Previous Lesson -- Next Lesson
6. தமஸ்குவில் சவுல் பிரசங்கத்திலும், அவனுக்கு யூதர்களால் நேரிட்ட துன்புறுத்தல்களும் (அப்போஸ்தலர் 9:19ஆ-25)
அப்போஸ்தலர் 9:19ஆ-25
19ஆ)சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே சிலநாள் இருந்து,20 தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்.21 கேட்டவர்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: எருசலேமில் இந்த நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவர்களை நாசமாக்கி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடத்திற்குக் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள்.22 சவுல் அதிகமாகத் திடன்கொண்டு, இவரே கிறிஸ்துவென்று திருஷ்டாந்தப்படுத்தி, தமஸ்குவில் குடியிருக்கிற யூதர்களைக் கலங்கப்பண்ணினான்.23 அநேகநாள் சென்றபின்பு, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள்.24 அவர்களுடைய யோசனை சவுலுக்குத் தெரியவந்தது. அவனைக் கொலைசெய்யும்படி அவர்கள் இரவும் பகலும் கோட்டைவாசல்களைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.25 சீஷர்கள் இராத்திரியிலே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையிலே வைத்து, மதில்வழியாய் இறக்கிவிட்டார்கள்.
எங்கே பரிசுத்த ஆவியானவர் செயல்படுகிறாரோ, அந்த சபையில் அன்பு ஆளுகை செய்கிறது. இயேசுவை அறியாதோர் மத்தியில் நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது. தமஸ்கு சபையில் சில குறிப்பிட்ட நாட்களுக்கு சவுல் தங்கியிருந்தான். பரிசுத்த வேத வாக்கியங்களை ஆழமாக ஆராய்ந்தான். இறைவனுக்கு நன்றி செலுத்தினான். பழைய உடன்படிக்கையின் தீர்க்கதரிசனங்கள் மூலமாக வெளிப்பட்ட புதிய உடன்படிக்கையின் உண்மைகள் அவனுக்கு மேலும் உறுதியை அளித்தது.
சவுல், தன்னுடைய அனுபவத்தின் சந்தோஷத்தையும், கிறிஸ்துவுடன் ஏற்பட்டிருக்கும் உறவையும் மறைத்து வைக்க முடியவில்லை. எருசலேமின் ஆலோசனைச் சங்கத்து தூதுவன் என்ற முறையில் சவுல் யூதர்களின் ஜெபஆலயங்களில் அறியப்பட்டிருந்தான். அவன் ஜெப ஆலயத்தின் மையப்பகுதிக்கு வந்து, வெளிப்படையாக இயேசுவைக் குறித்து பிரசங்கித்தான். நசரேயனாகிய இயேசு இறைவனின் குமாரன், பெரிய தீர்க்கதரிசி அல்லது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியா என்று அப்போஸ்தலர்கள் பிரசங்கங்களின் ஆரம்பத்தில் பேசியது போல அவனும் செய்வதில் திருப்தியடையவில்லை. அவன் இயேசுவின் மகிமையைக் கண்டான். உண்மையான இறைவனிடமிருந்து வந்த உண்மையான இறைவன், ஒரேபேறானவர், படைக்கப்படாதவர், பிதாவுக்குச் சமமானவர் என்பதை சாட்சியாக அறிவித்தான். இந்த சாட்சி ஓர் ஆவிக்குரிய எழுப்புதலுக்கு காரணமாக இருந்தது. இறைவனின் ஒருமைத் தன்மையில் உயிரற்ற நம்பிக்கை கொண்டிருந்த யூதர்களுக்கு சவால் விடுத்தான். இறைவனுக்கு குமாரன் இருக்கிறார் என்று சொல்லுகிற ஒவ்வொரு வாக்கியத்தையும் யூதர்கள் தூஷணமாகக் கருதினார்கள், அவர்களுடைய மதத்தை அசுத்தப்படுத்துவதாக கருதினார்கள். ஆனாலும் சவுல் தன்னுடைய பிரசங்கத்தின் ஆரம்பத்தில் இருந்தே பரிசுத்த திரித்துவத்தின் உண்மையை வலியுறுத்தி பேசினான். அவன் இயேசுவின் சத்தத்தைக் கேட்டிருந்தான், அவருடைய மகிமையை கண்டிருந்தான். மனிதனாகிய இயேசுவே