Previous Lesson -- Next Lesson
2. கிறிஸ்துவின் பரமேறுதல் (அப்போஸ்தலர் 1:9-12)
அப்போஸ்தலர் 1:9-12
9 இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. 10 அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்துபார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று: 11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். 12 அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வுநாள் பிரயாணதூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.
கிறிஸ்து உயிரோடு இருக்கிறார் என்றும் அவருடைய உடல் இயற்கையின் விதிகளுக்குக் கட்டுப்படாத ஆவிக்குரிய உடல் என்றும் சீடர்கள் அறிந்துகொண்டார்கள். அவர் உண்மையான மனிதனாகவும் உண்மையான இறைவனாகவும் இருந்தார். அவர் தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு நாற்பது நாட்கள் தம்முடைய சீடர்களுடன் இருந்து பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்கள் அதிலும் தம்முடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் எத்துணை மெய்யானவை என்பதை விளக்கிக் காண்பித்தார். இறுதியாக அப்போஸ்தலர்களை நிரப்பப்போகும் பரிசுத்த ஆவியானவரைக் குறித்த வாக்குறுதியை வழங்கியதன் மூலம் தம்முடைய போதனைகள் அனைத்திற்கும் அவர் மணிமகுடம் சூட்டினார்.
இவ்வுலகத்தில் வாழ்ந்த கிறிஸ்துவின் இறுதி அறிக்கை இதுவாகத்தான் இருந்தது. இதைவிட மேலானதொன்றும் தேவைப்படவில்லை. ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் பணியை நிறைவேற்றி முடித்துவிட்டார். அவர் தம்முடைய பிதாவினிடத்திற்குப் புறப்படத் தயாராயிருந்தார். அவர் சீடர்களோடிருந்த அந்த நாற்பது நாட்களில் சிலவேளைகளில் திடீரெனத் தோன்றி திடீரென மூடப்பட்ட கதவு அல்லது கட்டடத்தின் வழியாக ஊடுருவிச் சென்றதைப் போல இப்போது இரகசியமாக அவர் செல்லவில்லை. யாருமறியாமல் மரணத்திலிருந்து உயிர்தெழுந்த அவர் இப்போது தம்முடைய சீடர்களுடைய கண்களுக்கு முன்பாக பரலோகத்திற்கு எழுந்தருளிப் போனார். அவர் காற்றைவிடவும் அடர்த்தி குறைந்தவரைப் போல பூமியின் ஈர்ப்பு சக்தியை மேற்கொண்டு பரமேறினார். அவர் தம்முடைய பிதாவினிடத்திலிருந்த தமது அன்பினால் ஈர்க்கப்பட்டவராக மேலேறிச் சென்றார். மகிமையும் பரிசுத்தமும் உடைய இறைவனுடைய மேகங்கள் மெதுவாகவும் அமைதியாகவும் அவரைச் சூழ்ந்துகொண்டது. கிறிஸ்து தம்முடைய பணியை முடித்தவராக, மனிதர்களுடைய உலகத்தைவிட்டு, காணாத இறைவனுடைய மகிமைக்குள் சென்றார்.
நித்திய படைப்பாளியாகிய இறைவன் எப்போதும் மேலே வானத்தில் இருக்கிறார் என்று நாம் கூறுவதற்கில்லை. ஏனெனில் பூமி தொடர்ந்து சுற்றிக்கொண்டிருப்பதால் வானம் சில வேளைகளில் பூமிக்கு மேலும் சில வேளைகளில் பூமிக்குக் கீழும் இருக்கிறது. சூரியன்கூட நமக்கு மேலாக இருப்பதில்லை. அது மிகப்பெரிய நெருப்பு உருண்டையாக, பல சூரியன்களில் ஒன்றாக காணாத இடத்தை நோக்கிப் பறந்துகொண்டிருக்கிறது. அப்படியானால் இறைவன் எங்கே இருக்கிறார்? கிறிஸ்து எங்கே இருக்கிறார்? இந்தக் கேள்விக்கு நம்முடைய கர்த்தர் தீர்க்கமான இறுதியான பதிலைக் கூறுகிறார்: “இதோ உலகத்தின் முடிவுபரிந்தம் நான் சகல நாட்களிலும் உங்களோடுகூட இருக்கிறேன்”.
