Previous Lesson -- Next Lesson
13. ஏரோதின் கோபமும் மரணமும் (அப்போஸ்தலர் 12:18-25)
அப்போஸ்தலர் 12:18-25
18 பொழுது விடிந்தபின்பு பேதுருவைக்குறித்துச் சேவகருக்குள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல. 19 ஏரோது அவனைத் தேடிக் காணாமற்போனபோது, காவற்காரரை விசாரணைசெய்து, அவர்களைக் கொலைசெய்யும்படி கட்டளையிட்டு, பின்பு யூதேயாதேசத்தைவிட்டுச் செசரியா பட்டணத்துக்குப்போய், அங்கே வாசம்பண்ணினான். 20 அக்காலத்திலே ஏரோது தீரியர்பேரிலும் சீதோனியர்பேரிலும் மிகவும் கோபமாயிருந்தான். தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியினால், அவர்கள் ஒருமனப்பட்டு, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரணைக்காரனாகிய பிலாஸ்துவைத் தங்கள் வசமாக்கிச் சமாதனம் கேட்டுக்கொண்டார்கள். 21 குறித்தநாளிலே: ஏரோது ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான். 22 அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள். 23 அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான். 24 தேவவசனம் வளர்ந்து பெருகிற்று. 25 பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள்.
அரசர்கள் இறைவனுக்குப் பயப்படவில்லை என்றால் அவர்கள் தீயவர்களாக மாறிவிடுவார்கள். அவர்கள் அறியாமையினாலும் பயத்தினாலும், இச்சையினாலும் கோபத்தினாலும் அலைக்கழிக்கப்படுவார்கள். இவ்வுலகிலுள்ள எந்தப் படைப்புக்கும் மற்ற படைப்பை ஆண்டுகொள்ளும் அதிகாரம் இல்லை. இறைவனுக்கு முன்பாக உடைக்கப்பட்டு, தன்னுடைய படைப்பாளிக்கு முன்பாக தன்னுடைய சிறுமையை அறிந்துகொள்ளாதவன் மற்றவர்களை வழிநடத்த முடியாது. அவன் பெருமையினால் ஊதிப் பெருக்கமடைந்து இறுதியில் வெடித்துச் சிதறிவிடுவான்.
தன்னுடைய விருப்பத்திற்கிணங்க செயல்பட மறுத்த பினீசிய நகரங்களுக்கு எதிராக ஏரோது அரசன் யுத்தம் செய்ய விரும்பினான் என்று நாம் வாசிக்கிறோம். இந்தப் பினீசிய நகரங்களும் ரோமர்களுடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்த காரணத்தினால் அவர்களுக்கு எதிராக வெளிப்படையாக போர்ப் பிரகடனம் செய்வதற்கு ஏரோதுக்கு இயலவில்லை. ஆகவே தன்னுடைய நாட்டில் இருக்கும் பினீசியர்களை அவன் துன்பப்படுத்தத் தொடங்கினான். இரு பிராந்தியத்திற்கும் இடையிலான போக்குவரத்தை அவன் கடினப்படுத்தி, லெபனானியவர்களிடத்தில் அதிக வரியைத் தண்டினான். ஆயினும் எங்கு சென்றால் காரியம் ஆகும் என்பதை அறிந்திருந்த பினீசிய வியாபாரிகள், அரசனிடத்தில் செல்லாமல் அவனுடைய மந்திரியினிடத்தில் சென்று லஞ்சம் கொடுத்து, அரசனை இணங்கிவரப்பண்ண முயற்சித்தார்கள். எப்படியாயினும் தகவல் தொடர்பும் வியாபாரமும் அங்கு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.
இறுதியாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் நல்ல உறவை ஏற்படுத்துவதற்கு அரசன் இணங்கி வந்தான். ஆயினும் பினீசிய தூதுவர்கள் தான் எவ்வளவு பெரிய அரசன் என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க அரசன் திட்டம் பண்ணினான். கிலவுதி இராயனுடைய பிறந்த நாளை வெகு விமர்சையாகக் கொண்டாட வேண்டும் என்று அவனுடைய பிரதிநிதியாகிய ஏரோது கட்டளையிட்டான். ஒரு வாரம் நடைபெறும்படி அந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்விழாவில் போர்ச்சேவகர்களினாலும் சிங்கங்களினாலும் கைதிகளுடைய இரத்தம் சிந்தப்படும். விழாவின் இரண்டாம் நாளில் பினீசிய பிரதிநிதிகள் தம்முடைய சமூகத்தில் வரவேண்டும் என்று ஏரோது கட்டளையிட்டிருந்தான். செசரியாவிலிருந்த தீரு மற்றும் சீதோன் நகரத்திலிருந்து பினீசிய பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். அரசன் மிகவும் பெருமையான ஆடை தரித்து சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். சூரியன் உதித்து அந்த ஆடையின் மேல் பட்டபோது பார்ப்பவர்களுடைய கண்கள் கூசும்படி அது பிரசாசித்தது. வானத்திலிருந்து வந்த தேவதூதன் போல ஏரோது பார்ப்பவர்களுடைய கண்களுக்குக் காட்சியளித்தான்.
