Previous Lesson -- Next Lesson
7. அரசு மற்றும் பணத்தைக் குறித்த கேள்விக்கு பதிலளித்தல் (மாற்கு 12:13-17)
மாற்கு 12:13-17
13 அவர்கள், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படிக்கு, பரிசேயரிலும் ஏரோதியரிலும் சிலரை அவரிடத்தில் அனுப்பினார்கள். 14 அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராய்த் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீர், இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ? நாம் கொடுக்கலாமோ, கொடுக்கக்கூடாதோ? என்று கேட்டார்கள். 15 அவர்களுடைய மாயத்தை அவர் அறிந்து: நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? நான் பார்க்கும்படிக்கு ஒரு பணத்தை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். 16 அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்; இராயனுடையது என்றார்கள். 17 அதற்கு இயேசு: இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
கிறிஸ்துவின் எதிரிகள் இயேசுவிடம் வந்து அவருக்கு சீஷர்களாக இருக்க விரும்புவதாகக் கூறினார்கள். முக்கியமான சில கேள்விகளைக் கேட்டார்கள். அவரை வலையில் சிக்க வைக்கவும், அவருக்கு எதிராக குற்றம்சாட்டவும், அவர்மீது கைபோட வகை தேடியும் அப்படிச் செய்தார்கள். இரண்டு வேறுபட்ட குழுவினர் வந்தார்கள். மத வைராக்கியமிக்க பரிசேயர்கள் ரோம அதிகாரத்திற்கு வரி செலுத்த மறுத்தார்கள். ஏரோது ராஜாவின் போர்ச்சேவகர்கள் ரோமர்களுடன் இணைந்து செயல்பட்டார்கள். இரு குழுவினரும் இணைந்து வந்து, அவரை வலையில் சிக்கவைக்க எண்ணினார்கள்.
கிறிஸ்துவுக்கு எதிராக வேறுபட்ட மக்கள் இணைவது ஒன்றும் புதிதான காரியம் அல்ல. கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கு எதிராக எல்லாக் காலங்களிலும் இப்படிப்பட்ட எதிரிகள் இருக்கிறார்கள். இந்த எதிரிகள் தங்களுடைய எஜமானைப் பின்பற்றி தந்திரமாய் நடக்கிறார்கள். இவர்களுக்கு மாய்மாலமும், பொய்யும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அவர்கள் மிகத் தாழ்மையுடன் பணிவோடு கேட்டார்கள். அதே சமயத்தில் அவரை அழிக்கும்படியான நோக்கத்துடன் அவர்கள் பேசினார்கள். மாய்மாலம் என்பது மிக மோசமான பாவம். எனவே உன்னை நீயே சோதித்துப் பார். உனது வார்த்தைகள் மற்றும் செயல்களில் நீ உண்மையுடனும் நேர்மையுடனும் இருக்கிறாயா? ஒருவனை நீ வெறுத்தும் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் அவனிடம் நட்புடன் பழகுகிறாயா?
கிறிஸ்து சுதந்திரமானவர், உண்மையுள்ளவர், எந்த மனிதனுக்கும் பயப்படாதவர் என்று அவருடைய எதிரிகள் சாட்சியிட்டார்கள். இறைவனுடன் உள்ள உறவினால் சுயத்தை வெறுத்து அன்புடன் வாழும் வழியை கற்றுக்கொடுக்கிறார் என்றார்கள்.
அவர்கள் இயேசுவிடம் பணம் சம்பந்தமான கேள்வியைக் கேட்டார்கள். அநேகருக்கு பணஆசை இருக்கின்றது. பணத்திற்கு வல்லமை உண்டு. ஆனால் மறுஉலக வாழ்வில் கிடையாது. இங்கே இந்த வாழ்வில் பணஆசை, பேராசை அநேக மக்களை ஆட்கொண்டிருக்கிறது. நமது பொருளாதார அமைப்பு முதலாளித்துவம் அல்லது தேசியமயத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. நாம் கற்பனை செய்வதற்கும் மேலான வல்லமையைப் பணம் பெற்றிருக்கிறது. அநேகர் பணத்திற்கு வேலைக்காரர்களாக இருக்கிறார்கள்.
ரோம மன்னன் மூலம் சுமத்தப்பட்ட வரியைச் செலுத்துவது பாவம் என்று பரிசேயர்கள் கருதினார்கள். அவர்கள் அந்தப் பணத்தை தங்கள் கோயில்களில் பலி செலுத்துவதற்கும், அவர்களுடைய தேவைக்கும் பயன்படுத்தியதால், அதை வெறுத்தார்கள். ஆனால் ஏரோதுவின் வீரர்கள் வரிவசூலிப்பை ஆதரித்தார்கள். அவர்கள் தாழ்மையுள்ள இறைமகனிடம் கேட்டார்கள்: ராயனுக்கு வரி செலுத்துவது நியாயமா? அவருடைய பதிலின் மூலம் அவரை குற்றம்சாட்ட நினைத்தார்கள்.