இறைவனின் குமாரனாகவும் இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டிருந்தான். இந்த சத்தியத்தை அவன் சந்தேகிக்கவில்லை. இந்த உண்மையை அறிக்கையிட்டான். மற்ற அனைத்து பாரம்பரியங்கள், வியாக்கியானங்கள் மற்றும் கொள்கைகளுக்கு மேலாக இதை உயர்த்திக் காண்பித்தான். இறைவனின் பிதா என்ற தன்மை வேறுபட்ட ஒரு சிந்தனை அல்ல என்பதையும், இறைவன் அப்படித் தான் இருக்கிறார் என்றும், இருக்க முடியும் என்றும் பவுல் அறிவித்தான். பிதா குமாரன், பரிசுத்த ஆவியாகிய இறைவனைத் தவிர வேறு ஒரு இறைவன் இல்லை. இறைவனின் ஒருமைத்தன்மையில் கொண்டுள்ள உயிரற்ற நம்பிக்கை ஒரு மாறுபட்ட கற்பனை ஆகும். அது வாழ்வு அல்லது வல்லமைக்கு நம்முடைய இறைவன் அன்பாக இருக்கிறார். என்பது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தின் விளைவாக உணரப்படுகின்றது. குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை அறியான், பரலோகப்பிதாவை விசுவாசிக்காதவன் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளாதவனாக இருக்கிறார்.
நன்கு கற்றறிந்த நியாயப்பிமாண மேதையாகிய சவுல் பரிசுத்த ஆவியினால் நிறைந்திருந்தான். குறை கூறுகின்ற, கீழ்ப்படியாத யூதர்களுக்கு நாசரேத்தூர் இயேசுவே மெய்யான கிறிஸ்து என்பதை நிரூபித்தான். எல்லா யூதர்களும் பாவிகளாக இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் மத்தியில் அனுப்பப்பட்ட இறைவனுடைய குமாரனை அவர்கள் கொன்றார்கள். சவுல் அவர்களிடம் இரண்டாம்தரமான காரியங்களை விவாதிக்கவில்லை. ஆனால் காரியத்தின் இதயத்திற்குள் சென்று பிரசங்கித்தான். தன்னுடைய அருளை பொழிகின்ற அன்புள்ள கிறிஸ்துவையும் அவன் நிபந்தனையின்றி ஆசீர்வதிக்கின்ற கிறிஸ்துûவுயம் பிரசங்கிக்கவில்லை. அவன் கிறிஸ்துவாகிய இராஜாவுக்கு ஒப்புக்கொடுக்கும்படி மக்களை அழைத்தான். அவனுடைய ஆண்டவர் தனது பரிசுத்தத்தில், பிரகாசிக்கின்ற ஒளியில் அவனை சந்தித்தார். சுய நீதியின் மீதான அவனது வைராக்கியம் பயனற்றது என்பதை காண்பித்தார். அவனது வாழ்விற்கான ஆதாரம் கிருபை மட்டுமே.
தமஸ்குவில் இருந்த யூதர்கள் பயத்துடனும், குழப்பத்துடனும் இருந்தார்கள். தங்கள் சமுதாயத்தில் வளர ஆரம்பித்துள்ள இயேசுவின் இயக்கத்தை வேரறுக்க, இணைந்து செயல்படும்படி ஆலோசனைச் சங்கத்தால் அனுப்பப்பட்டுள்ள உறுதிமிக்க எதிராளியாகிய செய்தியாளரை காணும்படி அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் இந்த நியாயப்பிரமாண மேதையோ இயேசுவை வெற்றியாளராகவும், உயிருள்ள இறைவனாகவும் காண்பித்துக் கொண்டிருந்தார். எந்த ஒரு உறுதிமிக்க பரிசேய யூதர்களும் அவனை மேற்கொள்ள முடியவில்லை. சில நாட்கள் சென்றபின்பு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்த யூதர்களின் எண்ணிக்கை பெருகியது. இவர்கள் பவுலின் மாணவர்களாக மாறினார்கள். அவனுடைய செயல்பாடுகளில் ஆர்வத்துடன் பங்கெடுத்தார்கள். எனவே ஜெபஆலயத் தலைவர்கள் பவுலைக் கொல்லும்படி தீர்மானித்தார்கள். யூத உளவாளிகள் வரும்போது, அவன் தன்னை மறைத்துக் கொள்ள வேண்டியதாய் இருந்தது. உண்மையுள்ள நண்பர்களைப் போல விசுவாசிகளின் வீடுகளில் அவர்கள் நுழைய முற்பட்டார்கள். சவுல் தப்பித்துச் செல்ல முடியாதபடி நகர அதிகாரியின் தொடர்பை பெற்றவர்கள் காவலாளிகளுடன் இணைந்து, நகர வாசல்களை பாதுகாத்தார்கள்.
