Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 113 (The First Hearing of the Trial)
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
உ - எருசலேமிலும் செசரியாவிலும் பவுல் சிறையிலிடப்படுதல் (அப்போஸ்தலர் 21:15 - 26:32)

9. செசரியாவில் முதலாவது விசாரணை (அப்போஸ்தலர் 24:1-23)


அப்போஸ்தலர் 24:1-9
1 ஐந்து நாளைக்குப்பின்பு பிரதானஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு நியாயசாதுரியனோடும் கூடப்போனான், அவர்கள் பவுலுக்கு விரோதமாய்த் தேசாதிபதியினிடத்தில் பிராதுபண்ணினார்கள். 2 அவன் அழைக்கப்பட்டபோது, தெர்த்துல்லு குற்றஞ்சாட்டத்தொடங்கி: 3 கனம்பொருந்திய பேலிக்ஸே, உம்மாலே நாங்கள் மிகுந்த சமாதான சவுக்கியத்தை அநுபவிக்கிறதையும், உம்முடைய பராமரிப்பினாலே இந்தத் தேசத்தாருக்குச் சிறந்த நன்மைகள் நடக்கிறதையும் நாங்கள் எப்பொழுதும் எங்கும் மிகுந்த நன்றியறிதலுடனே அங்கிகாரம்பண்ணுகிறோம். 4 உம்மை நான் அநேக வார்த்தைகளினாலே அலட்டாதபடிக்கு, நாங்கள் சுருக்கமாய்ச் சொல்வதை நீர் பொறுமையாய்க் கேட்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். 5 என்னவென்றால், இந்த மனுஷன் கொள்ளைநோயாகவும், பூச்சக்கரத்திலுள்ள சகல யூதர்களுக்குள்ளும் கலகம் எழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளியாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம். 6 இவன் தேவாலயத்தையும் தீட்டுப்படுத்தப்பார்த்தான். நாங்கள் இவனைப்பிடித்து எங்கள் வேதப்பிரமாணத்தின்படியே நியாயந்தீர்க்க மனதாயிருந்தோம். 7 அப்பொழுது சேனாதிபதியாகிய லீசியா வந்து, மிகுந்த பலாத்காரமாய் இவனை எங்கள் கைகளிலிருந்து பறித்துக்கொண்டுபோய், 8 இவன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்கள் உம்மிடத்தில் வரும்படி கட்டளையிட்டார். இவனிடத்தில் நீர் விசாரித்தால் நாங்கள் இவன்மேல் சாட்டுகிற குற்றங்கள் யாவையும் அறிந்துகொள்ளலாம் என்றான். 9 யூதர்களும் அதற்கு இசைந்து, இவைகள் யதார்த்தந்தான் என்றார்கள்.

பவுல் தன்னுடைய கைகளிலிருந்து தப்புவிக்கப்பட்டுவிட்டார் என்பதை எருசலேமின் தலைமைக் குருவாகிய அன்னா அறிந்தபோது கோபமடைந்தான். எனவே அவன் பவுலை உடனடியாகப் பின்தொடர்ந்து சென்று அவரைக் கொலை செய்வதன் மூலமாக கிறிஸ்தவத்தை அழிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்றான். தன்னுடைய கொடூரமான கொலைவெறி வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த நாற்பது கலகக்காரர்களுடன் சேர்ந்து அவன் செசரியாவிற்கு வராமல், சாதுர்யமான, முகஸ்துதியுடன்கூடிய பேச்சினால் பவுலை உடனடியாக அழிக்க வேண்டிய அவசியத்தை ரோமர்களுக்கு உணர்த்தக்கூடிய ஒருவனை தன்னுடன் அழைத்து வந்தான்.

கைதியாக இருந்த பவுல் விசாரிக்கப்படும்படி அரசவைக்குக் கொண்டுவரப்பட்டபோது அந்த சாதுர்யப் பேச்சாளன் முகஸ்துதியோடு பேசத் தொடங்கி, ஆளுனரின் கவனத்தைத் தன்பக்கம் இழுக்கப் பார்த்தான். ஆளுனர் மூலமாகத்தான் ரோம சாம்ராஜ்யத்தின் அமைதி பாலஸ்தீனத்தைச் சென்றடைந்திருக்கிறது என்றும் அவருடைய அறிவும் ஆற்றலும்தான் யூதர்களுக்குப் பாதுகாப்பையும் வளர்ச்சியையும் செழிப்பையும் கொடுத்திருக்கிறது என்கிற வண்ணம் பேசிக்கொண்டிருந்தான். அவன் தந்திரமான முறையில் ஆளுனருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் யூதர்களுடைய உயர்மட்டக்குழு அவருக்கு முழு ஆதரவளித்து ஒத்துழைப்புக் கொடுப்பதற்கு ஆயத்தமாயிருக்கிறது என்று பேசினான்.