இயேசு ஒரு நாணயத்தை எடுத்தார். அதில் ராயனின் சுரூபத்தையும், பெயரையும் காண்பித்தார். அந்த நாணயம் யூதர்களிடம் இருந்து வரவில்லை என்பதையும், ரோமர்கள் அதை வெளியிட்டதையும் குறிப்பதற்காக அப்படிச் செய்தார். அவர்களிடம் அவர் இப்படிச் சொன்னார்: “இராயனுடையதை இராயனுக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் செலுத்துங்கள்”. இந்தக் கூற்றின் மூலம் அவர் ரோம சட்டத்தை மீறவும் இல்லை. தன்னைப் பின்பற்றுவோரிடம் ஆயுதப் புரட்சிக்கான சிந்தனையை உருவாக்கவும் இல்லை. மேலான அதிகாரங்களுக்கு கீழ்ப்படியுங்கள் என்று அப்போஸ்தலர்களும் கூறுகிறார்கள். கிறிஸ்தவர்கள் சட்டத்தை மதிக்கிறவர்கள். தங்கள் அதிகாரிகளுக்காக மன்றாடுகிறவர்கள். அதிகாரங்கள் இறைவனால் நியமிக்கப்படுபவை என்பதை அறிந்தவர்கள்.
அரசு அதிகாரிகளுக்கு கீழ்ப்படிவது மட்டுமல்ல, மிகப்பெரிய இறைவனுக்கும் கீழ்ப்படிவதை கிறிஸ்து வலியுறுத்தினார். இறைவன் இராயனைவிடப் பெரியவர். நாம் மனுஷருக்கு கீழ்ப்படிவதைப் பார்க்கிலும், இறைவனுக்கு கீழ்ப்படிவது அவசியமாயிருக்கிறது. இறைவன் இராயனுக்கு பணத்தையும், உலகத்தின் தங்கம், மற்றும் செல்வங்களையும் கொடுத்திருக்கிறார். அவர் அனைத்து மாநிலங்களையும், தேசங்களையும் உடையவராக இருக்கிறார். அவருடைய கரத்தில் அவர்கள் நீர்த்துளிகளைப் போல இருக்கிறார்கள்.
உலக ஞானிகளைவிட கிறிஸ்து ஞானத்தில் சிறந்தவர். அவர் தமது வார்த்தையில் உண்மையும், நேர்மையும் உள்ளவர். தன்னைக் குற்றம் கண்டுப்பிடிக்க நினைப்பவர்களையும் அவர் நேசிக்கிறார். சர்வவல்லமையுள்ள இறைவனிடம் மனந்திரும்பவும், அவருக்கு ஒப்புக்கொடுக்கவும் அவர்களை வழிநடத்துகிறார்.
தற்காலிக அதிகாரத்திற்கு கீழ்ப்படிந்து வரியை செலுத்தும்படி கிறிஸ்து நமக்குக் கட்டளையிடுகிறார். மேலும் இறைவனுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்படி அழைக்கிறார். அவருடைய பாதத்தில் நமது பணத்தையும், வாழ்வையும் சரணடையச் செய்ய வேண்டும். உலகக் காரியங்களைப் பற்றிக்கொள்ள வேண்டாம். உங்கள் ஆண்டவரை நம்புங்கள். உங்கள் வாழ்வு முழுவதையும் அவருக்கு ஒப்புக்கொடுங்கள். ஆண்டவருக்கு உண்மையாக சேவை செய்யும் ஒருவன், பரிசுத்தமானவர் தன்னைக் கைவிடாமல் வழிநடத்துவதை அனுபவிக்கிறான்.
உயிருள்ள இறைவனுக்கு நம்மை ஒப்புக்கொடுப்பது அவசியம். மதமும், தேசமும் எங்கே பிரிந்திருக்கிறதோ, அங்கே கிறிஸ்தவன் தனது தேசத்திற்கு உண்மையுடன் பணிபுரிகிறான். அதேசமயத்தில் அவன் இறைவனுக்கு முதலாவது பணிபுரிகிறான். பரிசுத்தமான இறைவனே ஆதாரமாகவும், பிரபஞ்சத்தை தாங்குபவராகவும் இருக்கிறார்.
விண்ணப்பம்: பரிசுத்த இறைவனே, நீர் சர்வத்தையும் ஆளுகிறவர். இரக்கம் நிறைந்த சர்வ வல்லமையுள்ளவர். எங்கள் பணஆசை, உலக காரியங்கள் மீதான நாட்டத்தை மன்னியும். எங்கள் மாய்மாலம், பணஆசை, பகையுணர்வில் இருந்து முழுமையான விடுதலை தாரும். நாங்கள் உம்மையே நம்பியிருக்கிறோம். எங்களை உமக்குத் தருகிறோம். வல்லரசான நாடுகள் ஐசுவரியம், செல்வம், அதிகாரத்தை நாடாதபடி, ஏழைகளுக்கு உதவும்படி வழிநடத்தும். விசுவாச சுதந்திரம் காணப்பட உதவும். மக்கள் மத்தியில் உலக நாட்டம் நீங்கி ஆவிக்குரிய வாழ்வின் மீது நாட்டம் ஏற்படவும், சுயநலம் நீங்கி அன்பினால் பணிசெய்யவும் கிருபை தாரும். ஆமென்.
கேள்வி:
- தன்னை சோதித்தவர்களிடம் கிறிஸ்து அளித்த பதிலில் வெளிப்பட்ட ஞானம் என்ன?