Previous Lesson -- Next Lesson
9. மாபெரும் கட்டளை (மாற்கு 12:28-34)
மாற்கு 12:28-34
28 வேதபாரகரில் ஒருவன் அவர்கள் தர்க்கம்பண்ணுகிறதைக்கேட்டு, அவர்களுக்கு நன்றாய் உத்தரவு சொன்னாரென்று அறிந்து, அவரிடத்தில் வந்து: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று கேட்டான். 29 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். 30 உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. 31 இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார். 32 அதற்கு வேதபாரகன்: சரிதான், போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை. 33 முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்புகூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்க தகனம் முதலிய பலிகளைப் பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான். 34 அவன் விவேகமாய் உத்தரவுசொன்னதை இயேசு கண்டு: நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல என்றார். அதன்பின்பு ஒருவரும் அவரிடத்தில் யாதொரு கேள்வியுங் கேட்கத் துணியவில்லை.
இறைவன் இருப்பதை நீ விசுவாசிக்கிறாயா? விசுவாசிக்கிறாய் என்றால் அவரை நேசி. அவர் உன்னைப் படைத்திருக்கிறார். உனக்கு நன்மைகளைப் பொழிந்தருளுகின்றார். அனுதினமும் உன்னை ஆசீர்வதிக்கிறார். அவர் உன்னை இரட்சிப்பார். உனக்கு வாழ்வு தருவார். உன்னைப் பெலப்படுத்துவார். தமது மகிமைக்குள் உன்னை எடுத்துக்கொள்வார். இறைவனை நேசிக்காதவன் அவருக்கு எதிராக இருக்கிறான்.
இறைவன் உன்னுடன் இருக்கிறார் என்பதை நீ அறிகிறாயா? அவர் சர்வவல்லமையுள்ளவர் என்பது உனக்குத் தெரியுமா? அவருக்குரிய கனத்தைச் செலுத்தி, அவருக்கு ஆராதனை செய். அவர் ஒன்றுமில்லாமையிலிருந்து இந்த பிரபஞ்சத்தைப் படைத்திருக்கிறார். அவர் எல்லா மனிதர்களையும் அறிகிறார். நல்லோர், தீயோர் அனைவரையும் உனது பெயரையும் அறிந்திருக்கிறார்.
மிகப்பெரிய பரிசுத்தமான இறைவன் பரிதாபமான மனிதனாகிய உன்னை நேசிக்கிறார். அவர் துன்மார்க்கரை நேசிக்கிறார். அவர்களுடைய பாவங்கள் நிமித்தம் அவர்களை அழிக்க விரும்பவில்லை. அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்துவை விசுவாசிப்பவன் பரிசுத்தமடைந்து அழிவை சந்திப்பதில்லை. அவன் நித்தியவாழ்வைப் பெறுகிறான்.
இறைவனுடைய அன்பின் ஆழத்தை உன்னால் உணர முடிகிறதா? பரிசுத்தமான பிதா தமது ஒரே குமாரனை நமக்காகத் தந்தார். நாம் இருதயக் கடினமுள்ள, முரட்டாட்ட பாவிகளாக இருந்தோம். நாம் அவரிடம் திரும்பும்படியும் நமது இருதயங்களில் அவர் அன்பு ஊற்றப்படும்படியும் விரும்புகிறார். நாம் பிற மனிதர்களை வெறுக்காதபடி, முழு இருதயத்தோடும் ஒவ்வொருவரையும் நேசிக்கும்படி, அப்படிச் செய்தார்.
இறைவன் ஒருவரே என்று நீங்கள் சொல்லலாம்? அப்படியென்றால் கிறிஸ்து இறைவனின் குமாரன் என்று எப்படி நாம் சொல்ல முடியும்? அன்பு என்றால் அதில் ஒருமனமும், பன்முகத் தன்மையும் உண்டு. இறைவன் பிதா, குமாரன் பரிசுத்த ஆவி என்ற ஒருவராக இருக்கிறார். இயேசு கூறுகிறார்: “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான். நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” (யோவான் 14:9; 10:30).
வேதபாரகர்களின் பிரதிநிதி முன்பு கிறிஸ்து இதை சாட்சியிட்டு கூறினார். “நம்முடைய இறைவனாகிய ஆண்டவர் ஒருவரே”. ஆனால் வேதபாரகர்கள் இதைக் கேட்டு திருப்தியடையவில்லை. அவர் மேலும் கூறினார்: “அவரைத் தவிர வேறு ஒருவரும் இல்லை”. இறைவனை அறியாதவன் அவரை ஒரு விக்கிரகம் போல பார்க்கிறான். அவனுடைய குறைந்த அறிவினால் இறைவனுக்கு ஒரு குமாரன் இருப்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. அவருடைய குமாரன் நித்தியம் துவக்கி நித்தியம் வரை அவருடன் இணைந்திருக்கிறார்.
