Previous Lesson -- Next Lesson
5. பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுதல் (அப்போஸ்தலர் 2:1-13)
அப்போஸ்தலர் 2:5-13
5 வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். 6 அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். 7 எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? 8 அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? 9 பார்த்தரும், மேதரும், ஏலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, 10 பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும், 11 கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். 12 எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். 13 மற்றவர்களோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள்.
அக்னி மயமான நாவுகளுடைய வல்லமைக்குக் கீழாக இருந்த சீடர்கள் என்ன பேசினார்கள் என்று நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? நீங்கள் 11-ம் வசனத்தைப் படித்துப் பார்ப்பீர்களானால் அவர்கள் இறைவனுடைய மகத்துவங்களைப் பற்றியே பேசினார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள். இவ்வுலகத்தைப் படைத்ததற்காக இறைவனை அவர்கள் துதித்தார்கள். குற்றவாளிகளான அவருடைய பிள்ளைகளை அவர் பொறுமையோடு நடத்துவதற்காக அவருக்கு நன்றி செலுத்தினார்கள். அவருடைய நியாயப்பிரமாணத்தை மகிமைப்படுத்திப் பேசி, தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாக அவர் தமது சித்தத்தை வெளிப்படுத்தியபடியால் அவருக்கு நன்றி செலுத்தினார்கள். குமாரனுடைய பிறப்பிற்காகவும், அவருடைய மனுவுருவாதலுக்காகவும், அவர்களுடைய கண்களுக்கு முன்பாகத் தோன்றியதும் அவர்கள் கண்ணாரக் கண்டு, காதாரக் கேட்டதுமான அவருடைய அன்புக்காகவும் அவர்கள் பிதாவிற்கு நன்றி செலுத்தினார்கள். அவருடைய அற்புதங்களுக்காக அவர்கள் கர்த்தரைத் துதித்தார்கள். அவருடைய வார்த்தைகளைத் திரும்பச் சொல்லி அவருடைய சிலுவை மரணத்திற்காகவும் உயிர்த்தெழுதலுக்காவும் அவரைத் தொழுதுகொண்டார்கள். அவர்கள் உயிருள்ள கிறிஸ்துவை தங்கள் வாழ்வில் சந்தித்ததற்காக இறைவனைத் துதித்தார்கள். அவர்கள் அவருடைய பரமேறுதலை நினைத்து மகிழ்ந்து, நீண்ட காலம் காத்திருந்த வாக்குத்தத்தம் நிறைவேறியதை எண்ணி உவகையடைந்தார்கள். உலகத்திற்கு நற்செய்தியை பிரசங்கிக்க வேண்டிய தேவையை அவர்கள் நம்பி, அனைவரும் இரட்சிப்பைக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற இறைவனுடைய சித்தத்தினால் நிறைந்தார்கள். நீங்களும் இறைவனுடைய அற்புதமான செயல்களை நினைத்து அவருக்கு துதிகளைச் செலுத்துகிறீர்களா? உங்கள் நன்றி எங்கே? நீங்கள் உங்களையே கனப்படுத்திக் கொள்கிறீர்களா? அல்லது இறைவனை மகிமைப்படுத்துகிறீர்களா? நீங்கள் உங்களை மறந்து பரலோகத்தில் இருக்கும் இறைவனை மட்டுமே மகிமைப்படுத்துங்கள்.
