Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Mark - 085 (Jesus Anointed at Bethany)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 8 - கிறிஸ்துவின் பாடுகளும், மரணமும் (மாற்கு 13:1-37)

2. இயேசு பெத்தானியாவில் அபிஷேகம் செய்யப்பட்டார் (மாற்கு 14:3-9)


மாற்கு 14:3-9
3 அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியைக் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். 4 அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே விசனமடைந்து: இந்தத் தைலத்தை இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன்? 5 இதை முந்நூறு பணத்துக்கு அதிகமான கிரயத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைக்குறித்து முறுமுறுத்தார்கள். 6 இயேசு அவர்களை நோக்கி: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். 7 தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள், உங்களுக்கு மனதுண்டாகும்போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்யலாம், நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன். 8 இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள். 9 இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

இயேசு குஷ்டரோகியாயிருந்த சீமோனின் வீட்டிற்குள் பிரவேசித்தார். ஒருவேளை இயேசுவினால் அற்புதமாக சுகமாக்கப்பட்டவனாக இவன் இருக்கலாம். சுத்தமாகுதல் என்பதின் அர்த்தம் பாவத்திலிருந்து பரிசுத்தமாக்கப்படுதலும், அதன் விளைவும் ஆகும். சுத்தமாக்கப்பட்ட மனிதனில் நாம் கிறிஸ்துவே இரட்சகர் என்பதற்கான ஆதாரத்தைக் காண்கிறோம். இந்த மனிதனை ஆண்டவர் தனியாக விட்டுவிடவில்லை. அவனை சந்தித்தார்; பெலப்படுத்தினார். தனது சீடர்களுடன் இயேசு வந்ததின் மூலம் அவனைக் கனப்படுத்தினார். அவருடைய பரமேறுதலுக்குப் பின்பு அவன் தனியாக இருக்க வேண்டியதில்லை. கண்காணிப்புகள், உபத்திரவங்கள் இருந்தாலும் மற்ற விருந்தினர்கள் வந்திருந்தார்கள். அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்ட விருந்தில் கலந்துகொண்டார்கள்.

இயேசு மரித்தோரிலிருந்து எழுப்பிய லாசருவும், அவனுடைய சகோதரிகளும் வந்திருந்தார்கள். (யோவான் 12:1-8). அனைத்து வியாதிகள், பாவங்கள், மரணத்தை மேற்கொள்ளுகிற இறைவனின் வல்லமை கிறிஸ்துவில் இருப்பதற்கான ஆதாரமாக அந்தக் கூடுகை காணப்பட்டது. இயேசு தீமையின் விதைகளை அகற்றி, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்ப்பதற்காக வந்தார்.

லாசருவின் சகோதரியாக மரியாள் அவருடைய விசுவாசத்தின் மூலம் இயேசு யார் என்பதையும் அந்த இரவு விருந்தின் அர்த்தத்தையும் புரிந்துகொண்டாள். அவள் கடைசி நேரம் வந்துவிட்டதை உணர்ந்தாள். குணமாக்கும் இயேசுவிற்கு தனது நன்றியைக் காண்பிக்க மிகக் குறைவான நேரம் மட்டுமே இருப்பதை அவள் புரிந்துகொண்டாள்.

அவள் தனது வீட்டிற்கு ஓடினாள். அவள் நளதக் குப்பியைக் கொண்டு வந்தாள். ஒருவேளை அது அவளுடைய திருமணத்திற்காக சேமித்ததாக இருக்கலாம். அவள் அந்தக் குப்பியை உடைத்து மேசைமீது அமர்ந்திருந்த இயேசுவின் தலைமீது ஊற்றினாள். தனது அன்பை வெளிப்படுத்த அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. மரணத்தையும், வியாதியையும் மேற்கொண்டவரும், பாவங்களை மன்னிக்கிறவருமாகிய இயேசுவை அவள் கனப்படுத்தினாள்.

இயேசு இந்த அபிஷேகத்தை ஏற்றுக்கொண்டார். அந்த அடையாளத்தை அவர் உணர்ந்துகொண்டார். பிதாவாகிய இறைவன் இதை அனுமதித்தார். பிரதான ஆசாரியனாக தனது மரணத்தையும், தனது சொந்த தியாக பலியையும் அவர் உணர்ந்தார்.

