Previous Lesson -- Next Lesson
12. இரண்டாம் அகிரிப்பாவிற்கும் அவனுடைய அரச பரிவாரங்களுக்கும் முன்பாக பவுல் (அப்போஸ்தலர் 25:13 - 26:32)
அப்போஸ்தலர் 25:13-22
13 சிலநாள் சென்றபின்பு, அகிரிப்பா ராஜாவும் பெர்னீக்கேயாளும் பெஸ்துவைக் கண்டுகொள்ளும்படி செசரியாவுக்கு வந்தார்கள். 14 அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்திருக்கையில், பெஸ்து பவுலின் சங்கதியை ராஜாவுக்கு விவரித்து: பேலிக்ஸ் காவலில் வைத்துப்போன ஒரு மனுஷன் இருக்கிறான். 15 நான் எருசலேமில் இருந்தபோது, பிரதான ஆசாரியர்களும் யூதருடைய மூப்பர்களும் அவனைக்குறித்து என்னிடத்தில் பிராதுபண்ணி, அவனுக்கு விரோதமாகத் தீர்ப்புசெய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். 16 அவர்களுக்கு நான் பிரதியுத்தரமாக: குற்றஞ்சாட்டப்பட்ட மனுஷன் குற்றஞ்சாட்டினவர்களுக்கு முகமுகமாய் நின்று, சாட்டின குற்றத்துக்குத் தனக்காக எதிருத்தரவு சொல்ல அவனுக்கு இடங்கிடைக்கிறதற்குமுன்னே, குற்றஞ்சாட்டினவர்கள் பட்சமாய் அவனை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கிறது ரோமருக்கு வழக்கமல்ல என்றேன். 17 ஆகையால் அவர்கள் இங்கே கூடிவந்தபோது, நான் எவ்வளவும் தாமதம்பண்ணாமல், மறுநாள் நியாயாசனத்தில் உட்கார்ந்து, அந்த மனுஷனைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன். 18 அப்பொழுது குற்றஞ்சாட்டினவர்கள் வந்துநின்று, நான் நினைத்திருந்த குற்றங்களில் ஒன்றையும் அவன்மேல் சுமத்தாமல், 19 தங்களுடைய மார்க்கத்தைக்குறித்தும், மரித்துப்போன இயேசு என்னும் ஒருவன் உயிரோடிருக்கிறானென்று பவுல் சாதித்ததைக்குறித்தும் சில தர்க்கவிஷயங்களை அவன்பேரில் விரோதமாய்ச் சொன்னார்கள். 20 இப்படிப்பட்ட தர்க்க விஷயங்களைக்குறித்து எனக்குச் சந்தேகமிருந்தபடியினால்: நீ எருசலேமுக்குப்போய், அங்கே இவைகளைக் குறித்து நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்று கேட்டேன். 21 அதற்குப் பவுல், தான் இராயருக்கு முன்பாக நியாயம் விசாரிக்கப்படும்படிக்கு நிறுத்திவைக்கப்படவேண்டுமென்று அபயமிட்டபோது, நான் அவனை இராயனிடத்திற்கு அனுப்புமளவும் காவல்பண்ணும்படி கட்டளையிட்டேன் என்றான். 22 அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவை நோக்கி: அந்த மனுஷன் சொல்லுகிறதை நானும் கேட்க மனதாயிருக்கிறேன் என்றான். அதற்கு அவன்: நாளைக்கு நீர் கேட்கலாம் என்றான்.
அரசர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதும் அவர்களுக்கு விலைமதிப்புள்ள பொருட்களை அன்பளிப்பாக பரிமாறிக்கொள்ளவதும் வழக்கமானவைகள். தங்களுக்கு சமமாயிருப்பவர்களை கனப்படுத்தும்போதுதான் அவர்கள் தங்களோடு ஒத்துழைப்பார்கள என்பதற்காக இவ்வாறு செய்துகொள்வதுண்டு. ஆனால் அப்படிப்பட்ட வலிமையான மனிதர்கள் நடுவில் மாட்டிக்கொள்ளும் சாதாரண மனிதன் அரைவை இயந்திரத்தில் சிக்கிய கோதுமை மணியைப் போலிருப்பான்.
