத்துக்கு பணிவுடன் சென்றார்கள். அவர்கள் விலங்கிடப்பட்ட குற்றவாளிகளாக செல்லவில்லை. மரியாதையுடன் சுதந்திரமாக நடத்தப்பட்டார்கள். அவர்களை கைது செய்ய ஆலயத்து தலைவனுக்கு துணிச்சலில்லை. இறைவனின் தூதுவர்களை மக்கள் ஆதரித்து, தங்கள் மேல் கல்லெறிந்து விடுவார்களோ என்று பயந்தான். ஆலயக் காவற்காரர்களை பின் தொடர்ந்து அப்போஸ்தலர்கள் மனமுவந்து நடந்தார்கள்.

பிரதான ஆசாரியனின் வீட்டில் எழுபது மூப்பர்களும் கூடினார்கள். அவனுடைய இருதயம் நிதானமிழந்து, அமைதியற்று இருந்தது. மேலும் வெறுப்பு, பொறாமை, குரோதத்தினால் நிறைந்திருந்தது. மக்களின் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் முன்னிலையில் சிறைச்சாலையில் இருந்து அபூர்வமாய் தப்பிச் சென்ற அப்போஸ்தலர்கள் தன்னை அவமானப்படுத்திவிட்டதாக எண்ணினான். எனவே அவன், அப்போஸ்தலர்கள் வந்த போது அவர்களை கடுமையாக திட்டினான். “நாங்கள் இயேசுவின் நாமத்தைக் குறித்து பிரசங்கிக்கக் கூடாது என்று உறுதியாகக் கட்டளையிட்டிருந்தும் ஏன் நீங்கள் இயேசுவின் நாமத்தில் தொடர்ந்து போதகம் பண்ணுகிறீர்கள்?” என்று கேட்டான். எங்களுடைய உறுதியான கட்டளைகளை மீறி நீங்கள் எருசலேம் பட்டணம் முழுவதையும் உங்களுடைய உப்பு சப்பில்லாத நகைப்பிற்குரிய கொள்கையினால் நிரப்பியுள்ளீர்கள். எங்களை மக்கள் முன்பாக அவமானப்படுத்துவதே உங்கள் திட்டமாய் இருக்கிறது. எங்களை அநீதியுள்ள நியாயதிபதிகளாக காண்பிக்கிறீர்கள். இயேசு நீதிமான் போலவும், நாங்கள் அனைவரும் குற்றவாளிகள் போலவும் காண்பிக்கப்படுகிறோம். இயேசு மரித்தார். அவருடைய சரீரம் கல்லறையில் வைக்கப்பட்டது. நாங்கள் அந்த பிரச்சனையிலிருந்து சற்று ஒய்ந்திருந்தோம். ஆனால் நீங்கள் ஆலோசனைச் சங்கத்தாரை பரியாசம் பண்ணுகிறீர்கள், அவமதிக்கிறீர்கள், எங்களுக்கு எதிராக பொய் கூறுகிறீர்கள், மாயவித்தை செய்கிறீர்கள், ஏமாற்றுகிறீர்கள்,

இந்த குற்றச் சாட்டுகளைத் தொடர்ந்து, பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்டு பேதுருவும், மற்ற அப்போஸ்தலர்களும் எழுந்து நின்று தைரியமாய் பேசினார்கள். நாங்கள் திட்டமிட்ட கட்டுக்கதைகளைப் பின்பற்றவில்லை, எங்களுக்கு எந்த தீய நோக்கமும் இல்லை. நாங்கள் இறைவனுடைய வெளிப்பாட்டைப் பெற்றிருக்கிறோம். ஆகவே எங்கள் சாட்சியை முன்னிட்டு ஆண்டவருக்கு கீழ்ப்படியுங்கள். உங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிவது முடியாத காரியம். ஏனெனில் இறைவன் உங்களைவிடப் பெரியவர். அவர் நம்முடைய ஆண்டவர். அவருடைய சத்தியங்களைப் பேச முடியாதபடி எங்கள் நாவை அடக்கினால் எங்களுக்கு ஐயோ, நாங்கள் பேசத் தவறினால் எங்கள் உதடுகள் எரியூட்டப்படும். இறைவன் எங்களுக்கு நேரடியாக வெளிப்படுத்திய காரியங்களை நாங்கள் பேசுகிறோம்.