இயேசு நித்தியம் முதற்கொண்டு பரிசுத்த ஆவியின் நிறைவினால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறார். அவருக்குள் இறைவனுடைய பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக தங்கியுள்ளது. அவருக்கு புதிய அபிஷேகம் தேவையில்லை. அவருடைய பிதாவின் அன்பு அவருடைய விசுவாசத்தை பெலப்படுத்தியது. இயேசு தனது மரணத்தை எதிர்நோக்கி, தன்னை பெலப்படுத்திக் கொண்டார்.

அவர் தனது மரணத்தையும், அடக்கத்தையும் மிகத் தெளிவாக முன்னுரைத்தார். இந்த அபிஷேகத்தை அவர் ஏற்றுக்கொண்டதின் மூலம் தனது மரணத்தை அவர் ஏற்றுக்கொள்வதை வெளிப்படுத்தினார். அவருடைய ஆட்சியின் சிம்மாசனத்தை அல்லது அவரது திருமணத்தையோ அவர் ஏற்றுக்கொள்வதை இச்செயல் வெளிப்படுத்தியது. இயேசு மரணத்திற்காக தன்னை ஆயத்தப்படுத்தினார். சீஷர்களுக்கும் அவர்களது பொறுப்பை உணர்த்தி ஆயத்தப்படுத்தினார்.

ஆனால் இந்தப் பெண் உள்ளம் பொங்கி செய்த செயலை சீஷர்கள் புரிந்துகொள்ளவில்லை. அந்த நளத தைலத்தின் வாசனை அறையை நிரப்பியது. அந்தத் தைலத்தின் மதிப்பை அவர்களுடைய மனங்கள் கணக்கீடு செய்தன. ஒருவேளை அவர்களுடைய கரங்களில் நளத தைலம் இல்லாமல் இருந்திருக்கலாம். இயேசு தனக்கு வந்த வெகுமதிகள் அனைத்தையும் ஏழைகளுக்கு கொடுத்திருக்கக் கூடும். அவர்கள் மத்தியில் சிலர் முறுமுறுத்தார்கள். குறிப்பாக யூதாஸ்காரியோத் முறுமுறுத்தான்: “மரியாள் இந்த தைலக்குப்பியை நல்ல விலைக்கு விற்று பெருந்தொகையைப் பெற்றிருக்கலாம். அநேக ஏழைகளுக்கு உதவி செய்ய அது பயன்பட்டிருக்கும்”. யூதாஸ் முறையிட்டான். பயனற்ற வீணான செயல் போன்று காட்சியளித்த இதைக் கண்டு மிகவும் கோபப்பட்டான்.

இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்தார். அவர்களுடைய இருதயங்களில் இருந்த கீழ்ப்படியாமையை கடிந்துகொண்டார். பொய்யான கனவுகள் மற்றும் வார்த்தைகளை உடைய உலகத்தின் சீர்திருத்தவாதிகளை தனது பின்வரும் கூற்றின் மூலம் இயேசு கடிந்துரைத்தார். ஏழைகள் எப்போதும் உங்களுடன் இருக்கிறார்கள். பரலோகமானது இப்படிப்பட்டவர்களுடையது. இறைவனை விட்டு இந்த உலகம் பிரிந்து வெகுதூரம் சென்றிருப்பதால், ஏழைகள், வியாதியுள்ளோர், பசியுள்ளோர் மேற்கிலும், கிழக்கிலும் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். முதலாளிகள் மற்றும் அவர்களுடைய பண ஆசையும், சமூகநலவாதிகள் மற்றும் அவர்களுடைய கண்டிப்பான ஆளுகையும் பெருகிக் கொண்டிருக்கின்றன.

நமது உலகில் நம்பிக்கையின்மை மற்றும் அநீதிக்கு இயேசுவின் வருகை மட்டுமே முடிவைக் கொண்டு வருகிறது. அவர் ஒருவரே இந்த துயரங்கள் அனைத்திற்கும் முடிவைக்கொண்டு வருவார்.

