Previous Lesson -- Next Lesson
9. பிஷப்மார்கள் மற்றும் மூப்பர்களுக்கு பவுல் அளித்த பிரசங்கம் (அப்போஸ்தலர் 20:17-38)
அப்போஸ்தலர் 20:25-32
25 இதோ, நான் உங்களுக்குள்ளே சஞ்சரித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்களெல்லாரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்களென்று அறிந்திருக்கிறேன்.26 தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே,27 எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையதினம் சாட்சிகளாக வைக்கிறேன்.28 ஆகையால், உங்களைக் குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.29 நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்.30 உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.31 ஆனபடியால், நான் மூன்று வருஷகாலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்தி சொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள்.32 இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.
பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலைக் குறித்த நிச்சயம் பவுலுக்கு இருந்தது. அவனது ஆவிக்குரிய பிள்ளைகளை இனி அவன் காணமாட்டான் என்று அவர் சொல்லியிருந்தார். பவுல் இந்த இறை வெளிப்பாட்டை தாழ்மையுடன் ஏற்றுக் கொண்டான். இறைவனது குடும்பத்தில் உள்ள தனது உறவினர்களுக்கு அவன் பிரியாவிடை கூறினான். அந்தப் பிரிவின் நேரம் வந்ததை அவர்கள் உணர்ந்தார்கள். அந்த நல்ல அப்போஸ்தலனை அரவணைத்துக் கொண்டார்கள். கண்ணீர் விட்டழுதார்கள். இனிமேல் அவனைக் காணமாட்டோம் என்பதினால் கவலையுடன் இருந்தார்கள்.
எபேசியர்களைப் பொறுத்தமட்டில் இறைவனுக்கு முன்பு தான் உத்தமமாய் இருப்பதை அவனது இருதயத்தின் ஆழத்தில் பவுலால் அறிய முடிந்தது. அவனது பிரசங்கத்தை பொறுத்த மட்டில், எல்லா நிலைகளிலும் பரிபூரணமாக அதை நிறைவேற்றியிருந்தான். அவர்களுக்கு முழுமையான நற்செய்தியை அவன் கொடுத்திருந்தான். மனந்திரும்படியாக அவர்களை வேண்டிக்கொண்டான். நற்செய்தியின் கிருபையின் முழுமையை அவர்களுக்கு தெளிவாக காண்பித்தான். இறைவனுடைய ராஜ்யத்தின் சத்தியங்கள் மற்றும் வல்லமையை வெளிப்படுத்தினான். கிறிஸ்துவின் ராஜரீக குடிமகனாக எவ்விதம் தகுதியுடன் வாழ்வது என்பதைக் குறித்து தெளிவுபடுத்தினான். பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்களுக்குள் அவர்களை கொண்டு வந்தான். அவர்கள் கிறிஸ்துவின் இரத்தத்தின் வல்லமையையும், அவரது பாதுகாப்பையும் அனுபவித்தார்கள். இறைவனுடைய ராஜ்யம் என்பது சபையைக் குறித்து வெறும் கட்டுரைக் கருத்து அல்ல. வார்த்தையின் முழுமையோடு இறைவனின் பிரசன்னம் அவர்கள் மத்தியில் இருந்தது. கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மூலம் வெளிப்படும் இந்த ராஜ்யத்தின் மகிமையைக் காண அவர்கள் காத்திருந்தார்கள். அவர்கள் விசுவாசத்தில் ஐசுவரியவான்களானார்கள். அவர்கள் அறிவு, அனுபவங்கள் மற்றும் இறைவனின் வரங்கள் உடையோராக இருந்தார்கள்.
சபையைக் குறித்த இறைவனுடைய ஆலோசனையின் இரகசியங்களை குறித்து ஒன்றையும் பவுல் மூப்பர்களுக்கு மறைக்கவில்லை. படைப்பு முதல் முழுமை வரைக்கும், விசுவாசிகளின் தெரிந்து கொள்ளுதல் முதல் அவர்கள் மகிமையில் மறுரூபமடைதல் வரைக்கும் பரிசுத்தமான இறைவனின் திட்டங்களைக் குறித்து அவன் அவர்களுக்கு வெளிப்படுத்தனான். இறையியல் வகுப்புகள் ஆழம், அகலம் மற்றும் உயரம் நிறைந்தவையாய் இருந்தன. ஒவ்வொரு காரியத்தைக் குறித்த இறைவனின் சித்தத்தை நீ அறிந்திருப்பதைக் குறித்து பெருமையாக எண்ணாதே இன்னும் நீ ஒரு தாழ்நிலையில் உள்ள சீஷன் என்பதையும், இறைவனின் விருப்பத்தை ஆழமாக புரிந்துகொள்வது தேவை என்பதையும் மறவாதே. இறைவனின் இரகசியங்களை அறிவது மாத்திரம் நமது விசுவாசத்தின் முடிவு அல்ல. நடைமுறை வாழ்வில் இறைவனின் அன்பை பயிற்றுவிப்பதில் அவர்கள் வழிநடத்தப்படவேண்டும். விசுவாசமில்லாத கிரியை செத்தது. அதனால் எந்த ஒரு பயனும் இல்லை.