இந்த புதிய விசுவாசி முதல்முறையாக, நற்செய்தியை பிரசங்கிப்பதால் ஏற்படும் விளைவை அனுபவித்தான். வரவேற்பு அல்லது புறக்கணிப்பு, பாராட்டு அல்லது சாபம், அன்பு அல்லது பகைமை இவைகளே நற்செய்தியின் விளைவு ஆகும். தமஸ்குவில் தொடர்ந்து தங்கியிருக்கக் கூடாது என்று சவுல் தீர்மானித்தான். அவன் இவ்விதமாக சொல்லவில்லை. “நான் என்ன விலைக்கிரயம் கொடுத்தாவது, இங்கேயே தங்கியிருக்க வேண்டும். கிறிஸ்துவுக்காக பாடுபட்டு இரத்தசாட்சியாக மரிக்க வேண்டும்”. அதற்குப் பதிலாக அவன் உண்மையுள்ள சகோதரர்கள் கூறியதை ஏற்றுக்கொண்டான். அவர்கள் ஒரு கூடையில் வைத்து, இரவு நேரத்தில் நகர சுவர் வழியாக அவனை இறக்கி விட்டார்கள். சில வாரங்கள் முன்பு அவன் தமஸ்குவிற்கு பெருமைமிக்கவனாக வந்து கொண்டிருந்தான். இப்போது அவன் ஒரு பரதேசியைப் போல இருக்கிறான். பாலைவனச் சோலை நகரத்தை விட்டு உடனடியாக செல்ல வேண்டிய அவசரநிலையில் இருக்கிறான். அவனது இருதயம் முன்பு குளிராகவும், கடினமாகவும், நியாயப்பிரமாணத்தின் மீதான வைராக்கியம் மிக்கதாகவும் காணப்பட்டது. ஆனால் இப்போது கிறிஸ்துவின் மீதான உள்ளான அன்பினால் அவனது இருதயம் எரிந்து கொண்டிருக்கிறது. யூதர்களின் அப்போஸ்தலனாக இருந்தவனை பரிசுத்த ஆவியானவரின் வல்லமை, முழு உலகத்தின் அப்போஸ்தலனாக விரைந்து மாற்றியது.
விண்ணப்பம்: இறைவனுடைய குமாரனே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நாங்கள் எங்களுடைய இருதயங்கள் மற்றும் எங்களுடைய மனங்களை உமக்கு அர்ப்பணிக்கிறோம். உமது பரலோகப் பிதாவை எங்களுக்கு வெளிப்படுத்தியதற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் குற்றங்களை மன்னியும். உமது பரிசுத்த ஆவியால் எங்களை அபிஷேகியும். உமது நாமத்தினால் எங்களை காத்துக்கொள்ளும். உமது நற்செய்தியை பிரசங்கிக்க எங்களை துரிதப்படுத்தும். அநேகர் உம்முடைய நாமத்தையும், இரக்கமுள்ள பிதாவையும் அறிந்து உம்மிடம் வர கிருபை செய்யும்.
கேள்வி:
- பின்வரும் வாக்கியத்தின் பொருள் என்ன? “மனிதனாகிய இயேசு மெய்யான இறைவனுடைய குமாரனாக இருக்கிறார்”.