அவன் பேசிய குணாதிசயங்களும் நற்குணங்களும் பெலிக்சுக்கு ஏற்கனவே தெரிந்தவைகள்தாம். அவைகள் பகலவனைப் போல பளிச்சென்று தெரிந்தன. ஆகவே அவன் ஆளுனருடைய குணாதிசயங்களைப் பற்றிப் பேசி அவருக்கு எரிச்சலூட்டாமல் இருக்க முடிவு செய்தான். ஆகவே அதற்குப் பதிலாக கைதியாகிய பவுல் மிகவும் ஆபத்தான நபர் என்பதைக் குறித்துப் பேச ஆரம்பித்தான். பவுல் மூன்று பன்னாட்டுத் தவறுகள் செய்துவிட்டதாக அவன் குற்றஞ்சாட்டினார்: முதலாவது, பவுல் பாலஸ்தீனாவில் மட்டுமல்ல, ரோம பேரரசு முழுவதும் சமாதானத்தைக் கெடுத்து வருகிறார். யூதர்கள் நடுவில் பிரிவினைகளையும், கலகத்தையும், சண்டைகளையும் தூண்டி விடுவதால் அதைச் செய்கிறார். இரண்டாவது, கிறிஸ்தவத்தின் முக்கியமான தலைவன் இந்தக் குற்றவாளிதான். இதன் மூலம் பேதுருவோ, யோவானோ, யாக்கோபோ அல்ல, பவுல்தான் கிறிஸ்தவத்தின் தலைவராகச் செயல்படுகிறார் என்பதை யூதர்களுடைய உயர்மட்டக்குழு துல்லியமாக அறிந்துகொண்டது என்பதைக் காண்கிறோம். அனைத்து மக்களுக்கும் இலவசமாக அருளப்படும் கிறிஸ்துவின் கிருபையை அடிப்படையாகக் கொண்டு யூதர்களுடைய செய்தியை பன்னாட்டிற்குமுரிய செய்தியாக மாற்றுபவர் அவர்தான் என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். மூன்றாவதாக, ரோம ஆளுனர்களே கனப்படுத்துவதும், உரிமைகளைப் பாதுகாப்பதுமாகிய, யூதர்களுடைய கலாச்சாரத்தின் மையமாகிய தேவாலயத்தை இவன் தீட்டுப்படுத்திவிட்டான். பவுலின் மீது குற்றஞ்சாட்டிய யூதர்கள் நீதி அல்லது கிறிஸ்துவின் வருகை போன்ற முக்கியமான செய்திகளை ஆளுனருக்கு முன்பாக விவாதிக்க முன்வரவில்லை. அதற்கு மாறாக, புறவினத்து மக்களின் அப்போஸ்தலனாகிய பவுல் ரோமப் பேரரசின் சமாதானத்தைக் கெடுப்பவர் என்றும் தேவாலயத்தைத் தீட்டுப்படுத்தியவர் என்றும் அவர் மீது குற்றஞ்சாட்டினார்கள்.

மேலும் அவர்கள் லீசியா பவுலைத் தங்கள் கரங்களில் இருந்து வலுக்கட்டாயமாக விடுவித்துக்கொண்டு வந்ததன் மூலமாக யூதர்களுடைய சட்டத்திற்கு மேலாக ரோமர்களுடைய சட்டத்தை வைத்தார் என்றும் முறையிட்டார்கள். இந்த முறைப்பாடு யூதர்கள் மறைமுகமாக தங்களுடைய உரிமைக்காகக் கொடுக்கும் குரலாக இருந்தது. காரணம் யூதர்கள் தங்களுடைய சட்டப்படி யாரையும் தண்டிக்கக்கூடிய உரிமையை ரோமர்கள் யூதர்களுக்கு அப்போது விலக்கியிருந்தார்கள். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அனைத்து தலைமைக் குருக்களும் ஆதரவளித்தார்கள். அவர்கள் அனைவருமே பவுல் மிகப்பெரிய ஆபத்தானவர் என்று கொக்கரித்தார்கள். ஆகவே ஆளுனர் உடனடியாக இந்தக் கொடிய மனிதரைக் கொன்று இவ்வுலகத்தைக் காக்க வேண்டும் என்று கோரினார்கள். இது குருட்டுத் தனமான மதவெறியையே காண்பிக்கிறது. அவர்களால் கிறிஸ்துவின் அன்பைக் காண முடியவில்லை. மாறாக ஆசீர்வாதத்தின் ஊற்றுக்கண்ணை மரணத்தின் வாசல் என்று அழைக்கிறார்கள். இவ்வாறுதான் பொய்க்குத் தகப்பனாகிய சாத்தான் உண்மையைப் பொய்யாக மாற்றி வஞ்சித்து, தங்கள் இருதயத்தில் கடினப்பட்டுப்போன கொடிய பாவிகளை தங்களைக் குறித்து நீதிமான்கள் என்று கருதச் செய்கிறான்.

விண்ணப்பம்: ஓ, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, நீரே சத்தியமாக இருப்பதால் உமக்கு நன்றி. உம்முடைய நீதியின் வல்லமையினால் அனைத்துப் பொய்யும் கட்டுக்கதைகளும் தவிடுபொடியாகிவிடும். நாங்கள் அன்புடன் சத்தியத்தைப் பேச எங்களுக்கு உதவிசெய்தருளும். தைரியத்தோடும் ஞானத்தோடும் பிரசங்கிக்க எங்களை வழிநடத்தியருளும்.

கேள்வி:

  1. பவுலுக்கு எதிராக வைக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகள் யாவை? அந்தக் குற்றச்சாட்டுகளின் சுருக்கம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on March 04, 2014, at 12:39 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)