பவுல் திருச்சபைத் தலைவர்களை “கண்காணிகள்” என்று அழைத்த போது, லூக்கா அவர்களை மூப்பர்கள் என்று கூறுகிறார். அவர்கள் தங்களை ஆசாரியர்கள் என்று அழைத்துக் கொள்ளவில்லை. அரேபிய மொழிபெயர்ப்பின் படி இந்த அதிகாரத்தின் 17-ம் வசனம் அப்படிப்பட்ட பொருளைத் தருகின்றது. போப்பு என்கிற பொருளையும் தருகிறது. ஆனால் சபையின் காவலர்களாகிய அவர்கள் உண்மையுள்ள ஊழியர்களாக பொருளாதார நிர்வாகம் மற்றும் கூட்ட ஆயத்தங்களின் பொறுப்புகளை நிறைவேற்றினார்கள். அவர்கள் இணைந்து விண்ணப்பம் செய்தார்கள். வியாதியஸ்தரை சந்தித்தார்கள், இழந்து போனவர்களுக்கு பிரசங்கித்தார்கள், மேலும் துக்கம் நிறைந்தவர்களை ஆறுதல் படுத்தினார்கள். அவர்கள் தங்கள் பணிக்கென எந்த சம்பளத்தையும் பெறவில்லை. அவர்களுக்கென்று எந்த சிறப்பு உரிமையும் இல்லை. அவர்களுக்கு உயர்ந்த பதவியும் இல்லை. மாறாக அவர்களுக்கு கிறிஸ்து ஆவிக்குரிய வல்லமையை அருளியிருந்தார். சபையில் ஒரேஒரு பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். ஆனால் வரங்கள் அநேகம் உண்டு. தனிநபர்களின் முதிர்ச்சியிலும் வேறுபட்ட நிலைகள் உண்டு. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவும், தேவையுள்ளோர் மத்தியில் மகிழ்ச்சியுள்ள ஊழியனாகவும் இருக்கும்படி ஒவ்வொரு கிறிஸ்தவனும் அழைக்கப்படுகிறான்.
கிறிஸ்து கூறினார். “பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் எவருடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ, அவைகள் மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் மன்னிக்கப்படாதிருக்கும். முழு நற்செய்தியையும் பிரசங்கித்தும், அதன்படி வாழ்ந்தோர் இந்த கட்டளையை உணர்ந்து கொண்டார்கள். சபைக்கு தலைவர்களாய் இருக்கும்படி தனது சொந்த விருப்பத்தின்படி பவுல் மூப்பர்களை நியமிக்கவில்லை. பரிசுத்த ஆவியானவர் தாமே அவர்களை நியமித்தார், அவர்களை அழைத்தார், அவர்களை நிரப்பினார், அவர்கள் ஆவிக்குரிய கனி கொடுக்கும்படி செய்கிறார். பரிசுத்த ஆவியானவரின் அழைப்பை பெறாதவனுக்கு ஐயோ . அவன் சபையின் மூலம் பொருள் ஆதாயம் அடையவும், தன்னைத்தான் உயர்த்தவும் நினைப்பான். விசுவாசிகள் மீது தனது உலக எண்ணங்களை ஊற்றிவிடுவான். அப்படிப்பட்ட மனிதன் தன்னையே காயப்படுத்துகிறான். முழு மந்தையையும் கெடுக்கிறான். அவனது முயற்சிகள் தோல்வியிலும், விரக்தியிலும் முடியும்.