தன்னுடைய குறுகிய எண்ணங்களின் மத்தியிலும் அவன் கிறிஸ்துவின் ஞானத்தையும், இரக்கத்தையும் உணர்ந்தான். தனது இருதயத்தை அவருக்குத் திறந்தான். அவன் இறைவனுடைய ராஜ்யத்திற்கு தூரமானவன் அல்ல என்று இயேசு கூறினார்.
நீ உண்மையாகவே இறைவனை நேசிக்கிறாயா? அப்படியென்றால் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள். உனது இருதயம், சிந்தனைகளை, எண்ணங்களை ஆண்டவருக்கு ஒப்புக்கொடு. உன்னை ஒழுங்குப்படுத்திக்கொள். நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் குறித்து கவனமாயிருங்கள். தவறான புத்தகங்களை வாசிக்காதிரு. தொலைக்காட்சி படங்களில் ஆர்வமாயிருப்பதை தவிர்த்திடு. நீ நேசிப்பதற்கு இறைவன் ஒருவரே தகுதியானவர் அவருக்கு உன் முழு இருதயத்தோடும் சேவை செய். அவர் பணிக்கென்று உனது நேரம், பணத்தைக்கொடு.
இறைஅன்பை நடைமுறைப்படுத்துவதில் உனது பலவீனத்தை நீ உணர்கிறாயா? நாம் பலவீனர்கள். நாம் அப்போஸ்தலனாகிய பவுலின் கூற்றை இணைந்து சொல்லுவோம். “மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. ” (ரோமர் 5:5) இறைவனையும், மனிதர்களையும் நேசிப்பதற்கு இந்த பரலோக வல்லமை நமக்கு உதவி செய்கிறது. நேசிக்கின்ற நம்மால் அல்ல, நமக்குள் வாழும் இறைவனால் இது சாத்தியம். உனது பகைவர்கள் உனக்கெதிராக செய்த பாவங்களை நீ மன்னிக்காதவரை பரிசுத்த ஆவியானவர் உனக்கு இளைப்பாறுதலைத் தரமாட்டார். அவர்களுடன் சமாதானமாயிருக்கும்படி உன்னைத் தாழ்த்து. உனது பாவங்களை சிலுவையில் மன்னித்த இறைவனுடைய அன்பை நீ பார். நீ யாருக்கு விரோதமாக தவறு செய்திருந்தாலும், அவர்களிடம் மன்னிப்பு கேள்.
கிறிஸ்துவிற்கும், வேதபாரகனுக்கும் இடையே நடந்த உரையாடலை நீ கவனித்தாயா? இறைவனுடைய ஒரே தன்மையைக் குறித்து இயேசு பேசினார். இறைஅன்பைக் குறித்துச் சொன்னார். இறைவனுடைய ஒரே தன்மையை இயேசு மறுக்கவில்லை. பரிசுத்தமானவரின் அன்பை அவர் வலியுறுத்தினார். திரியேக இறைவனின் ஒரே தன்மையின் இரகசியம் இதுதான். இறைவன் அன்பாக இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவன் இறைவனில் நிலைத்திருக்கிறான். இறைவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.
விண்ணப்பம்: பரிசுத்த பிதாவே, நீர் அன்புள்ளவர். உமது அன்பின் அக்கினியை எங்கள் இருதயங்களில் தாரும். உமது உண்மைக்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம். நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நீர் உமது குமாரன் மூலமாய் உம்மை வெளிப்படுத்தியிருக்கிறீர். உமது ஆவியை எங்களுக்கு தந்திருக்கிறீர். நாங்கள் உம்மை நேசிக்கவும், மற்றவர்களை நேசிக்கவும் உதவுகிறீர். அன்புடன் பிறருக்கு பணிசெய்யவும், பரிசுத்த திரியேக இறைவனாகிய உமது ஒரே தன்மையின் இரகசியத்தையும், அன்பையும் சாட்சியிட உதவி செய்யும். உமது பரிசுத்த அன்பையும், உம்மையும் அவர்கள் அறிய கிருபை செய்யும். ஆமென்.
கேள்வி:
- ஒரே இறைவன் மீதான விசுவாசம், அவரை நேசிப்பதிலும், எல்லா மனிதர்களை நேசிப்பதிலும் எப்படி வெளிப்படுத்தப்படுகிறது?