அந்த மூப்பர்கள் அவர்களைப் பார்த்து இவ்விதமாக கேட்டிருக்கலாம். “உங்களுக்கு கிடைத்த இறைவனுடைய வெளிப்பாட்டின் சாராம்சம் என்ன?” அப்போஸ்தலர்களில் ஒருவர் பின்வருமாறு நன்கு பதிலளித்திருப்பார். மரித்தோரிலிருந்து இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற உண்மையைத் தவிர எங்களுக்கு வேறு வெளிப்பாடு இல்லை. அவர் ஒரு ஆவியைப் போல எங்களுக்கு காட்சியளிக்கவில்லை. இறைவன் அவருடைய மாம்சத்தில் அவரை உயிரோடு எழுப்பியுள்ளார். எல்லா காலங்களிலும், நித்தியமாக இறைவனுடன் இயேசு இருக்கிறார். இறைவன் அவருடன் இருக்கிறார்.

நியாயதிபதிகளில் ஒருவர் இவ்விதமாய் உரத்த சத்திமிட்டார். “நீங்கள் இவ்விதமாகப் பேசினால், நாங்கள் இறைவனின் எதிரிகளோ?” பேதுரு அவருக்கு தைரியமாகவும், உறுதியாகவும் பதிலளித்தார். “நீதியுள்ள இயேசுவை நீங்களே நியாயந்தீர்த்தீர்கள், நீங்கள் அதிபதி பிலாத்துவை வற்புறுத்தி, இயேசுவை சிலுவையில் அறைந்தீர்கள். நீங்கள் இயேசுவை கொலை செய்தீர்கள். நீங்கள் இறைவனின் எதிரிகளாக இருக்கிறீர்கள். இயேசு பரிசுத்தமானவர் இருப்பினும் அசுத்தமான மனிதர்கள் கைகளினால் சபிக்கப்பட்ட சிலுவையில் நீங்கள் அவரை அறைந்தீர்கள்.

நியாயதிபதிகள் கோபத்துடன் பற்களை நரநரவென்று கடித்துக் கொண்டிருந்த போது, அப்போஸ்தலர்களில் ஒருவர் எழுந்து பேசினார். “இறைவன் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியது மாத்திரமல்ல, அவர் தம்முடைய வலது பாரிசத்திற்கு அவரை உயர்த்தினார். அவர் திருச்சபைக்கு தலையாக அவரைத் தந்தருளினார். உலகிற்கு இரட்சகராக தந்தார். இயேசுவே கர்த்தராக இருக்கிறார். அவருக்குள் இறைவனின் அனைத்து தன்மைகளும் இருக்கிறது. நீங்கள் எதிர்பார்த்திருந்த மேசியா அவரே. அவர் இறைவனின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். அவர் உங்களிடம் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். “இது முதற்கொண்டு மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்”.

ஆலோசனைச் சங்கத்தார் இதைக் கேட்ட போது, அவர்களில் ஒரு சிலர் பாய்வதற்கு தயாரனார்கள். இருப்பினும் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டார்கள். வெறுப்பின் உச்சகட்டத்தில் இருந்தார்கள். அப்போஸ்தலர்களின் மீதமுள்ள வாதத்தையும் கேட்கும்படி காத்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் கேட்டார்; “உங்களது ஆண்டவரை ஆராதிக்கும்படி எங்களை அழைப்பதற்கு இன்னும் உங்களிடம் என்ன மீதமிருக்கிறது?” சீஷர்களில் ஒருவர் பதிலளித்தார்; “இயேசு உங்களைத் தள்ளிவிடவில்லை. அவர் உங்களை மனந்திரும்புதலுக்கு அழைக்கிறார். முழு இஸ்ரவேலும் அவரிடம் திரும்புவதை அவர் எதிர்பார்கிறார். அவர் அன்புள்ளவராக இருக்கிறார். அவர் உங்களுடைய பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பதற்கு ஆயத்தமாக இருக்கிறார். அவரிடம் வாருங்கள். அவருடைய இரக்கம் உங்களுடைய பகையை விடப் பெரியது. நீங்கள் உண்மையாக மனந்திரும்பினால் இறைவன் உங்களை மன்னிப்பார்.

