Previous Lesson -- Next Lesson
11. பேதுருவும் யோவானும் சிறையிலடைக்கப்படுதல், நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுதல் (அப்போஸ்தலர் 4:1-22)
அப்போஸ்தலர் 4:12-18
12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். 13 பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள். 14 சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது. 15 அப்பொழுது அவர்களை ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு: 16´இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வாசம்பண்ணுகிற எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது.17 ஆகிலும் இது அதிகமாய் ஜனத்துக்குள்ளே பரம்பாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாய்ப் பயமுறுத்தவேண்டுமென்று சொல்லிக்கொண்டு,18 அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
பேதுரு கிறிஸ்துவின் நாமத்தினாலே சப்பாணியாய் இருந்த மனிதனை குணமாக்கினார். இந்த மனிதன் சுகமாக்கப்பட்டது மூலமாக மனிதனை முழுமையாக இரட்சிப்பது மற்றும் அவனுக்கு நித்திய வாழ்வை கொடுப்பது என்ற இயேசுவின் நோக்கம் நிறைவேறுகிறதை அப்போஸ்தலர்கள் அறிந்தார்கள். ஆண்டவர் விசுவாசிகளுக்கு உதவுவதில், குறைவுவைக்காமல், முழுமையாக இரட்சிக்கிறார். அவனது சரீரம், ஆவி ஆத்துமாவை இரட்சிக்கிறார். நமது நம்பிக்கை மற்றும் புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டு இறைவனின் அன்பு செயல்படுகிறது. அப்போஸ்தலர்களில் மூத்தவர்கள் தாங்கள் வாதாடிய காரியத்தை நன்கு அறியப்பட்ட ஓர் வாக்கியத்தின் மூலமாக சுருக்கிச் சொன்னார்கள். “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை. கற்றறிந்த இறையியல் நிபுணர்கள் மற்றும் அதிகாரமிக்க நீதிபதிகள், அவர்களுடைய வேத அறிவின் மத்தியிலும் குருடர்களாயிருந்ததை திபேரியா ஏரியின் எளிய மீனவர்கள் நிரூபித்தார்கள். பட்டங்களைப் பெறுவது, அதிகமாக வாசிப்பது, மத நூல்களை வாசிப்பது இரட்சிப்பைக் கொண்டு வராது. சிலுவையில் அறையப்பட்டு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த உயிருள்ள இயேசுவின் மீது விசுவாசம் வைப்பது, பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம்பண்ணுவது இவைதான் இரட்சிப்பைக் கொடுக்கும்.
இரட்சிப்பு என்றால் என்ன? அது இறைவனுடைய கோபாக்கினையிலிருந்து விடுதலை ஆகும். கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் பரிசுத்தமாக்கப்படுதல் ஆகும். இரட்சிப்பு, என்பது மரணத்தின் மீது வெற்றிகொண்டு நித்திய வாழ்வுக்கு நம்மை நடத்துவது ஆகும். கிறிஸ்து தரும் இரட்சிப்பு பாவத்தில் விழாமல் இறைவனின் வல்லமையை பெற்று நல்ல செயல்களை செய்வதை வலியுறுத்துகிறது. உண்மையான இரட்சிப்பு என்பது மக்கள் அறிந்திருப்பதைவிட உயரமானது, ஆழமானது, அகலமானது, பலம் நிறைந்தது. இயேசுவின் மீது விசுவாசம் வைப்பவன் மீது சாத்தானுக்கு அதிகாரம் கிடையாது. இரட்சகருக்கு தன்னை அர்ப்பணிப்பவன் அவருக்குள் வெற்றியை பெறுகிறான்
கிறிஸ்து எல்லா மனிதர்களுக்குமான இரட்சிப்பை நிறைவேற்றி முடித்தார். நமக்குப் பதிலாக அவர் சிலுவையில் மரித்தார். அநீதியானவர்களுக்கு பதிலாக நீதியுள்ளவராக, அழிந்து போகக் கூடியவர்களுக்கு பதிலாக அழியாதவராக மரித்தார். ஆண்டவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு அகற்றினார். இலவசமாய் நம்மை நீதிமான்களாக்கினார். நம்மை யாரும் இரட்சிக்க இயலாது என்பதை அவர் அறிந்திருந்தார். இறைவனின் குமாரன் மனுஷகுமாரன் ஆனார். அதன் மூலம் மனிதனின் குமாரர்கள் இறைவனின் குமாரர்கள் ஆகிறார்கள். நாம் புத்திர சுவீகாரம் அடையும்படி கிறிஸ்து நம்மை மீட்டெடுத்தார். பரிசுத்தமுள்ள கனத்திற்குரிய நீதிபதி நமக்கு எதிராக இல்லை. அவர் நம்முடைய அன்புள்ள பிதாவாக இருக்கிறார். கிறிஸ்து தமது மரணத்தின் மூலம் பரிசுத்த ஆவியானவரை நமக்கு அருளியுள்ளார். நம்முடைய இருதயங்களில் இறைவனின் அன்பு ஊற்றப்படுகிறது.
