Previous Lesson -- Next Lesson
2. பவுலின் ஊழியத்தின் இரகசியம் (ரோமர் 15:17-21)
ரோமர் 15:17-21
17 ஆதலால் நான் தேவனுக்குரியவைகளைக்குறித்து இயேசு கிறிஸ்துவைக்கொண்டு மேன்மைபாராட்ட எனக்கு இடமுண்டு. 18 புறஜாதியாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல் வேறொன்றையும் சொல்ல நான் துணிவதில்லை. 19 இப்படி எருசலேம் துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன். 20 மேலும் அவருடைய செய்தியை அறியாதிருந்தவர்கள் காண்பார்களென்றும், கேள்விப்படாதிருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே, 21 நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்.
பவுல் தனது ஊழியங்கள் மற்றும் வெற்றிகளில் மகிழ்ச்சியடைந்தான். இறைவனை மகிமைப்படுத்தினான். தனது வார்த்தைகள் மற்றும் செயல்கள் இயேசு கிறிஸ்துவிடம் இருந்து வருவதாக கூறினான். கிறிஸ்து அவனுக்குள் தங்கி, பணி செய்து, அவன் மூலமாக பேசினார். கிறிஸ்து இல்லாமல் ஏற்படும் விளைவுகள் மற்றும் பாதிப்புகளைக் குறித்து பேச புறவினத்து அப்போஸ்தலனுக்கு தைரியம் வரவில்லை. அவன் தன்னை இரட்சகரின் அடிமையாகக் கருதினான். அவருடைய வழிநடத்துதலுக்கு கீழ்ப்படிந்தான். அப்போஸ்தலனாகிய பவுலின் வாழ்வில் காணப்பட்ட இரகசியம் இதுதான். அவன் “கிறிஸ்துவுக்குள்” இருந்தான். அவன் கிறிஸ்துவின் சிந்தனைகளால் நிறைந்திருந்து அவர் பேசியவைகளை பேசி அவர் கட்டளையிட்டதை செய்தான். அப்போஸ்தலர் நடபடிகளிலும் இன்றைய சபைகளில் அருளப்படும் ஒவ்வொரு பிரசங்கத்திலும் காணப்படும் இரகசியம் இதுதான். பவுலின் வாழ்வில் இருந்த உயிருள்ள ஆண்டவர் இயேசுகிறிஸ்து, பவுலை தனது ஊழியக்காரனாக வைத்திருந்தார். விசுவாசத்தினால் கிறிஸ்துவிற்கு கீழ்ப்படியும்படி பவுல் மக்களை வழிநடத்தினான்.
பிரயாணங்களை மேற்கொண்டான். வேறுபட்ட உணவுகளை உட்கொண்டான். அவன் சுயமாக வேலைகளை செய்தான். அற்புதங்களை நிகழ்த்தினான். தன்னுடைய பேச்சு, பணி மற்றும் அற்புதங்கள் அனைத்தும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நடைபெறுவதாக சாட்சியிட்டான். அவனது சுயமறுப்பும், இரட்சகராகிய கிறிஸ்துவின் மகிமையை வெளிப்படுத்துவதும் தான் அவனது ஊக்கம் நிறைந்த பணிகளின் இரகசியம் ஆகும்.
பவுல் தனது ஊழியம் எருசலேமில் இருந்து அனடோலியாவிற்கும், கிரேக்க நாட்டின் மேற்குப் பகுதி வரைக்கும் பரவுவதை அறிவித்தான். இந்த மாகாணங்கள் அனைத்தும் ரோம எல்லைக்கு உட்பட்டதாக இருந்தன. பவுல் களைப்பு மற்றும் ஆபத்துமிக்க பயணங்களில் பெரும்பாலும் வெறுங்காலால் நடந்தான். அவன் இரத வண்டியில் அல்லது குதிரையில் சவாரி செய்யவில்லை. விக்கிரகாரதனைகாரர்களை அவிசுவாசிகளை இயேசுவிற்காக ஆதாயம் பண்ண பவுல் மிகவும் பிரயாசப்பட்டு உழைத்தான். இயேசுவின் பெயரை அறியாதிருந்த பட்டணங்கள், நகரங்கள் மாகாணங்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என பவுல் தனது ஊழியத்தில் உறுதியாயிருந்தான். அவன் மற்றவர்களின் அஸ்திபாரம் மேல் கட்டவில்லை. அவன் துன்பங்களை அனுபவித்து, ஆபத்துகள் மற்றும் கடினமான சூழ்நிலைகளில் கிறிஸ்துவிற்காக பணி செய்தான். அவன் தனது பணியின் மூலம் ஏசாயா இறைவாக்கினருக்கு அருளப்பட்ட இறை வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினான். “அப்படியே, அவர் அநேகம் ஜாதிகள்மேல் தெளிப்பார்; அவர் நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள்; ஏனெனில், தங்களுக்குத் தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள்; கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.” (ஏசாயா 52:15).
பெரும்பான்மையான யூதர்கள் தாங்கள் மட்டுமே இறைவனின் மக்கள் என்ற கருதியதால், இறைவனின் இந்த திட்டத்தை ஏற்கவில்லை. புறவினத்தாருக்கான இறைவனின் வாக்குத்த்தங்கள் மீது கட்டப்பட்ட தனது பணியைக் குறித்த உண்மையை பவுல் விளக்கிக் கூறினான்.
விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, உமது உண்மையான ஊழியர்கள் சுயமாக எதையும் பேசுவது கிடையாது, சுய பெலத்தால் பணி செய்வதில்லை. அவர்கள் கிறிஸ்துவின் பெயரினால் அவருடைய பெலத்தினால் பேசுகிறார்கள், பணிசெய்கிறார்கள். எனவே இயேசு கிறிஸ்து மூலமாக உமக்கு நன்றி கூறுகிறோம். உமது ஊழியர்களை நீர் காத்துக்கொள்ளும். அவர்களை கிறிஸ்துவின் ஆவிக்குரிய சரீரத்தில் என்றென்றும் நிலைநிறுத்தும்.
கேள்வி:
- அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியங்களில் இருந்த இரகசியம் என்ன?