Previous Lesson -- Next Lesson
8. உயிர்த்தெழுதலின் இரகசியங்கள் (மாற்கு 12:18-27)
மாற்கு 12:18-27
18 உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயர் அவரிடத்தில் வந்து: 19 போதகரே, ஒருவனுடைய சகோதரன் சந்தானமில்லாமல் தன் மனைவியை விட்டு இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டுமென்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே. 20 இப்படியிருக்க, ஏழுபேர் சகோதரர் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனான். 21 இரண்டாம் சகோதரன் அவளை விவாகம்பண்ணி, அவனும் சந்தானமில்லாமல் இறந்துபோனான். மூன்றாம் சகோதரனும் அப்படியேயானான். 22 ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள். 23 ஆகையால், உயிர்த்தெழுதலில், அவர்கள் எழுந்திருக்கும்போது, அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? ஏழுபேரும் அவளை மனைவியாகக் கொண்டிருந்தார்களே என்று கேட்டார்கள். 24 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலல்லவா தப்பான எண்ணங் கொள்ளுகிறீர்கள்? 25 மரித்தோர் உயிரோடெழுந்திருக்கும்போது கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை. அவர்கள் பரலோகத்தில் இருக்கிற தேவதூதரைப்போலிருப்பார்கள். 26 மரித்தோர் எழுந்திருப்பதைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாய் இருக்கிறேன் என்று, தேவன் முட்செடியைக்குறித்துச் சொல்லிய இடத்தில், மோசேயின் ஆகமத்தில் அவனுக்குச் சொன்னதை, நீங்கள் வாசிக்கவில்லையா? 27 அவர் மரித்தோருக்குத் தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார்; ஆகையால் நீங்கள் மிகவும் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள் என்றார்.
சதுசேயர்களும், அவர்களைப் பின்பற்றியவர்களும் இறைவனுடைய வார்த்தையை கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைத்த மதவாதிகளோ, கல்வியாளர்களோ அல்ல. அவர்கள் வெளிப்பாடு, ஆவிகள், உயிர்த்தெழுதல் அல்லது மரணத்தின் பின்பு வாழ்வு இவைகளை விசுவாசிக்கவில்லை. அவர்கள் அறிவுசார்ந்து நம்புகின்ற மக்களாக இருந்தார்கள். தங்களது சந்தேகத்தை நீக்க, தத்துவரீதியாக நிரூபித்து உண்மையை விளக்க விரும்பினார்கள். அவர்களுடைய உதாரணங்களில் ஒன்று ஏழு ஆண்களை திருமணம் செய்த ஒரு பெண்ணைக் குறித்ததாகும். பரலோகத்தில் யாருக்கு அவள் மனைவியாய் இருப்பாள்? என்று கேட்டார்கள்.
அவர்களது இருதயத்தில் இருந்த வியாதியை கிறிஸ்து அறிந்தார். அவர்களுடைய மூடத்தனத்தை அவர் வெளிப்படுத்தினார். ஞானம் நிறைந்த இறைவார்த்தையின் மூலம் அவர்களுடைய நிந்தனையை மேற்கொண்டார். அவர்கள் இறைவனுடைய நித்திய வாழ்விற்கு குருடர்களாவும், பரலோக வல்லமையை அனுபவிக்காதவர்களாகவும் இருந்தார்கள். இறைவனுடைய ஞானம், வல்லமையின் இரகசியங்களை விஞ்ஞானம் நமக்கு வெளிப்படுத்துவதில்லை. விசுவாசம் மட்டுமே உண்மையான வெளிப்பாட்டைத் தருகிறது.