கிறிஸ்து தரும் இரட்சிப்பை பெற்றுக்கொள்ளும்படி அனைத்து மனிதர்களும் அழைக்கப்படுகிறார்கள். ஏனெனில் எவரிடத்திலும் இரட்சிப்பு இல்லை. தெய்வீக சந்தோஷத்தை பெற்றுக்கொள்வதற்கு மதங்கள், தத்துவங்கள், மனித கருத்தாக்கங்கள். மற்றும் நற்செயல்கள் போதுமானவை அல்ல. நம்முடைய விடுதலை கிறிஸ்துவின் இரத்தத்தில் மாத்திரமே உள்ளது. அது இல்லையெனில் நாம் அழிந்துவிடுவோம். ஆகவே கிறிஸ்துவின் ஒப்புரவாக்குதலை ஏற்றுக்கொள்வது மற்றும் அவருடைய உடன்படிக்கையில் இணைவது அவசியமானதும், தெய்வீகமானதுமான கடமையாக உள்ளது. இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவன் இறைவனின் அன்பை புறக்கணிக்கிறான். அவன் இரட்சிப்பைக் காணமாட்டான். இயேசுவின் மூலமாக இரட்சிப்பைத் தருவதை தவிர இறைவனுக்கும் வேறு வழி இல்லை.
மனிதர்களைப் பிடிக்கும் மீனவனாயிருந்த பேதுரு இந்த அரிய உண்மைகளையெல்லாம் ஆலோசனைச் சங்கத்து பிரதான ஆசாரியர்கள், இறையியலாளர்கள், வேதபாரகர், சட்ட நிபுணர்களுக்கு சொன்னார். அவர் அதிகம் பேசவில்லை. நற்செய்தியை ஒரே வாக்கியத்தில் சுருக்கிக் கூறினார். நீதிபதிகள் அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள். ஏனெனில் அவன் புரியக்கூடிய எளிய மொழிநடையில் பகட்டான சொல்நடையின்றி பேசினான். எளிமையான வாக்கியங்களை பயன்படுத்தினான். அவர்கள் அவனையும் அவனுக்கு பின் நின்று கொண்டிருந்த சுகமாக்கப்பட்ட வாலிபனையும் படிப்பறிவற்றவர்களாகக் கண்டார்கள். அவர்களால் மறுதலிக்க முடியவில்லை. இந்த இருவரில் வெளிப்பட்ட இறைவனின் வல்லமை அப்போது அங்கு இல்லை. ஆனால் பேதுருவின் வார்த்தைகளில் மீண்டும் கிறிஸ்துவின் வல்லமை தோன்றியது. அந்த ஜனத்து அதிகாரிகள் தான் கொலைக்காரர்கள் என்பதை உறுதிப்படுத்தியது. அதே சமயத்தில் அவன் இயேசுவின் நாமத்தினால் இறைவனின் இலவசமான இரட்சிப்பை வழங்கினான்
அந்த நீதிபதிகள் அப்போஸ்தலர்களின் குற்றச்சாட்டை பெரிதாக கருதவில்லை. அவர்களுக்கு அருளப்படும் இரட்சிப்பைக் குறித்தும் எண்ணவில்லை. இவைகளைக் குறித்து கருத்தாய் யோசிக்க அவர்கள் விருப்பமின்றி இருந்தார்கள். ஆனால் அவர்கள் வாயிலிருந்து புறப்பட்ட இயேசு என்னும் நாமம் அவர்களை தொந்தரவுபடுத்தியது. அவர்கள் அந்த பெயரை மறக்க விரும்பினார்கள். அதை தவிர்க்க எண்ணினார்கள், அதை மறுபடியும் கேட்க விரும்பவில்லை. இறைவனின் கோபாக்கினைக்குட்பட்ட ஏழை பிச்சைக்காரன் சுகமாக்கப்பட்டதைக் குறித்து அவர்கள் அக்கறைப்படவில்லை. இந்த மாய்மாலமான, நாகரீகமான மனிதர்கள் அன்பற்றவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய முதன்மையான அக்கறை அவர்கள் புத்தகங்கள், மதரீதியான போதனைகள் மற்றும் அவர்களது கடமைகளில் இருந்தது