வினாக்கள் – 3
அருமையான வாசகரே,
நீங்கள் இந்த சிறிய புத்தகம் மூலம் அப்போஸ்தலர் நடபடிகளுக்கான எங்களது விளக்கங்களை படித்துள்ளீர்கள். கீழ்க்காணும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் எழுதுங்கள். நீங்கள் 90 % கேள்விகளுக்கு சரியான பதில் எழுதினால், நாங்கள் இதனுடைய தொடர்ச்சியை உங்களுக்கு அனுப்பி வைப்போம். உங்களது பக்திவிருத்திக்கு இது உதவியாக இருக்கும். தயவுசெய்து உங்களது முழுப்பெயர் மற்றும் முகவரியை தெளிவாக பதில் தாளில் எழுதுங்கள்.
- ஏன் ஸ்தேவான் மீது மட்டும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது?ஏன் பன்னிரெண்டு சீஷர்கள் அதில் இணைக்கப்படவில்லை?
- ஆபிரகாமின் வாழ்வில் காணப்பட்ட இரகசியம் என்ன?
- இயேசு கிறிஸ்துவின் மாதிரியாக யோசேப்பு எப்படி இருந்தார்?
- மோசே சிறந்த கல்வியினால் சீர்திருத்தப்படவில்லை என்பதை நாம் எப்படி அறிகிறோம்?
- வனாந்தரத்தில் எண்பது வயதுள்ள முதியவரான மேய்ப்பனுக்கு தன்னை இறைவன் வெளிப்படுத்தியதின் முக்கியத்துவம் என்ன?
- மோசே மற்றும் நியாயப்பிரமாணத்தை குறித்து ஆலோசனைச் சங்கத்தில் பேசிய காரியங்களில் ஸ்தேவான் குறிப்பிட்ட மூன்று முக்கிய உண்மைகள் என்ன?
- பொன்னால் செய்யப்பட்ட மகிமையுள்ள ஆலயத்தைவிட ஆசரிப்புக் கூடாரத்திற்கு ஸ்தேவான் ஏன் முன்னுரிமை கொடுத்தார்?
- ஆலோசனைச் சங்கத்தில் ஸ்தேவான் அவனுடைய குற்றச்சாட்டுகளில் கூறிய முக்கியமான கருத்துகள் என்ன?
- ஸ்தேவானின் கடைசி மூன்று கூற்றுகளை எழுதுக. அவைகளின் கருத்தை நீங்கள் எவ்விதம் புரிந்து கொண்டுள்ளீர்கள் என்பதைக் குறிப்பிடுக.
- எருசலேமில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்ட போது உண்டான அதிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்ன?
- கிறிஸ்துவின் மீது வைக்கும் விசுவாசத்திற்கும், அவருடைய ஊழியக்காரர்களின் வார்த்தைகளில் வைக்கும் நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
- சீமோனின் பாவம் என்ன? அதை எப்படி மேற்கொள்வது, பேதுரு அவனிடம் என்ன கூறினான்?
- எத்தியோப்பிய பொக்கிஷக்காரனுக்கு பிலிப்பு விளக்கிச் சொன்ன நற்செய்தி என்ன?
- சவுலுக்கு வெளிப்பட்ட கிறிஸ்துவின் காட்சி தருதலின் பொருள் என்னவாக இருக்கிறது?
- பரிசுத்த ஆவியினால் சவுல் நிரப்பப்பட்டது எதைக் குறிக்கின்றது?
- பின்வரும் வாக்கியத்தின் பொருள் என்ன? “மனிதனாகிய இயேசு மெய்யான இறைவனுடைய குமாரனாக இருக்கிறார்”.
அப்போஸ்தலர் நடபடிகளுக்கான தேர்வை நீங்கள் எழுதிமுடிக்க நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம். நீங்கள் நித்திய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள வாஞ்சிக்கிறோம். உங்களது பதில்களுக்காக காத்திருக்கிறோம். உங்களுக்காக விண்ணப்பம் செய்கிறோம்.
எங்களது முகவரி:
Waters of Life
P.O.Box 600 513
70305 Stuttgart
Germany
Internet: www.waters-of-life.net
Internet: www.waters-of-life.org
e-mail: info@waters-of-life.net