பரிசுத்தமும், அமைதியும், துதியும் நிறைந்த அந்த இனிமையான நேரம் நீடிக்கவில்லை. கர்த்தருக்காகக் காத்திருந்த மற்றவர்களும் அந்த புயல் சத்தத்தைக் கேட்டு அந்த இடத்திற்கு வேகமாகக் கூடிவந்தார்கள். அங்கு கூடியிருந்த கலிலேயர்கள் தங்கள் நாட்டின் எல்லைகளைவிட்டு வெளியே எங்கும் செல்லாதவர்களாகவும் வேறு மொழிகளைக் கற்றுக்கொள்ளாதவர்களுமாயிருந்தும் பல்வேறு மொழிகளைப் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தவர்ளாக நின்றார்கள். இறைவன் தனது கோபத்தினால் மக்களுடைய மொழிகளைத் தாறுமாறாக்கி உலகெங்கிலும் சிதறிப்போகச் செய்ததால் ஏற்பட்ட விளைவுகளைப் படைப்பாற்றலுள்ள பரிசுத்த ஆவியானவர் பெந்தகொஸ்தே நாளில் மேற்கொண்டார். ஆதியில் மனிதர்கள் தங்கள் பெருமையினால் பாபேல் கோபுரத்தைக் கட்டுவதன் மூலமாக இறைவனுடைய நிலையை அடைய நினைத்தார்கள். இப்பொழுது கிறிஸ்து தம்முடைய சீடர்களுடைய பெருமையாகிய பாவத்தை மன்னித்திருந்தார். இங்கு விண்ணப்பதித்துக் கொண்டிருந்தவர்களின் இருதயத்தில் கிறிஸ்துவினுடைய ஆவியின் சாந்தமும் மனத்தாழ்மையும் குடிகொண்டிருந்தது. அவர்களில் யாரும் மற்றவர்களைவிட தங்களை சிறந்தவர்கள் என்றோ, அறிவாளிகள் என்றோ, பெரியவர்கள் என்றோ நினைக்கவில்லை. அவர்களில் பெலமுள்ளவன் பெலவீனனுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து, தன்னை அனைவரிலும் கடையானவனாகக் கருதினான். பரிபூரணத்தின் கட்டாகிய அன்பினால் பரிசுத்த ஆவியானவர் அவர்கள் நடுவில் தம்மை வெளிப்படுத்தியிருந்தார். வித்தியாசமானவர்களும் சிதறப்பட்டவர்களாகவும் இருந்த பல மக்கள் கூட்டத்தை அவர் ஒன்றாக இணைத்திருந்தார். இவ்வாறு சிதறப்பட்ட இனங்களின் ஒன்று கூடுகையை பற்பல பாஷைகளின் வரம் அடையாளப்படுத்தியது. பெந்தக்கொஸ்தே நாளிலிருந்து இறைவனுடைய மக்கள் நடுவிலிருந்த மொழி மற்றும் தனிப்பட்ட வேறுபாடுகள் அனைத்தும் கொள்கையளவில் அகற்றப்பட்டு விட்டது. அவர்கள் நடுவில் கற்றுத் தேர்ந்த ஞானிக்கும் மனநலம் குறைந்தவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அழிவிற்குரிய மனிதனை நித்திய பிதாவின் நிலைக்கு உயர்த்தும் மாபெரும் கொடையாகிய பரிசுத்த ஆவியானவரினால் அனைவரும் இறைவனுக்குள் ஒன்றாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமற்றவர்களுமாயிருப்பதற்கு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே அவர்களை அவர் பரிசுத்தமாக்கினார்.
பெந்தகொஸ்தே நாளில் இறைவனுடைய இருப்பிடமாகிய எருசலேமில் பல மக்களுடைய பிரதிநிதிகள் ஒன்றாகக்கூடி அறுவடையின் இறுதியில் இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள். பெர்சியா, மெசப்பொத்தாமியா, சின்ன ஆசியா, வட ஆப்பிரிக்கா, இத்தாலி மற்றும் கிரேத்தா போன்ற நாடுகளிலிருந்த யூதர்கள் எருசலேமில் கூடிவந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் கலிலேயர்கள் தங்கள் மொழிகளில் இறைவனுடைய மகத்துவங்களைப் பற்றிப் பேசக்கேட்டார்கள். முதலில் அவர்கள் புயல்காற்றின் சத்தத்தைக் கேட்டார்கள். இரண்டாவது அவர்கள் நெருப்பு நாவுகளின் வடிவத்தைக் கண்டார்கள். மூன்றாவது அவர்கள் கலிலேயருடைய மொழியைப் புரிந்துகொண்டார். ஏனென்றால் இறைவனே அந்நாளில் அனைத்து மொழிகளின் மொழிபெயர்ப்பாளராக தன்னை வெளிப்படுத்தினார்.