இரண்டாம் அகிரிப்பா என்பவன் முதலாம் அகிரிப்பா அரசனுடைய மகன் (12-ம் அதிகாரம்). மேலும் இத்தருணத்தில் பலஸ்தீனத்தைவிட்டுச் சென்ற ரோம ஆளுனராகிய பேலிக்ஸின் மனைவியாகிய துருசில்லாள் இவனுக்குச் சகோதரி. இந்த இரண்டாம் அகிரிப்பா என்பவன் தன்னுடைய ஒழுக்கங்கெட்ட சகோதரியாகிய பெர்னிக்கேயாளுடன் புதிய ஆளுனராகிய பெஸ்துவைக் காண வந்திருந்தான். அரசனாயிருந்த அகிரிப்பாவுக்கு தற்போது ரோம சாம்ராஜ்யம் பெரிய அதிகாரங்கள் எதையும் கொடுக்காவிட்டாலும் தலைமைக் குருக்களை நியமிக்கவும் அவர்களை நீக்கவும் அவருக்கு அதிகாரமிருந்தது. பவுலுடைய பிரச்சனையைப் பொறுத்தமட்டில் அந்த அதிகாரம் மிகவும் முக்கியமானதாக இருந்தது.
ஒரு செயலூக்கமுள்ள ஆளுனராகிய பெஸ்து ரோம ஆளுனர்களினால் புரிந்துகொள்ள கடினமான பவுலுடைய வித்தியாசமான கதையை அகிரிப்பா அரசனிடம் சொன்னார். நாட்டு மக்களுக்கு உகந்த ஆளுனராக நடந்துகொள்ள வேண்டுமெனில் பவுலுக்கு விரைவாக மரண தண்டனைத் தீர்ப்பளிக்க வேண்டும் என்று யூதர்களுடைய ஆலோசனைச் சங்கத்தினர் இடைவிடாமல் ஆளுனரைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் ரோம ஆளுனருக்கு நீதியின் மேலுள்ள கரிசனையின் காரணமாக அதற்கு அவர் இடம் தரவில்லை. வாதியும் பிரதிவாதியும் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக எடுத்து வைக்கக்கூடிய ஒரு விசாரணையை நடத்த வேண்டும் என்று அவர் கோரினார். ஆனால் யூதர்கள் எந்தவித சட்டவிரோதமான குற்றத்தையும் பவுலுக்கு எதிராகச் சொல்ல முடியாதவர்களாயிருந்தார்கள். இவ்வாறு பவுல் உண்மையாகவே நீதியுள்ளவராகவும் குற்றமற்றவராகவும் காணப்படார்.
பழைய ஆளுனரைப் போல இந்தப் புதிய ஆளுனரும் இரு தரப்பினருக்குமிடையிலான பிரச்சனை சமய கொள்கை தொடர்பானது என்றும் களவு, கலகத்தைத் தூண்டுதல் அல்லது கொலை தொடர்பான குற்றங்களோடு தொடர்பற்றது என்பதை சீக்கிரமாகவே அறிந்துகொண்டார். இந்த வாதப் பிரதிவாதங்களைக் கேட்ட பிறகு ஒரு காரியம் தெளிவாக ஆளுனருக்குத் தெரியவந்தது. அதாவது மரணமடைந்த நபராகிய இயேசு என்பவரைக் குறித்துதான் முக்கிய பிரச்சனை நடைபெறுகிறது என்றும் பவுல் அந்த நபர் உயிரோடு இருப்பதாகக் கூறுகிறார் என்றும் ஆளுனர் தெரிந்துகொண்டார். இவ்வுலகத்திற்குரிய மனிதனாகிய பெஸ்து நற்செய்தியின் மையக்கருத்தை மிக விரைவாகவே அறிந்துகொண்டார் என்பது எத்தனை ஆச்சரியம். இதுதான் நம்முடைய நம்பிக்கையின் அறிக்கையாக இருக்கிறது: சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்ட இயேசு மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார், இன்றும் உயிரோடு இருக்கிறார். உங்களுடைய நம்பிக்கைக்கும் ஆதாரமாயிருக்கிற வரலாற்று நம்பிக்கை இதுதானா? உங்களுடைய இரட்சிப்புக்காவும், உங்களுக்கு நம்பிக்கையையும் பெலத்தையும் தருவதற்காகவும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் நீங்கள் நம்புகிறீர்களா? ஆனால் நீங்களும் இந்த கற்றறிந்த ஆளுனரைப் போலவே நற்செய்தியின் மையத்தை அறிந்துகொண்டபோதிலும் இயேசுவை அடிப்படையில் அறிந்துகொள்ளாதவராக இருக்கிறீர்களா?
கேள்வி:
- ஆளுனராகிய பெஸ்து கிறிஸ்துவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் புரிந்துகொண்டாரா?