ஏழைகளுக்கும், தேவையுள்ளோருக்கும் உதவி செய்யக் கூடிய சிறந்த வழியை ஆண்டவர் நமக்கு காண்பித்திருக்கிறார். அவர் எந்தவொரு அறக்கட்டளையையும் உருவாக்கவில்லை. அல்லது அவர் தொண்டு நிறுவனங்கள் எதையும் அழைக்கவில்லை. அவர் கூறினார்: “உங்களுக்கு விருப்பமிருந்தால் உங்களைச் சுற்றியுள்ள ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். அவர்கள் நிலைக்கு இறங்கிச் செல்லுங்கள். அவர்களை தனிப்பிட்ட விதத்தில் விசாரியுங்கள். ஒருவேளை அவர்களுக்கு மருந்துகள், ஆறுதலின் வார்த்தை, உதவி, வேலைக்கான பயிற்சி அல்லது உதவித்தொகை தேவைப்படலாம். உங்களுக்கு அன்பு நிறைந்த ஞானத்தை தரும்படி ஆண்டவரிடம் கேளுங்கள். அப்போது நீங்கள் உங்களை மட்டுமே பார்க்கிறவர்களாய் இராமல், ஏழைகளுக்கு சேவை செய்வீர்கள். இறைவனின் அன்பை பெற வேண்டியவர்களாக ஏழைகள் இருக்கிறார்கள்.

முதல் இடத்தில் நாம் பணத்தை வைத்திருக்கக் கூடாது என்று இயேசு கூறுகிறார். நம்முடைய இருதயங்களை அவருடைய இரக்கம் மற்றும் அன்பினால் நிரப்பும்படி விரும்புகிறார். உறுதியான மனதுடன் ஏழைகளுக்கு உதவும்படியான விருப்பத்தை அவர் நமக்குத் தருவார்.

உதவி செய்ய விரும்புகிற ஒவ்வொருவரும் ஆண்டவருடைய வழிநடத்துதலை மன்றாட்டின் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் ஆண்டவரின் வழிநடத்துதலை அனுபவிப்பார்கள். உலகத்தின் வறுமையை மேற்கொள்ளும்படி அவர்களுக்கு பெலனைக் கொடுப்பது மாத்திரமல்ல, அருகில் இருக்கும் ஏழைக்கும் உதவும்படியான பெலத்தைக் கொடுப்பார்.

நீ இயேசுவின் இந்த அழைப்பைக் கேட்டாயா? நீ என்ன செய்கிறாய்? உனது குடும்பத்திற்காக நீ பணத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறாயா? கிறிஸ்து தன்னையே தியாகம் செய்தார். அவருடைய பலிமரணத்திற்குப் பதில் நீ அவருக்கு என்ன கொடுக்கப்போகிறாய்? மரியாள் தனது வாழ்வின் பொக்கிஷத்தை இயேசுவிற்காக தியாகம் செய்தாள். அவளால் இயன்றதைச் செய்தாள். அவருடைய ஆண்டவரை மகிமைப்படுத்த அவள் வைத்திருந்ததைக் கொடுத்தாள்.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நீர் இறைவனின் குமாரன். உமது அன்பிற்காக நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நாங்கள் தீயவர்களாக இருந்தும் நீர் உமது உயிரை பலியாக எங்களுக்குக் கொடுத்தீர். நாங்கள் எங்களுக்கே உதவி செய்கிறவர்களாக இராமல் அல்லது மற்றவர்களின் உதவியைச் சார்ந்திராமல் எங்கள் அருகில் வாழும் ஏழைகளுக்கும், தேவையுள்ளோருக்கும் உதவி செய்யும்படி கற்றுத்தாரும். தேவையுள்ளோரைக் காணும்படி எங்கள் கண்களைத் திறந்தருளும். அவர்களுக்கு உதவி செய்யும்படியான சிறந்த வழியை எங்களுக்கு காண்பியும். உண்மையுடன் சேவை செய்யும் பெலம் மற்றும் விருப்பத்தை எங்களுக்குத் தாரும். ஆண்டவரே உமது கரிசனையை எங்களுக்குத் தாரும். ஆமென்.

கேள்வி:

  1. மரியாள் இயேசுவை அபிஷேகம் செய்த காரியம் மற்றும் அதற்குப் பின்பு நடந்த உரையாடலில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 10:28 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)