இறைவன் நமக்கு மேலாகவோ, கீழாகவோ இருப்பதில்லை. அவர் எப்போதும் எங்குமிருக்கிறார். அவர் காலத்தாலும் இடத்தாலும் கட்டுப்படாதவர். எந்த மனிதனும் இறைவனுடைய மகிமையின் மேன்மையை அறிந்துகொள்ள முடியாது. சீடர்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இயேசு அவர்களுடன் பேசினார். பரலோகம் மேலிருக்கிறது என்று அவர்கள் நம்பியதால் அவர் அவர்களுக்கு முன்பாக மேலேறிச் சென்றார். இப்போது அவர் அவர்களை முற்றிலுமாக விட்டுத் தம்முடைய பிதாவினிடத்திற்குத் திரும்பி, அவருடைய வலதுபக்கத்தில் அமர்ந்து, அவரோடு ஒன்றித்து முடிவில்லாத காலமாக இவ்வுலகத்தை ஆளுகை செய்யப்போகிறார். கிறிஸ்துவும் பிதாவும் ஒன்றே. பிதாதான் குமாரன் குமாரன்தான் பிதா. கிறிஸ்துவைக் கண்டவர்கள் இறைவனைக் கண்டவர்கள். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய ஒரே பரிசுத்த திரித்துவ இறைவனை நாம் விசுவாசிக்கிறோம். இந்த ஒற்றுமையின் இரகசியத்தை எந்த மனிதனாலும் போதுமான அளவு விளக்க முடியாது. கிறிஸ்து தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு நாற்பது நாட்கள் சென்று, மனிதர்களுடைய உலகத்தைவிட்டு இறைவனுடைய உலகமாகிய பரலோகத்திற்குச் சென்றார் என்று நற்செய்தி நமக்குச் சொல்கிறது. அங்கு அவர் தம்முடைய பிதாவோடு கிருபையின் அரியாசனத்தில் முழுமையான அன்போடும், மகிமையோடும், அதிகாரத்தோடும் வீற்றிருக்கிறார்.
இயேசுவின் பரமேறுதல் சீடர்களுடைய வாழ்க்கையிலும் வரலாற்றிலும் அதிரடியான மாற்றத்தை உண்டுபண்ணியது என்று அவர்கள் அறிந்தார்கள். அவர்கள் தொடர்ந்து உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தபோது அவர்களுடைய கர்த்தர் மேகங்களில் மறைந்து போனார். நாமும் பிதாவோடு கிறிஸ்து வீற்றிருக்கும் இடத்தை மேலோக்கிப் பார்த்து, நம்முடைய இதயங்களை அவரைநோக்கி எழுப்புவது நல்லது. நம்முடைய பிரயாணம் பரலோகத்தை நோக்கியது, நம்முடைய வீடு நம்முடைய பிதாவாகிய இறைவனுடைய வீடுதான்.
தம்முடைய சீடர்கள் பரலோகத்தையும் இனிவரும் வாழ்வையும் பற்றி நினைத்துக்கொண்டு, ஒரு ஆன்மீக மாயையில் வாழ வேண்டும் என்று உயிருள்ள கர்த்தர் விரும்பவில்லை. அவர் அவர்களை பூமியிலே நிலைநிறுத்த விரும்பினார். ஆகவே அவர் காணப்படாத உலகத்திலிருந்து இரண்டு தேவதூதர்களை அவர்களிடத்தில் அனுப்பினார். தூய்மையானவர்களாகிய அந்த தூதர்கள் கிறிஸ்து உள்ளபடியே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்கள் என்பதை அவர்களுக்கு அறிவித்தார்கள். அவருடைய பரமேறுதல் என்பது சீடர்களுடைய பகல்கனவல்ல என்றும் அது உண்மையில் நடைபெற்ற நிகழ்வு என்றும் அப்போது நிலைநிறுத்தப்பட்டது.