அங்கு கலிலேயருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களில் எகிப்திலும் அரேபியாவிலும் இருந்து போனவர்களும் இருந்தார்கள். பரிசுத்த ஆவியானவர் வெளிப்பட்ட ஆரம்பத்திலேயே அரேபியர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் மாபெரும் இரட்சிப்பின் செய்தி பரிசுத்த ஆவியினால் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த மொழிகளில் எதுவும் அவருக்கு அந்நியமானவைகளோ கடினமானவைகளோ அல்ல. அவர் தம்முடைய அன்பினாலே அவைகளைத் திருப்தியாக்கி, அவைகளின் பொருளைப் பரிசுத்தத்தினாலே நிரப்பினார். நீங்கள் உங்கள் சொந்த மொழியில் இந்த திரியேக இறைவனைத் தொழுகொள்கிறீர்களா? உங்கள் நாவையும், இருதயத்தையும், தீர்மானத்தையும், உங்கள் பெலன் முழுவதையும் அவரிடம் ஒப்படையுங்கள். அப்பொழுது இறைவனுடைய துதியின் மகிழ்ச்சியில் நீங்கள் நிலைத்திருப்பீர்கள்.
இந்தப் பெருங்காற்றின் சத்தத்தைக் கேட்கும்படி ஓடிப்போனவர்கள் அதிவிரைவாக இரண்டுபட்டுப் போனது ஆச்சரியமாயுள்ளது. ஒரு பிரிவு மக்கள் நடைபெற்றவற்றை மிகவும் கவனமாகக் கவனித்தார்கள். மற்றவர்கள் நடைபெற்றதைக் கண்டு பரியாசம் செய்தார்கள். முதல் தரப்பு மக்கள் பரிசுத்த ஆவியின் இரகசியத்தை முழுவதும் அறிந்துகொள்ள விரும்பினார்கள். மற்றவர்கள் இறைவனில் மகிழ்ந்து பேசியவர்களுடைய பேச்சை குடிபோதையில் உள்ளவர்களுடைய உளறலாகக் கருதினார்கள். அவர்கள் தங்கள் அனுபவத்தில் அப்போஸ்தலர்களுடைய நிலையை ஏற்கனவே அனுபவித்திருப்பார்கள் போலும். ஆனாலும் அவர்கள் இறைவனுடைய மகிழ்ச்சியையும் நித்திய அன்பின் வல்லமையையும் அறிந்துகொள்ள முடியாதவர்களாயிருந்தார்கள். அவர்களுடைய இருதயம் பகைமையினால் மேலும் மேலும் கடினப்பட்டுப் போனது.
விண்ணப்பம்: எனக்குள் இருக்கும் ஆவியே கர்த்தருடைய பரிசுத்த நாமத்தைத் ஸ்தோத்தரி. அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. அவர் உன் அக்கிரமங்களை எல்லாம் மன்னித்து உன் நோய்களை எல்லாம் குணமாக்குகிறார். உன் ஆத்துமாவை அழிவிற்கு விலக்கி மீட்டு, உன்னை கிருபையினாலும் இரக்கத்தினாலும் முடிசூட்டுகிறார். கழுகுக்குச் சமமாய் உன்னுடைய வயது இளமையடையும்படி உன்னுடைய வாயை நன்மையினால் திருப்தியாக்குகிறார் (சங்கீதம் 103:1-5).
கேள்வி:
- அப்போஸ்தலர்கள் பேசும்படி பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது என்ன?