கேள்விகள் - 3
பிரியமான வாசகரே,
நற்செய்தியாளர் மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியைக் குறித்த புத்தகத்தை நீங்கள் கவனமாகப்படித்தால் நித்திய ஆவிக்குரிய பொக்கிஷத்தைப் பெற முடியும். இந்த நற்செய்தியின் அர்த்தத்தை நீங்கள் ஆழ்ந்து சிந்திக்கும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறோம். அதன் அடிப்படையில் பின்பு வரும் கேள்விகளுக்கு கவனமாக பதில் அளியுங்கள்.
- பேதுருவின் அறிக்கையில் உள்ள மிக முக்கியமான அர்த்தம் என்ன?
- இயேசுவைப் பின்பற்றுவதில் உள்ள அவசியமான நிபந்தனைகள் என்ன?
- இயேசுவின் சீஷர்கள் கண்ட “இயேசுவின் மறுரூபமடைதலின்” முக்கியத்துவம் என்ன?
- கிறிஸ்து சிலுவைக்கு போக வேண்டிய அவசியத்தை ஏன் சீஷர்கள் புரிந்துகொள்ளவில்லை?
- வியாதியற்றவனை சுகமாக்க முடியாதபடி இருந்த தடை என்ன?
- இயேசு எவ்விதம் சீஷர்களை தாழ்மைக்கு நேராக நடத்தினார்?
- நமது சொந்த வட்டத்தில் இல்லாத மக்களுடன் இணைந்து செல்லும்படி இயேசு எவ்விதம் நம்மை நடத்துகிறார்?
- புதிய விசுவாசிகளுக்கு தடைகளாக இருக்கக் கூடிய சூழ்நிலைகள் எவை?
- கிறிஸ்தவ திருமணத்தின் விதிமுறைகள் என்ன?
- சிறு பிள்ளைகளைக் குறித்த இயேசுவின் நிலைப்பாடு என்ன?
- விக்கிரகாராதனைக்கு இணையான இரண்டு சோதனைகளை விக்கிரக த்திலும், ஐசுவரியத்திலும் ஏன் நாம் காண்கிறோம்?
- ஒரு விசுவாசிக்கு உண்மையில் எது லாபமான காரியம்?
- ஏன் இயேசு எருசலேமுக்குப் போகும் போது சீஷர்களுக்கு முந்திச் சென்றார்?
- செபெதேயுவின் குமாரர்களுடைய கேள்வியும், பதிலும் எவ்விதம் அவர்களுடைய ஆவிக்குரிய நிலையை வெளிப்படுத்திக் காண்பித்தது?
- பாவிகளுக்கு பணிவிடைக்காரனாக இயேசுவின் முன்மாதிரி நமக்கு என்ன பொருள் தருகிறது?
- எரிகோவில் பர்திமேயு குருடன் பார்வையடைந்ததின் மூலம் நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
- இயேசு எருசலேமிற்குள் பிரவேசித்ததை ஏன் ரோமப் போர் வீரர்கள் தடுக்கவில்லை?
- ஏன் இயேசு தேவாலயத்தை சுத்திகரித்தார்?
- உண்மையான விசுவாசம் எப்படித் தோன்றிகிறது?
- யூதர்களின் ஆலோசனைச் சங்கத்தாருக்கு தனது அதிகாரத்தின் ஆதாரத்தைக் குறித்து இயேசு ஏன் அறிவிக்கவில்லை?
- துன்மார்க்கமான திராட்சத்தோட்ட வேலைக்காரர்கள் உவமை மூலம் இயேசு எவ்விதம் இறைவனின் அன்பை வெளிப்படுத்தினார்?
- தன்னை சோதித்தவர்களிடம் கிறிஸ்து அளித்த பதிலில் வெளிப்பட்ட ஞானம் என்ன?
- மறு உலகவாழ்வில் விசுவாசிகள் எவ்விதம் வாழ்வார்கள்?
- ஒரே இறைவன் மீதான விசுவாசம், அவரை நேசிப்பதிலும், எல்லா மனிதர்களை நேசிப்பதிலும் எப்படி வெளிப்படுத்தப்படுகிறது?
24 கேள்விகளில் 20 கேள்விகளுக்கு நீங்கள் சரியாக பதிலளித்தால், நாங்கள் இதன் தொடர்ச்சியான அடுத்த புத்தகத்தை உங்களுக்கு அனுப்புவோம். தயவுசெய்து உங்கள் முழுப்பெயர், முகவரியை தெளிவாக எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். உங்கள் பதில்களை பின்வரும் முகவரிக்கு அனுப்புங்கள்:
Waters of Life
P.O.Box 600 513
70305 Stuttgart
Germany
Internet: www.waters-of-life.net
Internet: www.waters-of-life.org
e-mail: info@waters-of-life.net