மேலும் அந்த இரண்டு தூதர்கள், விசுவாசிகளுடைய நம்பிக்கை இத்துடன் முடிவடைந்துவிடவில்லை என்றும் கிறிஸ்து தாம் பரலோகத்திற்குச் சென்ற விதமாகவே மீண்டும் மேகங்களில் இவ்வுலகத்திற்கு வருவார் என்றும் அவர்களுக்கு உறுதியளித்தார்கள். கர்த்தராகிய இயேசு திரும்ப வருவார் என்ற இந்த ஒரே அறிவிப்பில் வரலாற்றின் நோக்கம் முழுமையும் அடங்கியிருக்கிறது. இந்த விசுவாசத்தை கிறிஸ்தவம் உறுதியாகவும் அசையாமலும் பற்றிக்கொண்டிருக்கிறது. நம்முடைய கர்த்தர் வாழ்கிறார். அவர் திரும்ப வருவார். ஏனெனில் அவர் நம்மை நேசித்து, நமக்காக ஏங்குகிறார். அவர் எப்போது வருவார் என்று நமக்குத் தெரியாது. ஆனால் அவர் நிச்சயமாக சீக்கிரம் வருவார். நீங்கள் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்களா? உங்கள் சிந்தனைகளில் அவர் மையமாயிருக்கிறாரா? நீங்கள் கிறிஸ்துவை நேசிக்கிறீர்களா? நீங்கள் தினமும் அவரை நினைக்கிறீர்களா? உங்கள் விண்ணப்பங்களை அவரிடம் நீங்கள் கொண்டுவருகிறீர்களா? அவருடைய வருகைக்காக நீங்கள் காத்திருக்கிறீர்களா? அவருக்காக காத்திருப்பவர்களைத் தவிர யாராலும் இவ்வுலகில் ஞானத்தோடு வாழ முடியாது.
சீடர்கள் அதிக மகிழ்ச்சியுள்ள இருதயத்தோடு கிதரோன் பள்ளத்தாக்கிற்குச் சென்றார்கள். கெத்சமனேக்கு அருகிலுள்ள ஒலிவ மலையில்தான் அவர்கள் அவருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள். அங்கிருந்து அவர்கள் எருசலேமை நோக்கிச் சென்றார்கள். கர்த்தர் தம்முடைய மரணத்தோடும் இறைவனுடைய கோபத்தோடும் போராடிக்கொண்டிருந்தபோது அவர்கள் கெத்சமனேயில்தான் உறங்கிக்கொண்டிருந்தார்கள். இறுதியாக அவர் கைது செய்யப்பட்டு சங்கிலிகளால் கட்டப்பட்டவராக கொண்டு செல்லப்பட்டார். அந்த நிகழ்வுகள் நடந்தபோது அவர்களுக்கிருந்த பயம் இப்போது அவர்களுக்கில்லை. ஏனெனில் கிறிஸ்துவின் வெற்றியினால் அவர்களுடைய இருதயம் நிறைந்திருந்தது. இரண்டு தேவதூதர்களுடைய மகிமையான அறிவிப்புகளும் அவர்களுடைய மனங்களில் ஆலய மணியோசையாக ஒலித்துக்கொண்டிருந்தன: கர்த்தர் வருகிறார். அவர் சீக்கிரமாக வருகிறார்.
விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் உயிரோடிருக்கிறீர். உம்முடைய பரமேறுதலை உமது எதிரிகளும் அறிந்திருக்கிறார்கள். பிதாவாகிய இறைவனில் வாழ்கிற வெற்றிவீரர் நீரே. நீர் திரும்ப வருகிறீர். உம்முடைய வெற்றிக்கழிப்பை எங்களுக்குக் கற்றுத்தாரும். உம்முடைய வார்த்தையினால் எங்களுடைய சிந்தனைகளையும் செயல்களையும் நடப்பித்து, உம்முடைய வருகைவரை எங்கள் உலகில் உமக்கென பணிசெய்ய எங்களை வழிநடத்தும்.
கேள்வி:
- இரண்டு தேவதூதர்களுடைய கூற்றுப்படி கிறிஸ்து எவ்வாறு திரும்ப வருவார்?