அரசனின் இத்தோற்றத்தைக் கண்ட மக்கள் அவனைப் புகழ்ந்து ஆரவாரித்தார்கள். அவர்களில் சிலர் அவனை இறைவன் என்றும் அழைத்தார்கள். அப்போது திடீரென்று அந்த அரசனுக்கு தன்னுடைய வயிற்றில் மிகவும் பயங்கரமான கொடிய வேதனை ஏற்பட்டது. அப்போது அவனுடைய வேலைக்காரர்கள் அவனை அரண்மனைக்குள் துக்கிச் சென்றார்கள். அவனுடைய உள்ளுறுப்புகளில் அவன் பயங்கரமான வேதனையை அனுபவித்தான். ஐந்து நாட்களுக்குப் பிறகு கி. பி. 54-ம் வருடத்தில் அவன் இறந்து போனான். அவன் உயிரோடு இருக்கும்போதே புழுக்கள் உள்ளிலிருந்து அவனைத் தின்றதால் அவன் இறந்துபோனான் என்று லூக்கா கூறுகிறார்.
இவ்வுலகத்தின் அதிகாரத்தை இறைவன் சிலருக்குக் கொடுத்து அவர்களைத் தங்கள் விருப்பப்படி செயல்படி அவர் சிறிது காலம் அனுமதிக்கிறார். தாங்கள் இறைவனைக் காட்டிலும் மேன்மையடையலாம் என்று கருதுகிறவர்களுக்கு அவர் மிகவும் குறுகிய காலத்தையே கொடுக்கிறார். தன்னைப் போன்ற மனிதர்களிடத்திலிருந்து விடுதலை வரும் என்று ஹிட்லர் குறிப்பிட்டான். ஆனால் இறைவனிடத்திலிருந்து மட்டுமே விடுதலை வரும். கர்த்தரைக் கனப்படுத்தாதவன் எவனும் பிசாசாயிருக்கிறான்.
இவ்வுலகின் இறுதி நாட்களில் கிறிஸ்துவின் வருகைக்கு முன்பாக இவ்வுலகத்தை ஆட்சிசெய்யும் மாபெரும் ஆட்சியாளன் ஒருவன் வருவான். அவன் தேவாலயத்தில் அமர்ந்துகொண்டு தானே இறைவனும் கிறிஸ்துவும் என்று ஒருசேர கோருவான். அவன் அநேக அற்பிதங்களைச் செய்து, நாடுகளிலும் கண்டங்களிலும் அமைதியையும் ஒழுங்கையும் உண்டுபண்ணுவான். அவன் போர்களையும் ஒழுங்கின்மையையும் மேற்கொள்வதால் மக்களை அவனைப் புகழ்ந்து அவனுக்குத் துதிசெலுத்துவார்கள்.
அன்புள்ள சகோதரனே இந்த வல்லமையுள்ள சக்திக்கு உங்களை ஒப்புக்கொடாதீர்கள். அவன் இறைவனை நிந்திக்கிறபடியால் அவனுடைய வார்த்தைகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள். அவன் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களைத் துன்புறுத்துகிறவன். இறைவனுடைய மகிமையை எடுத்துக்கொள்ள முயற்சிக்கும் இந்தக் கள்ளக் கிறிஸ்துவை விட்டு நீங்கள் விலகி எச்சரிக்கையடையுங்கள்.