சந்தேகவாதிகளுக்கு இயேசு உயிர்த்தெழுதலின் அடிப்படை உண்மையைக் குறித்து நிரூபித்து பேசினார். பரலோகில் மனிதர்கள் மாம்சத்தோடும், இரத்தத்தோடும் இருப்பதில்லை. அங்கே ஆண் என்றும், பெண் என்றும் இல்லை. மாம்ச இச்சை அங்கு இல்லை. கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் தூதர்களைப் போல மகிமையில் இருப்பார்கள். அவர்களுக்குள் இறைவனுடைய ஆவியானவர் தங்கியிருப்பார். இன்று அவர் மறைந்திருக்கிறார். நாளை அவர் மகிமையில் வெளிப்படுவார். ஆனாலும் மக்கள் சாத்தானின் பொய்களைக் கவனித்து, அதைப் பின்பற்றுகிறார்கள். மற்றவர்களை வெறுக்கிறார்கள். அவர்கள் சாத்தானின் தூதர்களைப் போல இருள், பயம் நிறைந்தவர்களாக நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்குள் பொய்யின் பிதா தங்கியிருக்கிறான் (மத்தேயு 25:41).
வனாந்தரத்தின் மோசேயின் அனுபவத்தைக் குறித்த உண்மையை இயேசு தன்னை சோத்தித்தவர்களிடம் கூறினார். பரிசுத்தமானவர் தன்னை இஸ்ரவேலின் முற்பிதாக்களுடைய இறைவனாக வெளிப்படுத்தியுள்ளார். இறைவனுடைய பெயரில் உள்ள கிருபையையும், உண்மையையும் நாம் காண்பது எவ்வளவு பெரிய ஆச்சரியமாயிருக்கிறது? அவர் பாவம் நிறைந்த, பலவீனமான மனிதர்களைத் தேடி வந்தார். அவர்களுடன் என்றென்றுமான உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அவர்களுடைய விசுவாசத்தினால் அவர்களுக்கு வாழ்வைக் கொடுத்தார். அவர்கள் இறைவன் தரும் வாழ்வைப் பெறும்படி எழுந்திருப்பார்கள். ஸ்திரீயினிடம் பிறந்த இறைமகனாகிய கிறிஸ்து இயேசுவில் ஆபிரகாமும் களிகூர்ந்தான். இஸ்மவேலின் பிள்ளைகள் பரிசுத்த ஆவியின் மூலம் மறுபிறப்பின் அனுபவத்தை அடைந்து, இறைவனுடைய நித்தியவாழ்வில் பங்கு பெறுவதை அவன் கண்டு மகிழ்ந்தான். அவரை விசுவாசிக்கும் அனைவருக்கும் நித்தியவாழ்வைத் தருகிறார் (யோவான் 3:16; 20:31).
விண்ணப்பம்: பிதாவே, நீர் எங்களை உமது பிள்ளைகளாக தத்தெடுத்ததற்காக நன்றி கூறுகிறோம். இயேசு கிறிஸ்துவில் எங்களை மறுபிறப்படையச் செய்தீர். எங்கள் இருதயங்களில் உமது பரிசுத்த ஆவியின் மூலம் நித்தியவாழ்வைத் தருகிறீர். எங்களுக்கு உயிருள்ள விசுவாசத்தைத் தாரும். எங்கள் இருதயத்தில் சமாதானம், நம்பிக்கை தாரும். கிறிஸ்துவுக்குள் வாழ்கிறவர்கள் இச்சை, பகை போன்ற பாவங்களை மேற்கொள்கிறார்கள். அவர்கள் மறு உலகில் விசுவாசத் தந்தைகளுடன் இணைந்துகொள்வார்கள். உமது வருகையைக் கண்டு நன்றி செலுத்தி துதிப்பார்கள். ஆமென்.
கேள்வி:
- மறு உலகவாழ்வில் விசுவாசிகள் எவ்விதம் வாழ்வார்கள்?
மனன வசனம்:
மரித்தோர் உயிரோடெழுந்திருக்கும்போது
கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை. அவர்கள் பரலோகத்தில்
இருக்கிற தேவதூதரைப்போலிருப்பார்கள்.
(மாற்கு 12:25)