நொறுங்குண்டு மனந்திரும்பிய மற்றும் தாழ்மையுடன் நடந்த மக்களிடம் பவுல் வெளிப்படையாக பேசினான். உங்களை ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் பரிபூரணமானவர்கள் அல்ல. நீங்கள் சாத்தானால் சோதிக்கப்படுகிறீர்கள். அவனது இலக்காக நீங்கள் இருக்கிறீர்கள். திருச்சபைத் தலைவர்கள் மற்றும் மூப்பர்கள் பாவம், சந்தேகம், மற்றும் பணஆசை இவைகளில் விழும்படி நாசமாக்குபவன் தூண்டுகிறான். இதன் மூலம் மந்தை சிதறடிக்கப்படுகிறது. இப்படிச் சொல்வது சரியாக உள்ளது. “மேய்ப்பன் எப்படியோ, மந்தையும் அப்படியே”. வரங்கள், ஆசீர்வாதங்கள், மற்றும் வல்லமையை அவருடைய சபை அங்கத்தினர்கள் மீது பொழிந்தருளும்படி பிரசங்கி கேட்கும்போது, அவருடைய வீடு தீவிரமாக மாற்றமடைகிறது. ஆண்டவர் தனது சபையின் மீது கிருபையின் நதிகளை ஊற்றிவிடுகிறார். கிறிஸ்து தனது மேய்ப்பர்கள் மூலம் சபையில் தனது வல்லமையை ஊற்றுகிறார், மேய்ப்பனோடு கிறிஸ்து நின்றுவிடுவதில்லை என்பதை கவனிக்க வேண்டும். மேய்ப்பர்களை விட அவருக்கு மந்தையே மிகவும் முக்கியம்.
இறைவனின் அங்கீகாரம் பெற்ற முகவர்கள் மற்றும் உக்கிராணக்காரர்கள் தான் சபையின் தலைவர்களாக இருக்கிறார்கள். அவர் தமது சபையை தன்னுடைய ஒப்பற்ற குமாரனின் இரத்தத்தினால் விலைகொடுத்து வாங்கினார். நமது மீட்பிற்காக இறைவன் வெள்ளி, பொன், பிளாட்டினம், ஆபரணங்கள் அல்லது யுரேனியம் இவைகளை செலுத்தவில்லை. அவர் பெற்றிருந்த விலையேறப் பெற்ற ஒன்றை பலியாக்கினார். நம்மை முழுமையாக மீட்கும்படி குமாரன் ஜீவனைத் தரும்படியாக பிதாவானவர் அவரை அனுப்பினார். சபையை கண்காணிப்பதில் எச்சரிக்கையாய் இருக்கும்படி அப்போஸ்தலன் மூப்பர்களுக்கு கட்டளையிட்டான். அவர்கள் மந்தையின் சத்தத்தைக் கேட்கவும், அவைகளை காக்கவும் வேண்டும். ஓநாய்கள் நிச்சயமாக வரும். அவர்கள் மீது எதிரிகள் பாய்வார்கள். பொய்யர்கள் சூழ்ந்து கொள்வார்கள். திருச்சபை எப்போதும் ஆபத்தில் இருக்கின்றது. நாம் சமாதானத்துடன் வாழவில்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். பரலோகம் மற்றும் நரகத்திற்கிடையே நடக்கும் யுத்தத்தின் மத்தியில் நாம் வாழ்கிறோம்.
விசுவாசிகளை ஏமாற்றும்படியாக பிசாசு தந்திரங்கள் மற்றும் சூழ்ச்சிகளை பயன்படுத்துகிறான். அதன் விளைவாக கொள்கை குழப்பங்கள் ஏற்படுகின்றது. அதே நேரத்தில் சிலர் நியாயப்பிரமாண வாதத்தை பிடித்துக் கொள்கிறார்கள். அது கிறிஸ்துவின் மன்னிப்பை நாடுவதை விட கூடுதலான பரிசுத்தமாகுதலைத் தேடுகின்றது. இப்படிச் செய்ய விரும்புவதன் மூலம் அவர்கள் தங்கள் சொந்த முயற்சியின் மூலமாக தங்களை காத்துக்கொள்ள நினைக்கிறார்கள். சரியான வேதாகம விசுவாசம் மறையும் போது, அன்பு மற்றும் நம்பிக்கையும் மறைந்து போகும். திருச்சபை துன்புறுத்தல்கள் மற்றும் உபத்திரவங்கள் மூலமாக அழிவை சந்திக்கவில்லை. மாறாக தவறான போதனைகள் மூலம் தாக்கப்படுகிறது.
பின்வரும் குணாதிசயங்கள் மூலம் வஞ்சிப்பவன் அறியப்படுகிறான்:
சபை மூப்பரின் முக்கியமான வரங்களில் ஒன்று ஆவிகளைப் பகுத்தறிதல் ஆகும். வேற்று ஆவிகளை பகுத்தறியும்படி அவனை அது பெலப்படுத்துகிறது. அவைகளை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். தாழ்மை மற்றும் அன்புடன் நடந்து கொள்வார்கள். விண்ணப்பம் மற்றும் அதிகாரத்தினால் அவைகளை மேற்கொள்வார்கள். மந்தையை தாக்கும் ஓநாய்களை விரட்டியடிக்க ஆயத்தமாக இருப்பார்கள். இதன் மூலம் சபை பாதுகாக்கப்படுகிறது, தொடர்ந்து சுறுசுறுப்புடன் இயங்குகிறது. பவுல் தாமே எபேசுவில் மூன்று ஆண்டுகள் ஊழியம் செய்தான். கிறிஸ்துவின் சத்தியம் மற்றும் அன்பின் முழுமையில் ஒவ்வொரு தனி நபரையும் வழிநடத்தினான். பெரிய கூட்டங்கள் மூலம் எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் வழி அல்ல இது. ஆண்டவரால் தெரிந்து கொள்ளப்பட்டோருடன் தனிப்பட்ட பணி மற்றும் நீண்ட உரையாடல்கள் மூலம் இது நிகழ்கிறது. ஒருவருக்கொருவர் பக்திவிருத்தியடையச் செய்வதில் மட்டுமே சபை வளர்கின்றது.