அந்தக் கூட்டத்தாரில் இருந்து ஒருவேளை சிலர் அந்த மீனவர்களைப் பார்த்து இவ்விதமாகக் கேட்டிருக்கக்கூடும். “எங்கிருந்து நீங்கள் இந்த தைரியத்தைப் பெற்றீர்கள்? உங்கள் நீதிபதிகளையே குற்றம் சாட்டுகிறீர்கள். அதே நேரத்தில் நீங்களே மன்னிப்பையும் வழங்குகிறீர்கள்? நீங்கள் யார்? நீங்கள் உங்களைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் உங்களையே கடவுள்களாக கருதுகிறீர்களா

சோதனையின் எந்த வலையிலும், பெருமை அல்லது தூஷணம் செய்தல் போன்றவைகளில் சீஷர்கள் சிக்கிக்கொள்ளாதபடி பரிசுத்த ஆவியானவர் வழிநடத்தினார். ஆகவே அவர்கள் இவ்விதமாக பதிலளித்தார்கள். “நாங்கள் இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், அவருடைய பரமேறுதல் குறித்த உண்மைக்கு சாட்சிகளாக இருக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் மிகவும் வல்லமையாய் எங்களுக்குள் தங்கியிருக்கிறார். நாங்கள் பரமேறிச் சென்ற கிறிஸ்துவின் விசுவாசிகளாக இருக்கிறோம். எங்களுக்கு கிடைத்த வெளிப்பாடு உண்மை என்பதை இந்த பரிசுத்த ஆவியானவர் உறுதிப்படுத்துகிறார். நாங்கள் இறைவனுடன் இசைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்”.

அந்த மூப்பர்களில் ஒருவர் சிரித்துக்கொண்டே கூறினார். “நீங்கள் என்ன பெற்றுள்ளீர்கள்? படிப்பறிவற்றவர்கள் நீங்கள். பரிசுத்த ஆவியானவரை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?”. அவர் கேட்ட அந்த கேள்விக்கு உடனடியாக பதிலை பெற்றுக்கொண்டார். “இறைவன் அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு மட்டும் அவருடைய ஆவியானவரைத் தருகிறார். அவர்கள் கிறிஸ்துவின் வெளிப்பாட்டைப் பெறுகிறார்கள். அவரை விசுவாசியாதோர் அழிந்து போவார்கள். ஏனெனில் அவருடைய சாட்சியாகிய பரிசுத்த ஆவியானவருக்கு அவர்கள் கீழ்ப்படியவில்லை. எல்லாப் பாவங்களும் மனிதனுக்கு மன்னிக்கப்படும். ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான பாவம் ஒருபோதும் மன்னிக்கப்படுவதில்லை.

அப்போஸ்தலர்களின் அறிக்கைகளில் ஒவ்வொன்றும் தெய்வீக உண்மையின் அம்புபோல அவர்களது இருதயத்தை ஊடுருவிச் சென்றது. கனத்திற்குரிய ஆலோசனைச் சங்கத்து உறுப்பினர்கள் அனைவருடைய மதிப்பும் காயப்படுத்தப்பட்ட படியால், அவர்கள் அவமதிக்கப்பட்டபடியால் கோபத்தால் கொந்தளித்தார்கள். தூஷணம் செய்பவர்கள், தற்பெருமையுள்ள அகங்காரிகள் என்று அப்போஸ்தலர்களை அவர்கள் எண்ணினபடியால், அவர்களை கொலை செய்ய யோசனைபண்ணினார்கள். நரகமானது கிறிஸ்தவ திருச்சபைத் தலைவர்களைத் தாக்க ஆயத்தமாகியது. அவர்களை கல்லெறிந்து கொல்ல தீர்மானித்தது.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நீர் உயிருள்ளவர். நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம், உம்மைத் துதிக்கிறோம். ஏனெனில் உமது அப்போஸ்தலர்களுக்கு வல்லமையையும், தைரியத்தையும் தந்தீர். அந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் உம்மை மறுதலிக்கவில்லை. உமது சத்தியத்திற்கு சாட்சி பகர்ந்தார்கள். எங்களுடைய சோதனையான நேரங்களில் மரணபரியந்தம் உண்மையாய் தொடர்ந்து வாழ உதவும் ஆமென்.

கேள்வி:

  1. அப்போஸ்தலர்கள் அவர்களுடைய நியாயதிபதிகள் முன்பு வைத்த வாதங்களில் உங்களைக் கவர்ந்தது எது?

www.Waters-of-Life.net

Page last modified on May 29, 2013, at 10:50 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)