தண்டனைக்குப் பயப்படாதிருந்த இரண்டு அப்போஸ்தலர்களின் தைரியம் மற்றும் வீரம் அந்த ஜனங்களைப் பாதித்தது. மேலும் சுகமாக்கப்பட்ட அந்த மனிதனின் நிமித்தம் அப்போஸ்தலர்கள் மீது இறைநிந்தனை குற்றச்சாட்டை நீதிபதிகள் முன்வைப்பதற்கு கடினமாக இருந்தது. ஆகவே அவர்கள் இரகசியமாக கூடினார்கள். பின்பு ஆலோசனை சங்கத்தை விட்டு அவர்களை அனுப்பிவிட்டார்கள்.
இயேசுவின் நாமத்தைக் குறித்து பிரசங்கிக்க கூடாது என்று தடுப்பதைத் தவிர வேறு எந்த முடிவையும் இறுதியில் அவர்களால் எட்ட இயலவில்லை. இந்த பெயர்தான் அவரைப் பின்பற்றுபவர்களின் வல்லமைக்கு காரணம் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அது அந்த தேசத்திற்கும் அதனுடைய வழிமுறைமைகளுக்கும் ஆபத்தானது என்று கருதினார்கள். இயேசுவின் நாமத்தில் இன்னும் அற்புதங்கள் நடந்துவிடுமோ என்று பயந்து அந்த நாமத்தைக் குறித்து பேசவோ, போதிக்கவோ, அறிவிக்கவோ கூடாது என்று இரண்டு அப்போஸ்தலர்களுக்கும் அவர்கள் கட்டளையிட்டார்கள். சாத்தானின் திட்டத்தின் சுருக்கத்தை இது குறிப்பிடுகின்றது. அவன் இயேசு என்னும் நாமத்தில் பிரசங்கிப்பதை தடுக்க விரும்புகிறான். இறைவனின் வல்லமை அதன் மூலம் வெளிப்பட்டு மனித இருதயங்களை இரட்சிப்பதை அவன் தடுக்க விரும்புகிறான். அருமையான சகோதரனே!இயேசுவின் நாமத்தை தொடர்ந்து பேசுவதில் நீ உறுதியாய் இருக்கிறாயா? நீ அவருக்கு சாட்சி பகர்கின்றாயா? இரட்சிப்பு வேறு எவரிலும் இல்லை. மற்றவர்கள் இரட்சிக்கப்படுவதற்கு இந்த நாமத்தைக் குறித்து பேச வேண்டிய பொறுப்பு உனக்கு உண்டு. சாட்சியின் அறிக்கை இல்லாமல் இரட்சிப்பு இல்லை.
விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே! அழிந்து கொண்டிருந்த எங்களை நீர் இரட்சித்ததற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் பாவங்களை மன்னித்தீர். எங்களை நித்திய வாழ்வுக்கு கொண்டு செல்கிறீர். உமது மரணம் எங்களுக்கு ஜீவனாய் இருக்கிறது. உமது பாடுகள் எங்களுக்கு மகிழ்ச்சியை கொண்டு வருகிறது. உமது நாமத்தை தைரியத்துடன் எடுத்துச் சொல்ல எங்களுக்கு தைரியம் தாரும். அதிகாரிகள், கல்விமான்களுக்கு பயப்படாமல், அவர்களுக்கும் பாவங்களைக் குறித்தும், நீர் அருளும் இரட்சிப்பைக் குறித்தும் சாட்சி பகர உதவும்.
கேள்வி:
- ஏன் முழு உலகிற்கும் இரட்சிப்பு என்பது இயேசுவின் நாமத்தில் மட்டும் மையப்படுத்தப்பட்டுள்ளது?