இவ்வுலகத்தில் இவ்விதமான கொந்தளிப்புகள் நிகழ்ந்தாலும் நற்செய்தியானது அமைதியான நீரோடையைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. சிலர் அதிலிருந்து வாழ்வளிக்கும் நீரைப் பருகுகிறார்கள். மற்றவர்களோ அதில் கல்லெறிந்துகொண்டிருக்கிறார்கள். இறைவனுடைய வார்த்தை கட்டுப்படுத்தப்பட முடியாதாகையால் நற்செய்தி அருளும் இரட்சிப்பை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
எல்லாக் காலத்திலும் விசுவாசிகளுடைய எண்ணிக்கை வளர்ந்துகொண்டே இருக்கிறது. விசுவாசியினுடைய நடத்தையிலேயே நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. அவர்களுடைய வார்த்தைகளிலும் விண்ணப்பங்களிலும் அவர்களது சாட்சிகள் வெளிப்படுத்தப்படுகிறது. அவர்களுடைய நன்றியறிதல் தொடர்ந்து வளருகிறது. லூக்காவோடு சேர்ந்து நாமும் இறைவனுடைய வார்த்தை வளர்ந்து பெருகுகிறது என்று சொல்லக்கூடியவர்களாக இருக்கிறோம். சாட்சிகளின் மூலமாகவும், போதனைகளின் மூலமாகவும், விளக்கங்களின் மூலமாகவும், விண்ணப்பங்களின் மூலமாகவும், பல தியாகங்களின் மூலமாகவும் இயேசுவைப் பற்றிய செய்தி இவ்வுலகில் பரவிக்கொண்டிருக்கிறது என்பதை அறிவது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இந்த நற்செய்தியின் எழுப்புதலில் எங்களுடைய அச்சுக்கள் மூலமாகவும், வானொலி நிகழ்ச்சிகள் மூலமாகவும், தனிப்பட்ட தொடர்புகள் மூலமாகவும் நாங்களும் பங்குபெற வாய்ப்பளித்த கர்த்தராகிய இயேசுவுக்கு நன்றி. இன்று உங்களுடைய சுற்றுச் சூழலில் இறைவனுடைய வார்த்தை வளர்ச்சியடையும்படி இரட்சிப்பின் நற்செய்தியைப் பரப்புவதில் நீங்கள் பங்குகொள்ள ஆயத்தமாயிருக்கிறீர்களா?
ஏரோது அரசன் இவ்விதமாகப் பெருமைகொண்டு இறைவனுடைய கோபத்திற்கு ஆளானபோது பவுலும் பர்னபாவும் பாலஸ்தீனாவில் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. உபத்திவரம் அதிகமாகியபோது அந்தியோகியாவிலிருந்து எருசலேமிற்கு பணக்கொடையைக் கொண்டு அவர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் மகிழ்ச்சியோடும் நன்றியோடும் அந்தியோகியாவிற்குத் திரும்பிச் சென்றார்கள். அதன் பிறகு அந்தியோகியாவே அவர்களுடைய பணித்தளத்தின் தலைமையிடமாகியது.
ஆபத்து நிறைந்த இடத்தைவிட்டுத் தப்புவதற்காகவும் பிரசங்கப்பணியில் பயிற்சி பெறுவதற்காகவும் வாலிபனாகிய மாற்கு அவர்களோடு சென்றார். அவர் அந்தியோகியா திருச்சபையைச் சேர்ந்து பவுலிடமிருந்தும் பர்னபாவிடமிருந்தும் பல காரியங்களைக் கற்றுக்கொண்டார். அதன்பிறகு அவர் நான்கு நற்செய்தியாளர்களில் ஒருவராகி உலகமெங்கும் நற்செய்தி பரவுவதற்குக் காரணமான பணியை நிறைவேற்றினார். இந்த வார்த்தையில் இருந்து புறப்படும் வல்லமையினால்தான் நாம் இன்று வாழ்கிறோம்.
விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே நீரே இராஜாதி இராஜாவும் கர்த்தாதி கர்த்தருமாயிருக்கிறீர். சகல கனத்திற்கும், மகிமைக்கும், நன்றிக்கும் நீரே பாத்திரராயிருக்கிறீர். நாங்கள் உம்மை ஆராதித்து, உம்முடைய சித்தத்தின்படி உங்கள் வாழ்வை உம்முடைய கரத்தில் ஒப்புக்கொடுக்கிறோம். எங்களுடைய நாட்டில் உம்முடைய வார்த்தையைப் பரப்பும் பணியைச் செய்யும்படி எங்கள் ஆவி, ஆத்துமா, சரீரத்தைக் காத்துக்கொள்ளும்.
கேள்வி:
- உபத்திரவங்கள் நடுவிலும் இறைவனுடைய வார்த்தை எவ்வாறு வளர்ந்து பெருகிறது?