ஆலோசனை மட்டுமே உதவாது என்பதை பவுல் ஆலோசனை கொடுக்கும் போது உணர்ந்திருந்தான். மனந்திரும்புதல் மற்றும் பாவத்திற்காக மனம் வருந்துதல் முக்கியம். அவன் மூப்பர்களை விட்டுவிட்டு, உடனடியாக அவனது உயிருள்ள ஆண்டவரிடம் திரும்பினான். அவன், அவர்களோடே பேசினான். சபைக்கும், மூப்பர்களும் கட்டளையிட்டான். இயேசு மட்டுமே எல்லோரையும் காக்கின்ற நல்ல மேய்ப்பனாக இருக்கிறார். அவனது விசுவாசத்தின் அச்சாரமாயிருக்கும் கிறிஸ்துவின் கரங்களில் பவுல் தனது சுமையை வைத்தான்.
அதே சமயத்தில் இறைவனின் ஒரே வல்லமை மற்றும் ஜீவ ஊற்றாகிய கிருபையின் வார்த்தையை நோக்கி அப்போஸ்தலன் தனது மக்களை வழி நடத்தினார். புதிய ஏற்பாட்டு புத்தகத்தில் நாம் ஆவியின் வல்லமைக்கான ஆதாரம், இறைவனைக் குறித்த அறிவு, விசுவாசத்திற்கான தைரியம், அன்பிற்கான உந்துதல் ஆகியவற்றை காண்கிறோம். இவ்விதமாக அப்போஸ்தலன் உங்களை பரிசுத்த வேதாகமத்தை தினமும் விண்ணப்பத்துடன் படிக்க உதவுகிறான். அப்போது நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் அழிந்து போகாமலும், இழந்து போகாமலும் இருக்க இது உதவுகிறது.
உங்களது தின வேத தியானங்கள் கிறிஸ்துவின் கிருபையில் உங்களை நிலை நிறுத்துகிறது. நம்பிக்கையின் கனியை உங்களில் உருவாக்குகிறது. ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒரு பரலோகம் பகுதியை பெற்றுக்கொள்வான். இந்த உலகத்தில் அல்ல, இனிவரும் உலகில் பெற்றுக்கொள்வான். பணம், புகழ், வீடுகள், சுகம், கார்கள் இவைகளை உங்கள் ஆண்டவரிடம் இருந்து எதிர்பார்க்காதீர்கள். கிறிஸ்து இறைவனின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் மேலானவைகளைத் தேடுங்கள். உயிருள்ள மற்றும் மரித்த பரிசுத்தவான்களுடன் இணைந்து நாம், நம்முடைய பரலோகம் பிதாவின் ராஜ்யத்தை சுதந்தரிப்போம். நம்முடைய தகுதியினால் அல்ல, அவரது கிருபையினால் மட்டுமே இது நடக்கும். உலகத்தை பற்றிக் கொள்ள விரும்புபவன் பரலோகத்தை இழந்து போவான். ஆகவே தெரிந்து கொள்ளுங்கள்; நீங்கள் இறைவனை நேசிக்கிறீர்களா? அல்லது உலகப் பொருளை (மம்மோன்) நேசிக்கிறீர்களா?
விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, உலகப்பொருளின் மீது அன்பு மற்றும் பற்று இவைகளில் இருந்து எங்களை காப்பாற்றும். உமது வார்த்தையின் முழுமையில் எங்களை நிலைநிறுத்தும். எங்கள் வாழ்வின் நடைக்கு உமது கிருபையைத் தாரும். உமது மந்தையின் மீது கவனத்துடன், விண்ணப்பத்துடன் இருக்க உதவிசெய்யும். வழிவிலகிச் செல்வோரை நீர் இரட்சியும். வஞ்சகர்களிடமிருந்து எங்களை காப்பாற்றும்.
கேள்வி:
- ஏன் இறைவனின் மந்தையின் மேய்ப்பர்கள் எல்லா நேரங்களிலும் கவனத்துடன் இருக்க வேண்டும்?